செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை
- ராமஸ்வாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமஸ்வாமி (பெயர் பட்டியல்)
- செம்பொன்னார்கோவில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செம்பொன்னார்கோவில் (பெயர் பட்டியல்)
செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை (1880 - ஏப்ரல் 19, 1923) (செம்பொன்னார் கோயில் ராமசாமிப் பிள்ளை) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி

ராமஸ்வாமி பிள்ளை செம்பொன்னார்கோவிலைச் சேர்ந்த பல்லவி வைத்தியநாத பிள்ளையின் மகனாக 1850-ம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் பிள்ளை, பொன்னுஸ்வாமி பிள்ளை, செல்லம்மாள், நாகம்மாள், லக்ஷ்மி அம்மாள், சுந்தராம்பாள் ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.
முதலில் தன் தந்தை வைத்தியநாத பிள்ளையிடமும் பின்னர் கோட்டை சுப்பராய பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரிடமும் நாதஸ்வரம் பயின்றார்.
தனிவாழ்க்கை
நாதஸ்வரக் கலைஞர் மாயூரம் மாணிக்கம் பிள்ளையின் மகள் குட்டியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுடைய குழந்தைகள்:
- கோவிந்தஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்)
- சேது அம்மாள் (கணவர்: திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை - நாதஸ்வரம்)
- தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்)
- விஸ்வநாத பிள்ளை (நாதஸ்வரம்)
- தனபாக்கியம் (கணவர்: பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை - தவில்)
- கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்)
ராமஸ்வாமிப் பிள்ளையின் மகன்கள் செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையும் அவர் தமையன் செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளையும் ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ எனப் புகழ்பெற்றவர்கள். இவரது வாரிசுகள் நாதஸ்வரக் கலையில் இன்றும் புகழ் பெற்றிருக்கிறார்கள்.
இசைப்பணி
ராமஸ்வாமி பிள்ளை கடினமான ரக்திகளும் பல்லவிகளும் வாசிப்பதில் பெயர் பெற்றவர். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்களில் வாசித்து பல சன்மானங்கள் பெற்றவர். ராமநாதபுரம் சமஸ்தானம், சேத்தூர், சிவகிரி, உடையார்பாளையம், சிங்கம்பட்டி ஜமீன்களில் ராமஸ்வாமி பிள்ளைக்கு நல்ல மதிப்பு இருந்தது.
முதன்முதலில் நாதஸ்வர இசையை இசைத்தட்டுக்களில் பதிவு செய்தவர் ராமஸ்வாமி பிள்ளை. இந்த இசைத்தட்டுக்களில் உடன் தவில் வாசித்தவர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை.
அதிதுரித காலத்தில் வாசிப்பதில் ராமஸ்வாமி பிள்ளை வல்லவர் என்பதை 'வாதாபி கணபதிம்’ கீர்த்தனை இசைத்தட்டில் அறியலாம். ராக ஆலாபனை, ஸ்வர ப்ரஸ்தாரங்களில் ராமஸ்வாமி பிள்ளை கொண்டிருந்த திறமையை 'நாட்டைக்குறிஞ்சி’ வாசிப்பில் அறியலாம்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை
- அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை
- அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
மறைவு
செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை ஏப்ரல் 19, 1923 அன்று மறைந்தார்.
இதர இணைப்புகள்
- http://www.sembanarkovilbrothers.com/skbfamilytree_01.php
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை - நாட்டைகுறிஞ்சி
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை- கானடா
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
- தலைமுறை-ரக்தியும் விரக்தியும் தினமணி 17 மே,2009
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:15 IST