under review

சுபமங்களா

From Tamil Wiki
சுபமங்களா - பிப்ரவரி 1991 இதழ்

சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் பெண்களுக்கான இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

1988-ல் தொடங்கப்பட்ட இதழ் சுபமங்களா. பிப்ரவரி 1991-ல், கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அதுமுதல் 1995 டிசம்பர் வரை 59 இதழ்கள் வெளிவந்தது. சுபமங்களா இதழ் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், நீள் கதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் போன்றவற்றை இதழ் தோறும் வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாது, இளையோர்களின் சிறுகதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தது.

முதல் இதழின் விலை ரூ. 4.00/- ஆறு மாதச் சந்தாத் தொகை பற்றிய அறிவிப்பும் இதழில் இடம் பெற்றிருந்தது.

உள்ளடக்கம்

வெகுஜனப் பத்திரிகையின் தோற்றம், வடிவமைப்பு, திரைப்பட விளம்பரங்கள், அனுபவ் பவுண்டேஷன் விளம்பரங்கள் என வணிக நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுத் தான் ‘சுபமங்களா’ இதழ் வெளியானது. ஆனால், அதன் உள்ளடக்கமோ இலக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.

சுபமங்களாவில் மொழிபெயர்ப்பிற்கும், கவிதைக்கும் இதழ்தோறும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஈழ எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. நூல் விமர்சனப் பகுதி முக்கியமானதாக இருந்தது. வாசகர் கடிதங்கள், விவாதங்கள், மதிப்புரைகள் போன்றவற்றிற்கும் இவ்விதழ் இடமளித்தது.

சுபமங்களாவில் மொழி பெயர்ப்புக் கவிதைகள் உட்பட 280 கவிதைகள் வெளியாகியுள்ளன. கவிதை, கதை, திரைப்படம், நாடகம், ஓவியம், நடனம், அரசியல், சுற்றுச்சூழலியல் போன்ற துறைகள் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

சுபமங்களா சிறுகதைகள்

சுபமங்களாவில் வெளியான சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தன. சுபமங்களாவில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ளன. பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுபமங்களாவில் இடம் பெற்றன. மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின.

சுபமங்களா சிறுகதைகள் இலக்கிய அமைப்பால் கவனிக்கப்பட்டன. கதா, இலக்கியச் சிந்தனை முதலிய அமைப்புகள் சுபமங்களாவில் வெளியான சிறுகதைகளுக்குப் பரிசளித்துச் சிறப்பித்தன. நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், புத்திலக்கியம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத்துலகில் இயங்கிய எழுத்தாளர்களுக்கும் சுபமங்களா இடமளித்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது குறிப்பிடத்தகுந்த, நவீன இலக்கியச் சிறுகதைகளும் சுபமங்களாவில் வெளிவந்தன. ஜெயமோகனின் ஜகன் மித்யை, ரதம், மூன்று சரித்திரச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியானவையே. எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல், காலாட்படை பற்றிய குற்றப் பத்திரம் போன்ற சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியாகின சோ. தர்மன் என்னும் படைப்பாளி பரவலாக வாசக கவனம் பெற்றது சுபமங்களா மூலம் தான்.

சுபமங்களாவில் தான் சிறுகதை எழுதியது குறித்து ஜெயமோகன், “ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப்பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை

கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச் சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல.

சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்றுசரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன. எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது.” [1] என்கிறார்.

சுபமங்களா இதழில் தான் எழுதிய சிறுகதை பற்றி சோ. தர்மன், “இன்று நான் ஒரு அறியப்பட்ட எழுத்தாளனாக, நாவலாசிரியனாக இருக்கிறேன். என்னிடம் கதைகள் கேட்டு நிறையப் பத்திரிகைகள் கடிதங்கள் எழுதுகின்றன. என்னை மொழி தாண்டி நாடெங்கும் பிரபலப்படுத்தியும், பலராலும் நிராகரிக்கப்பட்ட என் கதையின் வலிமையை அதன் உயிர்ப்பை, அதன் ஜீவநாடியைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளியிட்ட சுபமங்களாவுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.” என்கிறார். அவரது 'நசுக்கம்' என்னும் அந்தச் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’யால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் ‘கதா’ விருதும் அப்படைப்புக்குக் கிடைத்தது.

சுபமங்களா நேர்காணல்கள்

அரசியல், சமூகம், இசை, இலக்கியம், மொழிபெயர்ப்பு என பலதுறைகளைச் சார்ந்தவர்களின் நேர்காணல்கள் சுபமங்களாவில் வெளிவந்துள்ளன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா வசன ஆசிரியர், நடனத்துறை சார்ந்தவர்கள், இசைத்துறை சார்ந்தவர்கள் என்று பலரது நேர்காணல்களை சுபமங்களா வெளியிட்டது. மற்ற நேர்காணல்களைப் போல் அல்லாமல் அந்தந்தத் துறை சார்ந்தவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், அனுபவப் பகிர்தல்கள், வெளிப்படையான கருத்துக்கள் கொண்டதாக சுபமங்களா நேர்காணல்கள் அமைந்திருந்தன. பரவலான வாசக வரவேற்பையும் அவை பெற்றன.

சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கலாப்ரியா, என்.ராம், அ. மார்க்ஸ், தமிழவன், மு. கருணாநிதி, சுப்புடு, செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யர், கார்த்திகேசு சிவத்தம்பி, சரஸ்வதி ராம்நாத் என பல்வேறுபட்ட கலை, இலக்கிய, அரசியல், சமூக ஆளுமைகளின் நேர்காணல்கள் சுபமங்களாவில் வெளியாகின. கோமல் சுவாமிநாதனுக்கு உறுதுணையாக சுபமங்களாவில் குடந்தை கீதப்ரியன், இளையபாரதி உள்ளிட்டோர் பணியாற்றினர்.

சுபமங்களா நேர்காணல் குறித்து பாலகுமாரன் “சுபமங்களா அதன் பேட்டிகளுக்காகவே கொண்டாடப்பட்டது. பேட்டிகளை வாரப் பத்திரிகைகள் மதித்ததே இல்லை. எவர் பேட்டியையும் முழுமையாய், எரிமலைக் குமுறலாய், காட்டாற்று வெள்ளமாய் காட்டியதே இல்லை. முக்கால் நிர்வாணப் படங்கள் தான் வாரப் பத்திரிகைகளில் முழுசாக வரும் விஷயம். ஆனால் சுபமங்களாவில் பேட்டிகள்தான் முக்கிய விஷயம்.” என்கிறார்.

சுபமங்களா நேர்காணல் குறித்து, நடிகர் சிவகுமார், சுபமங்களாவில் வெளியான, ‘நெஞ்சில் நிறைந்த நேர்காணல்கள்’ என்ற கட்டுரையில், “ இந்திரா பார்த்தசாரதி, கவிஞர் சுரதா, கவிஞர் அப்துல் ரகுமான், கவிஞர் இன்குலாப், பெரியவர் சிட்டி, பெரியவர் எம்.வி.வி., பேராசிரியர் சே. ராமானுஜம், வண்ணநிலவன், வண்ணதாசன், யு.ஆர். அனந்த மூர்த்தி, செ. யோகநாதன் என அனைவரது நேர்காணலும் ஒரு அனுபவமாக ரசிக்க முடிந்தது.” என்கிறார்.

சுபமங்களாவில் வெளியான நேர்காணல்கள் இளையபாரதியால் தொகுக்கப்பட்டு ‘கலைஞர் முதல் கலாப்ரியா’ வரை என்ற தலைப்பில் நூலாக வெளியானது. கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.

சுபமங்களாவில் பிற படைப்புகள்

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

சுபமங்களா சிறுகதைகளோடு கூடவே மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. அஜீத் கௌர், இடாலோ கால்வினோ (Italo Calvino), மகா ஸ்வேதாதேவி, ஸ்ரீமதி பிரதிபாராய், மாதவிக்குட்டி, பி.என். விஜயன், ப்ரன்ஸ் காஃப்கா (Franz Kafka), கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel García Márquez), கே. அய்யப்ப பணிக்கர் எனப் பலரது சிறுகதைகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

சுபமங்களாவில் வெளியான மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் குறித்து குறிஞ்சிவேலன், “இளமையில் துணியாமல் முதுமையில் துணிந்தும் முடியாமல் தத்தளிக்கும் முதுமைக் காதலை எம்.டி. வாசுதேவன் நாயரின் நீண்ட கதையான 'வானப் பிரஸ்தம்' மூன்று இதழ்களில் குறுந்தொடராகவும், மனதைக் கொள்ளை கொள்ளும் கதைகளில் மிகச் சிறந்த புதிய பாணியில் எழுதப்பட்ட கமலா தாஸின் (மாதவிக் குட்டி) 'பறவையின் வாசனை' என்னும் கதையும், 'டீலக்ஸ் லக்ஷ்வரி கோச்' என்னும் கதையை எழுதிய விஜயனின் புதிய நடையிலான எழுத்தையும் சுபமங்களா தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது சிறப்பான அம்சமாகும்.” என்று ‘சுபமங்களா இலக்கியப் பெட்டகம்’ தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நெடுங்கதைகள்

