under review

புதுமைப்பித்தன்

From Tamil Wiki
புதுமைப்பித்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: புதுமைப்பித்தன் (பெயர் பட்டியல்)

To read the article in English: Pudhumaipithan. ‎

Pudhumaipithan.jpg

புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.

பிறப்பு கல்வி

Pudhumaippithan.jpg
முன்னோர்

புதுமைப்பித்தனின் தாத்தா உலகளந்த பெருமாள் பிள்ளை தன் பெயரை விருத்தாசலம் பிள்ளை என மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயரின் கீழ் நில அளவை துறையில் பணியாற்றினார்.

பெற்றோர்

புதுமைப்பித்தனின் தந்தை உ. சொக்கலிங்கம் பிள்ளை பி.ஏ.பட்டம் பெற்று நிலப்பதிவு வட்டாட்சியராகப் பணிபுரிந்தார். புதுமைப்பித்தனின் தாயார் பர்வதத்தம்மாள்.

புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி என்கிற செல்லத்தம்மாள். புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின் சித்தியிடம் வளர்ந்தார். சொக்கலிங்கம் பிள்ளைக்கு இரண்டாம் மனைவியில் மூன்று மகன்கள்.

கல்வி

புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை தென்ஆற்காடு உட்பட பல ஊர்களுக்கு பணி மாற்றம் பெற்றார். இதனால் புதுமைப்பித்தன் தனது இளமைக்காலக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் பயின்றார். 1918-ம் ஆண்டு தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் அர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலை (B.A.) சேர்ந்து 1931-ம் ஆண்டு பட்டம் பெற்றார். புதுமைப்பித்தனின் கல்லூரித் தோழர்களில் ஒருவர் இலக்கியவிமர்சகரான ஆ. முத்துசிவன். இன்னொருவர் தீபன்.

தனி வாழ்க்கை

புதுமைப்பித்தனின் வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு மற்றும் புதுமைப்பித்தனின் நண்பர் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் எழுதிய குறிப்புகளில் இருந்தே அறியமுடிகிறது.

புதுமைப்பித்தன்1.jpg
புதுமைப்பித்தன், கமலா விருத்தாசலம்
சென்னை வாழ்க்கை

1918-ம் ஆண்டு சொக்கலிங்கம் பிள்ளை பணி ஓய்வுபெற்றமையால் குடும்பத்துடன் புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். தாமிரபரணி அருகே வண்ணார்பேட்டை என்னும் இடத்தில் குடியிருந்தார்.

புதுமைப்பித்தன் பட்டப் படிப்பை முடிப்பதற்குள் இருபத்தைந்து வயதை கடந்திருந்ததால் அரசு பணியில் சேரும் வாய்ப்பு இல்லாமல் ஆனது. புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை புதுமைப்பித்தனை சட்டம் படிக்க வைக்க விரும்பினார். புதுமைப்பித்தன் இலக்கியம் கற்க விரும்பினார். திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள முத்தையா பிள்ளையின் "கடைச் சங்கம்" என்ற புத்தக கடைக்குச் சென்று நண்பர்களுடன் கூடி இலக்கியம் பேசத் தொடங்கினார். அங்கே பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் வருவதுண்டு. இலக்கிய ஆர்வத்தால் தந்தையுடன் சண்டை ஏற்பட்டு 1933-ம் ஆண்டு மனைவியை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கச் சொல்லிவிட்டு, தனியாக சென்னை சென்றார். அங்கே குறைந்த ஊதியத்தில் இதழியலாளராக வாழ்ந்தார்.

குடும்பம்

புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் அரசூழியராக இருந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளையின் மகள் கமலாம்பாளை 31 ஜூலை 1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள். (கண்மணி) கமலாம்பாள் கமலா விருத்தாசலம் என்ற பேரில் கதைகளை எழுதிய எழுத்தாளர்.

தந்தையுடனான முரண்பாடுகள்

புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை மகன் மேல் ஏமாற்றம் கொண்டிருந்தார். அவர் மரபான உள்ளம் கொண்டவர். தென்னிந்திய சாதிகள் என்னும் எட்கார் தர்ஸ்டனின் நூலை அடியொற்றி Indo Europian Races என்ற தலைப்பில் சாதிகள் பற்றிய நூல் ஒன்றை பல பாகங்களாக எழுதியவர். அவர் புதுமைப்பித்தனின் இதழியல் ஈடுபாடு, நவீன இலக்கியம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

1943-ம் ஆண்டு சென்னை மீது ஜப்பானியர்களின் குண்டுவீச்சு பயம் இருந்த காரணத்தினால் புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாம்பாளை திருநெல்வேலியில் தங்க வைக்க விரும்பினார். சென்னை, திருநெல்வேலி என இரண்டு இடங்களில் வாடகை கொடுக்க இயலாத சூழலில் இருந்த புதுமைப்பித்தன் தன் தந்தை சொக்கலிங்கப் பிள்ளையிடம் இருந்த நான்கு வீடுகளில் ஒன்றில் கமலாம்பாள், மகள் தினகரி இருவரையும் தங்க வைக்க விரும்பினார். அதற்கு சொக்கலிங்கப் பிள்ளை மறுக்கவே புதுமைப்பித்தன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தந்தையிடம் பாகப் பிரிவினைப் பெற்றார். தந்தையிடமிருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார்.

தன் தந்தையிடம் வாங்கிய நிலத்தை புதுமைப்பித்தன் தினசரியை விட்டு விலகி வறுமையில் இருந்த காலத்தில் குறைந்த விலைக்கு விற்றார். அப்பணத்தை சொந்தமாகத் திரைப்படம் எடுப்பதில் செலவிட்டார்.

புனே, திருவனந்தபுரம்

திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்டிருந்த புதுமைப்பித்தன் அதன்பொருட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் புனேயில் சிலகாலம் வாழ்ந்தார். அப்போது காசநோய் முதிர்ச்சி அடைந்தது. இறுதிக் காலத்தை தன் மனைவியின் ஊரான திருவனந்தபுரத்தில் கழித்தார்.

இதழியல்

புதுமைப்பித்தன் 1936-ல் சென்னையில் டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ராமசாமி ஐயங்கார் ஆகியோருடன் அறிமுகமானார். காரைக்குடியில் இருந்து ராய. சொக்கலிங்கம் வெளியிட்டு வந்த 'ஊழியன்' பத்திரிக்கையில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. ஊழியனில் மற்றொரு ஆசிரியருடன் ஏற்பட்ட சண்டையில் வேலையை விட்டு மீண்டும் சென்னை சென்றார். மணிக்கொடி இதழின் பொறுப்பாசிரியராக பி.எஸ். ராமையா பதவி ஏற்ற போது புதுமைப்பித்தன் அவருடன் நெருங்கமான நட்பு கொண்டிருந்தார்.

