under review

திருத்தொண்டர் காப்பியம்

From Tamil Wiki
திருத்தொண்டர் காப்பியம்

திருத்தொண்டர் காப்பியம் (2007) கிறிஸ்தவக் காப்பிய நூல்களுள் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரத்த சாட்சியாக மரித்த தேவசகாயம் நீலகண்டப் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது. திருத்தக்கத் தேவர்,கம்பர், சேக்கிழார் மரபில் முற்றிலும் விருத்தப் பாக்களால் ஆன இந்நூலை இயற்றியவர், பேராசிரியர், முது முனைவர் சூ. இன்னாசி.


பதிப்பு, வெளியீடு

திருத்தொண்டர் காப்பியம் நூலை 2007-ல், காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. இந்நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

ஆசிரியர் குறிப்பு

திருத்தொண்டர் காப்பியம் நூலை எழுதியவர் பேராசிரியர், முது முனைவர் சூ. இன்னாசி. செப்டம்பர் 13, 1934-ல் பிறந்த இவர், இலக்கணம், மொழியியல், அகராதி, இலக்கியம், திறனாய்வு, ஒப்பாய்வு, கவிதை, நாடகம், சிறுகதை, வாழ்வியல், பதிப்பியல் எனப் பல துறைகளில் பல நூல்களை எழுதினார். இவரது ‘கிறிஸ்தவ இலக்கியக் களஞ்சியம்’ ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அக்டோபர் 6, 2010-ல், இவர் காலமானார்.

காப்பியத்தின் கதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்குளக்கரை என்னும் ஊரில் பிறந்தவர் நீலகண்டப் பிள்ளை. உதயகிரிக் கோட்டையில் தங்கியிருந்த வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் பொறுப்பிலிருந்தார். மனைவி, பார்கவி. நீலகண்டப் பிள்ளைக்கு உதயகிரிக் கோட்டையிலிருந்த டச்சு வீரர் டிலனாயின் தொடர்பு கிடைத்தது. மனத்துன்பத்திலிருந்த நீலகண்டப் பிள்ளைக்கு டிலனாய் விவிலியச் செய்திகளைக் கூறி ஆறுதல் படுத்தினார். அது நீலகண்டப் பிள்ளையின் மனதில் மாறுதலை ஏற்படுத்தியது.

வடக்கன்குளத்தில் உள்ள பரஞ்சோதியிடம் 1745-ல், நீலகண்டப் பிள்ளை ஞானஸ்நானம் பெற்றார். ‘தேவசகாயம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார். அவரது மனைவியும் ஞான ஸ்நானம் பெற்று ‘ஞானப் பூ’ என்று அழைக்கப்பட்டார். அதுமுதல் தன்னைச் சார்ந்தவர்களிடையே கிறிஸ்துவின் பெருமைகளைப் பரப்பினார் தேவசகாயம். மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல் வடக்கன்குளத்தில் ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதனால் தேவசகாயம் பிள்ளை கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, தேவசகாயம் பிள்ளையை விசாரணை செய்து மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்ப வலியுறுத்தினார். தேவசகாயம் பிள்ளை அதனை ஏற்க மறுத்தார். அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. தினந்தோறும் அவருக்கு 30 கசையடி தண்டனையாக அளிக்கப்பட்டது.

தேவசகாயம் பிள்ளை, விசாரணைக் கைதியாகப் பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார் . இறுதியில் ஆரல்வாய்மொழிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 14 1952-ல், தேவசாகயம் பிள்ளை, ஆரல்வாய்மொழியிலுள்ள காற்றாடி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் கோட்டாறு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்கள் அவரைப் புனிதராகக் கருதி வழிபடத் தொடங்கினர். இதுவே திருத்தொண்டர் காப்பியத்தின் கதை.

