under review

பொற்கோ

From Tamil Wiki
பொற்கோ

பொற்கோ (பொன்.கோதண்டராமன்) (1941) கல்வியாளர், தமிழறிஞர். சென்னை பல்கலை கழகத் துணைவேந்தராக இருந்தவர். மொழியியல் ஒப்பிலக்கணம் ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தவர்

பிறப்பு, கல்வி

பொன் கோதண்டராமன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக் குறிச்சி என்னும் ஊரில் ஜூன் 9, 1941-ல் பிறந்தவர். இரும்புலிக்குறிச்சியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற பொற்கோ மேல்நிலைக் கல்வியைப் பொன்பரப்பி என்னும் ஊரில் நிறைவு செய்தவர்.திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப்புலவர் படிப்பை நிறைவு செய்தவர். திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தில் இளம் புலவர் பட்டமும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.மொழியியல் துறையில் முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

முனைவர் பொற்கோ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1969 முதல் 1970 வரை, பின்னர் 1972 முதல்1973 வரை பணியாற்றிய பின்னர் லண்டன் பல்கலைக்கழகதில் உள்ள கீழையியல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் 1970 முதல் 1972 வரை பணிபுரிந்தார். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிஞராக 1973 முதல் 1974 வரை பணியாற்றினார். இணைப் பேராசிரியராக 1974 முதல் 1977 வரை பணியாற்றினார்.

நியூயார்க் ஸ்டோனிபுரூக்[1] (1973) நார்த்வெஸ்டன்[2] பல்கலைக்கழகங்களிலும் ஜப்பானில் டோக்கியோ காக்கூஷின்[3] பல்கலைக்கழகத்திலும் (1990,1993,1996) பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் இணைப்பேராசிரியராக 1977-ல் பணியில் இணைந்தார். பணியுயர்வு பெற்று பேராசிரியராகவும்(1985) துறைத்தலைவராகவும் விளங்கினார். கீழைக் கலையியல் ஆய்வுப் பிரிவுக்கு இயக்குநராகவும், மொழியியல் ஆய்வுகளுக்கு இயக்குநராகவும் இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 24-06-1999 முதல் 23-06-2002 வரை பணியாற்றினார்.

பொற்கோ

ஆய்வுப்பணி

பொற்கோ மொழியியல்,தமிழ் இலக்கணம், தமிழிலக்கியக் கொள்கைகள், திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், யாப்பியல் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார். 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அண்ணாபல்கலைக்கழகம்,மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக்கல்வி குறித்தும் கலைச்சொல்லாக்கம் தொடர்பாகவும் கருத்துரை வழங்கியிருக்கிறார்.

இதழியல்

  • 1965-ல் ஆய்வுப்பட்ட மாணவராக இருந்தபோது அறிவுக்கூர்வாள் என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.
  • மக்கள் நோக்கு என்ற இதழை சில நண்பர்களின் உதவியோடு சில ஆண்டுகள் நடத்தினார்.
  • புலமை என்ற ஆராய்ச்சி இதழை 1974-ல் தொடங்கி நடத்தி வருகிறார்.
  • புலமை மன்றம் என்ற அமைப்பின் வாயிலாக தமிழியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் முப்பத்து நான்கு தொகுதிகள் வெளியாகின.
பொற்கோ

விருதுகள்

  • தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது (1995-1996)
  • தமிழக அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது (2009)
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப்பேரவைச் செம்மல் (2003)

பங்களிப்பு

கல்வியாளராக பொற்கோ அமைப்புகள் சார்ந்து பங்களிப்பாற்றியிருக்கிறார். ஆய்வாளாராக அவருடைய பார்வை தேவநேயப் பாவாணர் மரபைச் சேர்ந்தது. தமிழின் தொன்மை, இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தில் தமிழுக்கு இருக்கும் தனித்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் ஆய்வுநோக்கு கொண்டவர்.

