ஔவையார் (சங்ககாலம்)
- ஔவையார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஔவையார் (பெயர் பட்டியல்)
ஔவையார் (சங்ககாலம்) சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஐம்பத்தி ஒன்பது பாடல்கள் சங்கத்தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
ஒளவையார் பாணர் குடியில் பிறந்தார். பாடினி, விறலி என பெண் பாணர்களை அழைப்பர். விறலியர் பாடல் இயற்றி பண்ணிசைத்து ஆடி பரிசில் பெறுவர். இசைக்கருவிகளையும், ஆடலுக்குத் தேவையான பொருள்களையும் பையில் மூட்டையாகக் கட்டி வைத்திருப்பர்.
அதியமான் நெடுமான் அஞ்சி சிறுகுறுநில மன்னனேயாயினும் ஔவையார் அவனிடம் நட்புப் பூண்டு அவனது அவைக்களப் புலவராய் இறுதிவரை திகழ்ந்தார்.
தொன்மம்
ஒளவைக்கு அதியன் ஈந்த நெல்லிக்கனி
ஒளவைக்கு அதியன் ஈந்த நெல்லிக்கனி அதியனை ஏழு வள்ளல்களுள் ஒருவராக ஆக்கியது. அதியனுக்கு மலைப்பிளவுகளிடையே எளிதில் மனிதர் புகமுடியாத இடத்தில் நெல்லிக் கனி கிடைத்தது. அதனை உண்பவர் நெடுநாள் வாழ்வர் என கூறப்பட்டது. அதனைத் தான் உண்ணாது அதியன் அரண்மனைக்குக் கொணர்ந்து ஒளவைக்குத் தந்து அதை உண்ணுமாறு செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையாரின் ஐம்பத்தி ஒன்பது பாடல்கள் சங்கத்தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் முப்பத்தி மூன்று;அகத்திணைப் பாடல்கள் இருபத்தியாறு (குறுந்தொகை-15), நற்றிணை-7, அகநானூறு-4). அகத்துறைப் பாடல்கள் பாலைத் திணை(9), முல்லைத் திணை(5), குறிஞ்சித் திணை(4), மருதத் திணை(4), நெய்தல் திணை(4) என விரவியுள்ளன.
புறநானூற்றில் தொகுக்கப்பட்ட ஒளைவையின் இருபத்தியைந்து பாடல்களில் இருபத்தியிரண்டு அதியமானைப் பற்றியுவை, மூன்று பாடல்கள் அவரின் மகனான பொகுட்டெழினி பற்றியவை. புறப்பாடல்கல் பெரும்பாலும் போர்ச்செய்தி பற்றியவை. புறப்பாடல்கள் வெட்சி(1), கரந்தை(2), தும்பை(6), வாகை(7), பாடாண்(13), பொதுவியல்(4) ஆகிய திணைகளில் அமைந்துள்ளன. இப்பாடல்கள் 'தனிப்பாடல் திரட்டு' நூலில் காணப்படும் ஒளவையின் மனப்போக்கை ஒத்துள்ளதாக அறிஞர்கள் கருதினர்.
பாடல்கள்
- புறநானூறு (33): 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 158, 187, 206, 231, 232, 235, 295, 315, 367, 390, 392
- அகநானூறு (4): 11, 147, 273, 303
- நற்றிணை (7): 295, 390, 394
- குறுந்தொகை (15): 15, 23, 28, 29, 39, 43, 80, 102, 158, 364
ஒளவையாரால் பாடப்பட்டோர்
- புலவர்கள்: வெள்ளிவீதியார்
- அரசர்கள்: சேரமான் மாரி வெண்கோ, சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி
- வள்ளல்கள்: அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி, பாரி, நாஞ்சில் வள்ளுவன்
- பிறர்: வாய்மொழி முடியன், கோசர்
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- இமைய மலை பற்றிய குறிப்புகள், இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபடும் மரபு, தேவர்களுக்கு வேள்வி செய்யும் மன்னர்களின் மரபு, மன்னர்கள் பார்ப்பனர், பாணர்களுக்கு வழங்கும் கொடைத்தன்மை ஆகிய செய்திகள் உள்ளன.
