under review

டி.எஸ்.சொக்கலிங்கம்

From Tamil Wiki

To read the article in English: T. S. Chokkalingam. ‎

டி.எஸ்.சொக்கலிங்கம்
சொக்கலிங்கம்
சொக்கலிங்கம் பதிவு

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, பாரதம், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார். மணிக்கொடி இதழை தொடங்குவதில் பங்கெடுத்தார்.

பிறப்பு, கல்வி

டி.எஸ்.சொக்கலிங்கம் (தென்காசி சங்கரலிங்கம் பிள்ளை சொக்கலிங்கம்) தென்காசியில் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள் இணையருக்கு மே 3, 1899 ல் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தார். மடத்துக்கடை என்ற மளிகைக்கடையை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். வாஞ்சி ஐயரின் நண்பராக இருந்த சிதம்பரம் பிள்ளையை 1911-ல் ஆஷ் துரை கொலை வழக்கில் தொடர்புபடுத்தி போலீஸார் கைது செய்தனர். அவர் சிறைமீள நெடுங்காலம் ஆகியது. சங்கரலிங்கம் பிள்ளை உளம் நலிந்து மறைந்தார். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தினர் நடத்தி வந்த மடத்துக்கடையை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார்.

மொழியாக்கம் டி.எஸ்.சொக்கலிங்கம்

தனிவாழ்க்கை

இளமையிலேயே தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களிடமிருந்து டி.எஸ். சொக்கலிங்கம் தமிழ் கற்றார். சுதேசமித்திரன் இதழின் முகவராக இருந்தார். 1916-ல் ஆனந்தபோதினி இதழில் அவருடைய முதல் கட்டுரை வெளியாகியது. தேசிய இயக்கச் செய்திகளை படித்துவந்த சொக்கலிங்கம் தன் 18-வது வயதில் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார். சிதம்பரம் பிள்ளை வந்து அவரை திரும்ப அழைத்துச் சென்றார். தென்காசியில் அண்ணனுடன் இணைந்து மளிகைக்கடையை நடத்தினார். தனியாக ஸ்டார் கம்பெனி என்ற பேரில் ஒரு மளிகைக் கடையை வெற்றிகரமாக நடத்தினார்.

டி.எஸ்.சொக்கலிங்கம் மணம் செய்துகொள்ளவில்லை.

அரசியல்

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளையர் அல்லாதோர் குளிக்க ஆங்கில அரசு கட்டுப்பாடுகளை போட்டது. அதைக் கண்டித்து ’நீராடுவதற்கும் நிர்ப்பந்தமா?’ என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். நண்பர்களை திரட்டி குற்றாலம் சென்று போராடினார். அரசு கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது. இதுவே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் முதல் அரசியல் நடவடிக்கை. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு போன்ற போராட்டங்களை நடத்தினார். 1920 காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சேலம் வரதராஜுலு நாயுடுவை அழைத்துவந்து கூட்டங்கள் நடத்தினார். இக்காலகட்டத்தில் தேசபக்தன் இதழுக்கு கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். 1922-ல் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் -ஐ அழைத்துவந்து தென்காசியில் அரசியல் கூட்டங்கள் நடத்தினார்.

1937-ல் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று மாகாணச் சட்டச்சபைக்குச் சென்றார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

