அ.கி. கோபாலன்
அ.கி. கோபாலன் (1913) பதிப்பாசிரியர், இதழியலாளர், நாடகக்கலைஞர். காதம்பரி மாத இதழை அ.கி. ஜெயராமனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி புக் ஸ்டால், தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர். தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை.
வாழ்க்கைக் குறிப்பு
அ.கி. கோபாலன் தென் ஆற்காட்டின் மேலக்குமாரமங்கலத்தில் 1913-ல் பிறந்தார். அண்ணன் அ.கி. ஜயராமன். பள்ளி இறுதி வரை படித்தார். 1942ல் அண்ணனின் உதவியால் சென்னையில் சர்வர் வேலைக்குச் சென்றார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே இருந்த ஆனந்த லட்சுமி பவனில் முதலில் சர்வராக வேலை பார்த்தார். அதன்பின் காஞ்சிபுரத்தில் 'நியூ மாடல் லஞ்ச் ஹோம்' ஹோட்டலில் வேலை பார்த்தார்.
நாடக வாழ்க்கை
அ.கி. கோபாலன் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவராகக் கருதப்படும் ச.சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியரிடம் நாடகப் பாடல்கள் பாடம் கேட்டார். நாடக வசனங்கள், பாடல்கள் மனப்பாடம் செய்தார். 'வள்ளித் திருமணம்', 'கோவலன்', 'பவளக்கொடி' முதலிய நாடகங்களில் நடித்தார். 'வள்ளித் திருமணம்' நாடகத்தில் நாரதர் வேடமும், 'பவளக்கொடி'யில் பெண் வேடமான பவளக்கொடி பாத்திரமும் ஏற்று நடித்தார்.
இதழியல்
அ.கி. கோபாலன் அண்ணன் அ.கி. ஜயராமனுடன் இணைந்து 1948-ல் 'காதம்பரி' மாத இதழைத் தொடங்கினார். "காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும்" என்ற நோக்கத்தை சகோதரர்கள் கொண்டிருந்தனர். 'காதம்பரி' முதல் இதழ் 'அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்' என்ற தலையங்கத்துடன் வெளியானது.
ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்ற உள்ளடக்கத்துடன் காதம்பரி வெளிவந்தது. 'காதம்பரி' பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.
நாவல் போட்டி
'காதம்பரி'யில் பிரசுரமாகும் முழு நாவலுக்கு 'ஒரு பவுன்' (அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்) பரிசு என்று விளம்பரம் செய்யப்பட்டது.
நாவல் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்' என்ற விதி இருந்தது. பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன்.
இதழ் நிறுத்தம்
வெளியூர் ஏஜண்டுகள் நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பாததால் சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் காதம்பரி இதழ் நின்றது. பதிமூன்று இதழ்களுக்குப் பின் காதம்பரி நிறுத்தப்பட்டது. 'மங்கள இதழ்' என்று தலைப்பிட்டு கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினர்.
பதிப்பகம்
திருநெல்வேலி முனிசிபல் சேர்மன் ப.ரா. 'நவயுகப் பிரசுராலயம்' என்று ஒரு பதிப்பகம் ஆரம்பித்தார். அ.கி.கோபாலன் அவருக்காக மாயவரம், கும்பகோணம், மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று புத்தகங்கள் விற்றுக் கொடுத்தார். அதை தொடர்ந்து பதிப்பகத் தொழிலுக்குள் நுழைந்தார்.
ஜோதி புக் ஸ்டால்
1942-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பைக்ராப்ட்ஸ் ரோடு, முரளி கேஃப் அருகில் 'ஜோதி புக் ஸ்டால்' என்ற புத்தகக் கடையத் தொடங்கினார். தினசரிகள், மாத இதழ்களும் விற்றார். பம்பாய் பத்திரிகைகள், 'எஸ்கோயர்', 'லைஃப்', 'ஸாடர்டே ஈவ்னிங் போஸ்ட்', 'டைம்', 'டெய்லி மிரர்' போன்ற ஆங்கில இதழ்களும் விற்றார்.
'தினமணி' ஏ. ஜி. வெங்கடாச்சாரி, நீதிபதி மு.மு. இஸ்மாயில், எஸ்.எஸ். மாரிசாமி, புதுமைப்பித்தன், பெ. நா. அப்புசாமி, க.நா.சு, கி.வா. ஜகந்நாதன், ரா.பி. சேதுப்பிள்ளை, ம.பொ.சி மற்றும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இவரின் வாடிக்கையாளராக இருந்தனர்.
