பிரபஞ்சன்
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர்.
பிறப்பு, கல்வி
பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கும்பகோணம் அருகே துக்காச்சி- கடலங்குடியை பூர்விகமாக கொண்டவர்கள் பிரபஞ்சனின் முன்னோர். தென்னையில் இருந்து கள் எடுத்து விற்பவர்கள். சோலைவிவசாயிகள் என அழைக்கப்பட்டனர். சாரங்கபாணி அம்புஜம்மாள் இணையருக்கு ஏப்ரல் 27, 1945-ல் பிறந்தார்.
மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். பாண்டிச்சேரியில் பெத்தி செமினார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பிரபஞ்சன் ஜூலை 5, 1970-ல் பிரமிளா ராணியை மணந்தார். கௌதம், கௌரிசங்கர், சதீஷ்குமார் என மூன்று மகன்கள். முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து புதுவை 'மாலை முரசு’வில் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். இதழாளராக குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார்.
சென்னையில் அரசு சார்பில் இதழாளர்களுக்காக அளிக்கப்பட்ட பீட்டர்ஸ் காலனி இல்லத்தில் பிரபஞ்சன் பெரும்பாலும் வாழ்ந்தார். குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்தது.
இறுதிக்காலம்
தன் மனைவி மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு மு.வேடியப்பன், பவா செல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னெடுப்பில் 'எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு ஏப்ரல் 29, 2017 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அவருக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார்.
பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். பாண்டிச்சேரியில் தன் பூர்விக இடமான லாசுப்பேட்டைக்கு சென்றார். பாண்டிச்சேரி மதகடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதழியல்
பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.
அரசியல்
பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
கோடைக் கால விடுமுறைகளின்போது விழுப்புரத்தில் வசித்த தாத்தா வீட்டுக்குச் செல்கையில் அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களை வாசித்துத் தன் ரசனையை வளர்த்துக்கொண்டார். பதினான்காம் வயதிலேயே ரோமன் ரோலந்து நூலகத்தில் அவர் அப்பா அவரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். பதினாறாவது வயதில் சென்னையில் இருந்து சேத்தூர் கூத்தன் என்பவர் நடத்திய பரணி என்னும் இதழில் அவரது முதல் சிறுகதை 'என்ன உலகமடா’ 1961-ல் வெளியானது. அதே ஆண்டில் பன்மொழிப்புலவர் ப.சுந்தரவேலனார் நடத்திய கலைச்செல்வி இதழில் முதல் கட்டுரை வெளியானது.
கவிதைகள்
புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். வானம்பாடி கவிதை இயக்கம் மேல் ஈடுபாடுகொண்டார், வானம்பாடி இதழில் பிரபஞ்சகவி என்னும் பெயரில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான வெளிச்சங்கள் தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது. பிரபஞ்சகவி என்ற பெயரை பிரபஞ்சன் என சுருக்கிக்கொண்டார்
சிறுகதைகள்
பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் நான்கு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டார். பிரபஞ்சனின் சிறுகதைகள் அவற்றின் முற்போக்கு கருத்துக்களுக்காகப் புகழ்பெற்றவை
நாவல்கள்
பிரபஞ்சன் பெரும்பாலான நாவல்களை தொடர்கதைகளாகவே எழுதினார். அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் மகாநதி. தினமணிக் கதிர் இதழில் 1990-ல் தொடராக வந்த வரலாற்று நாவல் 'வானம் வசப்படும்’ 1995-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவல் அது. `வானம் வசப்படும்' அதன் தொடர்ச்சியாக அமைந்த நாவல்.
பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் மகாபாரதத்தை மறுஆக்கமும் விமர்சனமும் செய்து மகாபாரத மாந்தர்கள் என்னும் நூலை எழுதினார். இராமாயணத்தையும் மறு ஆக்கம் செய்தார்.
நாடகங்கள்
பிரபஞ்சன் நவீன நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய முட்டை எனும் நாடகம் புகழ்பெற்றது.
