under review

நகுலன்

From Tamil Wiki
Nagulan3.jpg
நகுலன் (புகைப்படம் காஞ்சனை சீனிவாசன்)
நகுலன் 100
நகுலன் வாழ்க்கை வரலாறு
நகுலன்
நகுலம்

நகுலன் (ஆகஸ்ட் 21, 1921 - மே 17, 2007) நவீன தமிழிலக்கிய எழுத்தாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். ஆங்கிலப் படைப்புகளை டி. கே. துரைசாமி என்ற இயற்பெயரிலும், தமிழ்ப் படைப்புகளை நகுலன் என்ற புனைப்பெயரிலும் எழுதினார். 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் முக்கியமான முயற்சி. தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தார். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் அவருடைய தனிவாழ்க்கை மற்றும் அவருடைய மனம் சார்ந்தவை.

பிறப்பு, கல்வி

Nagulan2.jpg

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. நகுலன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பார்வதி, கிருஷ்ணையர் இணையருக்கு ஆகஸ்ட் 21, 1921-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். கும்பகோணத்திலிருந்து தன் பதினான்கு வயதில் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கேரளா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆங்கில எழுத்தாளரான வெர்ஜீனியா வூல்ப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். எழுத்தாளர் திரிசடை இவரின் தங்கை.

தனி வாழ்க்கை

Nagulan1.jpg

நகுலனின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ள கோல்ஃப் லிங்க் கவடியாறு என்னும் இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது வருடம் ஆங்கில பேராசியராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே எழுதும் பணியை முழுநேரமாகத் தொடர்ந்தார். நகுலன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார். நகுலனை அவருடைய இளம்பருவத்து தோழியும், அவர் அன்னையின் தோழியின் மகளும், அண்டைவீட்டில் வாழ்ந்தவருமான பிறுத்தா என்னும் மலையாளப் பெண்மணி இறுதிவரை பேணினார். நகுலனுடன் அவருக்கு சகோதர முறையான உறவு இருந்தது.

இலக்கிய வாழ்க்கை

Guruchethram.jpg
தொடக்கம்

சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார். 1960-ல் இருந்து தீவிரமாக எழுதத் தொடங்கினார். எஸ். நாயர் என்ற புனைப் பெயரில் சில கதைகள், கவிதைகள் எழுதினார். க. நா. சுப்ரமணியம் நகுலனுக்கு நவீனத்தமிழிலக்கிய வாசிப்பு ஏற்படக் காரணமாக அமைந்தார். க.நா.சுவை தன் ஆசிரியராகவே எண்ணினார். நீல பத்மநாபன், ஆ. மாதவன், ஷண்முகசுப்பையா போன்றோர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

கவிதைகள்

நகுலன் எழுத்து கவிதை இயக்கம் உருவாக்கிய முன்னோடி புதுக்கவிஞர்களில் ஒருவர். எழுத்து வெளியிட்ட புதுக்குரல்கள் தொகுப்பில் அவருடைய கவிதைகளும் உள்ளன. கோட் ஸ்டாண்ட் கவிதைகள், மழை மரம் காற்று, சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி ஆகியவை நகுலனின் குறிப்பிடத்தக்க கவிதைகள். கவிதைகளை தற்குறிப்புகளாக எழுதுவதும், கவிதைகளுக்குள் இலக்கிய ஆசிரியர்கள் மற்றும் இலக்கியப்படைப்புகளை ஊடுபிரதிகளாகச் சேர்ப்பதும் நகுலனின் பாணி.தமிழில் ஒன்பது நாவல்களும் ஐந்து கவிதைத் தொகுப்புகளும் எழுதினார்

நாவல்கள்

1972-ல் நகுலன் ’நினைவுப் பாதை’ நாவல் எழுதினார். நவீனன் என்ற படைப்பாளிக்கும் நகுலன் என்ற புனைபெயர் கொண்ட மனிதனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலாக 'நினைவுப்பாதை' அமைந்தது. நிழல்கள், நாய்கள், வாக்குமூலம், நவீனன் டைரி முதலிய நாவல்களும் இவ்வகையிலானவை. தமிழில் நவீனத்துவ எழுத்துக்களின் இறுக்கமான வடிவை மீறி வடிவற்ற எழுத்தை உருவாக்கிய முன்னோடிகளில் நகுலனும் ஒருவர். நினைவுப்பாதை நாவலில் நேரடியாக கட்டற்ற அக ஓட்டச் சித்தரிப்பு வெளிப்படும் பகுதி தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்கது எனப்படுகிறது. நகுலனின் நாவல்களில் சுசீலா என்னும் கற்பனைக் கதாபாத்திரம் நகுலனின் மாற்றுருக்களான நவீனன், நகுலன் ஆகியோருடன் இணைந்து தோன்றுகிறது.

