under review

மீட்பரசி (காப்பியம்)

From Tamil Wiki

மீட்பரசி (2002) ஒரு காப்பிய நூல். இஸ்ரயேலர்களுக்கு அசீரிய அரசன் நேபுகத்நேசனிடமிருந்து விடுதலை வாங்கித் தந்த யூதித்து என்னும் புரட்சிப் பெண்ணின் வரலாற்றைக் கூறுவது. இதனை இயற்றியவர், கவிஞர் லோட்டஸ் எடிசன்.

பிரசுரம், வெளியீடு

விவிலியத்தில், 'இணைத்திருமுறை' என்னும் பகுதியில் இடம்பெற்ற புரட்சிப் பெண்ணான யூதித்துவின் வரலாறே மீட்பரசி என்னும் காப்பிய நூல். இதனை இயற்றியவர், கவிஞர் லோட்டஸ் எடிசன். இந்நூல், 2002-ம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு என்னும் ஊரிலுள்ள திரேசா நூல் ஆலயத்தின் மூலம் வெளிவந்தது.

நூல் அமைப்பு

மீட்பரசி காப்பியம் நான்கு காண்டங்களைக் கொண்டது. அவை,

  • போர்க் காண்டம்
  • அறத்துக் காண்டம்
  • வெற்றிக் காண்டம்
  • விடுதலைக் காண்டம்

இக்காப்பியத்தில் 625 பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் போன்ற யாப்பு வகைகளில் இயற்றப்பட்டுள்ளன. நூலின் தொடக்கத்தில், பாயிரத்திற்குப் பதிலாக ’விண்ணகத் தந்தைக்கு வணக்கம்’ என்ற தலைப்பில் துதிப் பாடல் இடம் பெற்றுள்ளது.

போர்க் காண்டம்

மீட்பரசி காப்பியத்தின் முதலாவது காண்டமான போர்க் காண்டத்தில் கீழ்காணும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • ஒருங்கிணைந்த இஸ்ரயேலர்
  • நினிவே மாநகர்
  • அசீரிய சர்வாதிகாரி
  • மேதியரின் கோட்டை
  • போர்ப் பலிகள்
  • வெற்றியின் ஆணவம்
  • தூது பெற்ற நகரங்கள்
  • தளபதியும் போர்த்திட்டமும்
  • படையெடுப்பின் பேரொலிகள்
  • மரண ஓசைகள்
  • அச்சமுறும் அபலைகள்
  • அடங்காத பசி
  • பதுங்கிய சிறுத்தை
  • பாதுகாப்பு ஆயத்தங்கள்
  • நோன்பும் மன்றாட்டும்
  • இஸ்ரயேலரை எதிர்ப்பவன்
  • உணர்த்துகின்ற அக்கியோர்
  • அரசவை முடிவு
  • மீட்கப்படும் அக்கியோர்
  • அடைக்கலமும் விருந்தும்
  • பெத்தூலியாவின் சோகம்
  • ஆலோசனை பெறும் ஒலோபெரின்
  • சோதனையில் இஸ்ரயேலர்
  • தளர்ச்சியும் தேற்றரவும்
அறத்துக் காண்டம்

இரண்டாவது காண்டமான அறத்துக் காண்டத்தில் கீழ்காணும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • இயற்கையின் எழில்நகர்
  • மங்கையருள் தங்கம்
  • ஈகையின் ஊற்று
  • மனையற மகழ்ச்சி
  • விவேக உரையாடல்
  • தொழிலாளர் சமத்துவம்
  • வயல்காடும் வாலிபப் பெண்ணும்
  • மரியாவின் அடைக்கலம்
  • மூர்ச்சையற்ற மனாசே
  • யூதித்தின் மன்றாட்டு
  • மனாசேயின் பிரிவு
  • தோழியின் தேற்றுதல்
  • உழைப்பாளர் கண்ணீர்
  • கனவில் வந்தவர்
  • துறவின் தொடக்கம்
வெற்றிக் காண்டம்