- பார்ப்பனர் இருபிறப்பாளர் எனவும் நிலையான கோட்பாடுடையவர் என்றும், அவர்கள் வளர்க்கும் யாகத்தீ முத்தீ என்றும் கூறப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளிலிருந்து காற்றால் செலுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பமுடைய நாவாய்கள் தமிழகக் கடற்கரைகளில் வந்து நின்றன. அவற்றில் நெடுநாட்களாக அடைக்கப்பட்டுப்பட்ட கள்சாடிகள் வந்தன. அவற்றை மன்னர்கள் பருகினர். சாடிக்கள், நாரரி, தேறல் என அவை பலவகைப்பட்டன.
- நீண்டதூர நாடுகளுக்கு உப்பு வண்டிகளை ஓட்டிப் போகும் உமணர்கள் இடையே அச்சு முறிந்தால் மாற்றுவதற்கு சேமவச்சு ஒன்றை, வண்டியின் கீழே கட்டிவைத்துக் கொண்டு சென்றனர்.
- மரங்கொல் தச்சர், பொற்கொல்லர் பற்றிய செய்திகள் உள்ளன.
- பகைவர்களை வென்றதற்கு அடையாளமாக, அவர்களின் சின்னங்கள் பொறித்த இலச்சினையை அணிந்துகொள்வது மன்னர்களிடையே வழக்கமாக இருந்துள்ளது.
- சிவ வழிபாட்டின் தொன்மை:'நீலமணி மிடற்று' என சிவன் சுட்டப்படுகிறார். மகளிர் திருக்கார்த்திகையன்று வரிசைவரிசையாக விளக்கேற்றி வைக்கும் வழக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- போரில் விழுப்புண்பட்டு இறந்தால் சொர்க்கம் புகுவர் என்ற நம்பிக்கை இருந்தது. நோய்வாய்ப்பட்டு இறந்தால் துறக்கம்புக இயலாதாகையால் அவர்களை அருகம் புல்லில் கிடத்தி, மார்பில் வாளால் போழ்ந்து, பிறகு அடக்கம் செய்தனர். அவ்வாறு செய்வதால் அக்குறை நீங்குகிறதென்று கருதினர். அச்சடங்கை அந்தணர்களே செய்தனர்.
அதியமான் நெடுமான் அஞ்சி
- அதியமான் நெடுமான் அஞ்சி கடையேழு வள்ளல்களில் ஒருவர். பனம்பூ மாலையை அடையாள மாலையாக உடைய அதியர் குடியில் பிறந்தவர். ஏழு மன்னர்களை வென்றதற்கு அடையாளமாக 'ஏழிலாஞ்சனை' எனும் இலச்சினை பொறித்த சின்னத்தை உடையவர். அவர் ஆண்ட தகடூர் இன்றைய தருமபுரி. அடுத்துள்ள குதிரை மலையும் அவனுக்கு உரிமையுடையது. அதியனின் முன்னோர் தமிழ் நாட்டிற்கு கரும்பு கொண்டு வந்தனர். நெடிய தோற்றமும் அகன்ற மார்பும் தாள்தொடு தடக்கையும், உடல் வலிமையும் உடையவன். விளையாட்டாகப் போரில் ஈடுபட்டு அதிலேயே திளைக்கும் பழக்கம் உடையவர். எளியவர்கட்கு உதவும் நெஞ்சமும் தன்னிடமுள்ளதெல்லாம் வாரி வழங்கும் கொடை நெஞ்சமும் உடையவர். அவரிடம் மறக்குணமிக்க மழவர்படை இருந்தது. "மடவோர் மகிழ்துணை", "இல்லோர் ஒக்கல் தலைவன்" என்றும் தன் கொடைத்திறத்தால் போற்றப்படுபவர்.
