கூட்டத்துக் குழைதல்(பெருந்திணை)
கூட்டத்துக் குழைதல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி புணர்ச்சியில் நெகிழ்தலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனது மாலையணிந்த மார்பினை விட்டு விலகுதலைப் பொறுக்காத அன்புடைய தலைவி புணர்ச்சியில் உள்ளம் நெகிழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
பெய்தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று(கொளு 16.14)
வெண்பா
மயங்கி மகிழ் பெருக மால்வரை மார்பில்
தயங்கு புனல் ஊரன் தண்தார் - முயங்கியும்
பேதைப் புலம்பப் பிரிதியோ நீ என்னும்
கோதை சூழ் கொம்பில் பிணைந்து (319)
பொருள்: தலைவனது பெரிய மலை போன்ற மார்பினைத் தழுவிக் களிப்படைந்தும், பிரிவு அச்சத்தால் பூங்கொம்பு போலத் தளர்ந்து 'நான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோ?" என்று தலைவி உரைக்கிறாள்.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 18:58:27 IST