கத்தோலிக்க திருச்சபை, டிசம்பர் 2, 2012-ல், தேவசகாயம் பிள்ளையை ’மறைசாட்சி’ என்றும், ‘முக்திப்பேறு பெற்ற அருளாளர்’ என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. திருத்தந்தை பிரான்சிஸ், அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தில் பிப்ரவரி 21, 2020 -ல் கையெழுத்திட்டார். அருளாளர் தேவசகாயம் பிள்ளை, புனிதர் தேவசகாயம் பிள்ளை ஆனார்.

நூல் அமைப்பு

திருத்தொண்டர் காப்பியம், தமிழ்க் காப்பியத்திற்குரிய இலக்கணங்களைக் கொண்டுள்ளது. எளிமையான மொழிநடையில் அமைந்துள்ள இக்காப்பியத்தில் அகத்துறைச் செய்திகள், போர், கற்பு, வீரம், ஈகை, உவமை, உருவகம், அணி போன்ற இலக்கிய நயங்கள், விவிலியக் கருத்துக்கள் எனப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் இளமைக் காண்டம், தலைமைக் காண்டம், பொறுமைக் காண்டம், இறைமைக் காண்டம் என நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு காண்டத்திலும் பத்து படலங்கள் அமைந்துள்ளன. முகப்பில், பாயிரம், கடவுள் வாழ்த்து, வருபொருள் உரைத்தல், அவையடக்கம், மூவொரு இறைவன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் நாற்பது படலங்களில் 4135 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. முற்றிலும் விருத்தப் பாக்களால் இக்காப்பியநூல் அமைந்துள்ளது.

இளமைக் காண்டம்

இக்காண்டத்தில் 1017 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

  • நாட்டுப் படலம்
  • நகரப் படலம்
  • குலமுறைப் படலம்
  • அகநெறிப் படலம்
  • பொழிலுறு படலம்
  • திருமணப் படலம்
  • ஊடலுவகைப் படலம்
  • ஆட்சிப் படலம்
  • பணிசேர் படலம்
  • அறவுரைப் படலம்

- எனப் பத்துப் படலங்கள் கொண்டது இளமைக் காண்டம்

தலைமைக் காண்டம்

இக்காண்டம்,

  • ஆள்வினைப் படலம்
  • மனையமை படலம்
  • மனமாறு படலம்
  • கனவு காண் படலம்
  • போர்க்களப் படலம்
  • மதிலெழு படலம்
  • பாராட்டுப் படலம்
  • ஆற்றாமைப் படலம்
  • திருக்குறுக்கைப் படலம்
  • அருள்நீராட்டுப் படலம்

-என பத்துப் படலங்களைக் கொண்டுள்ளது. இக்காண்டத்தில் 1095 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பொறுமைக் காண்டம்

இக்காண்டம்,

  • ஊர்சூழ் படலம்
  • பழிதீர் படலம்
  • முறையீடு படலம்
  • குறையறி படலம்
  • வழக்குரை படலம்
  • எருமையூர் படலம்
  • மறையுணர் படலம்
  • ஞானப்பூ படலம்
  • நீரூற்றுப் படலம்
  • சிறைப்படு படலம்

- ஆகிய பத்துப் படலங்களைக் கொண்டுள்ளது. இக்காண்டத்தில் 1018 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இறைமைக் காண்டம்
  • பொறைகொள் படலம்
  • இறைமொழிப் படலம்
  • பரிசேயர் படலம்
  • கதைபொதி படலம்
  • சூழ்ச்சிப் படலம்
  • கொலைக்களப் படலம்
  • இறையடிப் படலம்
  • புகழுடற் படலம்
  • நினைவிடப் படலம்
  • முடிபுனைப் படலம்

- என்னும் பத்துப் படலங்களைக் கொண்டுள்ளது இறைமைக் காண்டம். இக்காண்டத்தில் 1005 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பாடல் நடை

நாஞ்சில் நாட்டின் சிறப்பு

சங்கமத்தின் மறுபெயர்தான் நாஞ்சில் நாடு
சாரல்வந்து தாலாட்டும் ஒருபு றத்தில்
சங்கமிக்கும் முக்கடலும் மறுபு றத்தில்
சங்கிலிபோல் ஏரிகளாம் வயற்பு றத்தில்
தங்கநிகர் மணற்பரப்பு கடற்பு றத்தில்
தாராள மலைவளங்கள் உட்பு றத்தில்
திங்களெதிர் கதிரவனை ஒன்றாய்க் காணத்
திசைமுகங்கள் இங்கன்றி வேறெங் குண்டு?