ஆசிரியர் சொக்கலிங்கம்

இதழியல்

தமிழ்நாடு

சேலம் வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு என்னும் இதழை நடத்திவந்தார். அதில் டி.எஸ்.சொக்கலிங்கம் தேவிதாசன் என்ற பெயரில் அரசியல், சமூகவியல், இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். இதழின் இணையாசிரியர் போலவே டி.எஸ்.சொக்கலிங்கம் செயல்பட்டார். 1925-ல் தமிழ்நாடு இதழை சென்னைக்கு மாற்றவேண்டியிருந்தது. வரதராஜுலு நாயுடு மருத்துவராதலால் சேலம் விட்டுச் செல்ல முடியவில்லை. ஆகவே தமிழ்நாடு இதழின் ஆசிரியராக டி.எஸ்.சொக்கலிங்கம் பொறுப்பேற்றார். 1925 முதல் 1931 வரை ஆறாண்டுகள் தமிழ்நாடு இதழில் பணியாற்றினார். அக்காலத்தில் சேரன்மாதேவி குருகுல விவாதம் உருவாகி சேலம் வரதராஜுலு நாயுடுவும் ஈ.வே.ராமசாமி பெரியாரும் காங்கிரஸ் கட்சிக்கும் வ.வே. சுப்ரமணிய ஐயருக்கும் எதிராக போராடினர். அவர்கள் காங்கிரஸிலிருந்து பிரிந்து நீதிக்கட்சிக்குச் சென்றனர். விளைவாக டி.எஸ்.சொக்கலிங்கம் தமிழ்நாடு இதழிலிருந்து விலகினார்

காந்தி

1931-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் காந்தி என்னும் இதழை தொடங்கினார். காந்தி கைதை கண்டித்து ராஜாஜி எழுதிய கட்டுரைக்காக இதழுக்கு அபராதமும் சொக்கலிங்கத்துக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. 1932-ல் இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது. 1934-ல் பிகார் பூகம்பத்தில் அரசின் செயலின்மையை கண்டித்தமைக்காக இதழ் தடைச்செய்யப்பட்டது. ராஜத்துரோகத்துக்காக சொக்கலிங்கம் சிறை சென்றார்

காமராஜுடன்
தினமணி
சொக்கலிங்கம்

1936-ல் தினமணி இதழ் தொடங்கப்பட்டது. சொக்கலிங்கம் அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவருடைய நெருக்கமான நண்பர் ஏ.என்.சிவராமன் உடனிருந்தார். தீவிரமான கட்டுரைகள் வழியாக தினமணியை செல்வாக்கான இதழாக ஆக்கினார். 1941-ல் சிறைசெல்லும்போது தினமணி இதழை தன் நண்பர் ஏ.என்.சிவராமனிடம் ஒப்படைத்தார். சிறைமீண்டபின் தினமணியில் சேர்ந்தாலும் ஏ.என்.சிவராமனுக்கு கீழே பணியாற்ற முடியாமல் பதவி விலகினார்.

தினசரி

1944-ல் தினசரி என்னும் நாளிதழை தொடங்கினார். அமிர்தபசார் பத்ரிகா இதழாசிரியர் துஷார் காந்தி கோஷ் இதழை தொடங்கி வைத்தார். 1952 வரை சொக்கலிங்கமே ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்து இதழை நடத்தினார். ஆனால் நிர்வாகச் சிக்கல்களால் இதழை தொடர முடியவில்லை. தொழிலாளர் போராட்டத்தால் 1952-ல் இதழ் நின்றது.

மணிக்கொடி

டி.எஸ்.சொக்கலிங்கம் மணிக்கொடி இதழுடன் தொடர்புடையவர். ஸ்டாலின் சீனிவாசன் ஒரு வார இதழ் தொடங்கும் எண்ணத்துடன் வ.ராமசாமி ஐயங்கார் ஐ அழைத்துக்கொண்டு சென்னை வந்தபோது டி.எஸ்.சொக்கலிங்கத்தைச் சந்தித்தார். அவர்கள் பேசி மணிக்கொடி என்னும் பெயரை முடிவுசெய்தனர். மணிக்கொடியின் தொடக்கத்தில் சொக்கலிங்கம் உடனிருந்தார்.

பிற இதழ்கள்

1953-ல் ஜனயுகம் வாரஇதழை தொடங்கினார். அது நீடிக்கவில்லை. தொடர்ந்து 1959-ல் பாரதம் என்னும் வாரமிருமுறை இதழை தொடங்கினார் அதுவும் வெற்றிபெறவில்லை. 1960-ல் காங்கிரஸ் கட்சிக்காக திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் நடத்தி நின்றுபோன நவசக்தி இதழை தொடங்கினார். அதுவும் நீடிக்கவில்லை.

