under review

தீபம் (இலக்கிய இதழ்)

From Tamil Wiki
Revision as of 08:14, 17 May 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
தீபம் - இலக்கிய இதழ்

தீபம் (1965) ஓர் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் நா. பார்த்தசாரதி இதன் ஆசிரியர். தமிழின் மிக முக்கியமான படைப்புகள் சில தீபத்தில் தொடர்களாக வெளிவந்தன. 1987-ல், நா.பா.வின் மறைவுக்குப் பின் சில மாதங்களில் இவ்விதழ் நின்று போனது.

(பிற்காலத்தில் கல்கி குழும வெளியீடாக தீபம் ஆன்மிக இதழாக வெளிவந்தது)

தீபம் ஈழ இலக்கியச் சிறப்பிதழ்

பதிப்பு, வெளியீடு

இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, ஏப்ரல் 1965 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று தீபம் இதழைத் தொடங்கினார். தீபம் காரியாலயம், எண் 6, நல்லதம்பி செட்டித் தெரு, அண்ணாசாலை என்ற முகவரியிலிருந்து தீபம் இதழ் வெளிவந்தது. தீபம் எஸ். திருமலை அச்சிட்டு வெளியிடுபவராகவும், உதவி ஆசிரியராகவும் செயல்பட்டார்.

தொடக்க காலத்தில் தனிப்பிரதி இதழின் விலை 75 காசுகளாக இருந்தது. பின்னர் ஒரு ரூபாயாக உயர்ந்தது. ஆண்டு சந்தா இந்தியாவுக்கு 12 ரூபாயாகவும், இலங்கைக்கு 15 ரூபாய் ஆகவும், மலேயா, பர்மாவுக்கு 25 ரூபாயாகவும் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு இதழின் சந்தா விலை ரூபாய் 25/- வெளிநாடுகளுக்குக் கடல் அஞ்சல் மூலம் (Sea Mail) இதழ் அனுப்பப்பட்டது. ஏர் மெயிலில் அனுப்பத் தனிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

எண்பது பக்கங்கள் கொண்ட இதழாக வெளிவந்த தீபம் ஆண்டு மலர்கள், தீபாவளி, பொங்கல் மலர்களை ஆண்டுதோறும் வெளியிட்டது. அவ்வப்போது சிறப்பிதழ்கள் சிலவற்றையும் வெளியிட்டது. பொதுவாக இதழ்களில் குறிப்பிடப்படும் ‘இதழில் வெளியாகும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே’ என்ற கூற்றுக்கு மாறாக, தீபம் இதழில் பின்வரும் குறிப்பு இடம் பெற்றது. “தீபத்தில் வெளியாகும் கதை, கட்டுரைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் அதே சமயத்தில் அவை அவற்றைப் படைத்த இலக்கியச் சிற்பிகளின் பொறுப்பு என்கிற கம்பீரமான பலத்தைச் சார்ந்து நிற்பவையுமாகும்.”

ஏப்ரல் 1965 முதல் 1979 செப்டம்பர் வரை தீபத்தின் ஆசிரியராக இருந்த நா. பார்த்தசாரதி, தினமணி கதிரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதால், வல்லிக்கண்ணன், ஆ. மாதவன், நாஞ்சில் நாடன் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

நோக்கம்

தீபம் இதழின் நோக்கம் குறித்து, நா.பா. முதல் இதழில் பின்வருமாறு குறிப்பிட்டார். “பரிசுத்தமான எண்ணங்களுடனும் தணியாத சத்திய வேட்கையுடனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தை பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில் பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக்கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் ஆகிய விதவிதமான இருள்களெல்லாம் அகன்று விலகி ஓடுமாக! தீபம் நல்லவர்களாகிய எல்லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடு நெருப்பாகவும் இருக்கும்; அப்படித்தான் இருக்கவேண்டும். இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும்தான் இங்கு நமக்குத் தேவையான உண்மை. எனவே அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.”

