second review completed

பெருந்திணை(புறப்பொருள்)

From Tamil Wiki
Revision as of 08:57, 7 September 2025 by Jayashree (talk | contribs)

தொல்காப்பியத்தில் அகத்திணையாகக் கொள்ளப்பட்ட பெருந்திணை, புறப்பொருள் வெண்பா மாலையில் புறத்திணையாக ஆக்கப்பட்டது. பொருந்தாக் காமம், மடல் ஏறுதல், மூத்த பெண்ணுடன் கூடுதல், மூத்த ஆடவனுடன் கூடுதல், முதிர்ந்த வயதில் காமம் துய்த்தல், கழிகாமம் கொள்ளுதல், விரும்பாதாரை வலிதில் புணர்தல் ஆகியவை பெருந்திணையின் பாற்படும்.

பெயர்க்காரணம்

ஏற்றத்தாழ்வான இருபக்க உறவால் உண்டாகும் தாழ்ந்த இன்ப ஒழுக்கம்’ என்றும் விளக்குகின்றனர். பெருவழக்காக இருந்ததால் பெருந்திணை என்று பெயர் பெற்றதாக இளம்பூரணர் கூறுவார்

இலக்கணம்

தொல்காப்பியம்

தொல்காப்பியம் பெருந்திணையை அகத்திணையாகக் கொள்கிறது. தொல்காப்பியர் கருத்துப்படி பெருந்திணை என்பது காதல் மிகையே ஆகும். பெரும் என்ற அடை மிகுதியையே குறிக்கிறது. மடலேறுதலும், இளமைக்காலம் சென்ற பின்பும் காதல் நுகர்வில் ஈடுபாடு காட்டலும், பிரிவின்போது ஆற்றாது மிக்க காமத்தை வெளிப்படுத்துவதும், பிரிவில் ஆற்றாது மிகுந்த துன்பம் கொள்ளலும் பெருந்திணையாகும். இவற்றைத் தொல்காப்பியர் ஏறிய மடல்திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் எனக் குறிப்பிடுவார்.

நம்பியகப்பொருள்

நம்பியகப்பொருள் பெருந்திணையை பொருந்தாக் காமம் எனக் குறிப்பிடுகிறது. அகப்பொருள் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை என இரண்டாகப் பிரிக்கிறது,

மடலேறி வந்து மனைவியாக்கிக் கொள்ளுதல், காளையை அடக்கி மனைவியாக்கிக் கொள்ளுதல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபத நிலை, தபுதார நிலை, முதலான நிகழ்வுகள் அகப்புறப் பெருந்திணை எனப்படும்.

மடலேறுதலொடு , விடைதழால் என்றா ,
குற்றிசை தன்னொடு , குறுங்கலி என்றா ,
சுரநடை தன்னொடு , முதுபாலை என்றா,
தாபத நிலையொடு , தபுதார நிலை, எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின்
அகன்ற அகப்புறப் பெருந்திணைக்கு ஆகும்.

புறப்பொருள் வெண்பாமாலை

பெரும்பாலும் போர்த்திணைகள் பற்றிப் பேசும் புறப்பொருள் வெண்பா மாலையில் ஐயாரிதனார் பெருந்திணையைச் சேர்த்துள்ளார். புறப்பொருள் வெண்பா மாலை பெருந்திணையில் பெண்ணின் உணர்வையே மிகுதியாகக் காட்டுகிறது. பெண்பாற் கிளவி, இருபால் கிளவி என்ற பகுதிகளில் இது விளக்கப்படுகிறது. இது தவிரப் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது

பெண்பால் கூற்று

பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது. பெண்கள் தங்கள் வேட்கையை வெளிப்படுத்துதல், தலைவனிடம் அவன் அன்பை இரந்து நிற்றல், வேட்கையுடன் காத்திருத்தல், வருகையை எதிர்பார்த்திருத்தல், தலைவனைக் காணுதற்கு இரவென்றும் பாராமல் புறப்படுதல், தலைவன் செய்யாதனவற்றையும் செய்ததாகச் சொல்லி மகிழ்தல், ஊடல் மிகுதியால் வருந்துதல், மாலைப்பொழுதில் பிரிவால் வாடுதல் முதலானவை பெருந்திணைக் காதல் கொண்ட பெண் கொள்ளும் உணர்வுகள்

