under review

இரா. மீனாட்சி

From Tamil Wiki

To read the article in English: R. Meenakshi. ‎

இரா. மீனாட்சி

இரா. மீனாட்சி (பிறப்பு: ஜனவரி 23, 1941) தமிழில் எழுதி வரும் கவிஞர், ஆய்வாளர், தமிழாசிரியர். ஆரோவில் சர்வதேச நகரத்தில் சேவையாற்றுகிறார். கல்வி, கிராம மேம்பாடு, சமூக சேவை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். எழுத்து இதழில் அறிமுகமான தொடக்ககால நவீனக் கவிஞர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. மீனாட்சி 1941-ல் இராமச்சந்திரன், மதுரம் இணையருக்கு திருவாரூரில் பிறந்தார். தந்தை பத்திரிகைச் செய்தியாளர். சிறுவயதில் ரயில்வே ஊழியரான தாத்தாவிடம் வளர்ந்தார். தனுஷ்கோடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் ஆரம்பக்கல்வி பயின்றார். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி விருதுநகரில் பயின்றார். தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில் பணியாற்றுகிறார்.

தனிவாழ்க்கை

இரா. மீனாட்சி

இரா. மீனாட்சி ஹாலந்து நாட்டைச் சேர்ந்த அண்டோனியஸ் வில்ஹில்மஸ் பீட்டர் வான் மேகனை மணந்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணி செய்தார். ஆரோவில் சர்வதேச நகரில் கணவருடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டார். இந்தியக் கலாச்சாரம் பற்றிய வகுப்புகளுக்கான வருகைதரு சிறப்புப் பேராசிரியராக பல நாடுகளில் இருந்தார். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். ஆரோவில் கிராமச் செய்தி மடலின் (மாத வெளியீடு) ஆசிரியராகவும், நிர்வாகியாகவும், ஆரோவில் நிர்வாகிகளின் ஊழியர் நல நிர்வாகத் திட்டத்திலும் பணியாற்றினார். ஆரோவில் சங்கமம் குடியிருப்புத் திட்டத்தின் அறங்காவலராக இருந்தார். ஆரோவில் ஸ்ரீஅரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையத்தில் பொறுப்பு உறுப்பினராக இருந்தார்.

சமூகப்பணிகள்

இரா. மீனாட்சி விநோபா பாவேயின் ஆசிரமத்துச் சகோதரிகளுடன் இணைந்து ”எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம், கிராமம் வாழ்க - உலகம் வாழ்க, பூமி பொது, இறைவனுக்குச் சொந்தம்” எனும் பதாதைகளோடு தமிழகம் முழுவதும் சர்வோதயப் பாதயாத்திரை மேற்கொண்டார். நெருக்கடி நிலையின் போது ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் குழுவினருடன் இணைந்து செயல்பட்டார்.

இரா. மீனாட்சி

அமைப்புப் பணிகள்

  • 1978-ல் கோவை அவிநாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன்முறையாக பாரதி சிலை வைக்க அரசாணை பெற்று சிலை நிறுவினார்.
  • சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் புதல்வர் மன்னர் மன்னன் ஆகியோரைக் கொண்டு பாரதி நூற்றாண்டு விழா மாநாடு நடத்தினார். பாரதிதாசனுக்கு விழா மலர் வெளியிட்டார்.
  • இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளுக்கான பாரதி வாழ்வியல் பயிலரங்கு, தமிழின் ஓருலகக் கருத்துணர்வு (ONE WORLD CONCEPT IN TAMIL) பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு ஆகியவற்றை நடத்தினார்.
  • 2008-ல் சாகித்திய அகாதெமியுடன் இணைந்து வருங்காலக் கவிதையும் கவிதையின் வருங்காலமும் குறித்த கருத்தரங்கம் நடத்தினார்.
  • 2010-ல் தாகூர்-150 என்னும் கருத்தரங்கை சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்தினார்.
  • நவம்பர் 2005-ல் சென்னைப் பல்கலைக் கழகமும் மைசூர் நடுவண் அரசின் இந்திய மொழிகள் நிறுவனமும் இணைந்து நடத்திய செம்மொழித் திட்டக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
  • 2006 டிசம்பர் - 2007 டிசம்பர் வரை 'பாரதி 125' விழாவினை நடத்தினார். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனால் தொடங்கப் பெற்ற இவ்வியக்கம் பாரதி தொடர்பான கருத்தரங்கள், கவிதைப் பயிற்சிப் பட்டறை, கவிஞர்கள் சந்திப்பு, 125 இளைஞர்கள், 125 குழந்தைகளுக்குப் பாரதி பயிலரங்குகள், விழாக்கள் நடத்தியது.