நா. பார்த்தசாரதி, முதல் இதழின் தலையங்கத்தில், “இது இலட்சக்கணக்கில் பணம் முடக்கும் ஓர் 'காகித வியாபாரி' நடத்த முன்வரும் இச்சை பச்சை நிறைந்த கவர்ச்சிப் பத்திரிகை அல்ல. தன்மானமும், நேர்மையும் இருகரங்களென நம்பும் ஓர் அசல் எழுத்தாளரின் ஆத்ம சோதனைதான் இந்தப் பத்திரிகை” என்று கூறியிருந்தார். மேலும் அவர், “மனோதர்மமும் தன்னம்பிக்கையுமே எனது பலமான மூலதனங்கள். ஒரு காகித வியாபாரி பத்திரிகை தொடங்கும் போது அவர் விற்கும் காகிதத்தைப் போலவே மற்றொரு வர்ணக் காகிதமாகிய பணமும் அதிகாரமுமே அதற்கு மூலதனமாகலாம். ஆனால் ஓர் எழுத்தாளன் பத்திரிகை தொடங்கும்போதோ பணத்தைவிட மனோதர்மமே பெரிய மூலதனமாக அமைய முடியும். அப்படித்தான் நானும் அமைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாவது இதழின் தலையங்கத்தில், “மெய்வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் எவ்வெவர் தீமையும் போட்டியும் பொறாமையும் பாராமல் கருமமே கண்ணாக நான் என் 'தீபத்தை' மேலும் மேலும் நன்றாகப் பிரகாசிக்கச் செய்யும் காரியங்களைச் செய்து விடாப்பிடியாக முயன்று கொண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் - இனி என்றும் இது ஒரு நோன்பு-தவம்.” என்று குறிப்பிட்டார்.

தீபம் இதழ் உள்ளடக்கம்

உள்ளடக்கம்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்

-என்ற பாரதியின் வரிகள் ஒவ்வோர் இதழின் முகப்பிலும் இடம்பெற்றன.

நேர்காணல்கள்

தீபம் இதழ் கீழ்க்காணும் இலக்கியவாதிகள் உள்பட பலரது நேர்காணல்களை வெளியிட்டது

இவர்களுடன் இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரது நேர்காணல்கள் தீபம் இதழில் வெளியாகின.

எழுத்தும் படைப்பும்

’நானும் என் எழுத்தும்' என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுதினர். சுந்தர ராமசாமி, நகுலன், கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் உள்ளிட்ட பலர் தங்களது படைப்பிலக்கியம் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மொழிபெயர்ப்பு

தீபம், மொழிபெயர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவமளித்தது. குறிப்பாக, குறிஞ்சிவேலன், மலையாள இலக்கியங்கள் மற்றும் இலக்கியவாதிகள் குறித்து எழுதிய 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' தொடர் வாசக வரவேற்பைப் பெற்றது. வைக்கம் முகமது பஷீர், முகுந்தன் போன்றோரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. குஜராத்தி, உருது, வங்காளம், இந்தி, கன்னடம் என்று பிற இந்திய மொழிக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் சர்வதேசப் படைப்புக்களையும் வாசகருக்கு அளித்தது. ஜான் பால் சார்ட்ரே எழுதிய 'ஈக்கள்' (The Flies), ஜார்ஜ் ஆர்வெல்லின் 'மிருகப் பண்ணை' (Animal Farm) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

தொடர்கள்

தீபம் இதழில் தொடராக வெளிவந்த 'மணிக்கொடி காலம்’ (பி. எஸ். ராமையா), 'சரஸ்வதி காலம்' (வல்லிக்கண்ணன்), 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' (வல்லிக்கண்ணன்), 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை (வல்லிக்கண்ணன்), தமிழில் சிறு பத்திரிகைகள் (வல்லிக்கண்ணன்), ’எழுத்து அனுபவங்கள்’ (சி.சு. செல்லப்பா), ‘கதைக்கலை’, ’எழுத்தும் வாழ்க்கையும்’ (அகிலன்), 'திரைக்கு ஒரு திரை' (ஜெயகாந்தன்) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

ஆதவனின் காகித மலர்கள், அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, தி. சா. ராஜுவின் 'காளியின் கருணை', மலர்மன்னன் எழுதிய 'மலையிலிருந்து வந்தவன்', ஆர். சூடாமணியின் 'தீயினில் தூசு', நாஞ்சில்நாடனின் 'மாமிசப் படைப்பு', தேவகோட்டை வா. மூர்த்தியின் 'ஜொலிக்கும் வைரங்கள்' போன்றவை தீபத்தில் வந்த குறிப்பிடத்தகுந்த நாவல் தொடர்கள்.