தொகைநூல்

1968-ல் நகுலன் 'குருக்ஷேத்திரம் இலக்கியத் தொகுப்பு' கொண்டு வந்தார். தமிழ் நவீனக்கவிதை, நவீன எழுத்து ஆகியவற்றிற்கான ஒரு தொடக்கநூலாக அது கருதப்படுகிறது. சுஜாதா அதில் தொடக்ககாலக் கதை ஒன்றை எழுதியிருக்கிறார். ஐயப்பப் பணிக்கரின் கவிதையான குருக்ஷேத்திரம் (டி.எஸ்.எலியட்டின் தரிசுநிலம் கவிதையை முன்மாதிரியாகக்கொண்டது) அதில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.

ஆங்கிலம்

நகுலன் ஆங்கிலத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல் எழுதினார். .1973-ல் ஆங்கிலத்தில் Words from the wind என்னும் நாவலை எழுதினார். இவரது இராஜா வெம்பலா (Raja Vempala) என்னும் ஆங்கில கவிதை நீள்கவிதை வடிவைச் சார்ந்தது. ப்ரிதிஷ் நந்தி நடத்திய "இல்லஸ்ட்ரேடட் வீக்லி" (Illustrated Weekly) என்னும் வார இதழில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்துள்ளன.

மொழிபெயர்ப்பு

ஜேம்ஸ் ஜாய்சி, டி.எஸ். எலியட், கே. ஐயப்பன் பணிக்கர் ஆகியோரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். சுப்பிரமணிய பாரதி பற்றி ஆங்கிலத்தில் "லிட்டில் ஸ்பேரோ"(Little Sparrow) என்ற புத்தகத்தை மொழிபெயர்த்தார்.

மறைவு

நகுலன் மே 17, 2007 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தன் வீட்டில் 86-ஆவது வயதில் காலமானார்.

விருதுகள்

  • 1983-ல் கவிதைகளுக்காக "குமாரன் ஆசான்" விருது பெற்றார்
  • அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு விருது
  • சாந்தோம் கம்யூனிகேஷன் செண்டர் விருது

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

புகைப்படங்கள்

புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் (காஞ்சனை சீனிவாசன்) நகுலனின் இறுதிக் காலத்தில் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்து அவரது கவிதைகளோடு 'கண்ணாடியாகும் கண்கள்’ என்ற தொகுப்பை வெளியிட்டார்.

ஆய்வுகள்
  • அருவம் உருவம்: நகுலன் 100 (ஷங்கர் ராமசுப்ரமணியன்) (யாவரும்)
கவிதை
  • நீல பத்மநாபன் நகுலன் பற்றி நகுலம் என்னும் நீள்கவிதையை எழுதியிருக்கிறார்
மலர்கள்
  • நகுலன் 100 (நூற்றாண்டுச் சிறப்பிதழ்: 1921-2021) (கனலி)
  • கோணங்கி 1994ல் "கல்குதிரை" நகுலன் சிறப்பிதழ் கொண்டு வந்தார்.
  • கனலி இணைய இதழ் 2021ல் நகுலன் சிறப்பிதழ் வெளியிட்டது.
  • நகுலன் நூற்றாண்டு 2021 ல் நூல்வனம் பதிப்பகம் நகுலன் அருவம் உருவம் என்னும் நூலை வெளியிட்டது.
வாழ்க்கைவரலாறு
  • நகுலன் வாழ்க்கைவரலாறு ஆ.பூமிச்செல்வம். இந்திய இலக்கியமேதைகள் வரிசை. சாகித்ய அக்காதமி