1936-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மணிக்கொடி இதழ் நின்றது. இதன் பின் டி.எஸ். சொக்கலிங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் 'தினமணி' இதழில் உதவி ஆசிரியராக 1936 ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் பொறுப்பேற்றார். 1943-ம் ஆண்டு வரை தினமணியில் வேலை செய்த புதுமைப்பித்தன் அதன் நிர்வாகத்திற்கும், டி.எஸ். சொக்கலிங்கத்திற்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் அவருடன் சேர்ந்து விலகினார்.

1944-ம் ஆண்டு டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய 'தினசரி' பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். தினசரியில் உதவி ஆசிரியராக பணி செய்து கொண்டிருந்த போது புதுமைப்பித்தனுக்கு திரைத் துறையில் நாட்டம் ஏற்பட்டது. இதழியல் பணியை துறந்தார்.

1946-ம் ஆண்டு புதுமைப்பித்தன் தனக்கு குடும்பச் சொத்தில் பங்காகக் கிடைத்த பணத்தில் 'சோதனை' என்ற இதழை தொடங்க முனைந்து அதை நிறைவேற்ற முடியாமல் பணத்தை இழந்தார்.

இலக்கிய வாழ்க்கை

புதுமைப்பித்தன் நெல்லையில் இருக்கும்போதே இலக்கிய விவாதங்கள் வழியாக நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டார். மாப்பசான், ஆண்டன் செகாவ், ஓ.ஹென்றி, எட்கார் ஆல்லன் போ போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளால் ஈர்க்கப்பட்டு அவ்வடிவம் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

Puthumai-pithan1.jpg

சிறுகதைகள்

தொடக்க காலம்

புதுமைப்பித்தன் நெல்லையில் இருக்கும்போதே அவருடைய சிறுகதைகள் வெளியாகத் தொடங்கின. அவருடைய முதல் சிறுகதை 'குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் 1933-ம் ஆண்டு வெளிவந்தது. 1934 முதல் புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரைப் பிள்ளையார்' சிறுகதை மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை. இச்சிறுகதை ஏப்ரல் 1934, 22, 29-ம் தேதிகளில் தொடர்ந்து வெளிவந்தது. இக்காலகட்டத்தில் ஊழியன் இதழில் அகலிகை, தேக்கங்கன்றுகள், தெருவிளக்கு போன்ற கதைகள் வெளிவந்தன.

'புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிய 1934-ம் வருடத்தில் மட்டும் நாற்பது நாற்பத்தைந்து கதைகள் எழுதியிருக்கிறார். வெகு ஆவேசமான ஆரம்பத்தையே இது காட்டுகிறது. இக்கதைகளில் பெரும்பான்மையானவை பற்றி மிக உயர்வாகச் சொல்வதற்கு இல்லை என்றாலும் அவருடைய மற்ற கதைகள்போல் இவற்றிலும் அவருக்கே உரித்தானபார்வை ஊடுருவி நிற்கிறது எனலாம்' என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார்.

மணிக்கொடிக் காலம்

புதுமைப்பித்தன் முதல்கட்ட மணிக்கொடியில் எழுதத் தொடங்கியவர். அவர் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி ஆகிய முன்னோடிகளுடன் இணைத்து மணிக்கொடி எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். மார்ச் 1935-ல் மணிக்கொடி இரண்டாம் முறையாக தொடங்கப்பட்ட போது அதன் முதல் இதழில் புதுமைப்பித்தன் 'துன்பக்கேணி' சிறுகதை வெளிவந்தது. முதல்கட்ட மணிக்கொடியில் புதுமைப்பித்தன் முப்பது கதைகளும், இரண்டாம்கட்ட மணிக்கொடியில் 15 கதைகளுமாக மொத்தம் 45 கதைகளை புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதினார் என்று ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.

இக்காலகட்டத்தில் ஊழியன் இதழில் பதிமூன்று கதைகளும், ஆறு தழுவல் கதைகளும் புதுமைப்பித்தனால் எழுதப்பட்டன என ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.

கலைமகள் காலம்

புதுமைப்பித்தனின் கதைகள் ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. அவருடைய இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க கதைகள் பல கி.வா. ஜகந்நாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தன. தன் இயல்புக்கு ஒவ்வாதது என தான் விலகிச்சென்ற கலைமகள் இதழ் தன்னுடைய கதைகளை வெளியிட்டதை குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதியின் கூற்றுப்படி 1938 முதல் 1946 வரை கலைமகளில் புதுமைப்பித்தன் 11 கதைகளை எழுதினார். பின்னர் கலைமகள் குடும்ப இதழாக தன்னை மாற்றிக்கொண்டது.

தொகுப்புகள்

புதுமைப்பித்தனின் கதைகளின் வெளியீடு - பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதியின் முடிவுகளின்படி புதுமைப்பித்தனின் இறுதிக்கதை என ஆய்வாளர்கள் கருதுவது கயிற்றரவு. அது அ.கி. கோபாலன் நடத்திய காதம்பரி இதழில் 1948ல் வெளிவந்தது.

புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 கதைகள் மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'புதுமைப்பித்தன் சிறுகதைகள்' என்னும் பெயரில் நவயுக பிரசுரமாக வெளிவந்தது. அதற்கு ரா.ஶ்ரீ.தேசிகன் முன்னுரை எழுதினார்.ஆறுகதைகள், நாசகார கும்பல் ஆகிய தொகுதிகளும் 1941 வாக்கில் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டன.

1943 டிசம்பரில் கலைமகள் காரியாலயம் வெளியீடாக 'காஞ்சனை முதலிய கதைகள்' என்னும் தொகுப்பு வெளியாகியது. இந்நூலுக்கு புதுமைப்பித்தன் எச்சரிக்கை என்னும் தலைப்பில் முன்னுரை எழுதியுள்ளார். டிசம்பர் 23,1943 தேதியிடப்பட்ட கட்டுரை அது. இந்நூலுக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ மெய்ப்பு பார்த்தார். 1947 செப்டம்பரில், சென்னை மயிலாப்பூர் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக 'ஆண்மை' தொகுதி புதுமைப்பித்தன் எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது.

புதுமைப்பித்தன் மரணத்துக்குப் பின் முல்லை பதிப்பகம், தமிழ்ச்சுடர் நிலையம் ஆகியவை அவர் கதைகளை வெளியிட்டன. 1953 முதல் ஸ்டார் பிரசுரம் அவருடைய கதைகளை தொடர்ச்சியான தொகுப்புகளாக வெளியிட்டது. ஆ.இரா.வேங்கடாசலபதி புதுமைப்பித்தன் எழுதியவை என உறுதியாகத் தெரிந்த கதைகளை மட்டும், தழுவல்கதைகளை நீக்கி 97 கதைகளை அவர் 2000 த்தில் வெளியிட்ட செம்பதிப்பில் சேர்த்துள்ளார்.