நூல்கள்

  • வாழ்க்கைப் பூங்கா (1965)
  • வாழ்வியல் (1969)
  • வள்ளுவ நெறியும் வைதிக நெறியும் (1969)
  • பி.பி.சி தமிழோசையில் (1972)
  • இலக்கண உலகில் புதிய பார்வை (1973)
  • செந்தமிழ் (1974)
  • உலகில் தமிழும் தமிழரும் (1976)
  • இலக்கியக் கோலங்கள் (1976)
  • கோதை வளவன் (1978)
  • கலங்கரை விளக்கம் (1979)
  • இலக்கண உலகில் புதிய பார்வை - 2 (1981)
  • குறள் காட்டும் உறவுகள் (1982)
  • நல்ல உடல் நல்ல மனம் (1982)
  • இலக்கணக் கலைக்களஞ்சியம் (1985)
  • தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி (1986)
  • பொற்கோவின் கவிதைகள் (1987)
  • தமிழ் இலக்கணக் கோட்பாடுகள் (1989)
  • தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுதலாம் (1992)
  • தொல்காப்பிய அறிமுகம் (1994)
  • தேவையான மொழிக் கொள்கை (1994)
  • இன்னமுத மாமழை (1994)
  • தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் (1995)
  • புதிய நோக்கில் தமிழ் யாப்பு (1995)
  • ஆராய்ச்சி நெறிமுறைகள் (1996)
  • இலக்கண உலகில் புதிய பார்வை - 3 (1996)
  • பொது மொழியியல் (1997)
  • குயில் பாட்டு (1998)
  • இலக்கிய அறிவியல் (1998)
  • திருக்குறள் அரங்கம் (1999)
  • தமிழக வரலாற்றில் திருக்குறள் (2000)
  • இலக்கணக் கலைக் களஞ்சியம், மூன்றாம் பதிப்பு (2000)
  • பண்பாட்டுக் கருத்தோட்டம் (2001)
  • இலக்கிய வெளிச்சம் - 1 (2001)
  • இலக்கிய வெளிச்சம் - 2 (2001)
  • மொழிசார் சிந்தனைகள் (2001)
  • இக்காலத் தமிழ் இலக்கணம் (2002)
  • கோதைவளவன், மூன்றாம் பதிப்பு (2002)
  • தேவையான மொழிக் கொள்கை, விரிவாக்கப் பதிப்பு (2003)
  • தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம் (2003)
  • தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு (2003)
  • திருக்குறள் உரைவிளக்கம் (2004)
  • தமிழ் வரலாற்றில் பாவாணர் (2004)
  • தமிழ் வரலாற்றில் வள்ளலார் (2004)
  • மக்கள் நேயச் சுயமரியாதை (2005)
  • தமிழக வரலாற்றில் அறுந்து கிடக்கும் சங்கிலிகள் (2005)
  • தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி --பாதையும் பயணமும் (2005)
  • இலக்கண உலகில் புதிய பார்வை,நான்காம் பதிப்பு தொகுதி (1,2,3) (2005)
  • மக்கள் நடுவில் பொற்கோ (2006)
  • குறள் காட்டும் உறவுகள், விரிவாக்கப் பதிப்பு (2006)
  • இக்காலத் தமிழ் இலக்கணம், சீராக்கப் பதிப்பு (2006)
  • தமிழக வரலாற்றில் பேராசிரியர் தெ.பொ.மீ. (2007)
  • செம்மொழித் திட்டம் (2007)
  • வள்ளுவ நெறியும் வைதிக நெறியும் (2007)
  • நல்ல உடல் நல்ல மனம், சீராக்கப் பதிப்பு (2007)
  • வாழ்க்கை வளம் பெற வழிவகைக் காண்போம் (2007)
  • பொதுமொழியியல் மூன்றாம் பதிப்பு (2007)
  • தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம், ஐந்தாம் பதிப்பு
  • மொழிசார்ந்த சுயமரியாதை (2008)
  • திருக்குறள் உரைவிளக்கம், சீராக்கப் பதிப்பு (2008)
  • பொது மொழியியல், சீராக்கப் பதிப்பு (2008)
  • மொழி சார்ந்த இயக்கங்கள் (2009)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

[[]] ‎


✅Finalised Page