under review

ஏ. கே. செட்டியார்

From Tamil Wiki
ஏ.கே செட்டியார்

To read the article in English: A. K. Chettiyar. ‎

ஏ.கே. செட்டியார்
ஏ.கே செட்டியார்
ஏ.கே.செட்டியார், சா.கந்தசாமி
ஏ கே செட்டியார்

ஏ. கே. செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்; 1911-1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படம் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். 'உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக 'குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.

பிறப்பு, கல்வி

அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஏ. கே. செட்டியார், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911-ல், அ ராம. அண்ணாமலை செட்டியாருக்குப் பிறந்தார். ‘ஏ.கே. செட்டியார்’ என்ற பெயரிலேயே தம் நூல்களையெல்லாம் வெளியிட்டபோதும், பல இடங்களில் ‘அ.க.செட்டியார்’ எனவும் கையெழுத்திடும் வழக்கம் அவருக்கு இருந்துள்ளது. என ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்

ஏ.கே.செட்டியாரின் இளமைப்பருவம் செட்டிநாட்டிலும் திருவண்ணாமலையிலும் கழிந்தது. திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்ற ஏ.கே.செட்டியார் 1935-ல் ஜப்பானில் டோக்கியோ இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக் கழகத்தில் (Imperial College of Photography) அசாஹியின் உருத்துலக்கும் துறையில் பயின்றார். சிறப்பு பயிற்சிக்காக 1937-ல் நியூயார்க் சென்று அங்கு நியூயார்க் புகைப்பட நிறுவனத்தில் (New York Institute of Photography) பதே செய்தி நிறுவனத்தில் பயின்றார். 1937-ம் ஆண்டின் பிற்பகுதியில் பெர்லினுக்குச் சென்று, நாஜி பரப்புரை வாரியத்தின் காரல் வாஸ் என்பவரிடமும் பயிற்சி பெற்றார்.

அரசியல்

ஏ.கே. செட்டியார் பள்ளியில் படிக்கும்போதே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். காந்தி மேல் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ஏ.கே.செட்டியார் சி.ராஜகோபாலாச்சாரியார் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

ஏ. கே. செட்டியார் 1930 ல் குடும்ப வணிகத்தை மேற்பார்வை செய்வதற்காக பர்மா சென்றார். பின்னர் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் கல்வி பயின்று திரும்பி வந்து இதழாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் செயல்பட்டார். மணம் செய்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால்; ‘ஏ.கே.செட்டியாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அவர் மனைவியின் பெயர்தானும் தெரியவில்லை. திருமணம் நிகழ்ந்த காலமும் தெரியவில்லை.’ என ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.

இதழியல்

ஏ.கே.செட்டியார் பர்மாவில் நகரத்தார்கள் சார்பில் வெளிவந்த 'தனவணிகன்’ இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார் என சோமலெ குறிப்பிடுகிறார். 1933 கடைசியிலிருந்து 1936 இடைப் பகுதி வரை அவர் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கலாம் என்று ஆ. இரா. வேங்கடாசலபதி கருதுகிறார்.

செட்டிநாட்டில் புகழ்பெற்றிருந்த 'குமரன்', 'ஊழியன்', 'தமிழ்நாடு', 'நவசக்தி' போன்ற இதழ்களால் ஏ.கே. செட்டியார் ஈர்க்கப்பட்டார். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார். ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. (பார்க்க குமரி மலர்)

இலக்கிய வாழ்க்கை

பர்மாவில் இருந்து தமிழகம் திரும்பிய ஏ.கே. செட்டியார் தனது குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டார். ஏ.கே. செட்டியாரின் முதல் மற்றும் ஒரே சிறுகதையான, 'சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை, 1928-ல், ஆனந்த விகடன் இதழில் ஏ.கே.செட்டியாரின் 17 வயதில் கோட்டையூர் ஏ.கே.செட்டியார் என்ற பெயரில் வெளிவந்தது.

அதன் பிறகு சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், ஜோதி, ஹிந்துஸ்தான் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கும் ஏ. கே. செட்டியார், சிறுகதை முயற்சிகளில் ஈடுபடவில்லை. இலக்கியம் மீது ஆர்வமற்றவராக இருந்தார். அவரே நடத்திய குமரி மலர் இதழில் புனைவுகள் எதையும் வெளியிடவுமில்லை.

பாரதியியல்

ஏ.கே.செட்டியார் பாரதியின் தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’ பலவற்றை முதலில் குமரி மலரிலேயே வெளியிட்டார். பாரதியின் இந்தியா, சக்கரவர்த்தினி, கர்மயோகி மற்றும் சில சுதேசமித்திரன் கட்டுரைகளை முதலில் வெளியிட்டதில் குமரி மலருக்கு முக்கியப் பங்குண்டு.