மூன்றாவது காண்டமான வெற்றிக் காண்டத்தில் கீழ்காணும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • உணர்த்தப்படும் யூதித்து
  • அரவணைக்கும் யூதித்து
  • வாழ்த்தும் கட்டளையும்
  • விண்ணகத் தந்தையும் யூதித்தும்
  • ஒப்பனையின் பேரழகு
  • மூப்பர்களின் ஆசி
  • பயணமாகும் வீராங்கனை
  • மலைப்பாதையில் இரண்டு பெண்கள்
  • பாசறையை நோக்கி
  • மயங்கும் ஓலோபெரின்
  • நியாயமான தந்திரம்
  • வைகறையில் தெய்வீகம்
  • பேராசையின் தூது
  • விருப்பமான உணவு,
  • போதையின் அலைகள்
  • இறைவனின் திட்டம்
  • விடுதலை கொணர்ந்தவள்
விடுதலைக் காண்டம்

நான்காவது காண்டமான விடுதலைக் காண்டத்தில் கீழ்காணும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  • வீராங்கனையின் போர் விளக்கம்
  • அக்கியோரின் மனமாற்றம்
  • இஸ்ரயேலரின் போர் முழக்கம்
  • ஆற்றல் இழந்த அசீரியர்
  • தோல்வி கண்ட வீரர்கள்
  • அசீரியரின் வீழ்ச்சி
  • போற்றப்படும் யூதித்து
  • தொடரும் துறவறம்
  • கனவுக் காட்சி
  • பொதுவுடைமைப் புனிதை
  • மங்களப் பாடல்

காப்பியத்தின் கதைச் சுருக்கம்

இஸ்ரயேலர்களுக்கு, அசீரிய அரசன் நேபுகத்நேசன் பல விதங்களில் தொல்லை கொடுத்துவந்தான். படைத் தளபதி ஓலோபெரின் இஸ்ரயேலர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினான். அதனால் பலர் உயிரிழந்தனர். பலர் அடிமைகளாகினர். கையறு நிலையில் பலர் இறைவனை நோக்கிக் கண்ணீர் விட்டுக் கதறினர். இறைவனும் அவர்களுக்கு அருள முன்வந்தார்.

பெத்தூலியா நகரில் யூதித்து என்ற இளம் விதவை வாழ்ந்து வந்தாள். அவள் தன் கணவன் மனாசே இறந்த பின்னர் விதவைக் கோலம் பூண்டு கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தாள். அவள் ஒருநாள் இறைவனை வழிபடும்போது, இஸ்ரயேலரை ஓலோபெரின் என்னும் படைத்தளபதியிடம் இருந்து மீட்பது குறித்தான இறை உத்தரவைப் பெற்றாள். அதனை இஸ்ரயேலர்களின் தலைவரான ஊசியாவிடம் தெரிவித்தாள். ஓலோபெரினை வெல்வதற்கான தன் திட்டத்தையும் கூறினாள். ஊசியா அதனை ஏற்றுக் கொண்டார்.

அத்திட்டத்தின் படி, தன்னை ஓர் இளம்பெண்ணாக அலங்கரித்துக் கொண்ட யூதித்து, தன் தோழியுடன் புறப்பட்டு பல்வேறு தடைகளைத் தாண்டி, ஓலோபெரினின் பாசறைக்குச் சென்றாள். தன் அழகால் அவனைப் பலவிதங்களில் மயக்கினாள். அங்கேயே சில நாட்கள் தங்கினாள். ஒரு நாள் இரவு அவன் மதுவுண்டு, காதல் பித்தேறிப் பிதற்றிக் கொண்டிருக்கையில், தன் செயலுக்காக இறைவனைப் பிரார்த்தனைச் செய்து, அவன் கழுத்தை அறுத்து அவனைக் கொன்றாள். பின் அந்த தலையை ஒரு சாக்குப் பையில் எடுத்துக் கொண்டு, தோழியின் உதவியுடன் பாசறையிலிருந்து ரகசியமாக வெளியேறினாள்.

