under review

துயர் அவற்கு உரைத்தல்(பெருந்திணை)

From Tamil Wiki

துயர் அவற்கு உரைத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. தலைவியின் துயரை அவனுக்குக் (தலைவனுக்கு) தோழி கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மயில் போன்ற பெண்ணை மயக்கம் தரும் மாலைக்காலம் வருத்துதலைத் தோழி தலைவனுக்குச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மான்ற மாலை மயில் இயல் வருத்தல்
தோன்றக் கூறித் துயர் அவர்க்கு உரைத்தன்று(கொளு 17.4)

வெண்பா

உள்ளத்து அவலம் பெருக ஒளி வேலோய்
எள்ளத் துணிந்த எழில் மாலை - வெள்ளத்துத்
தண்தார் அகலம் தழூஉப் புணையாய் நீ நல்கின்
உண்டாம் என் தொழிக்கு உயிர் (328)

பொருள்: வேலினையுடையவனே! நெஞ்சில் துயரம் மிகத் தலைவி இந்த மாலைவேளையை இகழ்கிறாள் . இந்த இருள்மிக்க மாலை வெள்ளத்தைக் கடக்க உன் மார்பினைத் தெப்பமாகக் கொடுத்தால் அவள் உயிர் பிழைப்பாள்'.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:33:30 IST