கு.ராஜவேலு
To read the article in English: Ku. Rajavelu.
கு.ராஜவேலு (ஜனவரி 29, 1920 - செப்டெம்பர் 9, 2021) தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். காந்தியத் தாக்கத்துடன் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய நாவல்களை எழுதியவர் . விடுதலைப்போரில் சிறைசென்றவர். அரசியல் செயல்பாட்டாளர்
பிறப்பு, கல்வி
கு.ராஜவேலு சேலம் மாவட்டம் போடிநாயக்கன் பட்டியில் ஜனவரி 29, 1920-ல் பிறந்தார். தந்தை குருசாமி, தாய் குழந்தையம்மாள்.
ஈரோடு இந்து மகாஜனசங்க பள்ளியில் பள்ளிக்கல்வி பெற்றார். சேலம் லண்டன்மிஷன் மெட்ரிக் பள்ளியில் புகுமுக வகுப்பை முடித்தார்.பழைய தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் இளங்கலை பயின்றார். சென்னை பச்சையப்பா கல்லூரியில் எம்.ஏ. ஆனர்ஸ் (தமிழ்) படித்தார்.
தனிவாழ்க்கை
கு.ராஜவேலு குடந்தை அரசுக்கல்லூரி, சென்னை கலைக்கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றில் தலைமைப்பொறுப்பு வகித்தார். ஓய்வுபெற்றபின்னரும் தமிழ் பண்பாட்டு இயக்ககத்தில் தலைமைப்பொறுப்பில் இருந்தார்.
கு.ராஜவேலுவின் மனைவி பரமேஸ்வரி. திருமாவளவன், பாரிவளவன் என இரு மகன்களும்; குழந்தை கஸ்தூரி, குழந்தை இந்திரா, குழந்தை வளர்மதி என மூன்று மகள்கள்.
அரசியல் வாழ்க்கை
கு.ராஜவேலு 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு!' இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது "ஆகஸ்ட் 1942" எனும் நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். கு.ராஜவேலு 1942-ல் திருவையாறு நகரத்தில்அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி 'வெள்ளையனே வெளியேறு' எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இரையாகியது.
ஆகஸ்ட் 13-ம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரியின் மாணவர்களான ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் ,கு.ராஜவேலு ஆகியோர் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர், காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடினர்.தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கரை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார்.
அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி. சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.
கு.ராஜவேலு பதினொரு ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1940-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றார்.
கு.ராஜவேலு அரசியலில் கு. காமராஜுக்கு மிக நெருக்கமானவர். காமராஜ் ஆட்சியில் அவருடைய எண்ணமறிந்து செயலாற்றுபவராக இருந்தார்[1].
அமைப்புப்பணிகள்
கு. ராஜவேலு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் நீண்டகாலம் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
கு.ராஜவேலு படைப்பிலக்கியம், மொழியாக்கம், இலக்கிய ஆய்வு ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றியவர்.
நாவல்
தன் 14-வது வ யதில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் கு.ராஜவேலு.கல்லூரி மாணவராக இருக்கையில் இவருடைய முதல்நாவல் 'காதல் தூங்குகிறது' கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல்போட்டியில் முதல்பரிசு பெற்றது. வானவீதி, காந்தமுள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
இலக்கிய ஆய்வு
சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து சித்திரசிலம்பு என்னும் நூலை கு.ராஜவேலு எழுதினார். சி.சுப்ரமணிய பாரதியார் எழுதிய குயில்பாட்டு கவிதையை விளக்கி கு.ராஜவேலு ஆற்றிய உரை வான்குயில் என்ற பேரில் நூலாகியது. புறநாநூற்றுப் புதியதளிர்கள் என்னும் தலைப்பில் சங்க இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார்.
வாழ்க்கை வரலாறு
வைகறை வான்மீன்கள் என்னும் தலைப்பில் கு.ராஜவேலு தேசபக்தர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து எழுதினார்.
பதிப்பு
சாகித்ய அக்காதமிக்காக கு.ராஜவேலு நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய கவிதைகளை தொகுத்தார்.
மொழியாக்கம்
கு.ராஜவேலு தாராசங்கர் பானர்ஜி எழுதிய வங்கநாவல்களை தமிழில் மொழியாக்கம் செய்தார்.
இலக்கியநண்பர்கள்
தெ. பொ. மீனாட்சிசுந்தரம், மு. வரதராசன் இருவரும் இவருடைய இலக்கியத் தோழர்கள். மு.வரதராசனாரின் பாணியில் நாவல்களை எழுதினார்.
இலக்கிய இடம்
கு.ராஜவேலு மாணவர்கள் பயில்வதற்குரிய நல்லொழுக்க அறிவுறுத்தல்கொண்ட நாவல்களை எழுதியவர். அவை கல்லூரிகளில் பாடமாக இருந்தன. அவற்றில் அழகு ஆடுகிறது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
- கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவுப்பரிசு (காதல் தூங்குகிறது)
- தமிழ்வளர்ச்சித்துறை விருது (சித்திரச்சிலம்பு)
நினைவு
கு.ராஜவேலுவுக்கு 2020-ல் அவரது நூற்றாண்டுவிழாவை ஒட்டி இந்திய அரசு அவர் உயிருடன் இருக்கையிலேயே இந்திய அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது.
மறைவு
கு.ராஜவேலு செப்டெம்பர் 9, 2021 அன்று சென்னையில் தன் 101-வது அகவையில் மறைந்தார்.
நூல்கள்
- கொடைவளம்
- சத்தியச்சுடர்கள்
- வைகறை வான்மீன்கள்
- வள்ளல் பாரி
- வானவீதி
- காந்தமுள்
- மகிழம்பூ
- தேயாத நிறைநிலா
- இடிந்தகோபுரம்
- அழகு ஆடுகிறது
- அடிவானம்
- தங்கச்சுரங்கம்
- சாலையோரம்
உசாத்துணை
- காலமானார் மூத்த எழுத்தாளர் கு.ராஜவேலு- Dinamani
- தமிழ் தியாகிகள் கு.ராஜவேலு
- வள்ளல் பாரி கு ராஜவேலு
- கண்ணீர் விட்டா வளர்த்தோம்? கு.ராஜவேலு பற்றிய பதிவு
- கு ராஜவேலு நினைவு- தென்றல் இணைய இதழ்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:23 IST