ஆரோவில்

இரா. மீனாட்சி

இரா. மீனாட்சி ஆரோவில் தமிழ் மரபு மைய நிர்வாகியாக பணியாற்றினார். 1995-ல் ஐ.நா. சபை பொன்விழாவையொட்டி ஆரோவில்லிற்கு வழங்கப்பட்ட நட்புப் பரிசினைப் பெற ஆரோவில் சார்பாளராக நியூயார்க் சென்றார். 2003-ல் யுனெஸ்கோ - பாரீஸில் ஆரோவில் சர்வதேச நகர வளர்ச்சி பற்றிய நிகழ்வில் தமிழ்க் கலாச்சாரத் தொடர்பாளராகப் பங்கு பெற்றார். மார்ச் 2006-ல் ஆரோவில் இந்திய ஆப்பிரிக்க நட்புக் கழகம் தொடங்குவதற்காக, ஆரோவில் பிரதிநிதிகளுள் ஒருவராகத் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திற்குச் சென்றார். ஆப்பிரிக்க இந்திய இளைஞர்களுக்கிடையே நட்புறவுப் பாலமாக ஆரோவில் இளைஞர்கள் கல்வி மையத்தைக் கொண்டு செயல்பட்டார். 2006 தொடங்கி ஆண்டுதோறும் ஆரோவில்லில் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவினைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 2009-ல் 'மக்கள் காப்பியம் சிலப்பதிகாரம்' எனும் பத்து நாள் பயிலரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆரோவில்லுடன் இணைந்து நடத்தினார்.

ஆசிரியப்பணி

மீனாட்சி ஆரோவில்லில் உள்ள இளைஞர்கள் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். 24 ஆண்டுகளாக ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழை இளைஞர்களின் கல்விக்காக சேவையாற்றுகிறார். தமிழர்களின் பாரம்பரியத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறு, அறிவியல் மற்றும் பிற அடிப்படை சமூக வாழ்க்கைக் கட்டமைப்பு போன்றவை இங்கு மகிழ்ச்சியான வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆரோவில் பகுதியில் உள்ள பதினொரு பள்ளிகளை நிர்வகித்து, பள்ளி செல்லும் மற்றும் பணிபுரியும் பின்னணியில் இருந்து ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் சேவை செய்யும் "தமிழ் உலகம்” திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். ஆசிரியர்களின் பணியிடைப் பயிற்சி அட்டவணையை கவனித்தல், அவர்களுக்கான புதிய கற்பித்தல் கருவிகளை உருவாக்குதல், 'தமிழ் உலகம் பள்ளிகள்' மற்றும் கிராம சமூகங்களுக்கிடையேயான தொடர்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்தல். ஆரோவில் பகுதியில் உள்ள பிற கல்வி ஆர்வலர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆரோவில் கல்வியாளர்களுடன் இணைந்து 'ஆரோவில் கல்வி வள மையத்தை' (AERC) உருவாக்குவது இரா. மீனாட்சியின் மற்றொரு திட்டம்.

ஆய்வுகள்

இரா. மீனாட்சி ”Preservation of the Tamil Language, heritage and culture” என்ற தலைப்பில் யுனெஸ்கோவின் பங்களிப்போடு தமிழ்மரபு - கலாச்சாரம், வரலாறு, மற்றும் மொழிப்பாதுகாப்பு ஆய்வுகளில் இளைஞர்களுக்கு நெறியாளராக இருந்து பணியாற்றியதோடு, அது தொடர்பான நூல்களை வெளியிட்டார். ”அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி”, மொழிவளம் பெற (தமிழ் - ஆங்கிலம் கவிதைகள்), பனைமரமும் நாட்டுப்புற மக்களும் (Palmyrah tree and the native people), தமிழக மகளிரின் கலைகளில் ஒன்றான கோலக்கலை பற்றிய ஆய்வு (Kolam – The floor drawing), தமிழில் கடித இலக்கியம், புனிதச் சமையல் (Sacred cooking), கவிதை தொகுதி: Seeds France Duat and Dreams ஆகிய தலைப்புகளில் நூல்களை வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இரா. மீனாட்சி காரைக்குடி நந்தவனத்தில் கம்பராமாயணம் கற்றார். இராய. சொக்கலிங்கம்., கி.வா.ஜ., அ.ச.ஞானசம்பந்தம், எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்), பேரா.அ.சீனிவாசராகவன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், திருச்சி எஸ்.இராதாகிருஷ்ணன், புதுச்சேரி புலவர் அ.அருணகிரி ஆகியோரிடம் தமிழ்ப்பாடம் முறையாகக் கற்றார். காந்திய மகரிஷி அருணாசலம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி போன்ற அறிஞர்களிடம் கற்றார். கவிஞர்கள் நா.காமராசன், அபி ஆகியோர் இரா. மீனாட்சியின் நண்பர்கள்.