மார்த்தாண்ட வர்ம மன்னரின் போர் வெற்றி

வேதகால முறையுடனே வெடிமருந்து கோட்டைகட்டி
வெண்குளச்சல் துறைமுகத்தில் முடியாட்சி தனைக்காக்க
முழுதுரையோர் முன்வரவே தன் படையை வலிமையாக்க
தனிமருந்தின் பீரங்கி வன் துணையாய் கண்டாரே
வலிமையான மார்த்தாண்டர் உமையமை ஆட்சியிலே

நீலகண்டப் பிள்ளை, தேவசகாயம் பிள்ளையாக ஞான ஸ்நானம் பெறுதல்

உருமறு வுருவாய் மாறுதல் போல
உள்ளம் தூய்மையில் புதுமன மாகும்
தருவழிந் ததன்விதை மறுதரு ஆம்போல்
தாய்வழிப் பாவம் அழியும் புத்துயிர்
வரும்வழி அமைப்பது திருநீராட்டே
வகைபெற அதனைப் பெறுவாய் என்றார்

தேவசகாயம் பிள்ளை பட்ட கஷ்டங்கள்

தலைநகரில் நடத்தி சென்றார் தம்பட்டம் அடித்து வந்தார்
நிலைகுலைய எருக்கலையால் நெடியமாலை சூடினார்கள்
சந்தை கடையெல்லாம் சான்றோர்கள் பரிதவித்தார்
நிந்தை பல செய்தார் நிலம் நடுங்க கூவி நின்றார்
பழிசுமத்தி நகைத்தார்கள் பரிதவிக்க நடத்தினார்கள்
தொழுகையால் துதிபாடி தூயவனை தவம் கொண்டார்
வேள்விமலை வீதியிலே வேதமகன் நடந்து வந்தார்
நாள் இரண்டு எட்டாக நல்ல மகன் நடந்து வந்தார்

தேவசகாயம் பிள்ளை உடல் நல்லடக்கம்

அறிந்தார் கிறிஸ்தவர்கள் அதிகார திருமுறை முன்
பறந்தார் ஏடெழுதி பக்குவமாய் அடக்கிடவே
உள்நாட்டு குருகுலமும் உயர்வான டிலனாயும்
உள்நாட்டு திருமறையோர் ஒன்று கூட திட்டமிட்டு
கோட்டாறு பீடத்திலே குழிதோண்டி கல்கெட்டி
நாட்டாறு போல் கூடி நல்லோனை அடக்கினாரே!

மதிப்பீடு

திருத்தொண்டர் காப்பியம் இயற்கை வர்ணனைகள், கிளைக் கதைகள், அணிநலன்கள், உவமைகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், திருக்குறள், விவிலியக் கருத்துகள் போன்றவை இடம் பெற்ற ஒரு முழுமையான காப்பிய நூல். இறை அடியார்களைத் தலைமை மாந்தர்களாகக் கொண்ட கிறிஸ்தவக் காப்பியங்களுள் முதன்மையானது. இந்நூலை, சூ. இன்னாசி இயற்றும் போது காப்பியத் தலைவரான தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பெறவில்லை. ஆனால் பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முடிபுனை படலத்தோடு காப்பியத்தை முடித்திருந்தார். சூ. இன்னாசி மறைந்து (2010) இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 2012-ல், தேவசகாயம் பிள்ளை, கத்தோலிக்கத் திருச்சபையால் அருளாளராக அறிவிக்கப்பட்டார். 2020-ல், புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

திருத்தொண்டர் காப்பியம், கிறிஸ்தவக் காப்பியங்களுள், தமிழ்க் காப்பிய இலக்கணக் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றிய முழுமையானதொரு காப்பிய நூலாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page