Puthumaipithan.jpg

கட்டுரைகள்

புதுமைப்பித்தன் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியிருக்கிறார். தன் இலக்கிய ரசனைப் பற்றி நமது கலைச் செல்வம், கடவுளின் கனவும் கவிஞனின் கனவும், இலக்கியத்தில் உட்பிரிவுகள், இலக்கியத்தின் இரகசியம் போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். மேலும் கம்பன், பாரதி, பாரதிதாசன் எனக் கவிஞர்கள் குறித்தும், கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார்.

தமிழர் நாகரீகத்தின் கிராம வாழ்க்கை, அரிஸ்டாட்டில் கண்ட ராஜீயப் பிராணி போன்ற தனிக் கட்டுரைகள், இராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றி சிறு கட்டுரைகள், நாட்டுப் பாடல்கள், தனிப்பாடல்கள் பற்றிச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். 'தினமணி', 'தினசரி' நாளிதழ்களில் பணியாற்றிய போது தொடர்ந்து புத்தக மதிப்புரைகளை ரசமட்டம் என்ற பெயரில் எழுதினார். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கட்டுரைகள் இதழியல் தேவைக்காக எழுதப்பட்டவை.

Pp.jpg

கவிதைகள்

புதுமைப்பித்தன் வசன கவிதைகளை ஆதரிக்கவில்லை. யாப்பில் அடங்கும் கவிதைகளையே புதுமைப்பித்தன் எழுதினார். சரஸ்வதியை நோக்கி கேட்கிற தொனியில் புதுமைப்பித்தன் எழுதிய 'நிசந்தானோ சொப்பனமோ' என்ற கவிதை பிரபலமானது.

புதுமைப்பித்தன் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதினார். வறுமையில் வாழ்ந்த கு.ப.ரா இறந்த போது நிதி திரட்டியவர்களை கேலி செய்து 'ஓகோ உலகத்தீர்! ஓடாதீர்!' என்ற கவிதையை எழுதினார். இளம் காதலர்களை கேலி செய்து 'காதல் பாட்டு' என்ற தலைப்பில் நையாண்டி கவிதை எழுதினார். அந்த கால இந்திய நிலையை 'இணையற்ற இந்தியா' என்ற தலைப்பில் கேலிக் கவிதை எழுதினார். 'தொழில்' என்ற கவிதை முருகனை நோக்கி பாடுவதாகவும் தொழிலில் உள்ள ஏற்ற தாழ்வுகளைக் கண்டிப்பதாகவும் அமைந்தது.

புதுமைப்பித்தனின் பெரும்பாலான கவிதைகள் எளிய யாப்பு முறையில் எழுதப்பட்ட நையாண்டிக் கவிதைகள். ச.து.சு. யோகியார் போன்ற நண்பர்களுடன் அரட்டையடிக்கையில் இயல்பாக அவர் மரபுக்கவிதைகளை சொல்வதுண்டு என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் சில அவருடைய நண்பர்களின் நினைவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடகங்கள்

புதுமைப்பித்தன் சில சிறு நாடகங்கள் எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் எழுதிய முதல் நாடகம் 'பக்த குசேலா - கரியுக மாடல்'. குசேலர் கதையை பகடி செய்து எழுதிய நாடகம் இது. புதுமைப்பித்தனின் 'நிச்சயமா நாளைக்கு' நாடகம் மத்தியதரக் குடும்பத்தின் அன்றாட சிக்கல்களைப் பற்றி பேசுவது. செல்வம் அதிகமாக கொண்ட அறிவிலியையும், ஞானம் கொண்ட ஏழைக்கும் இடையில் நடக்கும் போட்டி நாடகம் 'வாக்கும் வக்கும்'. இது திரைக்கதை வடிவில் எழுதப்பட்டது.

வரலாற்று நூல்கள்

புதுமைப்பித்தன் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாற்றை 'பேசிஸ்ட் ஜடாமுனி' என்ற தலைப்பில் எழுதினார். ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வாழ்க்கையை 'கப்சிப் தர்பார்' என்ற தலைப்பில் எழுதினார். கப்சிப் தர்பாரின் முதல் பகுதி மட்டும் புதுமைப்பித்தன் எழுதினார். பிற்பகுதிகளை பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய ந. ராமரத்னம் எழுதினார்.

நாவல்

புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிய 'சிற்றன்னை' நாவல் எழுதி முடிக்கப்படாமல் பாதியில் நின்றது. புதுமைப்பித்தன் ஒரு நாவலுக்கு 'மூக்கபிள்ளை' எனப் பெயரிட்டிருந்தார். அதனை பெருநாவலாக எழுதும் கனவு புதுமைப்பித்தனுக்கு இருந்தது. புதுமைப்பித்தன் எழுதி முடிக்காத நாவல் 'அன்னையிட்ட தீ' என்ற பேரில் பின்னர் ஆ.இரா.வேங்கடாசலபதி முயற்சியால் நூலாக வெளிவந்தது.

மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தன் 58 சிறுகதைகளுக்கு மேல் உலக இலக்கியத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய 'யாமா த பிட்' நாவலின் முதல் பாகத்தின் ஒன்பது அத்தியாயங்களை மொழிபெயர்த்தார். குப்ரினின் நாவல், அ.கி. கோபாலன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த காதம்பரி இதழில் 'பலிபீடம்' என்ற தலைப்பில் வெளியானது. இறுதி நான்கு அத்தியாயங்கள் க.நா.சுப்ரமண்யத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டன. புதுமைப்பித்தன் ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் மொழிபெயர்த்தார்.

திரைப்படத் துறை

1946ல் புதுமைப்பித்தன் எஸ்.எஸ். வாசன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த 'ஔவையார்' படத்தின் கதை வசனம் எழுத ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் படம் தயாரான போது புதுமைப்பித்தனின் வசனம் இடம்பெறவில்லை. அந்தப்படத்திற்காக அவர் எழுதிய வசனங்களில் சில தொ.மு.சி. ரகுநாதனின் நூலில் உள்ளன. அவை நூலாக வெளிவரவில்லை.

1946-ல் புதுமைப்பித்தன் பாஸ்கர் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துக்காக ஏ. முத்துஸ்வாமி இயக்கிய 'காமவல்லி' (1948) என்னும் படத்திற்கு கதை வசனம் எழுதினார்.

1947-ல் புதுமைப்பித்தன் சொந்தமாக படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 'பர்வத குமாரி புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் 'வசந்தவல்லி' என்னும் தலைப்பில் 'குற்றாலக் குறவஞ்சி' கதையை படமாக்க திட்டமிட்டார். நாகர்கோயில் மகாதேவன் நடிக்க, புதுமைப்பித்தன் எழுத்தில் இந்தப்படம் வெளிவரும் என்னும் விளம்பரம் பத்திரிக்கையில் வந்ததோடு நின்றது.