எழுத்து

பத்திரிக்கையாளரான இரா. மீனாட்சியின் தந்தையை சந்திக்க வரும் சி.சு. செல்லப்பாவிடம் பேராசிரியர் சி.கனகசபாபதி இவரின் கவிதைகளைக் காண்பித்தார். அக்கவிதைகளில் ஒன்றான “பன்னீர்ப் பூ” என்ற முதல் கவிதை ’எழுத்து’ இதழில் பிரசுரமானது. தமிழில் எழுத்து இதழ் புதுக்கவிதையை அறிமுகம் செய்து ஓர் இயக்கமாக உருவாக்கியபோது ந. பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், பசுவையா (சுந்தர ராமசாமி) போன்ற தொடக்ககால நவீனக் கவிஞர்களில் ஒருவராக இரா.மீனாட்சியும் இடம்பெற்றார். (பார்க்க எழுத்து கவிதை இயக்கம் )

தொகுப்புகள்

கண்ணதாசன் இலக்கிய இதழ், கணையாழி, தீபம், நாணல், கவி, அன்னம்விடு தூது, ஓம்சக்தி போன்ற கவியிதழ்களில் எழுதினார். இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து முதல்தொகுப்பான ’நெருஞ்சி’ 1970-ல் வெளிவந்தது. ’சுடுபூக்கள்' கவிதைத்தொகுப்பு 1978-ல் வெளியானது. Seeds France, Duat and Dreams என்ற கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். ஆரோவில் வந்தபின் சகோதரர் மீராவின் தூண்டுதல் கடிதங்களால் ”தீபாவளிப் பகல்” அன்னம் வெளியீடாக வந்தது. அடுத்தது இருமொழி நூலாக ”மறுபயணம்” (Another Journey) ஆரோவில் வெளியீடாக வந்தது. 2002-ல் “மீனாட்சி கவிதைகள்” தொகுப்பினை “காவ்யா” சண்முகசுந்தரம் சென்னையில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு வலம்புரி ஜான் தலைமை ஏற்று எழுத்தாளர் சுஜாதா வெளியிட்டு, மாலன் நூல் மதிப்பீடு செய்தார். 'வாசனைப்புல்',' உதயநகரிலிருந்து', 'கொடிவிளக்கு', 'ஓவியா', 'மூங்கில்கண்ணாடி' போன்ற கவிதைத்தொகுப்புகள் வெளிவந்தன. 'கூழாங்கல்' என்ற இருமொழித் தொகுப்பை வெளியிட்டார்.

கவிதைநிகழ்வுகள்

பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி 1982-ல் புதுச்சேரி சித்தானந்தச்சாமி கோயில் வளாகத்தில் அனைத்து வானொலி நிலையங்கள் சார்பில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிதை பாடினார். 1982--ம் ஆண்டு புதுதில்லி அகில இந்திய கவிசம்மேளனம் நிகழ்வில் பங்கேற்றார்.தமிழ்க்கவிஞர்களை ஒருங்கிணைந்து ‘தமிழகத்துக் கவிஞர்கள் சந்திப்பு’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி ஆரோவில்லில் நூல் வெளியிட்டார். பல்வேறு நாடுகளிலும் இந்தியக்கவி சம்மேளனங்களிலும் இவருடைய கவிதைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள், இந்தோனேசியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளிலும் கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

தொகுப்புகளில்...

பெங்குவின் நிறுவனம் பதிப்பித்துள்ள ஆங்கிலக் கவிதை நூல்களில் இரா. மீனாட்சியின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த நான்காயிரம் வருட உலகக் கவிதை இயங்குதலைத் தொகுத்து அமெரிக்காவிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்பில் இரா. மீனாட்சியின் கவிதை இடம் பெற்றுள்ளது. 11--ம் வகுப்பு தமிழ்ப்பாடப்புத்தகம் (2018-2019) தமிழகக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று இரா. மீனாட்சியின் “பிள்ளைக் கூடம்” கவிதை இடம்பெற்றுள்ளது.

