under review

வண்ணநிலவன்

From Tamil Wiki
வண்ணநிலவன்

வண்ணநிலவன் (உ.நா.ராமச்சந்திரன்) (டிசம்பர் 15, 1949) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். நெல்லை மாவட்டச் சூழலில் படைப்புக்களை எழுதியவர். இதழாளர், அரசியல்கட்டுரையாளர். யதார்த்தவாத அழகியலுடன், நடுத்தரவர்க்க மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் துயர்களையும் அவர்களின் பாலுறவின் சிக்கல்களையும் எழுதியவர். மென்மையான கூறுமுறை, உள்ளடங்கிய உணர்த்தும்திறன் ஆகியவற்றுக்காக இலக்கிய விமர்சகரளால் மதிக்கப்படுபவர். துக்ளக் முதலிய இதழ்களில் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகிய மூவருடன் இவரையும் இணைத்து நெல்லை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுவது நவீன இலக்கியத்தில் வழக்கமாக உள்ளது.

பிறப்பு, கல்வி

வண்ணநிலவனின் இயற்பெயர் உ.நா.ராமச்சந்திரன். டிசம்பர் 15, 1949-ல் திருநெல்வேலியில் பிறந்தார். பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த உலகநாதபிள்ளை- இராமலட்சுமி அம்மாள். தாதன்குளம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் ஆரம்பக்கல்வியும் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய ஊர்களில் வாழ்ந்திருக்கிறார்.

தனிவாழ்க்கை

வண்ணநிலவன்
வண்ணநிலவன்

வண்ணநிலவன் குறுகிய காலம் நெல்லையில் வழக்கறிஞரின் குமாஸ்தாவாக வேலைபார்த்தார். பின்னர் கவிஞர் விக்ரமாதித்யனால் பத்திரிகைத் துறைக்கு அறிமுகமானார். நா.காமராசன் நடத்தி வந்த 'சோதனை’ பத்திரிகையில் பணியாற்றினார். பின்பு சோ நடத்திய 'துக்ளக்’ பத்திரிகையிலும் அதன் பின்னர் 'சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர்குழுவில் இணைந்து பணியாற்றினார். இயக்குநர் ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார்

வண்ணநிலவன் ஏப்ரல் 07, 1977-ல் சுப்புலட்சுமியை மணந்தார். இவருக்கு ஆனந்த் சங்கர், சசி, உமா ஆகிய மூன்று குழந்தைகள்.

இலக்கியவாழ்க்கை

வண்ணநிலவன் மனைவியுடன்

வண்ணநிலவன் நெல்லையின் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன் ஆகியோரால் இலக்கிய ஆர்வம் கொண்டார். வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகிய மூவருடன் இணைந்து வண்ணநிலவனையும் நெல்லை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. தி.க.சிவசங்கரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தாமரை இதழில் 1970 அவருடைய முதல் சிறுகதையான ’மண்ணின் மலர்கள்’ வெளிவந்தது. முதல் நாவல் ’நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’. 1975-ல் வெளிவந்தது.

தொடக்கத்தில் சிலகாலம் மணப்பாடு கடற்கரையில் வேலைபார்த்தார். அவ்வனுபவங்களை ஒட்டி அவர் எழுதிய 'கடல்புரத்தில்' என்னும் நாவல் 1977-ல் சா.கந்தசாமியின் முன்னுரையுடன் நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. வண்ணநிலவனை இலக்கிய உலகில் விரிவாக அறிமுகம் செய்த நாவல் அது. அதன் முன்னுரையில் ’கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது. உண்மையோடு நெருங்கிய சமந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய் சொல்ல மாட்டான். கலைக்குப்பொய் ஆகாது...மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது 'அன்புவழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.(கடல்புரத்தில் முன்னுரை ஜனவர் 31, 1977)

