under review

ஆர்.சூடாமணி

From Tamil Wiki
ஆர்.சூடாமணி

To read the article in English: R. Chudamani. ‎

சூடாமணி
சூடாமணி

ஆர். சூடாமணி (ஜனவரி 10, 1931 - செப்டம்பர் 13, 2010) தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு உருவாகி வந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். மரபான பார்வையில் பெண்விடுதலையையும், சமூக உறவுகளின் நுட்பங்களையும், ஒழுக்க அற நெறிகளையும் பேசியவர்.

பிறப்பு, கல்வி

ஆர். சூடாமணி ஜனவரி 10, 1931-ல் சென்னையில் ராகவன் - கனகவல்லி இணையருக்கு பிறந்தார். தந்தை ராகவன் அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலராக இருந்தார். கனகவல்லி சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். சூடாமணியோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். சூடாமணிக்கு ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தாலும் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. ஆகவே பள்ளி செல்லாமல் வீட்டிலேயே கல்வி கற்றார். தாயிடமிருந்து ஓவியக்கலையைக் கற்றார். வீட்டுநூலகத்திலேயே படித்தார்.

சூடாமணி

தனிவாழ்க்கை

சூடாமணி

ஆர். சூடாமணி திருமணம் புரிந்துகொள்ளவில்லை. எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி. இன்னொரு சகோதரி பத்மாசனி மொழிபெயர்ப்பாளர். இவருடைய பாட்டி ரங்கநாயகி அம்மாளும் எழுத்தாளர்.

இலக்கிய வாழ்க்கை

சூடாமணி

சூடாமணி 1954-ல் 'பரிசு விமர்சனம்' என்னும் முதல் கதையை எழுதினார். இது வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய நந்தவனம் என்னும் இதழில் வெளிவந்தது. 1954-லேயே 'நோன்பின் பலன்', 'அன்பு உள்ளம்' முதலிய கதைகளை எழுதினார். அவருடைய சிறுகதை 'காவேரி' 1957-ம் ஆண்டு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றது. 1959-ம் ஆண்டு மனதுக்கு இனியவள் என்னும் நாவல் வெளிவந்தது. இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. இந்நாவல் சூடாமணியின் தன்வரலாற்றின் சாயல் கொண்டது.

சூடாமணி கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்திலும் ’சூடாமணி ராகவன்' என்ற பெயரில் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய 'இரவுச்சுடர்' நாவல் யாமினி என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. கதைமாந்தரின் உளநிகழ்வுகளை வெவ்வேறு கோணத்தில் சொல்லமுயல்பவை. ஆனால் உளப்பகுப்புத்தன்மையோ சீண்டும்தன்மையோ அற்றவை. பெண்களின் உரிமை, விடுதலை ஆகியவற்றைப் பற்றிப் பேசினாலும் அவர் பெண்ணியக் கொள்கைகள் எதையும் முன்வைக்கவில்லை.

ஓவியம்

இளம் வயதில் முறைப்படி ஓவியம் கற்றிருந்த இவர் நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார். வெகுகாலம் வெளியுலகுக்கு வராத இவரது ஓவியங்கள் 2011-ம் ஆண்டு சென்னை சி.பி. ஆர்ட் சென்டரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

கல்கியில்...

விருதுகள்

  • கலைமகள் வெள்ளி விழா விருதும் பரிசும் 'மனத்துக்கினியவள்' நாவலுக்காக (1957).
  • இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை 'நான்காவது ஆசிரமம்' என்ற சிறுகதைக்காகப் பெற்றார்.
  • ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் 'இருவர் கண்டனர்' என்ற நாடகத்துக்காக ரூபாய் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார்.
  • பபாசி அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு 2009-ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக்கொண்ட அவர், பல்வேறு சேவை நிறுவனங்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்து வழங்கினார்.
  • மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2009-ம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் விருது.
  • 2001-ல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு வழங்கப்பட்டது.