கவிதை

ந. பிச்சமூர்த்தி, ஜெயகாந்தன், நா. காமராசன், மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், கலாப்ரியா என்று பல கவிஞர்களின் கவிதைகள் தீபத்தில் வெளியாகின. நா. பார்த்தசாரதி 'பொன்முடி', 'நவநீத கவி', 'செங்குளம் வீரசிங்க கவிராயர்' போன்ற புனைபெயர்களில் கவிதைகள் எழுதினார். ஜெயகாந்தன், ஆர். சூடாமணியின் கவிதைகளும் தீபத்தில் வெளியாகின. ஞானக்கூத்தன், மீரா, வைதீஸ்வரனின் கவிதைகள் தீபத்தில் வெளிவந்தன. தொடக்கத்தில் மரபுக் கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது தீபம். வெண்பாவின் ஈற்றடி தந்து வாசகர்களைப் பாடல் எழுத வைத்துப் பரிசளித்தது. மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கும் இடமளித்தது. வல்லிக்கண்ணனின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர் இது நூலாக வெளிவந்து சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.

புதுக்கவிதை வளர்ச்சிக்கு தீபம் இதழ் உறுதுணையாக இருந்தது. அனுபவக் கட்டுரைகள், இலக்கிய விமரிசனங்கள், பட்டிமன்றம், இலக்கியச் சந்திப்பு, நானும் என் எழுத்தும், இலக்கிய மேடை, ஆறங்கம், அஞ்சறைப் பெட்டி, இவர்கள் இப்படிக் கருதுகிறார்கள், உரத்த சிந்தனை போன்ற பகுதிகள் தீபம் இதழின் குறிப்பிடத்தகுந்த பகுதிகளாகும்.

பல்வேறு இலக்கிய விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் தீபம் இடமளித்தது. புத்தக மதிப்புரை, நூல் விமர்சனம் போன்றவை இதழ்தோறும் வெளியாகின.

பிற படைப்புகள்

தீபத்தில் வெளியான ‘நினைவில் நிற்கும் முன்னுரைகள்’, ‘காலத்தை வென்ற சிறுகதைகள்’, க.நா. சுப்ரமண்யம் எழுதிய 'மறைவாக நமக்குள்ளே', ‘வம்பு மேடை’, ‘மனம் வெளுக்க’, ‘இலக்கிய மேடை’ (கேள்வி-பதில்) போன்றவை வாசக வரவேற்பைப் பெற்றன. சர்வதேச இலக்கியம் பற்றியும், ஐரோப்பிய அமெரிக்கப் படைப்பாளிகள் பற்றியும் அசோகமித்திரன் எழுதிய தொடர் முக்கியமானது. 'எனது குறிப்பேடு' என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள், நிகழ்ச்சிகள் குறித்து நா. பா. எழுதிய கருத்துக்கள் வாசகர்களால் வரவேற்கப்பட்டன. நா. பா., எழுதிய தலையங்கமும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருந்தது. நா.பா. மணிவண்ணன், பொன்முடி போன்ற புனைபெயர்களில் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை தீபத்தில் எழுதினார். அக்காலத்து இளம் எழுத்தாளர்கள் பலரது படைப்புகளை தீபம் வெளியிட்டது. ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றோரின் நாவல்கள் முதன் முதலில் தீபத்தில் தான் தொடராக வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

நா. பார்த்தசாரதி, டிசம்பர் 13, 1987-ல் காலமானார். அவரது மறைவுக்குப் பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1988-ல் ஜனவரி – பிப்ரவரி இதழாக வெளியானது. தொடர்ந்து ஏப்ரல் 1988 இதழ் வெளியானது. அத்துடன் தீபம் இதழ் நின்றுபோனது.

தீபம் இதழ் தொகுப்பு

ஆவணம்

தீபம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டு ‘தீபம் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக கலைஞன் பதிப்பகம் மூலம். 2012-ல் வெளியானது. வே. சபாநாயகம் இதனைத் தொகுத்தார்.

இலக்கிய இடம்

தீபம் தமிழின் குறிப்பிடத் தகுந்த ஓர் இலக்கிய இதழ். இருபத்து மூன்று வருடங்கள் வெளியானது. இலக்கிய இதழின் பொதுவான அனைத்து அம்சங்களுக்கும் இடமளித்தது. நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், கேள்வி-பதில்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியத்துவமளித்து வெளியிட்டது. பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. அக்காலத்தின் எழுத்து, மணிக்கொடி, சரஸ்வதி போன்ற பல்வேறு இலக்கிய இதழ்களுக்கு இடையே ஓர் லட்சியத்துடன் வெளிவந்த இதழாகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய இடை நிலை இலக்கிய இதழாகவும் தீபம் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page