under review

சங்கர நமச்சிவாயர்

From Tamil Wiki
நன்னூல் உரை (சங்கர நமச்சிவாயர்)

சங்கர நமச்சிவாயர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். நன்னூலுக்கு உரை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கர நமச்சிவாயர் பொ.யு. 17-ம் நூற்றாண்டில் சைவ வேளாளர் குடியில் திருநெல்வேலியில் பிறந்தார். திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தார். இவரைச் சங்கர நமச்சிவாயப்பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப்புலவர் என்றும் அழைத்தனர். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், சங்க இலக்கியம், வடமொழி நூல்கள் ஆகியவற்றையும் பயின்றார். சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும், வைணவ இலக்கியங்களையும் கற்றார். இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். உ.வே.சாமிநாதையர் முயன்று சேர்த்த செவிவழிச் செய்திகள் வழியாக இவரின் வரலாறு எழுதப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

சங்கர நமச்சிவாயருக்கு தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய நூல்களின் மேல் ஈடுபாடு இருந்தது. நன்னூலுக்கு மயிலைநாதருக்குப் பின் உரை எழுதினார். ஊற்றுமலை ஜமீன்தார் மருதப்ப தேவரின் வேண்டுதலை ஏற்று சங்கர நமச்சிவாயர் பவணந்தி முனிவர் செய்த நன்னூலுக்கு உரை இயற்றினார். நன்னூலுக்கு விருத்தியுரை எழுதினார். சங்கர நமச்சிவாயர் எழுதிய நன்னூல் உரையை சிவஞான முனிவர் திருத்தினார். ஆறுமுகநாவலர் 1851-ல் நன்னூல் உரையை யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.

பட்டம்

  • ’பன்னூற் செந்தமிழ்ப் புலவன்’ என சிறப்புப் பாயிரத்தில் சங்கர நமச்சிவாயர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் நடை

  • உரைப்பாயிரம்

பொன்மலை எனஇப் புவிபுகழ் பெருமை
மன்னிய ஊற்று மலைமரு தப்பன்
முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
இத்தலத்து எய்திய இறைமகன்

இலக்கிய இடம்

“சாமிநாத தேசிகர் மட்டுமன்றி இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் முதலியோரும் அவரைப்போன்ற வேறு சில பெரியாரும் இவர் காலத்தில் திருநெல்வேலியில் இருந்தவர்கள் ஆதலின், கல்வி கேள்விகளில் சிறந்த ஓர் இலக்கண நூலுக்கு உரை இயற்றுதற்குப் போதிய ஆற்றலைப் பெறுவது சங்கர நமச்சிவாயருக்கு எளிதாயிற்று” என உ.வே.சாமிநாதையர் மதிப்பிட்டார்.

நூல் பட்டியல்

  • நன்னூல் உரை

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page