under review

நன்னூல்

From Tamil Wiki
noolaham

நன்னூல் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழிலக்கண நூல். தொல்காப்பியத்தையும் அதற்கான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இலக்கண விதிகளை எளிமையான சூத்திரங்களாக வகுத்த நூல். தமிழ் இலக்கணம் கற்போரால் இன்றும் நன்னூல் சூத்திரங்கள் கற்கப்படுகின்றன.

ஆசிரியர்

நன்னூலை இயற்றியவர் பவணந்தி. பவணந்தி 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்று வரலாற்று ஆய்வாளர் கருதுகின்றனர். அருங்கலை விநோதன்’ என்ற பட்டப் பெயர் பெற்ற சீயங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாயிரத்தில் ‘‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர” என்பதினால் பவணந்தி எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திற்கும் இலக்கணம் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் எழுத்து, சொல், என்னும் இரண்டிற்கு மட்டுமே நன்னூலில் இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

நன்னூல் ஐந்திலக்கணம் முழுமையையும் குறிப்பிடும் நூல் என அதன் சிறப்புப் பாயிரம் சுட்டுகிறது. ஆயினும் தற்கால நன்னூலில் எழுத்து, சொல் ஆகிய இரு இலக்கணங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பொருள் இல்க்கணம் நன்னூலில் இடம்பெறவில்லை.

Nannooll.jpg

நன்னூல் நூற்பாக்களைக்கொண்ட பாயிரமும், , எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என இரு அதிகாரங்களையும் கொண்டது. எழுத்ததிகாரம் ஐந்தியல்களையும் சொல்லதிகாரம் ஐந்தியல்களையும் கொண்டது.

நன்னூலுக்கு மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், ஆண்டி புலவர், இராமானுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், விசாகப் பெருமாள் ஐயர், ஜி.யூ. போப் முதலியோர் உரை எழுதியுள்ளனர்.

பாயிரம்

சிறப்புப் பாயிரமாக ஏழு மதம், பத்து குற்றம், பத்து அழகு, ஆசிரியர் வகை, மாணாக்கர் வகை ஆகியன கூறப்பட்டுள்ளன .

எழுத்ததிகாரம் (220 நூற்பாக்கள்)
  • எழுத்தியல் - 72 நூற்பாக்கள்
  • பதவியல் - 23 நூற்பாக்கள்
  • உயிரீற்றுப் புணரியல் - 53 நூற்பாக்கள்
  • மெய்யீற்றுப் புணரியல் - 36 நூற்பாக்கள்
  • உருபு புணரியல் - 18 நூற்பாக்கள்

நன்னூல் கூறும் எழுத்திலக்கணப் பகுதிகள்- எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி

சொல்லதிகாரம் (205 நூற்பாக்கள்)
  • பெயரியல் - 62 நூற்பாக்கள்
  • வினையியல் - 32 நூற்பாக்கள்
  • பொதுவியல் - 68 நூற்பாக்கள்
  • இடையியல் - 22 நூற்பாக்கள்
  • உரியியல் - 21 நூற்பாக்கள்

உரைகள்

நன்னூலுக்குப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. பழமையான மயிலநாதர் உரையும் சங்கர நமச்சிவாயரின் விருத்தியுரையையும் முலநூல்களாகக் கொண்டு சில திருத்தங்களுடன் மாதவச் சிவஞான முனிவர் உரை வெளிவந்தது. திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் உரை 1840-ல் வெளிவந்தது. முகவை ராமானுசக் கவிராயர் 1848-ல் நன்னூலை உரையுடன் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் மேலும் பல திருத்தங்களுடனும், விரிவாக்கங்களுடனும் நன்னூல் காண்டிகையுரையை எழுதி 1851-ல் வெளியிட்டார்.

ஜி.யு. போப்பின் உரை 1857-ல் வெளிவந்தது

சிறப்புகள்

நன்னூலைப் பின்பற்றி பிற்காலத்தில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றின. இதன் சிறப்பினை

முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினுள்
நன்னூலார் தமக்கு எந்நூலாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக'

என சுவாமிநாத தேசிகர் தம் இலக்கணக் கொத்து உரையில் புகழ்ந்துரைக்கின்றார். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்துவருகின்றனர்.

பாடல் நடை

பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்

பதவியல்

பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

உசாத்துணை

நன்னூல், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page