தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்
தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு முதல்) என்பவை காப்பியம் என்ற இலக்கண வகைமைக்குள் பொருந்தும் வகையில் கிறித்தவம் சார்ந்த பேசுபொருட்களை அடிப்படையாகக் கொண்டவை. மேற்கிலிருந்து தமிழகத்திற்கு வந்து இறங்கிய கிறித்தவக் குருமார்கள் தமிழ் மொழியைக் கற்று விவிலியத்தையும், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் வழிபாட்டுப் பாடல்களையும் மொழிபெயர்ப்பு செய்ததைத் தொடர்ந்து இங்குள்ள தமிழ் இலக்கியங்களைக் கற்று சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, கீர்த்தனை ஆகிய பல்வேறு வகையான கிறித்தவ மதம் சார்ந்த இலக்கியங்களையும் அகராதிகளையும் படைத்தனர். அந்த வரிசையில் தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் தேம்பாவணி. இதனைத் தொடர்ந்து பல கிறித்தவக் காப்பியங்கள் தமிழில் எழுதப்பட்டன. இவை புராணம், காப்பியம், காவியம், பாவியம் ஆகிய பெயர்களிலும் வழங்கப்பட்டன.
வரலாறு
பொ.யு. 1706-ல் சீர்திருத்தத் திருச்சபையின் அருட்பணியாளரான பர்த்தலோமேயு சீகன்பால்கு தரங்கம்பாடியில் வந்து தங்கி கிறித்தவ மதப் பரப்புரையில் ஈடுபட்டார். சீகன்பால்கு தமிழ் மொழியைக் கற்று விவிலியத்தையும், ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் வழிபாட்டுப் பாடல்களையும் தமிழாக்கம் செய்து அச்சிட்டு வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பே கிறித்துவ இலக்கியத்தின் தோற்றத்திற்கு அடிப்படை.
பொ.யு 1711-ல் தமிழ் நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் தமிழ் கற்று சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, கீர்த்தனை ஆகிய பல்வேறு வகையான கிறித்தவக் காப்பியங்களையும் அகராதியையும் படைத்தார். இவற்றில் ஒன்றான தேம்பாவணி தமிழ்க் கிறித்துவத்தின் முதல் காப்பியமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல விதமான பா வடிவில், மரபிலக்கணத்தில் பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. கிறித்தவக் காப்பியத்தின் இரு முக்கியமான காப்பியங்களான தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும் தழுவல் காப்பியங்கள். பூங்காவனப் பிரளயம், சுவர்க்க நீக்கம் ஆகியவை மொழிபெயர்ப்புக் காப்பியங்கள்.
கிறித்தவக் காப்பியங்களின் வகைப்பாடுகள்
- திருமறை வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள முழு வரலாற்றையோ அல்லது பழைய ஏற்பாடு பகுதியில் அமைந்துள்ள தொடக்ககால வரலாற்றை மட்டுமோ அல்லது திருமறையின் ஒரு தனி நூலின் வரலாற்றையோ எடுத்துரைக்கும் காப்பியங்கள்
- கிறுஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள் - கிறுஸ்துவின் வரலாற்றை முழுமையாகவோ பகுதியாகவோ விரித்துரைக்கும் காப்பியங்கள்
- திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையில் இடம்பெறும் முக்கிய மாந்தர் சிலரின் வரலாற்றை விளக்கும் காப்பியங்கள்
- திருமறைசாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் - திருமறையில் இடம்பெறாத கிறித்தவ அருட் தொண்டர்கள் மற்றும் புனிதர்களின் வரலாற்றை விளக்கும் காப்பியங்கள்
- தழுவல் காப்பியங்கள் - பிறமொழிக் காப்பியங்களைத் தழுவிப் படைக்கப்பட்ட தமிழ்க் காப்பியங்கள்
- மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் - பிறமொழியிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட காப்பியங்கள்
- மக்களினக் காப்பியங்கள் - ஓர் இன மக்களின் தொன்மை வரலாற்றை விவரிக்கும் வகையிலான காப்பியங்கள்.
கிறித்தவக் காப்பியங்களின் பேசுபொருள்
- இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நற்செய்தி நூல்களின் அடிப்படையில் விவரித்தல்
- இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளின் வரலாற்றை விவரித்தல்
- விவிலியம் முழுவதிலுமுள்ள செய்திகளைச் சுருக்கமாகச் சொல்லுதல்
- விவிலியத்திலுள்ள மாந்தர்களை விரித்துரைத்தல் (யோசேப்பு, எஸ்தர், யூதித்து, பவுல்)
- இயேசு கிறிஸ்துவின் அடியவர்களை விவரித்தல் (புனித சவேரியார், அன்னை தெரேசா, தேவசகாயம் பிள்ளை, பிரான்சிஸ் அசிசியார், மகராசன் வேதமாணிக்கம்)
பட்டியல்
உசாத்துணை
- கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Jun-2024, 10:08:35 IST