இளசை சுந்தரம்
- சுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரம் (பெயர் பட்டியல்)
இளசை சுந்தரம் (இளசை எஸ். சுந்தரம்; முனைவர் இளசை சுந்தரம்; டாக்டர் இளசை சுந்தரம்) (ஜூலை 16, 1946 - டிசம்பர் 20, 2021) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர். மதுரை அகில இந்திய வானொலி மற்றும் மதுரை பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
இளசை சுந்தரம், தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டையபுரத்தில், அ. சீனிவாசன் - சீ. சீனியம்மாள் இணையருக்கு ஜூலை 16, 1946 அன்று பிறந்தார். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயாவில் பள்ளிக் கல்வி கற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயின்று பி.ஏ., பி.எட் பட்டம். பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 'வானொலி வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
இளசை சுந்தரம் 1972 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, கோழிக்கோடு, ஊட்டி வானொலி நிலையங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
இளசை சுந்தரம் மணமானவர். மனைவி: முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, மதுரை செந்தமிழ் கல்லுாரியின் துணை முதல்வராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
இளசை சுந்தரம் பொதுவாசிப்புக்குரிய பல சிறுகதைகளை வெகுஜன இதழ்களில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ‘சாதகப் பறவைகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும், தூய வளனார் கல்லூரி, திருச்சி எஸ்.ஆர். மகளிர் க;ல்லூரி போன்றவற்றிலும் பாட நூலாக இடம்பெற்றது. இளசை சுந்தரம், வார, மாத இதழ்களில் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 175-க்கும் மேற்பட்ட இலக்கிய கட்டுரைகள், 100-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார் இவரது சிறுகதைகள் சில மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
இளசை சுந்தரம் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆளுமைத்திறன் பயிற்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
சொற்பொழிவு
இளசை சுந்தரம் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவை கலந்து பேசினார். கந்த புராணம், இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் போன்ற ஆன்மிக இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றினார். பட்டிமன்றங்கள் பலவற்றின் நடுவராகச் செயல்பட்டார். திருக்குறள் மாநாடு, கம்பன் கழக மாநாடு போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் சிறப்புச் சொற்பொழிவுகளை, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் பாரதியாரைப் போன்ற வேடமிட்டுத் தோன்றிப் பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.
பதிப்பு
இளசை சுந்தரம் தனது நூல்களை வெளியிடுவதற்காக ‘புகழ் பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.
ஊடகம்
வானொலி
இளசை சுந்தரம், 1976 முதல் தமிழகத்தின் பல்வேறு வானொலி நிலையங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். சென்னை வானொலியின் கல்வி ஒலிபரப்புப் பிரிவில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். திருச்சி வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சிக்கான வானொலி அண்ணாவாகவும், இலக்கிய நிகழ்ச்சிகளின் அமைப்பாளராகவும் பணிபுரிந்தார். திருச்சி வானொலியின் இலக்கியப் பகுதியின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல புதுமை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார். ‘பாண்டியன் பரிசு' நாடகத்தை வானொலிக்காக உருவாக்கி அளித்தார். ’தங்கக் கப்பல்’ என்னும் குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதித் தயாரித்தளித்தார். இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை ’விடுதலையின் கதை’ எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதைவடிவில் தொகுத்து வழங்கினார். 'நகைச்சுவை அரங்கம்’ என்ற நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தினார். தென்கச்சி கோ. சுவாமிநாதன் வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் நடத்திய ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். வானொலிக்காக இளசை சுந்தரம் இயற்றிய 'பாண்டியன் பரிசு' நாடகம், சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது வாழும் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் பலரைச் சந்தித்து அவர்களது கருத்துக்களை வானொலியில் ஒலிபரப்பினார். ’புகழேணி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் பலரை நேர்காணல் கண்டு அவற்றை ஒலிபரப்பினார்.
நாடகம்
இளசை சுந்தரம் வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதி, இயக்கினார். 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை வழங்கினார்.
தொலைக்காட்சி
இளசை சுந்தரம், மதுரை பொதிகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் (பொறுப்பு) பணியாற்றினார். இலக்கியம், ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். 2006-ல் பணி ஓய்வு பெற்றார்.
விருதுகள்/பரிசுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது
- கிருபானந்த வாரியார் அளித்த ‘நகைச்சுவை மாமன்னர்’ விருது
- குன்றக்குடி அடிகளார் வழங்கிய ’கலைச்செல்வர்’ விருது
- ஃபிரான்ஸ் மகாகவி பாரதியார் விழாவில் வழங்கப்பட்ட ‘இன்றைய பாரதி’ பட்டம்
- கனடா தென் இந்திய தமிழ் சங்கம் அளித்த ’இலக்கிய தமிழ் வேந்தன்’ விருது
- பாங்காங் தமிழ்ச் சங்கம் அளித்த ‘இன்சொல் வேந்தர்’ பட்டம்
- ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் அளித்த ’நகைச்சுவைக் கடல்’ விருது
- திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் வழங்கிய ‘சொல்லரசு’ விருது.
