under review

மதுரை மணி ஐயர்

From Tamil Wiki
மதுரை மணி ஐயர்
மதுரை மணி ஐயர்

மதுரை மணி ஐயர் (சுப்பிரமணியன்) (அக்டோபர் 25, 1912-ஜூன் 8, 1968) கர்நாடக இசைக் கலைஞர். தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி இசைக் கச்சேரிகள் செய்தார். ‘இசைப் பேரறிஞர்' விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரை உடைய மதுரை மணி ஐயர், அக்டோபர் 25, 1912 அன்று, மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். இசைக் கலைஞர்கள் பலரிடம் இசை கற்றார்.

தனி வாழ்க்கை

மதுரை மணி ஐயர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி மகனும் சீடருமான டி.வி.சங்கரநாராயணனேயே தனது மகனாகப் பாவித்து வளர்த்தார்.

இசை வாழ்க்கை

மதுரை மணி ஐயரின் தந்தை இசை ஆர்வம் மிக்கவர். இசை மேதை புஷ்பவனத்தின் சகோதரர். அந்த வகையில் மணி ஐயர் இளம் வயது முதலே இசைஞானம் மிக்கவராக இருந்தார். ராஜம் பாகவதரிடம் இசை கற்றார். தொடர்ந்து ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் நடத்தி வந்த இசைப் பள்ளியான மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயத்தில் சேர்ந்து இசை பயின்றார்.

தன் குருநாதர்களிடமிருந்தும் காரைக்குடி சாம்பசிவ ராவ், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, வீணை தனம்மாள், பல்லடம் சஞ்சீவி ராவ், நாகசாமி பாகவதர், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை போன்ற இசை ஜாம்பவான்களின் கச்சேரிகளைக் கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார்.

மதுரை மணி ஐயர் கச்சேரி
மதுரை மணி ஐயர் கச்சேரி
கச்சேரிகள்

மணி ஐயரின் முதல் கச்சேரி, 1924-ல், அவரது 12-ம் வயதில், ராமநாதபுரத்தில் உள்ள அலவாக் கோட்டை ஆலயக் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரங்கேறியது. 1925-ல், தேவகோட்டையில், காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியின் முன்பு பாடி, அவரது ஆசியைப் பெற்றார் . தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் பெருகின. 1927-ல், சென்னையில், சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவில், மணி ஐயரின் தந்தை ராமசுவாமி ஐயர் 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மணி ஐயரின் கச்சேரி நடந்தது. அதற்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார்.

சபாக் கச்சேரிகள் மட்டுமல்லாது, கோயில் உற்சவக் கச்சேரிகள், திருமணக் கச்சேரிகள் என பல கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடினார். தேசிய சங்கீத சம்மேளனம், அகில இந்திய இசை நிகழ்ச்சிகள் எனப் பலலவற்றில் கலந்து கொண்டு பங்களித்தார். தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் நடத்திய சங்கர ஜயந்தி, கொத்தமங்கலம் சுப்பு நடத்திய புரட்டாசி சனிக்கிழமைக் கச்சேரி போன்றவற்றில் கலந்துகொண்டு பாடினார்.

இசைப் பாணி

ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த மழவராயநேந்தல் சுப்பராம பாகவதரின் பாணியையே மதுரை மணி ஐயர் பின்பற்றினார். தொடர்ந்து தனக்கென ஓர் தனிப் பாணியை வளர்த்துக் கொண்டார். ‘நாத தனுமனிஸம்’, ‘மா ஜானகி’, ‘காணக் கண் கோடி வேண்டும்’, ‘காவா வா’, ‘தாயே யசோதா’, ‘எப்ப வருவாரோ’, ‘கந்தன் கருணை புரியும் வடிவேல்' போன்ற பாடல்கள் மணி ஐயரின் குரலில் ஒலித்து மேலும் மெருகேறின.