இலக்கிய இடம்

”சௌந்தரா கைலாசத்தைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை உலகில் பெண் கவிஞராகப் புகுந்தவர், முதல் பெண் புதுக்கவிஞர்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் இரா. மீனாட்சியை மதிப்பிடுகிறார். இரா.மீனாட்சி எழுத்து கவிஞராக அறிமுகமானாலும் தொடர்ச்சியாக அக்கவிமரபில் செயல்படவில்லை. எழுத்து மரபின் படிமத்தன்மை, மறைபிரதித்தன்மை ஆகியவை இல்லாமல் கருத்துக்களை நேரடியாக முன்வைக்கும் கவிதைகளையே பின்னர் எழுதினார்.

இரா. மீனாட்சி

விருதுகள்

  • இரா. மீனாட்சி எழுதிய “உதய நகரிலிருந்து” நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006--ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • இரா. மீனாட்சி எழுதிய ”செம்மண் மடல்கள்” நூல் 2012--ம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றது.
  • சிறந்த சித்த மருத்துவச் சேவைக்காக ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் விருது பெற்றார்.
  • 1964-ல் கோவை. பூ.சா.கோ. நாவலர் மன்றத்தின் சிறந்த கல்லூரிப் பேச்சாளருக்கான தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 1978-ல் சிறந்த கிராமப்புற இளைஞர் பணிக்கான ஜெர்மன் டாக்டர் ஹேயின்ரிச் அவார்டு பெற்றார்.
  • சிறந்த பல்நோக்கு கல்விச் சிந்தனையாளர் விருது சென்னை சுந்தர்ஜா அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டது.
  • 1999-ல் கோவை அமரர் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் முதலாமாண்டுச் சிறப்புப் பொற்கிழியும், பாராட்டும் பெற்றார்.
  • 2005-ல் கவிஞர் சிற்பி இலக்கிய விருது.
  • 2007-ல் புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது.
  • 2007-ல் திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது.
  • 2010-ல் புதுவை பாரதி விருது.
  • 2010-ல் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் கவிக்கோ விருது.
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது.

நூல்கள்

செம்மண் மடல்கள்
கவிதைத்தொகுப்பு
  • நெருஞ்சி (சாரல் வெளியீடு 1970)
  • சுடுபூக்கள் (சாரல் வெளியீடு 1978)
  • தீபாவளிப் பகல் (அன்னம் வெளியீடு 1983)
  • மறுபயணம் (இருமொழி: ஆரோவில் 1998)
  • மீனாட்சி கவிதைகள் (தொகுப்பு) (காவ்யா பதிப்பகம் 2002)
  • வாசனைப்புல் (மித்ர வெளியீடு 2006)
  • உதயநகரிலிருந்து (கபிலன் பதிப்பகம் 2006)
  • கொடிவிளக்கு (கபிலன் பதிப்பகம் 2009)
  • செம்மண் மடல்கள் (கபிலன் பதிப்பகம் 2012)
  • ஓவியா (கபிலன் பதிப்பகம் 2009)
  • ஆங்கில படைப்பு: இந்திய பெண்கவிகள் பேசுகிறார்கள்.
  • கூழாங்கல் (TYCL Pondy 2018)
  • மூங்கில் கண்ணாடி 2019 ( கபிலன்)
ஆய்வு நூல்கள்
  • அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி
  • மொழிவளம் பெற (தமிழ்-ஆங்கிலம் கவிதைகள்)
  • பனைமரமும் நாட்டுப்புற மக்களும் (Palmyrah tree and the native people)
  • தமிழக மகளிரின் கலைகளில் ஒன்றான கோலக்கலை பற்றிய ஆய்வு (Kolam – The floor drawing )
  • தமிழில் கடித இலக்கியம்.
  • புனிதச் சமையல் (Sacred cooking)
  • கவிதை தொகுதி: Seeds France Duat and Dreams
பிற தொகுப்பு நூல்களில்
  • பறத்தல் அதன் சுதந்திரம்
  • கொங்கு தேர் வாழ்க்கை
  • சிற்றகல்
இணையாசிரியராக எழுதிய நூல்கள்
  • மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி, கபிலன் பதிப்பகம். (2006)
  • அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர், கபிலன் பதிப்பகம். (2007)
பிறமொழித் தொகுப்புகளில்
  • The Penguin new writing in India.
  • In their own voice – The Penguin anthology of contemporary Indian women poets.
  • The Oxford anthology of Modern Indian Poetry The Oxford University Press.
  • World Poetry. An anthology of verses from antiquity to our time (4000 yrs. Poetry) W.W.Norton and company. * Newyork – 1998. (நாலாயிரமாண்டு உலகக் கவிதைகளில் இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதையாக இவர்தம் சுடுபூக்கள் தொகுப்பிலிருந்து கவிதை இடம் பெற்றுள்ளது.)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page