- திருக்கோவலூர் வெற்றி: மலையமான் திருமுடிக்காரி, ஓரியின் கொல்லிமலைப் பகுதியை வென்று, சேர மன்னனுக்குக் கொடுத்தார். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் பகைமை கொண்டிருந்த அதியமான் அஞ்சி இதனால் ஆத்திரப்பட்டு, மலையமானின் திருக்கோவலூர் மீது படையெடுத்து, அம்மன்னனை வென்று அவ்வூரை அழித்தார். மலையமான் சேரனுக்குத் துணைபோவான் என எண்ணி முன்கூட்டியே அவரை வென்றார்.
- சேரவேந்தனுடன் போர்: சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அஞ்சிக்கும் இடையே பகைமை இருந்தது. சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரி ஏழுவள்ளல்களுள் ஒருவர், பெருவீரன். இக்காரி, ஓரியைக் கொன்று கொல்லிமலையைச் சேரனுக்குத் தந்ததால் காரி ஆண்ட கோவலூர் மீது படையெடுத்து அஞ்சி அவ்வூரை அழித்தார். இதைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, அஞ்சி மீது கடுஞ்சினம் கொண்டு, தகடூர் மீது படையெடுத்தார். இவர்களது போர் நெடுநாட்கள் நடந்ததாகத் சொல்லப்படுகிறது. இரும்பொறை தகடூரைச் சுற்றி வளைத்துக் கொண்டாலும், அஞ்சியை நெருங்க முடியவில்லை.
பொகுட்டெழினி
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஒளவை பாடியனவாக மூன்று பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. பொகுட்டெழினி அஞ்சிக்குத் துணையாக உடனிருந்தார்.
நாஞ்சில் வள்ளுவன்
அதியமான் நெடுமான் அஞ்சியைத் தவிர நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவனை மட்டுமே ஒளவையார் பாடியுள்ளார். தாம் உண்ண விரும்பிய அடகு (கீரை) உணவுக்குத் துணையாகச் சிறிது அரிசி வேண்டிய பொழுது, நாஞ்சிற் பொருநன் மிகப் பெரிய யானையை ஒளவைக்குப் பரிசளித்தார்.
மூவேந்தர்
மூவேந்தர்களைத் தனித்து, நேர்நின்று இரந்து புகழ்ந்து பாடாத ஒளவையார், ஒருமுறை சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக ஓரிடத்தில் இருக்கக் கண்டு அவர்களது ஒற்றுமையைப் பாராட்டி வாழ்த்தி ஒரு பாடல் பாடினார் (புறம்: 367).
பாடல் நடை
- குறுந்தொகை: 23
அகவன் மகளே அகவன் மகளே!
மனவுக்கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
- புறநானூறு: 87
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
- நற்றிணை: 390
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி! தொலையுந பலவே.
- அகநானூறு: 11
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
- "இந்திய இலக்கியச் சிற்பிகள் : ஔவையார்": தமிழண்ணல்: Project Madurai
இணைப்புகள்
- ஒளவையாரின் பாடல்கள் குறித்து கவிஞர் இசை எழுதும் தொடர்:1: களிநெல்லிக்கனி(வாயில்): நீலி மின்னிதழ்
- ஒளவையாரின் பாடல்கள் குறித்து கவிஞர் இசை எழுதும் தொடர்:2: களிநெல்லிக்கனி: கைகவர் முயக்கம்: நீலி மின்னிதழ்
- ஒளவையாரின் பாடல்கள் குறித்து கவிஞர் இசை எழுதும் தொடர்:2: களிநெல்லிக்கனி: உன் ஆசைக்கு யாருமில்லை: நீலி மின்னிதழ்
- ஒளவையாரின் பாடல்கள் குறித்து கவிஞர் இசை எழுதும் தொடர்:2: களிநெல்லிக்கனி: தொழுது, ஆற்றா தியாகம்: நீலி மின்னிதழ்
- ஒளவையாரின் பாடல்கள் குறித்து கவிஞர் இசை எழுதும் தொடர்:3: - அவ்வையின் புறப்பாக்கள் குறித்த இரண்டு கட்டுரைகள் - நீலி மின்னிதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2025, 06:22:49 IST