1947ல் ராஜமுக்தி என்னும் படத்துக்காக புதுமைப்பித்தன் எழுதிய திரைக்கதையில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. ராஜமுக்தி படக்குழுவினருடன் புனா சென்றார் அங்கே அவருக்கு காச நோய் ஏற்பட்டது. உடல்நிலை மோசமாக 1948-ம் ஆண்டு புனாவிலிருந்து திருவனந்தபுரம் திரும்பினார்.

1947ல் புதுமைப்பித்தன் கோயம்புத்தூரைச் சேர்ந்த குப்புராஜ் என்பவர் மதுரை சித்ரகலா ஸ்டுடியோ சார்பில் தயாரிக்க எண்ணிய ஒரு (சரஸ்வதி விஜயம் அல்லது லட்சுமி விஜயம்) திரைப்படத்துக்காக எழுதிய திரைக்கதை வடிவம் 'வாக்கும் வக்கும்' என்ற பேரில் பின்னர் வெளியாகியது. அதை (உரிய அனுமதி இன்றி) தழுவியே ஏ.பி. நாகராஜன் 'சரஸ்வதி சபதம்'(1966) என்னும் படத்தை உருவாக்கினார்.

மறைவு

புதுமைப்பித்தன் புனே நகரில் இருந்து காசநோய் முற்றிய நிலையில் ஜூன் 6,1948 அன்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கே மருத்துவமனையில் சேர்ந்தார். கடும் வறுமையில் தமிழ்ப்புத்தகாலயம் கண. முத்தையா போன்றவர்களுக்கு கடிதம் எழுதி நிதியுதவி கோரினார். அவருடன் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் மட்டுமே உடனிருந்தார். காசநோய் முற்றி ஜூன் 30, 1948 அன்று புதுமைப்பித்தன் இயற்கை எய்தினார்.

நிதிசேர்ப்பு, குடும்பத்திற்கு உதவி

புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் எழுத்தாளர்கள் அவருக்காக நிதி சேகரித்தனர். எஸ்.எஸ். மாரிசாமி காண்டீபம் இதழில் 1951ல் அவருக்கு நிதிகோரி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை இதழான ஈழகேசரி நிதிதிரட்டியது. மலாயாவில் தமிழ் முரசு சார்பாக கோ. சாரங்கபாணி நிதி திரட்டினார். கல்கி புதுமைப்பித்தனுக்கு நிதி சேகரித்தார். அந்நிதி அவர் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. புதுமைப்பித்தனின் மனைவிக்கு தமிழக அதிர்ஷ்டச்சீட்டில் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் பின்னர் கிடைத்தது. புதுமைப்பித்தனின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு மாதந்தோறும் காப்புரிமைத் தொகை அளிக்க ஸ்டார் பிரசுரம் முன்வந்தது.

இலக்கிய முன்னோடியாக நிறுவப்படுதல்

1940-ல் புதுமைப்பித்தனுக்கு முதல் ஏற்பை உருவாக்கியவர் ரா.ஸ்ரீ. தேசிகன். அவர் புதுமைப்பித்தனுக்கு எழுதிய முன்னுரை புகழ்பெற்றது. புதுமைப்பித்தனை வெறும் நையாண்டி எழுத்தாளர், துடுக்குக்காரர் என சிலர் மதிப்பிட்டிருந்த சூழலில் அவருக்கு ஏற்பை உருவாக்கி அளித்தது இந்த முன்னுரை.

1951-ல் சுந்தர ராமசாமி வெளியிட்ட புதுமைப்பித்தன் நினைவு மலர் தமிழ் இலக்கியச் சூழலில் புதுமைப்பித்தனை வலுவாக நிறுவிய தொகைநூல். புதுமைப்பித்தனை இடதுசாரிகள் நச்சிலக்கியவாதி என்றும், மரபுவாதிகள் துடுக்குக்காரர் என்றும் நிராகரித்திருந்த சூழலில் இந்த நூல் அவரை நவீனத்தமிழிலக்கிய முன்னோடியாக நிலைநிறுத்தியது.

1951-ல் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு என்னும் வாழ்க்கைவரலாற்று நூல் புதுமைப்பித்தனை ஓர் இலக்கிய ஆளுமையாக நிலைநிறுத்தியது. இந்நூல் எழுதப்பட சுந்தர ராமசாமி ஒரு காரணம். இந்நூலில் உள்ள பார்வைகளே இடதுசாரிகள் புதுமைப்பித்தனை ஏற்றுக்கொள்ள காரணம் என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார். (புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுப்பு முன்னுரை)

1985-ல் புதுமைப்பித்தனின் பிரசுரமான கதைகளை முழுக்க தேடி எடுத்து ஓர் அட்டவணையை எம். வேதசகாயகுமார் தன் ஆய்வேட்டுக்காக தயாரித்தார். இந்த அட்டவணை பிற்காலத்தைய புதுமைப்பித்தன் ஆய்வுகளுக்கெல்லாம் முன்னோடியான முயற்சியாக அமைந்தது.

1987-ல் க.நா.சுப்ரமணியம் ஐந்திணை பதிப்பக வெளியீடாக வந்த புதுமைப்பித்தனின் முழுத்தொகுதிக்கு 'புதுமையும் பித்தமும்' எனும் தலைப்பில் எழுதிய நீண்ட முன்னுரையில் மணிக்கொடி முன்னோடிகளில் புதுமைப்பித்தன் ஒருவரே மேதை என்னும் தகுதிகொண்டவர் என மதிப்பிடுகிறார்.

1998-ல் ஆ. இரா. வேங்கடாசலபதி புதுமைப்பித்தனின் அன்னையிட்ட தீ என்னும் வெளிவராத நாவலை பதிப்பித்தார். அந்நூலில் எழுதிய விரிவான முன்னுரையில் புதுமைப்பித்தன் படைப்புகளின் முறையான பதிப்புமுயற்சிகள் பற்றி பேசினார்.

2000-ல் புதுமைப்பித்தன் கதைகளுக்கான முழுமையான செம்பதிப்பு ஆ.இரா.வேங்கடாசலபதியால் காலச்சுவடு பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டது. சுந்தர ராமசாமி அதற்கு நீண்ட முன்னுரை எழுதியிருந்தார். ஆ.இரா.வேங்கடாசலபதி தொடர்ச்சியாக புதுமைப்பித்தனின் படைப்புகளை விரிவான ஆய்வுக்குறிப்புகள், காலக்குறிப்புகளுடன் வெளியிட்டார். இந்த நூல்வரிசைகள் புதுமைப்பித்தனின் முன்னோடி என்னும் இடத்தை நிறுவின.

