நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (செப்டெம்பர் 3, 1894- பிப்ரவரி 12, 1949) தவில் இசைக் கலைஞர். தனித்தவில் என்ற முறை தோன்றக் காரணமாக அமைந்த முன்னோடி.
இளமை, கல்வி
நீடாமங்கலத்தில் வாழ்ந்த தெய்வானை அம்மாளின் ஒரே மகனாக செப்டெம்பர் 3, 1894 அன்று பிறந்தார். இவர் பிறந்து 27-ஆம் நாளிலேயே அன்னை இறந்துவிட, அவரது சிற்றன்னை கமலத்தம்மாளால் வளர்க்கப்பட்டார். மீனாட்சிசுந்தரம் ஐந்தாவது வயதில் தாய்மாமா சிங்காரம் பிள்ளையிடம் தவில் கற்கத் தொடங்கினார். பின்னர் மற்றொரு தாய்மாமா கோவிந்த தவில்காரரிடமும் கற்றார்.
தனிவாழ்க்கை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில்கலைஞர் பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளையின் மகள்கள் நாகம்மாள் மற்றும் ராஜம்மாளை மணந்துகொண்டார். மூத்த மனைவி நாகம்மாள் மூலம் பெற்ற பிள்ளைகள்:
- சௌந்தரவல்லி (கணவர்: நாதஸ்வர வித்வான் சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை)
- மங்களாம்பாள் (கணவர்: திருப்பனந்தாள் தங்கப்பா பிள்ளை)
- ஜயலக்ஷ்மி
- தெய்வயானை (கணவர்: நீடாமங்கலம் வேங்கடராம பிள்ளை)
- வேம்பு (கணவர்: நாதஸ்வர வித்வான் திருவீழிமிழலை கோவிந்தராஜ பிள்ளை)
- ஷண்முக வடிவேல் (நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல்)
இளைய மனைவி ராஜம்மாள் வாரிசுகள்:
- ஜயலக்ஷ்மி அம்மாள் (கணவர்: தவில்கலைஞர் நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை)
- பி.எம். சுந்தரம்[1]
இசைப்பணி
1906-ஆம் ஆண்டு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையிடம் தவில் வாசிப்பவராக சேர்ந்தார். வேணுகோபால் பிள்ளையின் தவில் கலைஞராக இருந்தபோதும் எண்ணற்ற ஜதி லய நுட்பங்களையும் கணக்குகளையும் அவரிடமே கற்றுக்கொண்டார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. தன் இறுதிக்காலம் வரை வேணுகோபால் பிள்ளை மீது அளவற்ற குருபக்தி கொண்டிருந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வேணுகோபால் பிள்ளைக்குக் கச்சேரி இல்லாத சமயங்களில் அனுமதி பெற்று மன்னார்குடி சின்னப்பக்கிரி நாதஸ்வரக் கலைஞருக்குத் தவில் வாசித்தார் மீனாட்சிசுந்தரம். வேணுகோபால் பிள்ளை தன் இறுதி நாட்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையிடம் தன் சிறந்த சீடனை ஒப்படைத்துச் சென்றார். அவரிடம் ஒன்றரை ஆண்டுகள் வாசித்த பின், பல கலைஞர்களிடம் தவில் கலைஞராக இருந்திருக்கிறார். திருவீழிமிழலை சகோதரர்கள் குழுவில் முக்கிய கலைஞராக மூன்றாவது நாதஸ்வரம் எனப் புகழ்பெறும் அளவுக்கு ஒருங்கிணைவோடு முப்பது ஆண்டுகள் வாசித்து வந்தார். ஒரு சமயம் மனவேற்றுமை எழுந்து அக்குழுவில் இருந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை விலக நேரிட்டது. அதன் பின்னர் எந்த நாதஸ்வரக் குழுவிலும் நிரந்தரக் கலைஞராக இருக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். தன் வாசிப்பு வேண்டும் என்பவர்கள் தன்னைத் தனியாக ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று அதன்படியே பலருக்கும் வாசிக்கத் தொடங்கினார். இவ்விதம் ஒரு குழுவைச் சார்ந்த கலைஞராக அல்லாமல், "தனித்தவில்" என்றழைக்கப்படும் இம்முறை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை . "மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பற்றி மட்டும் பேசினால் போதும்; தவில் வாத்தியத்தின் முழு சரித்திரத்தையும் பேசியதாகும்" என்று ஸர்.சி.பி. ராமஸ்வாமி ஐயர் இவரைப் பாராட்டினார்.
உடன் வாசித்த கலைஞர்கள்
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- திருச்சேறை வெங்கடராம பிள்ளை
- மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை
- ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை
- திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை
- கீரனூர் சகோதரர்கள்
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
- ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
- திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை
மாணவர்கள்
பிரபலமான சில மாணவர்கள்:
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
- திருநாகேஸ்வரம் ரத்தினஸ்வாமி பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை
- ஈமனி ராகவையா
- திருவிழந்தூர் வேணுகோபால பிள்ளை
- கரந்தை ஷண்முகம் பிள்ளை
- கண்டியூர் முத்தையா பிள்ளை
- மிருதங்கவித்வான் கோயம்புத்தூர் ராமஸ்வாமிப் பிள்ளை
- கடவித்வான் ஆலங்குடி ராமச்சந்திரன்
மறைவு
தன் மூத்த மகள் சௌந்தரவல்லியம்மாளின் மகளைத் தனது மூத்த மகன் ஷண்முகவடிவேலுவுக்குத் திருமணம் செய்வித்து, அடுத்த நாள் (பிப்ரவரி 12, 1949) அன்று அதிகாலை மூன்று மணிக்கு நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உறக்கத்திலேயே காலமானார்.
இதர இணைப்புகள்
- புகழ்சால் தவிற் கலைஞர்கள்- தமிழ் இணைய பல்கலைக்கழகம்
- Needamangalam Meenakshisundaram Pillai - Sruti Magazine
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
- தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
அடிக்குறிப்புகள்
- ↑ மங்கல இசை மன்னர்கள் நூல் ஆசிரியர்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.