under review

பூங்காவனப் பிரளயம்

From Tamil Wiki
பூங்காவனப் பிரளயம் - மதிப்பீட்டு நூல்

பூங்காவனப் பிரளயம் (1887) கிறித்தவக் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சாமுவேல் வேதநாயகம் தாமஸ். ஜான் மில்டனால் எழுதப்பட்ட 'Paradise Lost' என்ற நூலின் முதல் இரு காண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே பூங்காவனப் பிரளயம்.

பிரசுரம், வெளியீடு

ஜான் மில்டன் Paradise Lost, Paradise Regained என்ற தலைப்பில் இரு நூல்களை எழுதினார். அவற்றில் Paradise Lost என்ற நூலின் முதல் இரு காண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, பூங்காவனப் பிரளயம். இக்காப்பிய நூலை இயற்றியவர் சாமுவேல் வேதநாயகம் தாமஸ். இவர், 1887-ல், இந்த நூலைத் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பை, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977-ல், வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

சாமுவேல் வேதநாயகம் தாமஸ், மே 17, 1865-ல், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மெய்ஞ்ஞானபுரத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மன்னார்குடியிலுள்ள இந்து கலாசாலை மறறும் மன்னார்குடியிலுள்ள வெஸ்லின் கலாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மதுரைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மதுரை அமெரிக்கன் கலாசாலையின் தலைமை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1889-ல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் தலைமைப் பொறுப்பேற்றார். திடீர் உடல்நலக்குறைவால், 1890-ல், தனது 35- ஆம் வயதில் காலமானார்.

காப்பியத்தின் கதை

இறைவன் மனிதகுலத்துக்காகப் பூவுலகைப் படைத்து, அதில் ஏதேன் பூங்காவை அமைத்தார். அங்கே ஆதாமையும் ஏவாளையும் வாழ்ந்துவரச் செய்தார். அப்பூங்காவிலுள்ள பாவப்பழம் தாங்கிய மரத்தின் கனியை மட்டும் உண்ணுதல் கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். அவர்களும் அவ்வாறே அதற்கு ஒப்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

பேய்களின் தலைவன் சாத்தான். அவனும், அவனுடைய தூதர்களும் வானுலகில் இருக்கும் போது இறைவனுக்குச் சமமாக இருக்க வேண்டும் என விரும்பிப் பல கலகங்களை விளைவித்தனர். இறைவன் அவர்களை பாதாளத்தில் வீழ்த்தினார் . சாத்தான் தன் சக பேய்களுடன் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை செய்தான். பலரும் பலவித கருத்துக்களைக் கூறினர். மம்மோன் என்னும் பேய், ‘பாதாளத்தைப் பரலோகமாக மாற்றி மகிழ்ச்சியுடன் இங்கு இருக்கலாம்’ என்றது. உடனே பேயல்சபுல் என்னும் பேய்த்தலைவன், ‘பரலோகத்தை வெற்றி பெறுவது முடியாத ஒன்று; அதுபோல இங்கே நரகத்தில் இருப்பதும் முடியாத காரியம். ஆகவே, நாம் மண்ணுலகிற்குச் சென்று மக்களைக் கெடுத்து அவர்களை நமது பக்கத்தில் சேர்த்துக் கொண்டால், மண்ணுலகில் வாழ்வது நமக்கு எளிதாக இருக்கும்’ என்றது. மண்ணுலகிற்கு யார் செல்வது என விவாதிக்கும்போது சாத்தான், ‘நானே செல்கிறேன்’ என்று புறப்பட்டான்.

மண்ணுலகம் வந்த சாத்தான், பாம்பு உருவில் ஏதேன் தோட்டத்திற்கு வந்தான். அங்கிருந்த ஏவாளின் மனத்தைக் கலைத்துப் பாவக் கனியை உண்ணச் செய்தான். அவளுடைய தூண்டுதலால் அடுத்து ஆதாமும் அக்கனியை உண்டான். இறைவனின் கட்டளையை மீறிப் பாவக் கனிகளை உண்டதால் அவர்கள் வாழ்வில் பெருங் குழப்பம் நேர்ந்தது; சுவர்க்க இன்ப வாழ்வை அவர்கள் இழந்தனர். இறைவனின் சாபத்துக்கு உள்ளாகி, சாத்தானின் கைப்பாவையாகிப் பெருந்துன்பமுற்றனர். இதுவே பூங்காவனப் பிரளயம் நூலின் கதை.