பதிப்புப் பணி

இலக்கிய நூல்களையும் தேசியநூல்களையும் வெளியிடும் எண்ணத்துடன் சொக்கலிங்கம் தொடங்கிய பதிப்பகம் நவயுக பிரசுராலயம். ஏன்.என்.சிவராமன், புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களின் நூல்களை நவயுக பிரசுராலயம் வெளியிட்டது

இலக்கிய வாழ்க்கை

டி.எஸ்.சொக்கலிங்கம் காந்தி இதழில் சிறுகதைகள் எழுதினார். அவை பின்னர் அல்லிவிஜயம் என்ற தொகுப்பாக வெளிவந்தன. இலக்கிய வாசிப்பில் ஆர்வம் மிகுந்தவர். புதுமைப்பித்தன், பி.எஸ். ராமையா உள்ளிட்ட எழுத்தாளர்களின் புரவலராகவும் விளங்கினார்.

டி.எஸ்.சொக்கலிங்கம் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கையை ஜவஹர்லால்நேரு சரித்திரம் என்னும் நூலாக எழுதினார். நேருவின் உரைகளை மொழியாக்கம் செய்துள்ளார். சில சிறுகதைகளையும் பாய் பரமானந்தன் என்னும் நாவலையும் எழுதியுள்ளார்.

நாடகம்

டி.எஸ்.சொக்கலிங்கம் ஸீயல் என்ற பேரில் ராவணதாச விலாசம் என்ற அங்கத நாடகத்தை எழுதினார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கேலிசெய்யும் படைப்பு

மொழியாக்கம்

டி.எஸ்.சொக்கலிங்கம் இதழாசிரியராக ஏராளமான கலைச்சொற்களை மொழியாக்கம் செய்து உருவாக்கியவர். உதாரணமாக பற்றாக்குறை, மேலிடம், அச்சுநாடுகள், நேசநாடுகள். (கு. அழகிரிசாமி, நான் கண்ட எழுத்தாளர்கள்).

போரும் வாழ்வும்

டி.எஸ்.சொக்கலிங்கத்தின் காலம் கடந்த சாதனை என நின்றிருப்பது அவர் மொழியாக்கம் செய்த லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் என்னும் பெருநாவல் (War and Pease- Tolstoy). அதன் இயல்பான மொழிநடையால் அது இன்றும் வாசிக்கப்படுகிறது.நவயுக பிரசுராலயம் இதை வெளியிட்டது. அந்நாவலின் உரைநடை தமிழ் புனைகதையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது

மறைவு

சொக்கலிங்கம் ஜனவரி 9, 1969-ல் மறைந்தார்.

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

  • டி.எஸ்.சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை பொன்.தனசேகரன் சாகித்ய அகாதெமிக்காக எழுதியிருக்கிறார்[1].
  • டி.எஸ். சொக்கலிங்கம்:அரசியல்,இதழியல் (1998). பா.மதிவாணன் (இணைய நூலகம்) டி.எஸ்.சொக்கலிங்கம் நூற்றாண்டு விழா வெளியீடு

இலக்கிய இடம்

டி.எஸ்.சொக்கலிங்கம் தமிழில் மூன்றுவகைகளில் நினைவுகூரப்படுகிறார்

  • தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர். போரும் அமைதியும் அவருடைய சாதனை
  • தமிழின் இதழியலின் முன்னோடிகளில் ஒருவர். தினமணி நாளிதழின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தவர்
  • தமிழில் நவீன இலக்கியம் உருவாக வழியமைத்தவர். மணிக்கொடி இதழ் நவயுகம் பிரசுரம் ஆகியவை அவருடைய சாதனைகள்.

நூல்கள்

வாழ்க்கை வரலாறு
  • ஜவகர்லால் நேரு
  • வீரர் சுபாஷ் சந்திர போஸ்
  • காமராஜ்
மொழியாக்கம்
  • போரும் வாழ்வும்
சிறுகதை
  • அல்லி விஜயம்
கட்டுரை
  • தமிழர்புரட்சி
  • எனது முதல் சந்திப்பு
நாவல்
  • பாய் பரமானந்தன்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page