under review

அபி

From Tamil Wiki

To read the article in English: Abi. ‎

கவிஞர் அபி.jpg

அபி (ஹபிபுல்லா) (ஜனவரி 22, 1942) தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். தமிழில் அரூப கவிதையை படைத்த முன்னோடிக் கவிஞர். வழக்கமான பருண்மை படிமங்களை விட, நுட்பமான அரூப படிமங்கள் வழியாக காலம், வெளி, மனித இருப்பு ஆகியவற்றைப்பற்றிய அடிப்படையான தத்துவக் கேள்விகளை கவிதையில் எழுப்பிக்கொண்டவர்.

பிறப்பு, கல்வி

அபி முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த போடிநாயக்கனூரில் (தற்போது தேனி மாவட்டம்) ஜனவரி 22, 1942 அன்று பிறந்தார். இவரது தந்தை அ.கா. பீர்முகம்மது போடிநாயக்கனூரில் பலசரக்கு வியாபாரம் செய்தார். தாயார் பாத்திமா பீபி. அபியுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அபியின் சித்தப்பா தோப்புகளை குத்தகை எடுத்து விவசாயம் நடத்தினார். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த அபி மிக இளமைக் காலத்திலேயே தன் சித்தப்பாவுடன் மலைப் பகுதி, தோப்புகளில் பச்சை அடர்த்திக்குள் செல்வதில் ஆர்வம் காட்டினார். அந்த அடர்த்தியில் சிறுவனான அவருக்குக் கிடைத்த தனிமையும், உணர முடியாதவற்றின் திகைப்பும் பின்னாளில் எழுதிய அரூப கவிதைக்கு தூண்டுகோலாக அமைந்தது என்கிறார் அபி.

விக்டோரியா நினைவு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பள்ளி நாட்களிலேயே வெண்பா எழுதுவதிலும், சங்க இலக்கியம், இலக்கணம் பயில்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (1963). இங்கே அபி பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை பயின்றார் (1966). பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் லா.ச. ராவின் நாவல் உத்திகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் (1981).

தனி வாழ்க்கை

அபி மே 23, 1971 அன்று பாரிசாவை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பர்வின் பாத்திமா (மகள்), அஷ்ரப் அலி, ரியாஸ் அஹமது (மகன்கள்). அபி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நாற்பது ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கர்நாடக சங்கீதத்திலும், ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் நாட்டம் கொண்டவர்.

அரசியல் செயல்பாடுகள்

  • 1965-ல் கல்லூரி மாணவனாக இருந்தபோது மதுரையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியபோது ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

ஆன்மீகம்

அபி 2022ல் குர்ஆனின் செம்மைசெய்யப்பட்ட மொழியாக்கத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

அபியின் முதல் கவிதையான "இன்னொரு நான்" 1967-ல் எழுதப்பட்டது. அவரின் முதல் கவிதைத் தொகுப்பான "மௌனத்தின் நாவுகள்" தொகுதியை கொண்டு வரும் முயற்சியில் கவிஞர் மீராவும், கவிஞர் அப்துல் ரகுமானும் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் அனைத்தும் புதுக் கவிஞர் என்ற காரணத்தினால் அந்தத் தொகுப்பை வெளியிட மறுத்தன.

அதுவரை எந்த இதழிலும் வெளி வராத அபியின் கவிதைகள் அப்போது மீராவின் முயற்சியால் வெளிவந்தன. அபியைப் பற்றிய அறிமுகம் ஒன்று தேவை என்று அபியின் நீலாம்பரி என்னும் கவிதையை மீரா கண்ணதாசன் இதழில் வெளிவரச் செய்தார். அதன்பின்னும் பதிப்பகம் எதுவும் சரிவர பதிலளிக்காத காரணத்தினால் மீரா தானே ஒரு பதிப்பகம் தொடங்க முடிவு செய்தார். அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் மற்றும் பிற நண்பர்களின் உதவியால் தொடங்கப்பட்டது. அதன் முதல் புத்தகமாக அபியின் ’மௌனத்தின் நாவுகள்’ 1974-ம் ஆண்டு வெளிவந்தது.

லா.ச.ராவுடன் அபி

அபியின் பிற தொகுதிகளான அந்தர நடை 1979-ம் ஆண்டு அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. மூன்றாம் தொகுதி 'என்ற ஒன்று’ 1988-ல் அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. இது அன்னம் பதிப்பகத்தின் நூறாவது புத்தகமாகும். வெளிவராதிருந்த ’மாலை மற்றும் சில கவிதைகள்’ என்னும் தொகுப்பை உள்ளிட்ட ’அபி கவிதைகள்’ என்னும் மொத்தத் தொகுப்பு முதலில் கலைஞன் பதிப்பகத்தாலும் (2003), பின்னர் அடையாளம் பதிப்பகத்தாலும் (2009, 2019) வெளியிடப்பட்டது.