அதன்பின் சிறிதுகாலம் நெல்லையில் வழக்கறிஞரின் குமாஸ்தாவாக பணியாற்றினார். அவ்வனுபவங்களை 'கறுப்புகோட்டு’ என்ற பேரில் நாவலாக எழுதுவதாக அறிவித்தார். பின்னர் அதனைக் 'காலம்’ என்ற பெயரில் எழுதினார். பின்னர் இதழியல் வாழ்க்கையின்போது இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் (மார்க்ஸிய லெனினிய இயக்கங்கள்) அறிமுகம் ஏற்பட்டது அவ்வனுபவங்களின் பின்னணியில் எழுதப்பட்டது அவருடைய 'எம்.எல்' என்னும் நாவல். வண்ணநிலவன் துக்ளக் இதழில் 'துர்வாசர்’ என்ற பெயரில் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்

வண்ணநிலவன் கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் வரிசையில் நடுத்தரவர்க்க மனிதர்களின் அகவுலகை நுட்பமாக எழுதிய படைப்பாளி என்று விமர்சகர்களால் கருதப்படுகிறார். பாலியல் விழைவுகள் மற்றும் மீறலின் வண்ணங்களை மென்மையான மொழியில் உணர்த்தும் படைப்புக்களை எழுதினார். நடுத்தரவர்க்க மனிதர்களின் அன்றாடத்துயர்களை, குடும்பச்சூழலை மிகையின்றி யதார்த்தவாத அழகியலுடன் பதிவுசெய்தவர். 'வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான். கதை மரபிலிருந்து விடுபட்டுச் சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்தல், குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய சிறுகதைக்குரிய சிறப்பம்சங்களை இவரது வெற்றி பெற்ற கதைகளில் காணலாம்." என்று சுந்தர ராமசாமி ஆ.மாதவன் கதைகளுக்கு எழுதிய முன்னுரையாக அமைந்த ’கலைகள் கதைகள் சிறுகதைகள்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்[1]. 'வண்ணநிலவனின் கதைகள் பெரும் பாலும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டவை; தீப்பந்தம்போல் வெயிலடிக்கும் தெருக்களையும் தாமிபரணியின் படித்துறைகளையும் சித்திரம்போல் எழுப்பிக் காட்டும் ஆற்றல் பெற்றவை’ என விமர்சகர் 'மண்குதிரை’ குறிப்பிடுகிறார்[2].

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை விருது
  • தமிழ் வளர்ச்சி கழக பரிசு
  • ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது
  • சாரல் விருது - 2012

நூல்கள்

நாவல்கள்
  • நேசம் மறப்பதில்லை நெஞ்சம், 1975
  • கடல்புரத்தில், 1977
  • கம்பா நதி, 1979
  • ரெயினீஸ் ஐயர் தெரு, 1981
  • உள்ளும் புறமும், 1990
  • காலம், 2006
  • எம். எல்., 2019
சிறுகதைத் தொகுப்புகள்
  • எஸ்தர், 1976
  • பாம்பும் பிடாரனும், 1977
  • தர்மம், 1983
  • உள்ளும் புறமும், 1990
  • தாமிரவருணிக் கதைகள், 1992
  • யுகதர்மம், 1996
  • தேடித்தேடி, 1996
  • வண்ணநிலவன் கதைகள், 2001
  • வண்ணநிலவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு, 2013
  • மழைப்பயணம், 2019
  • இரண்டு உலகங்கள், 2021
கவிதைத் தொகுப்புகள்
  • மெய்ப்பொருள், 1981
  • வண்ணநிலவன் கவிதைகள், 2020
கட்டுரைத் தொகுப்புகள்
  • பின்னகர்ந்த காலம் (முதல் பாகம்)
  • பின்னகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்), 2019
  • சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள், 2014
  • இலக்கியமும் இலக்கியவாதிகளும், 2022
திரைக்கதை
  • 'அவள் அப்படித்தான்’ திரைக்கதை, 2011
நேர்காணல் தொகுதிகள்
  • எண்ணமும் எழுத்தும், 2021
  • ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள், 2012
நினைவுக் குறிப்புகள்
  • மறக்க முடியாத மனிதர்கள், 2012
திரைப்படம்
  • அவள் அப்படித்தான் (வசனம்), 1978

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page