- ’சமய உரைச் சக்கரவர்த்தி’ பட்டம்
- ஆன்மிகச்சுடர் விருது
- இலக்கியச் செம்மல் விருது
- கம்பன் கவிச்செம்மல் விருது
- ‘சொற்றமிழ் வேந்தர்’ விருது
- ’நகைச்சுவை சித்தர்’ விருது
- ‘விவிதகலா வித்தகர்’ விருது
- ’சிந்தனைச் சுரங்கம்’ விருது
- வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் வழங்கிய ’தமிழ்ச்செம்மல்’ விருது.
- புதுச்சேரி மத நல்லிணக்க மாநாட்டில் வழங்கப்பட்ட ’வாழ்நாள் சாதனையாளர்’ விருது
- நகைச்சுவை இமயம்
- சொல்லேருழவர்
- நகைச்சுவைச் சித்தர்
- சிரிப்புச் சிகரம்
- அறநெறிச்செம்மல்
- ‘மொழியாகும் ஒலிகள்’ என்ற புதுமை நிகழ்ச்சியைப் படைத்து அகில இந்தியப் பரிசுடன், ஆகாஷ்வாணி சிறப்பு விருது.
- ரத்னபாலா சிறுவர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - புதியதளிர்கள் சிறுகதைக்கு.
- தாமரை இலக்கிய இதழ் கல்லூரி மாணவர்களுக்காக தமிழக அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - வெள்ளைச்சாமி மனிதனாகிய போது சிறுகதைக்கு (1968)
- தினமணி கதிர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - பலியாடுகள் சிறுகதைக்கு (1981)
- இலக்கியவீதி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - ஊட்டு சிறுகதைக்கு
- ராணி வார இதழ் நடத்திய ஆதித்தனார் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு. - எங்கள் தாய் சிறுகதைக்கு
ஆவணம்
இளசை சுந்தரத்தின் வாழ்க்கையை, முனைவர் கோ. சுப்புலட்சுமி எழுதி ஆவணப்படுத்தினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது.
மறைவு
இளசை சுந்தரம், டிசம்பர் 20, 2021 அன்று, தமது 75-ம் வயதில் காலமானார்.
நினைவு
இளசை சுந்தரம் நினைவாக, அவரது மனைவி ரேவதி சுப்புலட்சுமி, கவிதை உறவு இதழ் நடத்தும் போட்டிகள் மூலம், புதுக்கவிதைகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் பத்தாயிரம் நினைவுப் பரிசு வழங்குகிறார்.
மதிப்பீடு
இளசை சுந்தரம் பள்ளி ஆசிரியராகத் தொடங்கி ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், வானொலி, தொலைக்காட்சி இயக்குநர் எனப் பல களங்களில் பங்களித்தார். நகைச்சுவைப் பேச்சில் தனக்கென ஒரு தனி வழிமுறையைக் கையாண்டார். மாணவர்களைப் பலவிதங்களில் ஊக்குவித்தார். வானொலிகளில் புதிய பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை, தன்னம்பிக்கைப் பேச்சாளர், கட்டுரையாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- சாதகப் பறவைகள்
- பெருந்தலைவரின் வாழ்வில் இருநூறு நிகழ்ச்சிகள்
- வாசலுக்கு வரும் நேசக்கரம்
- நீங்களும் வெற்றி பெறலாம்
- நீங்களும் மகுடம் சூடலாம்
- நீங்களும் சிகரம் தொடலாம்
- நீங்களும் வாகை சூடலாம்
- நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம்!
- தியாகசீலர் கக்கன்
- நம்மை நாமே செதுக்குவோம்
- வானொலி வளர்த்த தமிழ்
- இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்
- ஆன்மீகம் அறிவோம்
- தோழர் ஜீவா
- விடியலின் வெளிச்சம்
- சிகரங்களைத் தொட சிந்திக்கலாம் வாங்க
- வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்
- இன்று ஒரு தகவல் - தொகுதி 1
- இன்று ஒரு தகவல் - தொகுதி 2
- இன்று ஒரு தகவல் - தொகுதி 3
- நகைச்சுவை நந்தவனம்
- பெருந்தலைவர் காமராசர்
- வாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்
- பாரதி காட்டும் சமுதாயம்
- கர்மவீரரின் காலடிச் சுவடுகள்
உசாத்துணை
- இளசை சுந்தரம் வாழ்க்கைக் குறிப்பு, முனைவர் கோ. சுப்புலட்சுமி, கலைஞன் பதிப்பக வெளியீடு
- இளசை சுந்தரம் நேர்காணல் - 1, முகில் டி.வி., யூட்யூப் தளம்
- இளசை சுந்தரம் நேர்காணல் - 2, முகில் டி.வி., யூட்யூப் தளம்
- இளசை சுந்தரம் நேர்காணல் - 3, முகில் டி.வி., யூட்யூப் தளம்
- இளசையாரின் கவிதைப்பயணம், முனைவர் இரா.மோகன், தமிழ் ஆதர்ஸ் தளம்
- இளசை சுந்தரம் கட்டுரை, காமதேனு தளம்
- இளசை சுந்தரம் நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
- இளசை சுந்தரம் அஞ்சலி: சமயம் தமிழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 18:02:08 IST