அபியின் ஆரம்பகாலக் கவிதைகளில் கலீல் ஜிப்ரான், தாகூர் பாதிப்பு இருந்தது. இந்த பாதிப்புகள் மிக விரைவில் விலகின. அபி தன் சுய அனுபவப் பெருவெளியின் இருளும் ஒளியுமே தன் படைப்பை வழிநடத்த போதுமானவை என்று உணர்ந்ததாக தன் பரிணாமத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் அவர் ஓரளவு உறுதியாக தமக்கான பாதிப்பு என சங்க இலக்கியத்தை குறிப்பிடவும் விரும்புகிறார்.

ஐரோப்பியக் கவிஞர்களில் வாஸ்கோ போபா, பால் செலான் போன்றோரை விரும்பி படித்தார். தமிழில் தன் இயல்பிற்குப் பொருந்திய அக நோக்கிற்கு முன்னோடியாக இருந்தவர்கள் லா.ச.ரா மற்றும் மௌனி என்கிறார்.

இலக்கிய இடம்

Andhara-kavi-web-cover.png

தமிழில் அரூபக் கவிதைகளை தனி அழகியலாக முன்னெடுத்து புதிய வழிகளை தமிழ்க் கவிதைச் சூழலில் உருவாக்கிய முன்னோடி அபி. எழுத்தாளர் ஜெயமோகன் தன் 'உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் விமர்சனக் கட்டுரை நூலில் அபியை பற்றி, ’தன் அதிகபட்சத்தை படைப்பியக்கத்தில் திரட்டி முன்வைத்த தமிழ் ஆளுமைகள் மிகவும் குறைவு. நிகழ்ந்த குறுகிய காலத்தில் பாரதி அதை சாதித்தார். புதுமைப்பித்தனும் சரி பிரமிளும் சரி, அவர்கள் செல்லச் சாத்தியமான தொலைவுக்கு மிகக் குறைவாகவே சென்றவர்கள் என்றே அவர்களுடைய படைப்புக்கள் காட்டுகின்றன. புதுமைப்பித்தனுக்கு நோயும் பிரமிளுக்கு மிதமிஞ்சிய தன்முனைப்பும் தடைகளாயின. தமிழில் அதிகமாக கவனிக்கப்படாவிடினும் அபி தன் மெளனம் மிக்க சிறு உலகினுள், தன் ஆளுமையின் பெரும்பாலானவற்றை கவிதைகளில் நிகழ்த்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே படுகிறது. குறுகிய, சிறிய கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்த பல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி ஒரு தமிழ்ச் சாதனையே’ என்கிறார். 'அபியின் கவிதைச் சாதனைகளில் முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியை கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான். அகச் சலனங்களை நோக்கியே இயங்கும் இவரது கவிதைகள், அரூப நிலைகளிலேயே மையங்கொண்டு திளைக்கின்றன’ என்று எழுத்தாளர் ரவிசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். [நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன் | எழுத்தாளர் ஜெயமோகன்].

அபி பி.ஏ. பட்டமளிப்பு விழா - 1963

விருதுகள்

  • கவிக்கோ விருது (2004)
  • கவிக்கணம் விருது (2004)
  • கவிஞர் தேவமகன் அறக்கட்டளை விருது (2008)
  • சிற்பி அறக்கட்டளை விருது (2011)
  • விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2019)
  • கலைஞர் பொற்கிழி விருது (2021)

விமர்சன நூல்கள்,மலர்கள்

  • இரவிலி நெடுயுகம் - 2019 விஷ்ணுபுரம் விருது அபிக்கு வழங்கப்பட்டதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனும் அபியின் வாசகர்களும் அபியைப் பற்றி எழுதிய விமர்சன நூல்.
  • 2022 கவிதைகள் இணைய இதழ் அபி சிறப்பிதழ் ஒன்றை கொண்டுவந்தது [கவிதைகள்]
  • அந்தர கவி - 2022 ல் கவிஞர் அபிக்கு 80 அகவை நிறைவை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அபி எண்பது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் 31 ஜூலை 2022ல் மதுரையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இரவிலி நெடுயுகம், அபி விமர்சன நூல், விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஆவணப்படம்

  • அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி 2019-ல் எடுக்கப்பட்ட ஆவணப்படம் அந்தரநடை. கெ.பி. வினோத் இயக்கியிருந்தார்.

நூல்கள்

கவிதைகள்
  • மௌனத்தின் நாவுகள் (1974 - அன்னம் பதிப்பகம்)
  • அந்தர நடை (1979 - அன்னம் பதிப்பகம்)
  • என்ற ஒன்று (1988 - அன்னம் பதிப்பகம்)
  • மாலை மற்றும் சில கவிதைகள் என்னும் தொகுப்பை உள்ளடக்கிய 'அபி கவிதைகள்’ (2003 - கலைஞன் பதிப்பகம், 2009, 2019, அடையாளம் பதிப்பகம்)
பிற நூல்கள்
  • லா.ச.ரா. படைப்புலகம் - பதிப்பாசிரியர் (கலைஞன் பதிப்பகம்)

உசாத்துணை


✅Finalised Page