சிறுகதைகளை அடுத்து குறுநாவல் தன்மையுள்ள நீண்ட கதைகளையும் சுபமங்களா வெளியிட்டது. சா. கந்தசாமியின் 'சாந்தகுமாரி', மாத்தளை சோமுவின்' ஆயுதங்கள்', ஜெயமோகனின் 'மண்', பிரபஞ்சனின் ’குமாரசாமியின் பகல் பொழுது’, கொத்தமங்கலம் சுப்புவின் 'மஞ்சள் விரட்டு', சாரு நிவேதிதாவின் 'பிளாட் நம்பர்: 27 திரிலோக்புரி', எஸ். ராமகிருஷ்ணனின் 'பெயரில்லாத ஊரின் பகல் வேளை', விமலாதித்த மாமல்லனின் 'ஒளி' போன்றவை இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

குறுந்தொடர்கள்

குறுந்தொடர்கள் சிலவற்றையும் சுபமங்களா அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளது. கந்தர்வனின் 'காவடி', ஜெயந்தனின் 'ஞானக் கிறுக்கன் கதைகள்', எம்.டி. வாசுதேவன் நாயரின் (தமிழாக்கம்: குறிஞ்சிவேலன்) ’வானப்ரஸ்தம்’ போன்றவை இவற்றில் குறிப்பிடத்தகுந்தன.

நாடகம் மற்றும் நாவல்

சுந்தர ராமசாமியின் ‘யந்திரத் துடைப்பான்’ என்ற நாடகம், சுபமங்களா செப்டம்பர் 1991- இதழில் இடம் பெற்றுள்ளது. அ. மாதவையா எழுதி, சரோஜினி பாக்கியமுத்துவால் தமிழில் பெயர்க்கப்பட்டா ‘சத்தியானந்தன்’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி ஒன்று ஜனவரி 192 இதழில் வெளியாகியுள்ளது.

கவிதைகள்

சுபமங்களாவில் மொழி பெயர்ப்புக் கவிதைகள் உட்பட 280 கவிதைகள் வெளியாகியுள்ளன. கவிதைகளில் மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடன், இளையபாரதி, கனிமொழி, பாலகுமாரன், தமிழன்பன், விக்கிரமாதித்யன், மணி, எஸ். வைதீஸ்வரன், உமா மகேஸ்வரி, கோலாகல ஸ்ரீநிவாஸ், வித்யா ஷங்கர், புவியரசு, அறிவுமதி, நா. விச்வநாதன், கல்யாண்ஜி, ரவி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரது கவிதைகள் வெளியாகியுள்ளன.

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

பெர்டோல்ட் பிரஹட் (Bertolt Brecht), சச்சிதானந்தன், ஜகன்னாத் சரஸ்வதி, ஷகீல் பானாக்கி, நிகொலாய் உஷாகோவ்(Nikolai Ushakov), சித்தலிங்கையா, இக்பால் மொனானி, சுபாஷ் முகோபாத்யாயா, தாயாபவார், அர்ஜூன் தாங்க்ளே, கமலா தாஸ், பாப்லோ நெருடா (Pablo Neruda), கங்கா பிசாத் விமல் உள்ளிட்ட பலரது கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

கட்டுரைகள்

பல்வேறு துறை சார்ந்து ஆழமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளுக்கு சுபமங்களா இடமளித்தது. அசோகமித்திரன், கே. பாலதண்டாயுதம், தி.க. சிவசங்கரன், ஞாநி, டி.எஸ். ரவீந்திரதாஸ், சுப்புடு, கோமல், விட்டல்ராவ், ஜெயமோகன், நித்ய சைதன்ய யதி (தமிழில்: நிர்மால்யா), வெங்கட் சாமிநாதன், திருப்பூர் கிருஷ்ணன், பிரளயன், இந்திரன், எஸ். வி. ராஜதுரை, சி.சு. செல்லப்பா, கரிச்சான்குஞ்சு, பிரம்மராஜன், பாலுமகேந்திரா, அப்பணசாமி, கோவை ஞானி, மு. தமிழ்க்குடிமகன், சுஜாதா, சுந்தரராமசாமி, சி. அண்ணாமலை, பிரசன்னா ராமஸ்வாமி, நா.கண்ணன், சாருநிவேதிதா, சிபி, அ.மார்க்ஸ், காவ்யா சண்முகசுந்தரம் எனப் பலரது இலக்கியம், சமூகம், இசை, மருத்துவம் எனப் பல்வேறு துறை சார்ந்த தகவல் செறிந்த கட்டுரைகள் சுபமங்களாவில் வெளியாகியுள்ளன.

விவாதங்கள்/விமர்சனங்கள்

ஆக்கப்பூர்வமான பல்வேறு விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் சுபமங்களா இடமளித்தது. கோவி. மணிசேகரனுக்கு சாகித்ய அகாதமி பட்டம் வழங்கப்பட்டபோது அகாதமியின் செயல்பாடுகளை விமர்சித்த பலரது கருத்துக்களுக்கு சுபமங்களா இடமளித்தது. சுபமங்களாகவின் விவாதங்கள் வெறும் சர்ச்சைகளாக நின்று விடாமல், இலக்கியச் செயல்பாடுகளை சீராக முன்னெடுக்க வழிவகுப்பவையாக இருந்தன.