பயணக் கட்டுரை

ஏ.கே.செட்டியார் ஜப்பானில் 1935ல் புகைப்படக்கலை பயிலும்போது அங்கிருந்த வாழ்க்கையைப் பற்றி தனவணிகன் இதழுக்கு கட்டுரைகள் எழுதினார். அவை பரவலாக வரவேற்பைப் பெற்றன, அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஜப்பான் கட்டுரைகள் என்ற பெயரில் நூலாயின. ஏ.கே. செட்டியாரின் முதல் நூல் அதுவே.

நியூயார்க்கில் புகைப்படக்கலை பயின்று திரும்பும் வழியில் 1937ல் இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அவ்வனுபவங்களை அவர் கட்டுரைகளாக எழுதினார். அவை 1940ல் தொகுக்கப்பட்டு ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற பெயரில் சக்தி காரியாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. அதன்பின் அவர் உலகம் சுற்றும் தமிழன் என்றே அறியப்படலானார்.

உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் மேற்கொண்டிருந்த ஏ.கே. செட்டியார், தனது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலம் வெளியிட்டார். 1850-1925 காலப் பகுதியில், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து 'பயணக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பயணக் கும்மி, ஜட்கா சவாரி, பஸ் பயணம், கப்பல் வண்டி, ரயில் வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவு, அவை மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்க்கங்கள் போன்றவை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் பற்றிய கட்டுரைகளும் காணப்படுகின்றன

ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்'. இது 1968-ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது.

சிந்தனைத் தொகுப்புகள்

ஏ.கே.செட்டியார் மேலை நாட்டு அறிஞர்கள், சிந்தனையாளர்களின் மேற்கோள்களின் தொகுப்புகளை ‘கொய்த மலர்கள்’ என்ற பெயரில் நூல்களாக வெளியிட்டுவந்தார். ஒவ்வொரு கொய்த மலரும் சுமார் 300 பக்கங்கள் கொண்டவை.

ஏ. கே. செட்டியார் எழுதிய மொத்த நூல்கள் 17. முதல் நூல் "ஜப்பான்'. இறுதியாக அவர் வெளியிட்ட நூல் 'உணவு’. ஜப்பான் நாட்டில் புகைப்படக் கலையைப் படிப்பதற்காகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு எழுதிய நூல் தான் 'ஜப்பான்'. இது முதலில் 'தனவணிகன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின் நூலாக வெளிவந்தது.

ஏ. கே. செட்டியாரின் காந்தி (தமிழில்)
ஏ. கே. செட்டியாரின் காந்தி தமிழ் ஆவணப் படம் வெளியீட்டுக் குறிப்பு

காந்தி ஆவணப்படம்

ஏ.கே.செட்டியாரின் சாதனைகளில் முக்கியமானதாக காந்தி பற்றிய ஆவணப்படம் கருதப்படுகிறது. ஏ.கே.செட்டியார் தம் வாழ்நாளில் வேறொரு படத்தையும் எடுக்கவில்லை என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்

பார்க்க : ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப்படம்

மறைவு

ஏ.கே. செட்டியார், வயது மூப்புக் காரணமாக, செப்டம்பர் 10, 1983-ல் சென்னையில் காலமானார்.

ஆவணம்

  • ஏ. கே. செட்டியாரின் குமரி மலர் இதழ்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • ஏ.கே.செட்டியாரின் காந்தி பற்றிய ஆவணப்படத்தின் பிரதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. யூ-ட்யூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.

வாழ்க்கை வரலாறு

ஏ.கே.செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை சா.கந்தசாமி சாகித்ய அக்காதமிக்காக எழுதினார்

இலக்கிய/வரலாற்று இடம்

எழுத்தாளர், இதழாளர், புகைப்படக் கலைஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் ஏ.கே. செட்டியார். தமிழில் பொதுஅறிவு, அறிவியல், பயணம் ஆகியவை சார்ந்த நூல்களை வெளியிட்ட முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்படுகிறார்.

முதன் முதலில் தமிழில் மிக விரிவான ஆவணப் படம் ஒன்றை எடுத்த முன்னோடி ஏ. கே. செட்டியார்தான். காந்தி ஆய்வுகளில் ஏ.கே.செட்டியாரின் ஆவணப்படம் முதன்மையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

நூல்கள்

தொகுத்த நூல்கள்
  • புண்ணியவான் காந்தி
  • பண்பு
  • கொய்த மலர்கள்
  • உணவு
பதிப்பித்த நூல்கள்
  • ஜப்பான் கட்டுரைகள்
  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • பயணக் கட்டுரைகள்
  • அண்டை நாடுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கரிபியன் கடலும் கயானாவும்
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • குடகு
  • இட்ட பணி
  • திரையும் வாழ்வும்

உசாத்துணை


✅Finalised Page