தமிழ் நூல் காப்பகம்
தமிழ் நூல் காப்பகம், தமிழ்நாட்டின் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. பழந்தமிழ் நூல்கள், அகராதிகள், இலக்கிய நூல்கள் தொடங்கி, தமிழில் வெளிவந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இதழ்கள், ஆய்வேடுகள், இசைப்பேழைகள் போன்றவையும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனை நிறுவியவர் பல்லடம் மாணிக்கம். தமிழின் மிகப்பெரிய தனியார் நூலகங்களுள் தமிழ் நூல் காப்பகமும் ஒன்று.
தோற்றம்
பல்லடம் மாணிக்கம், மாணவப் பருவத்திலேயே வாசிப்பார்வம் கொண்டிருந்தார். தனது வாசிப்புக்காகப் பல்வேறு நூல்களைச் சேகரித்தார். 1980-ல், தனது இல்லத்தில் அந்நூல் சேகரிப்புகளைக் கொண்ட ஒரு நூலகத்தை அமைத்தார். லட்சம் நூல்கள் சேர்ந்த பிறகு அதனைப் பாதுகாக்கும் வகையில், தனது இல்லத்தை அடுத்துள்ள பகுதியில், அரை ஏக்கர் பரப்பளவுள்ள ஓர் இடத்தை வாங்கி, 2000-த்தில், தமிழ் நூல் காப்பகத்தை நிறுவினார்.
நோக்கம்
தமிழ் நூல்கள் காலா காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டும்; அது பலருக்கும் உதவுவதாய் அமைய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு 'தமிழ் நூல் காப்பகம்' உருவாக்கப்பட்டது. "தமிழ் மொழியும் இலக்கியமும் வளர வேண்டும், மேலும் செம்மையுற வேண்டும். தமிழ் நூல்கள் காலத்தால் அழியாமல் நூற்றாண்டுகள் கடந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்பதே தமிழ் நூல் காப்பகத்தின் முக்கிய நோக்கம்.
சிறப்பம்சங்கள்
நூல்கள்
தமிழ் நூல் காப்பக்கத்தில் பல்வேறு அரிய நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெப்ரிசியஸ் பாதிரியாரால் 1786-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட 'பெப்ரிசியஸ் தமிழ் அகராதி' இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் மிகப்பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 1894-ல் அச்சான உ.வே.சா. பதிப்பித்த புறநானூற்றின் முதல் பதிப்பு உள்ளது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரைப் பல நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள், கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரது படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் தமிழ் நூல் காப்பகத்தில் இடம்பெற்றுள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், பன்னிரு திருமுறைகள், பிரபந்தங்கள் உள்ளன. பழந்தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பலரது நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருக்குறள் சார்ந்த மொழி பெயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வு நூல்கள் 1500-க்கு மேல் உள்ளன. இத்தாலி, ஃப்ரெஞ்ச், சைனீஸ், ஜப்பான், அஸ்ஸாமிஸ், ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது, மலையாளம், மலேசிய மொழி எனப் பல மொழிகளில் வெளியான குறள் மொழிபெயர்ப்புகள் இக்காப்பகத்தில் இடம்பெற்றுள்ளன. நன்னூலுக்குக் 'கூழங்கைத் தம்பிரான்' எழுதிய அரிய உரை தமிழ் நூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காந்தி, அரவிந்தர், காரல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் அரிய நூல் தொகுதிகளும், ஐநூற்றிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளும் இங்கு உள்ளன. தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகராதிகள், வரலாற்றகராதி, சோதிட அகராதி, கல்வெட்டு அகராதி, அரிய அகராதியான மதுரை தமிழ்ப் பேரகராதி எனப் பல அகராதிகள் உள்ளன. கம்பராமாயணத்திற்கு வந்திருக்கும் பல உரைகள், பதிப்புகள், கோவை கம்பன் கழக வெளியீடு, வை.மு.கோ உரை, உவேசா உரை எனப் பல ஆய்வுரைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ராமாயணம், மகாபாரதம், கீதை, குரான், பைபிள் உட்பட பல மத, தத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்று நூல்கள், தனி வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் தனி வரிசையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. காந்தி பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூறு தொகுதிகளுக்கு மேல் உள்ளன. இவற்றுடன் இலக்கிய இதழ்கள், மலர்கள், வார, மாத இதழ்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோவை ஞானி, பொற்கோ, பொள்ளாச்சி மகாலிங்கம், ச. மெய்யப்பன், முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப. அறவாணன், க்ரியா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அளித்த அரிய நூல்கள் தமிழ் நூல் காப்பகத்தின் சேகரிப்பில் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் நூல் காப்பக்கத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அரிய நூல்கள்
நேஷனல் ஜியாகிரபிக்கின் 60 ஆண்டுத் தொகுப்புகள் தமிழ்நூல் காப்பகத்தில் உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், இந்தியத் தத்துவங்கள் பற்றி மாக்ஸ் முல்லரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட 'The Sacred Book of the East' எனும் ஆய்வு நூல் இங்கு சேகரிப்பில் உள்ளது. வடமொழி இலக்கணமான பாணினி வியாகரனம், மர்ரே ராஜம் வெளியிட்ட நூல்கள் எனப் பல நூல்கள் உள்ளன. அதுபோல Collectors Editions எனப்படும் புத்தகச் சேகரிப்பாளர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்படும் நூல் தொகுப்புகளும் பல உள்ளன.
இசைப் பேழைகள்
தமிழ் நூல் காப்பக்கத்தில் நூல்கள் மட்டுமல்லாது, அந்தக் கால கர்நாடக இசை, திரைப்பட இசை எல்.பி. ரெகார்டு முதல் இன்றைய சி.டி. டி.வி.டி., ப்ளூரே சிடி வரை பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மதுரை மணி, அரியக்குடி, ஜி.என்.பி., எம்.எல்.வி., எம்.எஸ் என்று பலருடைய இசைத் தொகுப்புகள் உள்ளன. தவிர பழைய திரையிசைப் பாடல் கிராமபோன் ரிகார்டுகள், குறுந்தகடுகள், கேசட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் விருது பெற்ற பெரும்பாலான படங்களின் குறுந்தகடுகள் சேகரிப்பில் உள்ளன. ஹிந்துஸ்தானி இசை, கஜல், மேற்கத்திய இசை, செவ்வியல் இசை, வாத்திய இசை எனப் பல ஒலிப்பேழைகள் உள்ளன.
அமைவிடம்
தமிழ் நூல் காப்பகம் விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. பல்லடம் மாணிக்கத்தின் இல்லம் அருகே, சுமார் அரை ஏக்கர் பரப்பில், தோட்டத்தின் நடுவே காப்பகம் அமைந்துள்ளது. தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும், ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்துள்ளன.
உசாத்துணை
- இந்து தமிழ் திசை கட்டுரை
- தினமணி இதழ் கட்டுரை
- வலைத்தமிழ் இதழ் கட்டுரை
- இந்து தமிழ் திசை கட்டுரை
- பல்லடம் மாணிக்கம்: தென்றல் இதழ் நேர்காணல்
- பல்லடம் மாணிக்கம் கட்டுரை, முனைவர் மு. இளங்கோவன் தளம்
- தமிழ்நாடு அரசுப் பொது நூலக இயக்கக வலைத்தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:11:45 IST