பெத்தூலியாவை அடைந்து இஸ்ரயேல் மக்களிடமும், ஊசியாவிடமும் தகவலைத் தெரிவித்தாள். யூதித்துவின் ஆலோசனைகளைக் கேட்டு ஊக்கம் பெற்ற இஸ்ரயேலர்கள், அசீரியர்களை எதிர்த்துப் போராடி வென்றனர். யூதித்துவை, ஓலோபெரினிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்ததற்ககாக் கொண்டாடினர். மீட்பரசி என்று போற்றினர். யூதித்து தன்னுடைய செல்வங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு துறவு பூண்டாள்.

மதிப்பீடு

விவிலியத்தில் உள்ள சில நூல்களை ஆதாரமாகக் கொண்டு கிறிஸ்தவக் காப்பியங்கள் பல படைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பெண்களை மையமாகக் கொண்டவை 'எஸ்தர் காவியம்' மற்றும் 'மீட்பரசி மட்டுமே'. யூதித்து ஒரு புரட்சிப் பெண்ணாகச் செயல்பட்டு இஸ்ரவேலருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததால், மீட்பரசி காப்பியம் 'புரட்சிக் காப்பியம்' என்றும் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவக் காப்பிய நூல்களில் வீரத்தைச் சுட்டும் காப்பியமாகவும், பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கிறிஸ்தவக் காப்பிய நூல்களில் முக்கியமானதாகவும், மீட்பரசி காப்பியம் மதிப்பிடப்படுகிறது.

பாடல் நடை

இறை வணக்கம்

நிலைபெறும் உன்னருள் அன்பினில் ஊறிட
நிலைகுலை யாவரம் தாராய்
அலையுறும் மனதினை ஒருமையில் அழைத்துநல்
உணர்வினில் எழுதவா தந்தாய்

உயிர்கலந் திடுவாய் ஊன்கலந் திடுவாய்
ஒழுகுதேன் எழுதிட உதவாய்
உலுக்கிடும் குவலய நிகழ்வுகள் அழிந்திட
கவிவலி வரம்புரிந் திடுவாய்

யூதித்துவின் நற்பண்பு

அளவு மீறிப் பெற்ற செல்வம்
அமைதி குலைக்குமாம் - என்று
சமயம் கூறும் தத்துவத்தைக்
கற்ற யூதித்து
இளமை வாழ்வில் பொருள் பிறர்க்கு
பகிர்ந்து நகரின் - மக்கள்
அனைவரது அன்பு தன்னைத்
திரட்டி சிறந்தாள் !
அநியா யத்தினை
அழிப்பது தான் இறைப்
பணியென முழங்கிடும் யூதித்து
இனிதாம் ஒற்றுமை
தொழிலா ளர்மனம்
அடைதலே சமத்துவ மென்பாள்

ஓலோபெரினின் வீரம்

யாரென்னச் சொன்னாலும்
எடுத்துள்ளப் போர்ப்பணியை
பார்சூழ்ந்து எதிர்த்தாலும்
பிறவிக்குண வீரத்தால்
மார்குன்றிப் போனாலும்
மரணத்தின் விளிம்பினிலும்
நேர்நின்று வேளேந்தும்
நெஞ்சுடையான் ஒலோபெரின்

யூதித்துவின் இறை வேட்டல்

ஆயுதங்கள் சேனைகொண்டு
அத்தனையும் வெல்வோமென
கூவிதங்கள் ஆணவத்தை.
உம்மிடத்தில் வீசுகின்ற
பேய் உறையும் நெஞ்சுடையார்
தந்தைஉமை உணர்ந்துமீள
வாய்மொழிந்து கதறுகின்ற
என்குரலைக் கேட்டருள்வீர் !
எல்லாமும் இல்லாமை ஆக்குவோரே - இன்னும்
இல்லாமை உள்ளதாய் மாற்றுவோரே
ஒடுக்கப்பட் டோரைதான் மீட்பவரே - உம்
கருவியாய் என்னையே ஆள்பவரே
பொல்லாப்பு வீழ்த்தியே உரிமையுடன் - உம்
அடியாரை என்றென்றும் மீட்பவரே
கடுகடுப் புடையோரை வீழ்த்திபுது - வாழ்வு
தந்திடும் சூழ்ச்சியைச் செய்தருள்வீர்

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு, 2013.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Dec-2023, 08:37:44 IST