under review

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: Henry Alfred Krishna Pillai. ‎

எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை வாழ்க்கை வரலாறு
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை கையெழுத்து

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை (ஹென்றி ஆல்ஃபிரெட் கிருஷ்ண பிள்ளை, ஏப்ரல் 23, 1827 – பிப்ரவரி 3, 1900) ஒரு தமிழறிஞர். இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பிய வடிவிலான கிறிஸ்தவ நூலை எழுதியவர். தமிழில் கிறிஸ்தவ இறை நெறிப் பாடல்களை எழுதியவர்களில் முன்னோடி.

பிறப்பு, இளமை

கிருஷ்ண பிள்ளை தென்தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே கரையிருப்பு என்னும் சிற்றூரில் ஏப்ரல் 23, 1827-ல் வேளாளர் குலத்தில் வைணவ குடும்பத்தில் பிறந்தார். தந்தை சங்கர நாராயண பிள்ளை, தாய் தெய்வநாயகியம்மை. கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக ஆற்றும் திறன் பெற்றவர். கிருஷ்ணப் பிள்ளை குலமுறைப்படி இளமையிலேயே தன் தந்தையிடம் ராமாயணம், மகாபாரதம், நாலாயிர திவ்யபிரபந்தம், அஷ்டப் பிரபந்தம், திருவாய்மொழி, சடகோபர் அந்தாதி ஆகியவற்றைக் கற்றிருந்தார். சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல்நாதன் கவிராயரிடம் நன்னூலை கற்றிருந்தார்.

கிருஷ்ண பிள்ளையின் பதினாறாவது வயதில் தந்தை மறைந்தார். அதன் பின் பாளையங்கோட்டை வந்து வள்ளல் வெங்கு முதலியார் என்பவரது வீட்டிலிருந்த தமிழ்ச்சுவடிகளைப் பயின்றார்.

தனிவாழ்க்கை

திருநெல்வேலி பகுதியில் கிறிஸ்தவ மதப்பணி தீவிரமாக நடந்த காலகட்டத்தில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை வாழ்ந்தார். இடையான்குடி என்னும் ஊரில் வேதவிளக்கச் சங்கத்தின் சார்பாக கால்டுவெல் மதப்பணி செய்து வந்தார். சாயர்புரத்தில் ஜி.யு. போப் ஒரு கல்லூரி தொடங்கி நடத்தி வந்தார். போப் ஓய்வுக்கு சில காலம் இங்கிலாந்து சென்றபோது அக்கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை கால்டுவெல் தேடிக் கொண்டிருந்தார். அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவரான இருபத்தைந்து வயது கிருஷ்ண பிள்ளை தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் திறமை கொண்டிருந்ததால் கால்டுவெல் அவரையே 1853ல் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.

திருமணம்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை தன் 14 ஆவது வயதில் 9 வயதான முத்தம்மாளை மணம்புரிந்துகொண்டார்.

மதமாற்றம்

ஆசிரியர் பணி செய்து வரும்பொழுது கிருஷ்ண பிள்ளைக்கு கிறிஸ்துவத்தில் ஈடுபாடு உண்டானது. ஏற்கனவே கிருஷ்ண பிள்ளையின் உறவினர் சிலர், கிறிஸ்தவ சமயத்தை தழுவி இருந்தனர். கிருஷ்ணபிள்ளையின் தம்பி முத்தையா பிள்ளை முன்னரே கிறிஸ்தவராக மாறியிருந்தார். 1857ல் சென்னைக்கு சென்றார். தன் முப்பதாம் வயதில் , 18 ஏப்ரல் 1858 ல்சென்னையிலுள்ள மயிலை தூய தாமஸ் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்று ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளை எனப் பெயர் ஏற்று கிறிஸ்தவரானார். சில ஆண்டுகளுக்கு பின் அவருடைய மனைவியும், மூன்று குழந்தைகளும், தாயாரும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தார்கள்.

தொழில்கள்

பெரும்பாலும் ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணபிள்ளை குற்றாலம் அருகே ஒரு காப்பித்தோட்டத்தை உருவாக்கி நடத்தினார். 1890ல் திருவனந்தபுரம் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு குலசேகரன் பட்டினம் வந்து உப்பளத்தொழிலில் ஈடுபட்டார். ஓராண்டு நடத்தியும் அது லாபகரமாக இல்லாமையால் கைவிட்டார்.

இதழியல்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராக பணியாற்றினார்

ஆசிரியப்பணி

1853ல் சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியர். 1876ல் பாளையங்கோட்டை சபை திருத்தொண்டர் கழகக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.[1]. 1886ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.1890 வரை அங்கே பணியாற்றினார்.

அமைப்புப்பணி

எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை 1892 முதல் 1900 வரை கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியப் பங்களிப்பு

இரட்சணிய யாத்திரீகம்
இரட்சணிய யாத்ரீகம்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் இலக்கியப் பங்களிப்பு முழுமையாகவே கிறிஸ்தவ மதம் சார்ந்தது. 1860ல் இரட்சணிய சரிதம் என்னும் காவியத்தை பாடத் தொடங்கினார். அது முற்றுப்பெறவில்லை. 1865ல் வேதமாணிக்க நாடார் எழுதிய வேதப்பொருள் அம்மானை என்னும் நூலை பதிப்பித்தார். 1878ல் இரட்சணிய யாத்ரிகம் பாடத்தொடங்கினார். 1892 ல் இரட்சணிய யாத்ரிகம் முடிவுற்றது.

இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. தன் வரலாற்றை சிறிய நூலாக எழுதியிருக்கிறார். (பார்க்க இரட்சணிய யாத்திரிகம்)

இலக்கிய இடம்

தமிழகக் கிறிஸ்தவ இலக்கியத்தில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிக்கு அடுத்தபடியாக முக்கியமான நூலாக கருதப்படுகிறது.

கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:

"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."

மறைவு

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை தனது 73-ஆவது வயதில் பிப்ரவரி 3, 1900 அன்று மறைந்தார்.

வாழ்க்கை வரலாறுகள்

  • The Tamil Christian Poet -A.J.Appasami
  • The lif and Times of H.A.Krishna Pillai -(1827-1900) Dennis Hutson
  • எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை வரலாறு -பால் கடம்பவனம் 1924
  • மகாவித்வான் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் வரலாற்றுச் சுருக்கம்- ஜே.எஸ்.மாசிலாமணி ஐயர்1927
  • கிறிஸ்துவக் கம்பன் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை - டி.ஜி.தங்கராசனார் 1958
  • மீட்புக் கவிஞர் கிருஷ்ணபிள்ளையின் தன்வரலாறு - வி.ஞானசிகாமணி

படைப்புகள்

இரட்சணிய யாத்திரீகம்
இரட்சணிய யாத்ரீகம்

கிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள்:[2]

செய்யுள் நூல்கள்
  • போற்றித் திருஅகவல் 1884
  • இரட்சணிய யாத்திரீகம் 1894
  • இரட்சணிய மனோகரம் 1899
உரைநடை நூல்கள்
  • இலக்கண சூடாமணி 1883
  • நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு 1893
  • இரட்சணிய சமய நிர்ணயம் 1898
தொகுப்பு நூல்கள்
  • காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
  • இரட்சணிய குறள்
  • இரட்சணிய பாலபோதனை
பதிப்பித்தவை
  • வேதப்பொருள் அம்மானை. வேதமாணிக்கம் நாடார் 1860
  • பரதகண்ட புராதனம் - கால்டுவெல் 1865

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page