அரசியல்

புதுமைப்பித்தனின் அரசியல் தனிமனித அறம் சார்ந்ததாக மட்டுமே இருந்தது. அவர் தன் காலகட்டத்தின் எந்த அரசியல் அமைப்புக்கும், இயக்கத்துக்கும் சார்புநிலை கொண்டவராக இருக்கவில்லை. இந்திய தேசிய இயக்கம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவரானாலும் அவர் படைப்புகளில் விடுதலைப்போர் பகடியுடன் மட்டுமே சித்தரிக்கப்படுகிறது. தேசிய இயக்கத்தின் மிகையான கற்பனாவாதத்தையும் சாமானியர்கள் அதனுடன் சம்பந்தப்படாமல் அசட்டு அன்றாட உலகில் வாழ்வதையும் அவர் 'புரட்சி மனப்பான்மை' முதலிய கதைகளில் எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் அவருடைய காலகட்டத்தில் தோன்றியிருந்த இடதுசாரி அரசியல், சுயமரியாதை இயக்க அரசியல் இரண்டையும் ஓரிரு வரி விமர்சனக் குறிப்புகளாகவே பதிவுசெய்துள்ளார்.அவர் காலகட்டத்து அறிவியக்கமான தனித்தமிழ் இயக்கத்தையும் இந்தப்பாவி, திருக்குறள் செய்த திருக்கூத்து போன்ற கதைகளில் பகடியாகவே கதைகளில் சித்தரித்துள்ளார். புதுமைப்பித்தனின் அரசியலை நவீனத்துவத்தின் எதிர்மறைப்பண்பு கொண்டது, தனிமனிதவாதத்தை முன்வைப்பது என்று வரையறை செய்யலாம்.

அவரை இடதுசாரிகள் நச்சிலக்கியவாதி என்று நிராகரித்தாலும் பின்னர் அவர் படைப்புகளில் எளியமக்களை அனுதாபத்துடனும் அறச்சீற்றத்துடனும் சித்தரித்திருப்பதை இடதுசாரி அரசியலுக்கு உடன்பாடானதாக ஏற்றுக்கொண்டனர். அவர் புராணமரபை விமர்சனம் செய்தது முதலில் மரபுவாதிகளுக்குச் சீற்றத்தை உருவாக்கினாலும் பின்னர் அவருடைய தத்துவப்பார்வை ஏற்பு பெற்றது.

இலக்கியப்பார்வை

புதுமைப்பித்தன் தமிழ் நவீன இலக்கியச் சூழலில் அன்றாட யதார்த்தத்தை எழுதவேண்டும் என்றும், பொதுவான பார்வைக்கு தட்டுப்படாத வாழ்க்கையின் உண்மைகளை எழுதுவதே இலக்கியம் என்றும் கருத்து கொண்டிருந்தார். விமர்சனமே நவீன இலக்கியத்தின் ஆதாரம் என்று நிறுவியவை புதுமைப்பித்தனின் கதைகள். தன் கதைகள் பொதுமனசாட்சியைச் சீண்டி எழுப்பவேண்டும் என்று அவர் எண்ணினார்.

"என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம்" என்று 'என் கதைகளும் நானும்' என்னும் கட்டுரையில் கூறுகிறார்.

'இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை' என்று அதே கட்டுரையில் சொல்கிறார்

நடை, அழகியல்

புதுமைப்பித்தனின் நடை நவீனத் தமிழிலக்கியத்தின் அழகியலை வடிவமைத்தவற்றில் ஒன்று. 'தவளைப்பாய்ச்சல் போல தாவிச்செல்லும் நடை' என்று அதை சுந்தர ராமசாமி உள்ளிட்ட விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள். பெரும்பாலான கதைகளை ஆசிரியர்கூற்றாகவே சொல்லும் புதுமைப்பித்தன் கதையில் இருந்து விலகி விமர்சனங்களையும் எள்ளல்களையும் முன்வைப்பது, கதையோட்டத்திலேயே பல்வேறு துணைத்தகவல்களைச் சொல்வது, ஒரு வரியில் இருந்து தொடர்பற்றதாகத் தோன்றும் இன்னொரு வரிக்குச் செல்வது என்னும் வகையில் தன் நடையை அமைத்தார். உள்ளத்தின் ஓட்டத்தை எழுத்தில் வடிக்கமுயல்வது தன் நடை என அவர் சொன்னார்.

ஆனால் புதுமைப்பித்தனின் நடை ஒரே தன்மை கொண்டது அல்ல. செவ்வியல்நடை கொண்ட கதைகளையும், நாட்டார் கதைமரபில் இருந்து எடுத்தாண்ட நடை கொண்ட கதைகளையும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனின் நடையில் இரண்டு முன்தொடர்ச்சிகளைக் காண்கிறார். 'வீராசாமிச் செட்டியார் (விநோத ரசமஞ்சரி), அ. மாதவையா (பத்மாவதி சரித்திரம்) ஆகியோரின் வசன நடையின் பாதிப்பு அவரிடம் நிழலாடுவதை உணர முடிகிறது. ஆங்கில வாக்கியங்களின் அழகில் ஈர்க்கப்பட்ட மனத்தால் அவர் பல தமிழ் வாக்கியங்களை இதமாக உருவாக்கியிருக்கிறார். (சுப்புவய்யரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர் போனதல்ல. கலியாணி).' என்று அவர் 2000த்தில் புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மதிப்பீடுகள்

சமகால மதிப்பீடுகள்

புதுமைப்பித்தன் அவருடைய சமகாலத்திலேயே இலக்கிய மேதை என்னும் மதிப்பை அடைந்தவர். ரா.ஸ்ரீ. தேசிகன் புதுமைப்பித்தனின் கதைகளுக்கு 1940ல் எழுதிய புகழ்பெற்ற முன்னுரையில் "சிறுகதை மர்மங்களை நன்கு அறிந்துள்ள புதுமைப்பித்தனின் கதைகளுக்கிடையே திரியும்போது ஒரு கவி உலகிலே திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அனுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் ஒலிக்கிறது....ஒரு கவி உள்ளம் - சோகத்தினால் சாம்பிய கவி உள்ளம், வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கட்டுகிற உள்ளம் கதையின் மூலம் பேசுகிறது." என்று குறிப்பிட்டார்.

'அபாரமான கற்பனை, புதுமையான நடை, ஆற்றல் மிக்க மொழி, மென்மையான பகடி, சூழல் சித்தரிப்பு ஆகியன இவரது சிறப்புகள். இவரது படைப்புகளில் வலியும் அலைக்கழிப்பும் எழுச்சிக்கான கனலும் இருக்கின்றன' என்று கா.ஶ்ரீ.ஶ்ரீ குறிப்பிட்டார்.

முதல் தலைமுறை மதிப்பீடுகள்

"புதுமைப்பித்தன் பரம்பரை எனக்கூறத்தக்க வகையில் தமது வழியில் புதிய சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவதற்கு பிதாமகராகவும், உந்துசக்தியாக விளங்கியவர்" என்கிறார் தொ.மு.சி. ரகுநாதன்.

'கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பதுபோல தமிழில், இந்த நூற்றாண்டில், வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம்' என்று க.நா. சுப்ரமணியம் குறிப்பிடுகிறார். (புதுமையும் பித்தமும். புதுமைப்பித்தன் முழுக்கதைத் தொகுதி. ஐந்திணைப் பதிப்பகம். முன்னுரை. 1987)

"தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியில் அளவுக்கு மிஞ்சிய சோதனைகள் செய்து உருவகத்தில், உள்ளடக்கத்தில், கற்பனையில் என்று பல்வேறு சமயங்களில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அவருக்குப் பின் வந்த படைப்பாளர் பலர் அவர் வழியைப் பின்பற்றும் பக்தர்களாக உருவாக்கியது புதுமைப்பித்தனின் சிறுகதை மேதைமை" என சிட்டி-எம். சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர். (தமிழ்ச்சிறுகதை வரலாறு.)

இரண்டாம் தலைமுறை மதிப்பீடுகள்

'தமிழ் வாழ்வைப் புரிந்துகொள்வதற்குப் புதுமைப்பித்தன் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது. அவருடைய மொழி, மரபின் ஜீவனையும் மண்ணின் சாரத்தையும் இணைத்தது. படைப்புக்கு வலு சேர்க்க உதவிய அவரது ஆற்றல்கள் பல்வேறு தளங்களைச் சார்ந்தவை. இலக்கியம், புராணம், சமயம், ஜாதி,சமூகம், குடும்பம் போன்ற எந்தத் தளத்தில் செயல்படும்போதும் அந்தத் தளத்திற்குரிய வாசனைகளை ஏற்றி மிகுந்த நம்பகத்தன்மையை அவரால் வாசகனின் மனத்தில் உருவாக்கிவிட முடிகிறது. அவரது படைப்புகள் தமிழ்க் கலையின் சாதனை என்று பெருமைப்படும் வகையில் இருக்கின்றன.' என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார்.

"வ.வே.சு ஐயரால் தொடங்கப் பெற்ற சிறுகதை மரபு, புதுமைப்பித்தனிடத்து தமிழாகி, தமிழ் உரைநடையின் சிகரமாகி, அகில உலகிற்கும் தமிழின் பெருமையைக் காட்டி நிற்கிறது" என கார்த்திகேசு சிவத்தம்பி மதிப்பிடுகிறார்."

மூன்றாம் தலைமுறை மதிப்பீடுகள்

"புதுமைப்பித்தனின் இலக்கியத்தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக்கதைகள், மிகை யதார்த்தக்கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார். அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டுமே நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதைவடிவம், நடை ஆகியவை பற்றித் தனி கவனமேதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள் எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன" என்கிறார் ஜெயமோகன்.

நான்காம் தலைமுறை மதிப்பீடுகள்

"தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு முன்னோடிகளோ, தடங்களோ இல்லை. அப்படி இல்லாததும் அவருக்கு அநுகூலமாக அமைந்தது அவரது இலக்கிய அழகியலை "மாற்றுப்பார்வை" என்பதாக வரையறுக்கலாம்" என்று சு. வேணுகோபால் குறிப்பிடுகிறார்.

ஐந்தாம் தலைமுறை மதிப்பீடுகள்

'அறிவினால் வழிநடத்தப்படும் படைப்புலகம் புதுமைப்பித்தனுடையது. ஜோடனையாக அல்லாமல் தன்னை அறிவின் பிரதிநிதியாக மிகத்துல்லியமாக அவர் மாற்றிக் கொண்டார் என்பது உண்மையே என்றாலும் அந்த லட்சியவாதமே அவர் படைப்புலகுக்கு பாத்தி கட்டிவிடுகிறது' என்று சுரேஷ் பிரதீப் குறிப்பிடுகிறார்.

விவாதங்கள்

புதுமைப்பித்தன் உருவாக்கிய விவாதங்கள்
  • கல்கி தழுவல் விவாதம்: ரசமட்டம் கட்டுரைகள். கல்கி எழுதிய நாவல்கள் வெளிநாட்டு நாவல்களின் தழுவல்கள் என்று புதுமைப்பித்தன் ரசமட்டம் என்ற பேரில் கடுமையான கட்டுரைகளை எழுதினார். நையாண்டி நிறைந்த அக்கட்டுரைகளுக்கு கல்கி அவை தழுவல்கள் அல்ல, தூண்டுதல்கள் பெற்ற படைப்புகளே என பதில் எழுதினார்.
  • தமிழ் இலக்கிய வரலாறு விவாதம். மு. அருணாசலம் தன் தமிழிலக்கிய வரலாறு என்னும் பல பகுதிகள் கொண்ட நூலில் நவீன இலக்கியம் பற்றிப் பேசும்போது மணிக்கொடி உள்ளிட்ட இலக்கிய இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். அதைக் கண்டித்து புதுமைப்பித்தன் எழுதினார். 'மூனா அருணாசலமே முச்சந்தி கும்மிருட்டில் பேனா குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய்' என்னும் கவிதையை அப்போது எழுதினார்.
  • 1937ல் புதுமைப்பித்தன் பாரதி மகாகவியா விவாதத்தில் கடுமையான கருத்துக்களை தினமணி நாளிதழில் எழுதினார்.
  • 1937ல் புதுமைப்பித்தன் பாரதி வள்ளிப்பாட்டு விவாதம் தொடங்கக் காரணமாக அமைந்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு வெறும் காமம் மட்டுமே கொண்டது என்று கண்டித்தார்.
  • 1937-ல் ஏ.எஸ்.ஏ சாமி எழுதிய 'பில்கணன் 'என்னும் நாடகம் சொந்தப் படைப்பு எனப் பெயரிடப்பட்டிருந்ததால் அதனைக் கண்டித்து 'இரவல் விசிறி மடிப்பு' என்ற பெயரில் புதுமைப்பித்தன் நீண்ட கட்டுரை எழுதினார். 1948-ல் இந்நாடகம் ஏ.எஸ்.ஏ.சாமி பெயரில் திரைப்படமாகவும் வந்தது.
புதுமைப்பித்தன் பற்றிய விவாதங்கள்
  • புதுமைப்பித்தன் தழுவல் விவாதம். புதுமைப்பித்தனின் பல கதைகள் தழுவல்களே என்று விமர்சகர் சிட்டி முதலியோர் உருவாக்கிய விவாதம்.
  • புதுமைப்பித்தன் விவாதம்: மலேசியாவில் புதுமைப்பித்தனின் இலக்கியத் தகுதி பற்றி மலேசிய இதழ் 'தமிழ் முரசு' மற்றும் சில இதழ்களில் நடந்த ஒரு விவாதம். புதுமைப்பித்தன் கதைகள் ஆபாசமானவை, மக்களுக்கு உதவாதவை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு நவீன எழுத்தாளர்கள் மறுப்புரை கூறினர்.
  • புதுமைப்பித்தன் கதைகள் பாடநீக்கம். 2014ல் சென்னை பல்கலை புதுமைப்பித்தனின் இருகதைகளை தலித் மக்களுக்கு எதிரானவை என திரும்பப்பெற்றது. அது முற்றிலும் பிழையான வாசிப்பு என்று நவீன எழுத்தாளர்கள் மறுத்தனர்.