ஆசிரியர்கள்

சுபமங்களாவுக்கு கோமல் சுவாமிநாதன் ஆசிரியராகப் பணியாற்றினார். குடந்தை கீதப்ரியன் துணை ஆசிரியராகவும், இளையபாரதி உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர்.

சுபமங்களா - இறுதி இதழ்

கோமல் சுவாமிநாதனின் பங்களிப்பு

‘தீபம்’ இலக்கிய இதழ், கோமல் சுவாமிநாதனை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. திடீரென நா.பா. காலமாகிவிடவே, தீபம் இதழ் நின்று போனது. அதனை மீண்டும் நடத்த விரும்பினார் கோமல் சுவாமிநாதன். இந்நிலையில்தான் ’சுபமங்களா’ இதழை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு வந்தது. அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். வெகு ஜன இதழாக அனுராதா ரமணன் ஆசிரியத்துவத்தில் அதுவரை வெளிவந்து கொண்டிருந்த இதழை, இலக்கிய இதழாக மாற்றினார் கோமல் சுவாமிநாதன். தமிழில் அனைவருக்கும் போதுவான ஓர் இலக்கிய இதழ் இல்லை என்ற எண்ணத்தை மாற்றினார். அதுவரை வெகுஜன இதழாக வெளிவந்துகொண்டிருந்த சுபமங்களாவை, இலக்கிய இதழாக உருமாற்றியதுடன், கலை இலக்கியம் சார்ந்த வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட பலரை அதில் எழுத வைத்தார் கோமல்.

“சுபமங்களா வாசகர் வட்டம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இலக்கியக் கூட்டங்களையும், எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். தமிழின் முக்கிய இலக்கிய இதழாக சுபமங்களாவை வளர்த்தெடுத்தார். அவர் எழுதிய “பறந்துபோன பக்கங்கள்” பகுதியும், வட இந்தியப் பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தன.

முதுகெலும்புப் புற்றுநோயின் தாக்கத்தால் 1995-ல், கோமல் சுவாமிநாதன் காலமானார். அவரது மறைவோடு இதழும் நின்றுபோனது.

சுபமங்களாவின் சிறப்புகள்

  • 1991 பிப்ரவரி முதல் டிசம்பர் 1995 வரை சுபமங்களா வெளிவந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட தரமான சிறுகதைகளை வெளியிட்டுள்ளது.
  • எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஓவியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களது படங்களை அட்டையின் முகப்பில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது.
  • தமிழ் இலக்கியப் பரப்பில் வெவ்வேறு தளங்கில் இயங்கிவந்த சுந்தர ராமசாமியும் கவிஞர் தேவதேவனும் சுபமங்களாவில் எழுதினார்கள்.
  • சு. சமுத்திரம் முதல் ஐசக் அருமைராஜன் வரை, ஜெயமோகன் முதல் சாருநிவேதிதா வரை வேறு வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த பலரது பங்களிப்பு சுபமங்களாவில் இருந்தது.
சுபமங்களா - இலக்கியப் பெட்டகம்

ஆவணம்

கோமல் சுவாமிநாதன் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த “சுபமங்களா” இதழ்களை அனைவரும் வாசிக்கும் வகையில் இணையத்தில் வலையேற்றி நினைவாஞ்சலி செய்திருக்கிறார் அவர் மகள் தாரிணி. (பார்க்க: சுபமங்களா இதழ்கள்)

சுபமங்களா இதழின் பல பகுதிகள் இளையபாரதியால் தொகுக்கப்பட்டு, ‘சுபமங்களா இதழ்த் தொகுப்பு’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 10,2000 அன்று ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் திரு. ஆர் தியாகராஜன் தலைமையில் திரு. குடந்தை கீதப்பிரியன் தொகுத்த "சுபமங்களா – ஒரு இலக்கியப் பெட்டகம்" என்னும் மலர் அந்நாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.

வரலாற்று இடம்

தொண்ணூறுகளில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சேர்த்த பெருமை சுபமங்களாவையே சாரும் எனலாம். இன்றைக்குச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பல இலக்கிய இதழ்களுக்கு முன்னோடியாக இருந்தது சுபமங்களா. இளைஞர்கள் பலரை ஊக்குவித்து அவர்களது படைப்புகளை வெளியிட்டது சுபமங்களா. பலருக்கு எழுத்தாளர்களாக, கவிஞர்களாக ஓர் இலக்கிய அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த இதழாக சுபமங்களா மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page