தமிழ்ச்சுடர் நிலையம்
அ.கி.கோபாலன் ஆகஸ்டு 15, 1947-ல் 'தமிழ்ச்சுடர் நிலையம்' பதிப்பகத்தை ஆரம்பித்தார். பிராட்வேயில் இருக்கும் தாம்ஸன் பிரஸ்ஸில் புத்தகங்களை அச்சிட்டார். க.நா.சுப்ரமணியம் அறிவுரையின் பேரில் பல மொழிபெயர்ப்பு நாவல்களைப் பதிப்பித்தார். க.நா.சு, தினமணியில் வேலை பார்த்த வெ. சந்தானம், நா.ராமரத்தினம், த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி ஆகியோர் மொழிபெயர்ப்புகள் செய்தனர்.
நார்வே நாட்டு நாவலான 'நிலவளம்', 'அன்பு வழி' (ஸ்வீடிஷ்), 'தபால்காரன்', 'தாசியும், தபசியும்' (பிரெஞ்சு), 'ரோம் நகரப் பெண்' (இத்தாலி), 'அன்னா கரீனா', 'புத்துயிர்', 'அன்னை' (ருஷ்யா), 'சித்தார்த்தன்' (ஜெர்மன்), 'கடலும் கிழவனும்', 'திமிங்கில வேட்டை', 'அவமானச் சின்னம்' (அமெரிக்கா) போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டார். 'இறவாத புகழுடைய நூல்களும் நோபல் பரிசு நாவல்களும்' என்று விளம்பரத்துடன் இந்த நாவல்களை வெளியிட்டார். 'ஆன்டிக்' பேப்பர், அல்லது 'ஃபெதர் வெயிட்' பேப்பரில் வெளியிட்டார்.
டாக்டர் பட்டாபி சீதாராமையா எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட 'காங்கிரஸ் மஹாசபை சரித்திரம்', 'அன்னா கரீனா', 'புத்துயிர்ப்பு', 'போரும் அமைதியும்' ஆகிய டால்ஸ்டாயின் நூல்களை வெளியிட்டார். சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர் எழுதிய நூல்களை வெளியிட்டார். மாம்பாக்கம் குப்புசாமி ஐயர் என்பவர் மகேஷ் குமார சர்மா என்ற பெயரில் வங்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். 'அஸ்வினி குமார தத்தரின் உபன்யாசங்கள்' என்ற வங்க நூலை 'பக்தி யோகம்' என்ற பெயரில் குப்புசாமி ஐயர் மொழிபெயர்த்தார்.
இலக்கிய வாழ்க்கை
'நவயுகம்' பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த டி.எஸ்.சொக்கலிங்கத்திடம் அ.கி.கோபாலனின் அண்ணா அ.கி. ஜெயராமன் உதவியாளராகச் சேர்ந்தார். அவ்வாறாக இலக்கிய ஆர்வம் உருவாகியது. அ.கி. கோபாலன் திருவல்லிக்கேணியில் இருந்தபோது கு.ப. ராஜகோபாலன், ந. சிதம்பர சுப்பிரமணியன், வ.ராமசாமி ஐயங்கார், புதுமைப்பித்தன், எஸ்.எஸ். மாரிசாமி, காசி விஸ்வநாதன், என். ராமரத்தினம், க.நா.சு, ஏ.என். சிவராமன், ப.ரா, ஏ. கே. செட்டியார் , பி.ஸ்ரீ. ஆச்சார்யா ஆகியோருடன் இணைந்து கடற்கரைக்குச் சென்று இலக்கியக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இலக்கியவாதிகளுடன் தொடர் உரையாடலில் இருந்தார். இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைத்தார். இலக்கிய நூல்களை மெய்ப்புபார்த்தார்.
மறைவு
அ.கி. கோபாலன் மறைந்த தேதி தெரியவில்லை. 2002-ல் குமுதத்திற்கு அவர் அளித்த நேர்காணலின் போது அவருக்கு வயது 89.
இலக்கிய இடம்
அ.கி. கோபாலன் இலக்கிய நூல்களின் பதிப்பாசிரியர், இலக்கிய நிகழ்வுகளின் அமைப்பாளர், இலக்கிய இதழாசிரியர் என்னும் வகைகளிலும் மொழிபெயர்ப்பாளர் என்னும் நிலையிலும் நினைவுகூரப்படுகிறார். நோபல் பரிசு பெற்ற நாவல்களின் தமிழாக்கங்களை வெளியிட்டு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்.
பதிப்பித்த நூல்கள்
- நிலவளம்
- அன்பு வழி
- தபால்காரன்
- தாசியும், தபசியும்
- அன்னை
- ரோம் நகரப் பெண்
- அன்னா கரீனா
- புத்துயிர்
- சித்தார்த்தன்
- கடலும் கிழவனும்
- திமிங்கில வேட்டை
- அவமானச் சின்னம்
இணைப்புகள்
உசாத்துணை
- நம்மைப்போல் ஒருவர் - குமுதம் ஜங்ஷன் - நேர்கண்டவர்: தளவாய்சுந்தரம் - (படங்கள்: புதூர் சரவணன்)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:02:02 IST