தலைவன் மீது கொண்ட மிகுந்த காதல் காரணமாக, அவன் மீது உரிமை கொண்டாடும் பரத்தையரை ஏசுதல், பிற பெண்களுடன் தலைவன் கொண்ட தொடர்பை அறிந்து சினத்தல், தலைவனைத் தழுவி மகிழ்தல், அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுதல், அவனொடு கொள்ளும் புணர்ச்சியில் நெகிழ்தல், ஆசையின் காரணமாக ஊடலில் தளர்தல், தலைவனின் குரலைக் கேட்டே மகிழ்தல், அவன் தன் கால்களில் விழுந்து வணங்கிய பின்பே அவனை ஏற்றல், தலைவனைப் படுக்கையில் கட்டிவைத்தல், பரத்தையிடம் போக விரும்புபவனைத் தடுக்காமல் போகுமாறு கூறுதல் முதலான செயல்கள் பெண் தலைவனோடு கொள்ளும் உறவால் உருவானவை.

வேட்கை முந்துறுத்தல், பின்நிலை முயறல்,
பிரிவிடை ஆற்றல், வரவு எதிர்ந்து இருத்தல்,
வாராமைக் கழிதல், இரவுத் தலைச் சேரல்,
இல்லவை நகுதல், புலவியுள் புலம்பல்,
பொழுது கண்டு இரங்கல், பரத்தையை ஏசல்,
கண்டு கண் சிவத்தல், காதலில் களித்தல்,
கொண்டு அகம் புகுதல், கூட்டத்துக் குழைதல்,
ஊடலுள் நெகிழ்தல், உரைகேட்டு நயத்தல்,
பாடகச் சீறடி பணிந்த பின் நயத்தல்,
பள்ளிமிசைத் தொடர்தல், செல்கஎன விடுத்தல், என
ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
பெண்பால் கூற்றுப் பெருந்தணை பால (16)

இருபால் கூற்று

 சீர்செலவு அழுங்கல், செழுமடல் ஊர்தல்,
தூதுஇடை ஆடல், துயர் அவர்க்கு உரைத்தல்,
கண்டுகை சோர்தல், பருவம் மயங்கல்,
ஆண்பால் கிளவி, பெண்பால் கிளவி,
தேம்கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு,
அரிவைக்கு அவள் பாண் வரவு உரைத்தல்,
பரிபுரைச் சீறடி பரத்தைக் கூறல்,
விறலி கேட்பத் தோழி கூறல்,
வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்,
பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்,
பிறர் மனை துயின்றமை விறலி கூறல்,
குற்றிசை ஏனைக் குறுங்கலி உளப்பட
ஒத்த பண்பின் ஒன்று தலைஇட்ட
ஈர்எண் கிளவியும் பெருந்தணைப்பால (17)

துறைகள்

பெண்பால் கூற்று
இருபால் கூற்று

எடுத்துக்காட்டு

புறநானூறு 143
  • திணை: பெருந்திணை துறை: குறுங்கலி (தாபத நிலையும் ஆம்)
  • பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார்
  • பாடப்பட்டவர்: வையாவிக் கோமான் பேகன்

கல் முழை அருவிப் பல் மலை நீந்தி,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை,
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி,
புது மலர் கஞல, இன்று பெயரின்,
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன. அவள் வருந்தி அழுதாள். ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது, என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்” என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது.

புறநானூறு 147
  • திணை: பெருந்திணை துறை: குறுங்கலி (தாபத நிலையும் ஆம்)
  • பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார்
  • பாடப்பட்டவர்: வையாவிக் கோமான் பேகன்

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
5 அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

கல்லுக் குகைகளில் அருவி கொட்டும் பல மலைகளைத் தாண்டி உன்னிடம் வந்துள்ளேன். என் யாழில் செவ்வழிப் பண் பாடிக்கொண்டு வந்துள்ளேன். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடிமுழக்கத்தைக் கேட்டுக்கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்தாள். கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக்கொள்ளும்படி நீ அவளிடம் செல். அதுதான் நீ எனக்குத் தரவேண்டிய பரிசு.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.