புதுமைப்பித்தன் பற்றி எழுதப்பட்ட நூல்கள்

  • புதுமையும் பித்தமும்: ஆளுமை - படைப்பு - விவாதம் - க. நா. சுப்ரமண்யம்
  • புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி. ரகுநாதன்
  • புதுமைப்பித்தன்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் - தொ. மு. சி. ரகுநாதன்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள் - புதுமைப்பித்தன் - வல்லிக்கண்ணன் (சாகித்திய அகாடமி, 1987)
  • புதுமைப்பித்தன் ஆளுமையும் ஆக்கங்களும் (கட்டுரை)
  • புதுமைப்பித்தன்: ம மரபை மீறும் ஆவேசம் - சுந்தர ராமசாமி (2006) (தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்)
  • புதுமைப்பித்தன் கதைகள்: சு.ரா. குறிப்பேடு
  • புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் - எம். வேதசகாயகுமார்
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும் - ராஜமார்த்தாண்டன்
  • புதுமைப்பித்தன் எனும் பிரம்மராஷஸ் - ராஜ் கௌதமன் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
  • இலக்கிய முன்னோடிகள் 'முதல்சுவடு' - ஜெயமோகன் (நற்றிணை பதிப்பகம், 2003)
  • புதுமைப்பித்தனுக்குத் தடை - சுகுமாரன் (தொ-ர்)
  • புதுமைப்பித்தன் கதைகள்: அகலமும், ஆழமும் - வே.மு. பொதியவெற்பன்
  • புதுமைப்பித்தன் பன்னோக்குப் பார்வை - விஜயபாஸ்கரன் (தொ-ர்)
  • புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள் - முல்லை முத்தையா
  • வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தன் - முல்லை முத்தையா
  • புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை 1951-52 - எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி
  • புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன்
  • கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - எஸ். சிதம்பரம்
  • புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் - இளசை மணியன் (தொ-ர்)
  • புதுமைப்பித்தன் கனவும் உளப் பகுப்பாய்வும் - தி.கு. இரவிச்சந்திரன்
  • புதுமைப்பித்தன் களஞ்சியம் - (பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடசலபதி)
  • புது தில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987 - (பதிப்பாசிரியர் ஶ்ரீநிவாச கோபாலன்)

நாட்டுடைமை

புதுமைப்பித்தனின் படைப்புகள் தமிழக அரசால் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கிய இடம்

புதுமைப்பித்தன் தமிழ் நவீன இலக்கியத்தின் முதன்மை முன்னோடி என்று கொள்ளத்தக்கவர். அதற்கான காரணங்களை இப்படி வரையறை செய்யலாம்

  • தமிழ்ச் சிறுகதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்து சிறந்த முன்னுதாரணங்களையும் உருவாக்கியவர் அவர்.யதார்த்தச் சித்தரிப்பு, உருவகக் கதை, பகடிக்கதை, துப்பறியும் கதை, பேய்க்கதை, புராண மறு ஆக்கம், வரலாற்றுப்புனைவு, மிகையதார்த்தம், நேர்கோடற்ற புனைவுமுறை, நாட்டாரியலை புனைவுக்கு பயன்படுத்துதல் என எல்லா வகைமைகளிலும் அவர் படைப்புகளே முன்னுதாரணங்கள். புதுமைப்பித்தன் மறைந்து அரைநூற்றாண்டுக்குப்பின் உருவான மாய யதார்த்தம் போன்ற புனைவுமுறைகளுக்குக் கூட அவர் எழுத்தில் முன்னுதாரணங்கள் உள்ளன.
  • நவீன இலக்கியம் என்பது உயர்ந்த மனிதர்களையும், உயர்ந்த இலட்சியங்களையும் உருவாக்குவது மட்டும் அல்ல என்றும் அன்றாடவாழ்க்கையையும், மானுடத்தின் இருண்ட ஆழங்களையும் எழுதுவதும் அதன் பணியே என்றும் தமிழிலக்கியச் சூழலில் நிறுவியவர் புதுமைப்பித்தன். சமூகவிமர்சனத்தன்மையே நவீன இலக்கியத்தின் அடிப்படைப் பண்பு என்று காட்டியவர்.
  • நவீன இலக்கியம் மரபிலுள்ள மெய்யியல்தரிசனங்களையும் தத்துவத்தையும் கூட சுதந்திரமாக மறுபுனைவுசெய்யும் ஆற்றலும் உரிமையும் உடையது என்றும், அதன் வழியாக அது மரபை புத்தாக்கமே செய்கிறது என்றும் தன் படைப்புகள் வழியாக நிறுவியவர்.
  • ஓர் இலக்கிய ஆளுமையாக நிலைகொள்வதும் இலக்கியவாதியின் கடமையே என்று தன் வாழ்க்கையின் வழியாக நிறுவியவர். சமரசமற்ற விமர்சனத்தன்மை கொண்டிருந்தவர். அதிகாரங்கள்,அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக இருந்தது மட்டுமல்ல தன் காலகட்டத்தின் இலட்சியவாதத் தன்மைகொண்டிருந்த அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுடன் இணைந்துகூட செயல்பட மறுத்துவிட்டவர்.தன் படைப்புள்ளத்தை நம்பி தனிமனிதனாகவே நிலைகொண்டவர். தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கியவாதியின் தனித்தன்மையும் நிமிர்வுமே முதன்மையானவை என்னும் எண்ணம் அவரிடமிருந்தே உருவாகியது.

சுந்தர ராமசாமி நவீனத் தமிழிலக்கியத்தின் இரண்டு தொடக்கப்புள்ளிகளாக சி.சுப்ரமணிய பாரதியார் புதுமைப்பித்தன் இருவரையும் முன்வைக்கிறார். பாரதியார் இலட்சியக் கனவுகளை முன்வைத்தவர். சமூக, அரசியல் இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். புதுமைப்பித்தன் தனிமனிதனாக மட்டுமே நின்றவர், விமர்சனப்பார்வை கொண்டவர். மணிக்கொடி முன்னோடிகளில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் பாரதியின் வழிவந்தவர்கள் ஆயினும் நவீனத்தமிழிலக்கியத்தின் அடுத்த கட்ட தொடர்ச்சி புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவர்களிடமிருந்தே உருவாகியது என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார் (புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள்)

