விஷ்ணுபுரம் இலக்கிய விருது
விஷ்ணுபுரம் இலக்கிய விருது, விஷ்ணுபுரம் வட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமையை மரியாதை செய்யும் வகையில் வழங்கும் எழுத்தாளுமைக்கான விருது.
நோக்கம்
அரசு சார்ந்த அமைப்புகளாலும், கல்வி நிறுவனங்களாலும் கௌரவிக்கப்படாத மூத்த தமிழ் படைப்பாளிகளை கவுரவிப்பதே இவ்விருதின் நோக்கம்.
விருது
2010 இல் ஐம்பதாயிரம் ரொக்கப் பணமும், கேடயமும் ஆக இருந்த விருது 2013 இல் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. 2021 இல் விருது தொகை இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டு, தற்போது இரண்டு லட்ச ரூபாய் நினைவுத் தொகையும், கேடயமும் வழங்கப்படுகிறது.
எழுத்தாளரின் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு விருது விழாவிற்கு முன் வெளியிடப்படும். விருது பெறும் எழுத்தாளரைப் பற்றிய நூல் ஒன்றும் விழாவில் வெளியிடப்படும். பரிசு பெறும் படைப்பாளியை முன்வைத்து இரண்டு நாள் இலக்கிய விழா நிகழும் (பார்க்க: விஷ்ணுபுரம் இலக்கிய விழா). தமிழ் இலக்கியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலருடன் கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு நாள் விழாவாக நடத்தப்படுகிறது.
இதன் அமைப்பாளராக கே.வி. அரங்கசாமி உள்ளார். விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2016 முதல் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருது பெற்றோர்
- ஆ. மாதவன் (2010)
- பூமணி (2011)
- கவிஞர் தேவதேவன் (2012)
- தெளிவத்தை ஜோசப் (2013)
- கவிஞர் ஞானக்கூத்தன் (2014)
- கவிஞர் தேவதச்சன் (2015)
- வண்ணதாசன் (2016)
- சீ. முத்துசாமி (2017)
- பேராசிரியர் ராஜ் கௌதமன் (2018)
- கவிஞர் அபி (2019)
- சுரேஷ்குமார இந்திரஜித் (2020)
- கவிஞர் விக்ரமாதித்யன் (2021)
நூல்கள்
ஒவ்வொரு விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டியும் விருது பெறுபவரைப் பற்றிய விமர்சன நூல் ஒன்று வெளியிடப்படும். முதல் சில விழாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும் எழுதிய வெளிவந்த விமர்சன நூல், பின்னால் வாசகர்கள் பலர் சேர்ந்து எழுதும் விமர்சன நூலானது.
- கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு (ஜெயமோகன்)
- பூக்கும் கருவேலம் - பூமணியின் புனைவுலகு (ஜெயமோகன்)
- ஒளியாலானது - தேவதேவன் படைப்புலகம் (ஜெயமோகன்)
- அத்துவானவெளியின் கவிதை - தேவதச்சன் கவிதைகளைப்பற்றி (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
- தாமிராபரணம் - வண்ணதாசனின் புனைவுலகு (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
- பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல் - ராஜ்கௌதமன் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
- இரவிலிநெடுயுகம் - கவிஞர் அபி படைப்புலகம் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
- வளரும் வாசிப்பு - சுரேஷ்குமார இந்திரஜித் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் விமர்சனநூல் வெளியிடப்படவில்லை. பின்னர் விமர்சனநூலும் ஆவணப்படமும் இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி ஆகியோர் அயல்நிலத்துப் படைப்பாளிகள் என்பதனால் அவர்களின் புனைவுநூல் ஒன்று இங்கே விமர்சனநூலுக்கு பதிலாக வெளியிடப்பட்டது.
ஆவணப்படங்கள்
- இலைமேல் எழுத்து - ஞானக்கூத்தன் ஆவணப்படம்
- நிசப்தத்தின் சப்தம் - தேவதச்சன் ஆவணப்படம்
- நதியின்பாடல் - வண்ணதாசன் ஆவணப்படம்
- ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன் - சீ முத்துசாமி ஆவணப்படம்
- பாட்டும் தொகையும் - ராஜ் கௌதமன் ஆவணப்படம்
- அந்தரநடை - அபி ஆவணப்படம்
- தற்செயல்களின் வரைபடம் - சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்
- வீடும் வீதிகளும் - விக்ரமாதித்யன் ஆவணப்படம்
சிறப்பு விருந்தினர்கள்
- 2010 சிறப்பு விருந்தினர்கள்- இயக்குநர் மணிரத்னம், மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, தலைமை கோவை ஞானி; சிறப்புரை நாஞ்சில் நாடன்,வேதசகாயகுமார் [26-12-2010]
- 2011 சிறப்புவிருந்தினர்கள் - இயக்குநர் பாரதிராஜா,கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் , தலைமை கோவை ஞானி; சிறப்புரை எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் [18-12-2011]
- 2012 சிறப்பு விருந்தினர்கள் - இசையமைப்பாளர் இளையராஜா, மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன், சுகா, ராஜகோபாலன்,க. மோகனரங்கன் [22-12-2012]
- 2013 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, இயக்குநர் பாலா, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் ரவிசுப்ரமணியன், சுரேஷ் [22-12-2013]
- 2014 சிறப்பு விருந்தினர்கள் - இயக்குநர் வசந்தபாலன், மலையாள எழுத்தாளர் டி.பி.ராஜீவன், கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை [28-12-2014]
- 2015 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், இயக்குநர் வெற்றிமாறன், லட்சுமி மணிவண்ணன், ஜோ.டி.குரூஸ்
- 2016 சிறப்பு விருந்தினர்கள் - கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாசர், மருத்துவர் கு.சிவராமன், இரா.முருகன், பவா செல்லத்துரை
- 2017 சிறப்பு விருந்தினர்கள் - எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், மேகாலய எழுத்தாளர் ஜேனிஸ் பரியத், மலேசிய எழுத்தாளர் ம.நவீன்
- 2018 சிறப்பு விருந்தினர்கள் - வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையாள எழுத்தாளர் மதுபால், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி
- 2019 சிறப்பு விருந்தினர்கள் - மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா, பெருந்தேவி, ரவி சுப்ரமணியம்
- 2021 சிறப்பு விருந்தினர்கள் - ஜெய்ராம் ரமேஷ், சின்ன வீரபத்ருடு, வசந்த் சாய், சோ. தர்மன்