விருதுகளும் பரிசுகளும்
- 1982 தமிழக அரசு விருது (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்)
- 1983 இலக்கியசிந்தனை விருது (சிறுகதை பிரம்மம்)
- 1986 தமிழக அரசு விருது (நேற்று மனிதர்கள்)
- 1987 புதுவை அரசு விருது (ஆண்களும் பெண்களும்)
- 1991 இலக்கிய சிந்தனை விருது (மானுடம் வெல்லும்)
- 1995 சாகித்திய அகாதமி விருது (வானம் வசப்படும்)
- 1996 பாரதிய பாஷா பரிஷத் விருது (வானம் வசப்படும்)
- 1998 தினத்தந்தி ஆதித்தனார் விருது (சந்தியா )
- 1998 புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது
- 2007 தென்னிந்திய பதிப்பாளர் சங்க விருது
- 2009 கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
- 2013 சாரல் விருது
- 2014 க.நா.சு விருது
- 2016 முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
மறைவு
டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது.
இலக்கிய இடம்
பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை.
பிரபஞ்சனின் சாதனை என்பது மானுடம் வெல்லும் நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.
படைப்புகள்
பிரபஞ்சன் 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
நாவல்கள்
- மானுடம் வெல்லும்
- வானம் வசப்படும்
- மகாநதி
- சந்தியா
- காகித மனிதர்கள்
- பெண்மை வெல்க
- காதலெனும் ஏணியிலே
- சுகபோகத்தீவுகள்
- திரை
- தீவுகள்
- நீலநதி
- பதவி
- முதல் மழை துளி
- மகாபாரத மாந்தர்கள்
- பூக்களை மிதிப்பவர்கள்
- பூக்கள் நாளையும் மலரும்
சிறுகதை தொகுப்புகள்
- நேற்று மனிதர்கள்
- விட்டு விடுதலையாகி
- இருட்டு வாசல்
- ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
- அப்பாவின் வேஷ்டி
- சித்தன் போக்கு
- பிரபஞ்சன் - சிறுகதைகள்
- தபால்காரர் பெண்டாட்டி
- அந்தக்கதவு மூடப்படுவதில்லை
- நாளைக்கும் வரும் கிளிகள்
- குயிலம்மை
- மரி என்கிற ஆட்டுக்குட்டி
- யாசுமின் அக்கா
- ருசி
- ஒரு மனுஷி
- கழுதைக்கு அஞ்சுகால்கள்
- ஒரு சினேகத்தின் கதை
குறுநாவல்கள்
- ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
- முட்டை
- அகல்யா
கட்டுரைகள்
- பிரபஞ்சன் கட்டுரைகள்
- பெண்
- வாழ்தலும் வாழ்தல்நிமித்தமும்
- மயிலிறகு குட்டி போட்டது
- அப்பாவின் வேஷ்டி
- தாழப் பறக்காத பரத்தையர் கொடி
- ஈரோடு தமிழர் உயிரோடு
- கண்ணீரால் காப்போம்
- எமதுள்ளம் சுடர்விடுக
- துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்
நேர்காணல்கள்
- பிரபஞ்சனின் நேர்காணல்கள்
- படைப்பே அரசியல்செயல்பாடுதான்
உசாத்துணை
- பிரபஞ்சன் அஞ்சலி
- பிரபஞ்சனும் ஷாஜியும்
- ம. நவீன் - வல்லினம் கட்டுரை
- பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன் | writer prabanjan - hindutamil.in
- பிரபஞ்சன் சில நினைவுகள்
- பிரபஞ்சன் 55
- பிரபஞ்சன் எஸ்.ராமகிருஷ்ணன்
- இமையம்: பிரபஞ்சன் என்ற எழுத்தாளுமை - இமையம்
- பிரபஞ்சன்: வாழ்தலின் மகத்துவம் | writer prabanchan - hindutamil.in
- பிரபஞ்சன்: வாழ்தலின் மகத்துவம் | writer prabanchan - hindutamil.in
- பிரபஞ்சன் : பனிப்பூக்கள்
- மானுட மனங்களை வென்ற பிரபஞ்சன் | எழுத்தாளர் பிரபஞ்சன் | Writer Prapanjan, Puthu Yugam TV
- பிரபஞ்சன் உரை | சென்னைப் பேரழிவு : நாம் கற்றதும் கடந்ததும் - YouTube
- தினமணி செய்திl
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:20 IST