மறைவு

செப்டம்பர் 13, 2010 அன்று சூடாமணி காலமானார். மூன்றரைகோடி ரூபாய் மதிப்புள்ள அவருடைய சொத்துக்கள் அவருடைய இறுதிக்குறிப்பின்படி ராமகிருஷ்ண மிஷன் கட்டுப்பாட்டிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம், வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் (தரமணி ) ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.

இலக்கிய இடம்

ஆர். சூடாமணி குடும்பப்பின்புலத்தில் எழுதியவர். பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளை சித்தரித்தார். இயல்பான இதழியல் நடையில் அமைந்த இவருடைய கதைகளை பொதுவாக ஏற்கப்பட்ட நவீனத்தமிழிலக்கிய அளவுகோல்களின்படி பொதுவாசிப்புக்கும் இலக்கியவாசிப்புக்கும் நடுவிலான படைப்புகள் என்று கூறமுடியும். அறம், ஒழுக்கம் சார்ந்த மரபான பார்வையுடன் மனிதநேயத்தையும் பெண்ணுரிமையையும் முன்வைப்பவை. இலக்கியப்படைப்புகளுக்கு இன்றியமையாத ஆழ்ந்த உசாவலோ தனித்தன்மைகொண்ட பார்வையோ பிறிதெங்குமில்லாத நுண்சித்தரிப்புகளோ உளநிகழ்வுகளின் பதிவுகளோ இல்லாதவை. ஆர். சூடாமணி தமிழ் நவீன இலக்கியத்தின் மரபில் இருந்து உருவாகிவரவில்லை. கலைமகளை மையமாக்கி உருவான பொதுவாசிப்புக்குரிய கதைகளில் இருந்தே அவருடைய நடை, வடிவம், பார்வை உருவாயிற்று.

ஆனால் விமர்சகர் சு. வேணுகோபால் சூடாமணி தமிழிலக்கியத்தில் கொண்டாட மறந்த தேவதை என்று குறிப்பிடுகிறார். பொதுவாசிப்புக்குரிய சராசரிக் கதைகள் எழுதியிருந்தாலும் அவர் எழுதிய அறுநூறுக்கும் மேற்பட்ட கதைகளில் நூறு கதைகளை இலக்கியத்தகுதி கொண்டவை என்று சொல்லமுடியும் என்றும், இது தமிழில் எழுதிய பல இலக்கியவாதிகளின் பங்களிப்பை விட மிகுதி என்றும் சொல்கிறார். எதிர்மறைப்பண்புகளின் வெளிப்பாடுகளை இலக்கியத்தில் எதிர்பார்க்கும் நவீனத்துவப் பார்வையால் சூடாமணி புறக்கணிக்கப்பட்டார் என்றும், அவர் மானுட உள்ளத்தின் கனிவையும் அறத்தையும் எழுதியவர் என்றும் தாய்மையின் உளநிலைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியவர் என்றும் கருதுகிறார்.[1]

நூல்கள்

சிறுகதைகள்
  • ஒளியின் முன்
  • என்ன மாயமோ
  • பணம் பறித்த செல்வம்
  • அவன் வடிவம்
  • படிகள்
  • உடன் பிறப்பு
  • அந்த நேரம்
  • ஓர் இந்தியன் இறக்கிறான்
  • உலகத்திடம் என்ன பயம்
  • நாகலிங்க மரம் (தேர்ந்தெடுத்த கதைகள்)
  • சூடாமணி கதைகள்
  • தனிமைத்தளிர் (தேர்ந்தெடுத்த கதைகள்)
குறுநாவல்கள்
  • விடிவை நோக்கி
  • ஆழ்கடல்
  • சோதனையின் முடிவு
  • வாழ்த்துவோம்
  • உள்ளக்கடல்
  • இரவுச்சுடர்
  • முக்கோணம்
நாவல்கள்
  • மனதுக்கு இனியவள்
  • புன்னகைப் பூங்கொத்து
  • நீயே என் உலகம்
  • தீயினில் தூசு
  • தந்தை வடிவம்
  • மானிட அம்சம்
  • கண்ணம்மா என் சகோதரி
  • இரவுச்சுடர்
  • உள்ளக் கடல்
நாடகங்கள்
  • இருவர் கண்டனர்
  • அருணோதயம்
  • அருமை மகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page