இலக்கிய இடம்

Nagulan5.jpg

"தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். மரபும் நவீனமும் இழையோடும் மொழி நடையில் வெளிப்படுகிறது 'நினைவுப் பாதை'. கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயசமாய் எழுதிக் கொண்டு செல்வதிலும் வெளியாகும் நகுலனின் ஒரு அபோதமான கட்டற்ற தன்மை மிகுந்த அழகாகப் படுகிறது". என நகுலனின் 'நிழல்கள்' நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

”தமிழ் நாவல் வரிசையில் நகுலனின் நாவல்கள் தனியிடம் கொண்டவை. அவர் கதையில்லாத நாவல்களை எழுதினார் என்பேன்; அதாவது, சம்பிரதாயமான நாவல்களைப் போல் கதாபாத்திரங்களின் உலகை விரித்துக்கொண்டு போவதற்கு மாற்றாக, ஆழ்ந்த மனவோட்டங்களையும் சிதறலான நினைவுகளையும் தனது மரபும் நவீனமும் இணைந்த மொழிநடையில் எழுதியிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்வதென்றால், சிதறுண்ட சாயைகளின் உலகையே அவர் உருவாக்கியுள்ளார். வடிவக் கட்டுப்பாடுகள், வரம்புகள் எதற்குள்ளும் அடங்காதவை நகுலனின் நாவல்கள். நகுலனின் பல படைப்புகளின் நாயகி சுசீலா. நகுலனின் படைப்புகளில் அழியாச்சுடரைப் போல ஒளிர்ந்தபடியே இருக்கிறாள் சுசீலா. சொல்லில் சொல்ல முடியாதவற்றைப் புனைவுகளாக எழுத முயன்றதே நகுலனின் கலை. அந்த வகையில், இன்று நாம் பேசும் நான்லீனியர் நாவல்களுக்கு நகுலனே முன்னோடி." என எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

”நகுலன் தன் புனைவில் மூலப்புனைவுகளை உருவாக்கவில்லை. ஆனால் அந்த மைய இலக்கிய ஓட்டத்தின் விமர்சனக்குறிப்பாக அமைவது நகுலனின் படைப்புகள். அதற்குக் காரணம் நகுலனுக்கு அமைந்த வாழ்க்கை அனுபவம் என்பது வாசிப்பனுபவமே. நகுலன் தன் எழுத்தின் மூலம் அந்த வாசிப்பனுபவத்திற்கு எதிர்வினையாற்றுகிறார். நகுலனின் மிகச்சிறந்த பங்களிப்பு அவர் தமிழிலக்கிய மரபுக்கு நவீனத்துவம் சார்ந்த அடிக்குறிப்பாக அமைந்தமையில் தான் உள்ளது. அப்படைப்பு எந்த மூல நூல்களுக்கு அடிக்குறிப்பாக அமைகிறது என்ற புரிதல் இல்லாமல் அவற்றை நாம் முழுக்க உள்வாங்க முடியாது. நகுலனின் பங்களிப்பு என்பது அவரது தனிமையும் பிறழ்வும் மரபின் ஒரு நுனியில் தன்னைப் பிணைத்துக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன என்பதே. அதனூடாக அவரது மொழிப் பதிவுகள் எல்லாமே மரபுக்கான அடிக்குறிப்புகளாக அமைகின்றன. அந்த அடிக்குறிப்புத் தன்மையே அவரது முதல் பங்களிப்பாகும்" எனக் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

புனைவு நூல்கள்
  • நீலக்கல்(1965)
  • நினைவுப்பாதை(1972)
  • நாய்கள்(1976)
  • நவீன டைரீ(1978)
  • இவர்கள்(1983)
  • குறுதி(1987)
  • கிராமம்(1991)
  • இரு நீண்ட கவிதைகள்(1991)
  • வாக்குமூலம்(1992)
  • நகுலன் கதைகள்(1998)
கவிதைத் தொகுப்பு
  • கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
  • சுருதி (1987)
  • மூன்று,ஐந்து (1987)
  • இரு நீண்ட கவிதைகள் (1991)
  • நகுலன் கவிதைகள் (2001)
  • கண்ணாடியாகும் கண்கள்(2006).
ஆங்கில நூல்கள்
  • Words to the listening air (1968)
  • Poems by nakulan (1981)
  • Non being (1986)
கட்டுரை நூல்கள்
  • நகுலன் கட்டுரைகள்(2002)
பிற படைப்புகள்
  • குருஷேத்திரம்(1968)

இணைப்புகள்


✅Finalised Page