படைப்புகள்

கவிதைகள்
  • திரு ஆங்கில ஆசான் தொண்டரடிப்பொய்யாழ்வார் வைபவம்
  • மூனாவருணாசலமே மூடா
  • இணையற்ற இந்தியா
  • செல்லும் வழி இருட்டு
சிறுகதைகள்
  • அகல்யை
  • செல்லம்மாள்
  • கோபாலய்யங்காரின் மனைவி
  • இது மிஷின் யுகம்
  • கடவுளின் பிரதிநிதி
  • கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  • படபடப்பு
  • ஒரு நாள் கழிந்தது
  • தெரு விளக்கு
  • காலனும் கிழவியும்
  • பொன்னகரம்
  • இரண்டு உலகங்கள்
  • மனித யந்திரம்
  • ஆண்மை
  • ஆற்றங்கரைப் பிள்ளையார்
  • அபிநவ் ஸ்நாப்
  • அன்று இரவு
  • அந்த முட்டாள் வேணு
  • அவதாரம்
  • பிரம்ம ராக்ஷஸ்
  • பயம்
  • டாக்டர் சம்பத்
  • எப்போதும் முடிவிலே இன்பம்
  • ஞானக் குகை
  • கோபாலபுரம்
  • இலக்கிய மம்ம நாயனார் புராணம்
  • 'இந்தப் புரவி'
  • காளி கோவில்
  • கபாடபுரம்
  • கடிதம்
  • கலியாணி
  • கனவுப் பெண்
  • காஞ்சனை
  • கண்ணன் குழல்
  • கருச்சிதைவு
  • கட்டிலை விட்டிறங்காக் கதை
  • கட்டில் பேசுகிறது
  • கவந்தனும் காமனும்
  • கயிற்றரவு
  • கேள்விக்குறி
  • கொடுக்காப்புளி மரம்
  • கொலைக்காரன் கை
  • கொன்ற சிரிப்பு
  • குப்பனின் கனவு
  • குற்றவாளி யார்?
  • மாயவலை
  • மகாமசானம்
  • மனக்குகை ஓவியங்கள்
  • மன நிழல்
  • மோட்சம்
  • 'நானே கொன்றேன்!'
  • நல்ல வேலைக்காரன்
  • நம்பிக்கை
  • நன்மை பயக்குமெனின்
  • நாசகாரக் கும்பல்
  • நிகும்பலை
  • நினைவுப் பாதை
  • நிர்விகற்ப சமாதி
  • நிசமும் நினைப்பும்
  • நியாயம்
  • நியாயந்தான்
  • நொண்டி
  • ஒப்பந்தம்
  • ஒரு கொலை அனுபவம்
  • பால்வண்ணம் பிள்ளை
  • பறிமுதல்
  • பாட்டியின் தீபாவளி
  • பித்துக்குளி
  • பொய்க் குதிரை
  • 'பூசனிக்காய்'அம்பி
  • புரட்சி மனப்பான்மை
  • புதிய கூண்டு
  • புதிய கந்த புராணம்
  • புதிய நந்தன்
  • புதிய ஒளி
  • ராமனாதனின் கடிதம்
  • சாப விமோசனம்
  • சாளரம்
  • சாமாவின் தவறு
  • சாயங்கால மயக்கம்
  • சமாதி
  • சாமியாரும் குழந்தையும் சீடையும்
  • சணப்பன் கோழி
  • சங்குத் தேவனின் மர்மம்
  • செல்வம்
  • செவ்வாய் தோஷம்
  • சிற்பியின் நரகம்
  • சித்தம் போக்கு
  • சித்தி
  • சிவசிதம்பர சேவுகம்
  • சொன்ன சொல்
  • சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  • தனி ஒருவனுக்கு
  • தேக்கங் கன்றுகள்
  • திறந்த ஜன்னல்
  • திருக்குறள் குமரேச பிள்ளை
  • திருக்குறள் செய்த திருகூத்து
  • தியாகமூர்த்தி
  • துன்பக் கேணி
  • உணர்ச்சியின் அடிமைகள்
  • உபதேசம்
  • வாடாமல்லிகை
  • வாழ்க்கை
  • வழி
  • வெளிப்பூச்சு
  • வேதாளம் சொன்ன கதை
  • விபரீத ஆசை
  • விநாயக சதுர்த்தி
  • தமிழ் படித்த பெண்டாட்டி
மொழிபெயர்ப்புகள்
  • ஆஷாட பூதி
  • ஆட்டுக் குட்டிதான்
  • அம்மா
  • அந்தப் பையன்
  • அஷ்டமாசித்தி
  • ஆசிரியர் ஆராய்ச்சி
  • அதிகாலை
  • பலி
  • சித்திரவதை
  • டைமன் கண்ட உண்மை
  • இனி
  • இந்தப் பல் விவகாரம்
  • இஷ்ட சித்தி
  • காதல் கதை
  • கலப்பு மணம்
  • கனவு
  • காரையில் கண்ட முகம்
  • கிழவி
  • லதீபா
  • மகளுக்கு மணம் செயது வைத்தார்கள்
  • மணிமந்திரத் தீவு
  • மணியோசை
  • மார்க்ஹீம்
  • மிளிஸ்
  • முதலும் முடிவும்
  • நாடகக்காரி
  • நட்சத்திர இளவரசி
  • ஓம் சாந்தி! சாந்தி!
  • ஒரு கட்டுக்கதை
  • ஒருவனும் ஒருத்தியும்
  • பைத்தியகாரி
  • பளிங்குச் சிலை
  • பால்தஸார்
  • பொய்
  • பூச்சாண்டியின் மகள்
  • ராஜ்ய பாதை
  • ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
  • சாராயப் பீப்பாய்
  • சகோதரர்கள்
  • சமத்துவம்
  • ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி
  • சிரித்த முகக்காரன்
  • சுவரில் வழி
  • தாயில்லாத குழந்தைகள்
  • தையல் மிஷின்
  • தந்தை மகற்காற்றும் உதவி
  • தெய்வம் கொடுத்த வரம்
  • தேசிய கீதம்
  • துன்பத்திற்கு மாற்று
  • துறவி
  • உயிர் ஆசை
  • வீடு திரும்பல்
  • ஏ படகுக்காரா!
  • யாத்திரை
  • எமனை ஏமாற்ற
  • யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
  • தர்ம தேவதையின் துரும்பு
பிற ஆக்கங்கள்
  • பிரேத மனிதன் - மேரி ஷெல்லி
  • ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
பிற படைப்புகள்
  • சிற்றன்னை (குறுநாவல்)
  • ஆண்மை
  • நாரத ராமாயணம்
அரசியல் நூல்கள்
  • ஃபாசிஸ்ட் ஜடாமுனி
  • கப்சிப் தர்பார்
  • ஸ்டாலினுக்குத் தெரியும்
  • அதிகாரம்
கடிதங்கள்
  • கண்மணி கமலாவுக்கு-புதுமைப்பித்தன் கடிதங்கள், சாந்தி பிரசுரம் (தொகுப்பு: இளையபாரதி)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jan-2023, 12:07:27 IST