under review

எம். எல். வசந்தகுமாரி

From Tamil Wiki
எம். எல். வசந்தகுமாரி

எம். எல். வசந்தகுமாரி (மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி; எம்.எல்.வி; ஜூலை 3, 1928-அக்டோபர் 31, 1990) கர்நாடக இசைக் கலைஞர். பல மொழிகளில் கீர்த்தனைகள், பாடல்களைப் பாடினார். புதிய பல வர்ண மெட்டுக்களை அமைத்தார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றார். தந்தையின் பெயரையே முதல் எழுத்தாகப் பயன்படுத்தி வந்த காலத்தில் அதற்கு, மாறாகத் தன் தாயின் பெயரை முதலெழுத்தாக வைத்துக் கொண்டார்.

எம்.எல். வி. இள வயதுப் படம் (நன்றி : The Hindu)

பிறப்பு, கல்வி

எம். எல். வசந்தகுமாரி, ஜூலை 3, 1928 அன்று, இசைக்கலைஞர்கள் கூத்தனுர் ஐயாசாமி ஐயர்-லலிதாங்கி இணையருக்குப் பிறந்தார். சென்னையில் பள்ளிக் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

எம். எல். வசந்தகுமாரி, இசைக் கலைஞராக வாழ்ந்தார். விகடம் கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்துகொண்டார். மகன்: சங்கரராமன். மகள்: ஸ்ரீவித்யா, திரைப்பட நடிகை.

கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் எம்.எல். வசந்தகுமாரி

இசை வாழ்க்கை

எம். எல். வசந்தகுமாரி பெற்றோரிடம் இசை கற்றார். தாயின் கச்சேரிகளுக்குப் பின் பாட்டு பாடினார். இசை மேதை ஜி.என். பாலசுப்ரமணியத்திடம் இசை கற்றார். 1941-ல், குருநாதரின் பரிந்துரையின் படி பெங்களூரில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் தனியாகக் கச்சேரி செய்தார். அப்போது வசந்தகுமாரிக்கு வயது 13. அதுதான் அவரது முதல் கச்சேரி. தொடர்ந்து வசந்தகுமாரி பாடிய இசைத்தட்டு ஒன்றும் வெளியானது. சீடராக, ஜி.என்.பி.யின் பாணியை உள்வாங்கிக் கச்சேரிகள் செய்தார். அழகான குரல், தெளிவான உச்சரிப்பு, பாவம், சங்கதிகள் என்று கூட்டமைந்த அவரது கச்சேரிகளுக்கு வரவேற்புக் கிடைத்தது.

சிறப்புகள்

அபாரமான கற்பனை வளம், ஒருமுறை பாடிய பாட்டை மறுமுறை பாடும்போது புதிது புதிதாகச் சங்கதிகள் சேர்த்துப் பாடுவது, தேவைப்பட்டால் மட்டுமே பிருகாக்களைப் பயன்படுத்துவது போன்ற நுட்பங்களை எம்.எல். வசந்தகுமாரி கையாண்டார். சபைகளில் அதிகம் பாடப்படாத ராகங்களின் மீது கவனம் செலுத்தினார். ஆலாபனையின் போது விஸ்தாரமான கல்பனா ஸ்வரங்கள் மூலம் அந்த ராகத்தையும், அதற்கும் பிற ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் கேட்போருக்குப் புரிய வைப்பதைக் கச்சேரிகளில் தன் வழக்கமாகக் கொண்டார். தமிழ் கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

வசந்தகுமாரியின் சமகாலத்தவர்களாய் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் ஆகியோர் இருந்தனர். எம்.எஸ்., எம்.எல்.வி., டி.கே.பி. என்ற மூவரையும் இசையரசிகள் என்றும், முப்பெரும்தேவியர் என்றும் இசையுலகம் அழைத்தது. பிரபல மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் உட்படப் பல பிரபல கலைஞர்கள் எம்.எல்விக்கு பக்கவாத்தியம் வாசித்தனர்.

எம்.எல்.வி.

திரை வாழ்க்கை

திரையிசை வாய்ப்புகளும் எம்.எல்.வி.யைத் தேடி வந்தன. எம்.கே. தியாகராஜ பாகவதர், தான் நடித்த 'ராஜமுக்தி' திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். நடிகை வி.என். ஜானகிக்குப் பின்னணி பாடி தன் திரையுலக வாழ்வைத் தொடங்கினார் எம்.எல். வசந்தகுமாரி.

1951ல் மணமகள் திரைப்படத்தில், சி.ஆர். சுப்பராமனின் இசையில் எம்.எல்.வி. பாடிய 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியாரின் பாடல் அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. அவர் பாடிய அந்த வர்ண மெட்டே இன்றளவும் கர்நாடகக் கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரைப்படத்திலிருந்து, கர்நாடக சங்கீத மேடைக்குச் சென்ற பாடல் என்ற பெருமையும் அந்தப் பாடலுக்குக் கிடைத்தது.

இசைமேதைகள் சி.ஆர். சுப்பராமன், ஜி. ராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம் போன்றோர் தொடர்ந்து அவருக்குப் பல வாய்ப்புகளை வழங்கினர். எம்.எல்.வி.க்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் தேர்ந்தெடுத்த பாடல்களை மட்டுமே பாட ஒப்புக் கொண்டார்.

'ராஜா தேசிங்கு' படத்தில் ஷண்முகப்ரியா, கேதாரகௌளை, சாமா, அடாணா, மோகனம், பிலஹரி, கானடா, காபி என்று எட்டு ராகங்களில் அமைந்த ’பாற்கடல் அலைமேலே’ என்ற தசாவதாரப் பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் பல பரதநாட்டிய மேடைகளிலும் இந்தப் பாடல் ஒலித்தது. கச்சேரிகளின் இறுதியில் இப்பாடலைப் பாடுவதை எம்.எல்.வி. வழக்கமாக வைத்திருந்தார்.

கர்நாடக இசை மேதைகளுடன் எம்.எல். வசந்தகுமாரி (படம் நன்றி கமகம் தளம்)

எம்.எல். வசந்தகுமாரி பாடல் காணொளிகள்

கர்நாடக இசை
எம்.எல். வசந்தகுமாரி- எம்.எஸ். சுப்புலட்சுமி- டி.கே. பட்டம்மாள்
திரை இசை

விருதுகள்

  • சங்கீத கலாநிதி விருது
  • மைசூர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
  • இந்திய அரசு பத்ம பூஷண் விருது
எம்.எல். வசந்தகுமாரி, சுதா ரகுநாதனுடன்

சீடர்கள்

  • சுதா ரகுநாதன்
  • ஏ. கன்யாகுமரி
  • சாருமதி ராமச்சந்திரன்
  • யோகம் சந்தானம்
  • சுபா கணேசன்
  • ஜெயந்தி மோகன்
  • ஜெயந்தி சுப்ரமணியம்
  • வனஜா நாராயணன்
  • டி.எம். பிரபாவதி
  • மீனா மோகன்
  • ரோஸ் முரளி கிருஷ்ணன்
  • பாமா விஸ்வேஸ்வரன்
  • ஸ்ரீவித்யா

மறைவு

எம்.எல். வசந்தகுமாரி, அக்டோபர் 31, 1990 அன்று, தனது 63-ம் வயதில், உடல்நலக் குறைவால் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page