மதுரை மணி ஐயர் ஆல்பம்
பாடல்கள்

மூன்று ஸ்தாயியிகளிலும் சரளமாகப் பாடும் வல்லமை பெற்ற மணி ஐயர் சாருகேசி, நளினகாந்தி, லதாங்கி, ஹம்சநந்தினி, ரஞ்சனி, சரசாங்கி போன்ற பல ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப்படுத்தினார். தமது பெரும்பாலான கச்சேரிகளில் முத்துசாமி தீட்சிதரால் பாடப்பெற்ற நவக்கிரகக் கிருதிகளைப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரால் இயற்றப் பெற்ற ‘இங்கிலீஷ் நோட்’டைப் பாடி பிரபலமடையச் செய்தது மதுரை மணி ஐயர்தான். மைசூர் சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜப் பிள்ளை, பாலக்காடு மணி, பழனி சுப்ரமணியப் பிள்ளை, முருகபூபதி என புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் பலர் மணி ஐயருக்குப் பக்க வாத்தியம் வாசித்தனர். மணி ஐயர், வானொலியில் பல கச்சேரிகளை நிகழ்த்தினார். அவரது பாடல்கள் பல இசைத் தட்டுகளாக வெளியாகின.

மதுரை மணி ஐயர் இளம் வயதுப்படம்
மழையை வரவழைத்தது

மதுரை மணி ஐயர், நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில், மேக ரஞ்சனி ராகப் பாடலைப் பாடி மழையை வரவழைத்ததாக ஒரு தொன்மம் உள்ளது. மதுரை மணி ஐயரின் இசையால் ஈர்க்கப்பட்ட கொச்சி மகாராஜா, மணி ஐயருக்கு தங்கத் தோடா அளித்து கௌரவித்தார்.

இலக்கியத் தொடர்புகள்

இசையோடு கல்வியிலும் மணி ஐயருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. ஆங்கிலக் கல்வியை முறையாகப் பயின்று தேர்ந்தார். இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. தி. ஜானகிராமன் போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் நட்புக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன் குடும்ப நிதிக்காக திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மணி ஐயர் கச்சேரி செய்து நிதி திரட்டித் தந்தார். எம்பார் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார், ச.து.சு. யோகி, மணிக்கொடி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் மணியின் இசைக்கு ரசிகர்களாக இருந்தனர்.

மதுரை மணி ஐயர் வானொலி நிகழ்ச்சி

விருதுகள்

  • தஞ்சை சமஸ்தானத்தினர் அளித்த கான கலாதர பட்டம் - 1944
  • சங்கீத நாடக அகாடமி விருது - 1960
  • மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது - 1960
  • தமிழ் இசைச் சங்கம் வழங்கிய இசைப் பேரறிஞர் பட்டம் - 1962
  • நாதலோல பட்டம்

மாணவர்கள்

  • டி.வி. சங்கர நாராயணன்
  • எஸ். ராஜம்
  • வேம்பு ஐயர்
  • சாவித்ரி கணேசன்
  • திருவெண்காடு ஜெயராமன்
  • சேதுராமன்
  • டி.என். பாலா
  • எஸ்.ஏ. குமாரி துர்கா

மதுரை மணி ஐயரின் பாடல்கள்

மறைவு

மதுரை மணி ஐயர், ஜூன் 8, 1968-ல், தனது 56-ம் வயதில் காலமானார்.

பண்பாட்டு இடம்

தனக்கென்று ஒரு தனித்த பாணியை ஏற்படுத்திக் கொண்டு கச்சேரிகள் செய்தவர் மதுரை மணி ஐயர். ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இசை என்பது மக்களை இன்பப்படுத்துவதற்கும், அவர்களது மனதை பக்குவப்படுத்தி மேன்மையுறச் செய்வதற்கும் தான் என்பது மணி ஐயரின் கருத்தாக இருந்தது. அதனால் மங்களகரமான வார்த்தைகளைக் கொண்ட கீர்த்தனைகளை, மகிழ்ச்சி தரும் ராகங்களை மட்டுமே தம் கச்சேரிகளில் பாடினார். எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பாடல்களை அவர் பாடியதில்லை.

“மணி அய்யர் பிறவியிலேயே இனிமையான சாரீரம் படைத்தவர். குரல் உடையும் பருவத்தில் சிரமசாதகம் செய்து அதைக் காப்பாற்றித் தனி மெருகும் ஏற்றிவிட்டார். மணி அய்யரின் சங்கீதத்தில் இன்னொரு தனிப் பெருமை அதன் விச்ராந்தி. சுருதி, லயம் இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில்கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. விரைவான கதிகளிலோ, சிக்கலான ஸ்வரப் பின்னல்களிலோ கூட இந்த அமைதி நிலை ஊடாடி நிற்பதால் கேட்போர் உள்ளத்திலும் ஒரு பிரமிப்புக் கலந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்றி விடுகிறது அது.” என்கிறார் தி.ஜானகிராமன்.

உசாத்துணை


✅Finalised Page