ஏதேன் பூங்காவனத்தில் இன்பமாக வாழ்ந்த ஆதாமும் ஏவாளும், தங்கள் இன்ப வாழ்வை இழந்து பட்ட மனக்குழப்பத்தையும், அதனால் உலகிற்கு நேர்ந்த பெருந்துன்பத்தையும் விளக்குவதால் இந்த நூலுக்குப் ‘பூங்காவனப் பிரளயம்’ எனப் பெயரிட்டார் ஆசிரியர், சாமுவேல் வேதநாயகம் தாமஸ்.

நூல் அமைப்பு

பூங்காவனப் பிரளயம் பாதாள காண்டம், யாத்திரை காண்டம் என இரு காண்டங்களைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்தில் 2626 பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. எதுகை இல்லாமல் வெண் செந்துறை யாப்பில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. அம்மானை வரிகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. உவமை, உருவகம், வருணனைச் சிறப்பு, பழந்தமிழ் நூல்களின் தாக்கம் ஆகியன கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

பாதாள காண்டம்

பாதாள காண்டத்தின் முதலில் அமைந்துள்ள பாயிரத்தில் நூற்பொருள், திருவருள் வணக்கம், நூல்வழி, வேதாளக் கூட்டம் விண்ணிழந்தது என்னும் பகுதிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து ஒன்பது படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  • நரகப் படலம்
  • சாத்தான் எழுச்சிப் படலம்
  • நரக வாழ்த்துப் படலம்
  • சாத்தான் படையெழுப்பும் படலம்
  • படை எழுச்சிப் படலம்
  • நாமப் படலம்
  • அணிவகுத்த படலம்
  • அரண்மனை கட்டும் படலம்
  • பறைசாற்றுப் படலம்

- ஆகியன. இக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளின் எண்ணிக்கை 1047.

யாத்திரை காண்டம்

யாத்திரை காண்டத்தில் 'மந்திரப் படலம்' என்னும் ஒரே ஒரு படலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் 28 உட்தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளின் மொத்த எண்ணிக்கை 1579.

பாடல்கள்

கவிதை பாடக் கவிஞர், இறைவனின் அருள் வேண்டுதல்:

மனுகுலத்தோர் முன்பிழைத்த வன்பிழையைப் பொருளாயும்
நம்முலகில் சாக்காடும் நம்துயரக் கேடுயாவும்
கொண்டுவந்து சேர்த்தஅந்தக் கொடுமரணச் சுவைகனிந்த
விலக்கு வினைமரத்தின் வினைக்கனியைப் பொருளாயும்
ஆதிபரன் நரனாகி ஆனந்தநிலை அகத்தை
மீளவும்நாம் அடைய மீட்டுத் தரும் அளவும்
பறிபோன ஏதேனைப் பாட்டுப் பொருளாயும்
தெய்வக் கவித் தேவி! செப்புவாய் இக்கவியாய்!

பேய்கள், நரகத்தை ஆளுவதற்குச் சாத்தானிடம் வழி கூறுதல்

மனத்தின் நிலையேதான் மனமிருக்கும் இடமேயாம்
நரகமதில் சுவர்க்கமாம் நரகமாம் சுவர்க்கமுமே
மாறாது நானிருப்பின் மற்றெங்கே இருந்தாலென்
எங்கிருந்தால் ஆவதென்ன என்னவிதம் இருந்து ஆவதென்ன
இடியால் பெரியோனில் ஏதோசற்று சிறியோனே
இவ்விடத்திலாயினும் இஷ்டம்போல் வாழ்ந்திடலாம்
இதில் நம்மேல் பொறாமைகூர இறைவன் இதை வகுத்ததில்லை
இங்கிருந்து நம்மை விரட்டான் இடரற்று இங்கு ஆளலாம்
என் கருத்தைக் கேட்பாயோ எரிநரகக் கடல் இதிலும்
அரசாளும் மாட்சிமை ஆசிக்கத் தகுந்ததேயாம்
வானுலகில் சேவைசெய்து வாழ்வதிலும் அரசுபூண்டு
பட்டும் கெட்டும் நரகில் பட்டம்கட்டி ஆளல்நன்று.

மதிப்பீடு

பூங்காவனப் பிரளயம் இனிய, எளிய நடையில் பாடப்பட்ட கிறிஸ்தவக் காப்பிய நூல். பேச்சு வழக்குச் சொற்களும், ஆங்கிலத்திற்கு நேரான தமிழ்ச் சொற்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புதிய பல சொற்களையும் இந்நூலில் ஆசிரியர் படைத்துள்ளார். கிறிஸ்தவக் காப்பிய நூல்களில், முதலில் தோன்றிய மொழிபெயர்ப்புக் காப்பியமாக 'பூங்காவனப் பிரளயம்' அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page