first review completed

நச்சினார்க்கினியர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
(Category: உரையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
Line 72: Line 72:
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category: உரையாசிரியர்கள்]]

Revision as of 18:57, 23 December 2022

நச்சினார்க்கினியர் பழந்தமிழ் தமிழ் உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர். பழந்தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகிய இருவகை நூல்களுக்கும் உரை எழுதினார். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை சிறந்ததாகக் கருதப்படுகிறது. கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கும் உரை எழுதினார். 'உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்' என்று சிறப்பிக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

நச்சினார்க்கினியர் பாண்டிய நாட்டில் மதுரையில் பிறந்தவர் என்பதும் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த அந்தணர் என்பதும் கலித்தொகையின் பாயிரச் செய்யுளாலும் [1]. 'மதுரை நச்சினார்க்கினியன் மாமறையோன்' என்னும் தொல்காப்பியத்தின் உரைப்பாயிரச் செய்யுட்பகுதியாலும், நூல்களின் உரை முடியும் இடத்தில், ‘பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரை முற்றிற்று’ என்னும் குறிப்பாலும் புலப்படும். நச்சினார்க்கினியன் என்னும் பெயர் சிவனைக் குறிப்பதால், இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

காலம்

நச்சினார்க்கினியர் வாழ்ந்த காலம் பொ.யு. பதினான்காம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகியோரைத் தன் உரையில் குறிப்பிட்டமையாலும், திருமுருகாற்றுப்படை உரையில் நக்கீரரை மறுத்து எழுதியுள்ளமையாலும், பவணந்தியின் நன்னூலையும், சூடாமணி நிகண்டையும் மேற்கோள் காட்டியும் அடியார்க்கு நல்லாரை மறுத்தும் எழுதியமையால் இவர்கள் காலத்திற்குப் பிந்தியவர் என அறிய வருகிறது.

உரையெழுதிய நூல்கள்

தொல்காப்பியம் ( இயனூல் ), பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகை (20 பாடல்கள்)ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டும்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே’

என்ற வெண்பா நச்சினார்க்கினியர் உரைகண்ட நூல்களைக் குறிக்கிறது.

பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், அறநெறிச்சாரம் உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்தும் நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்களிலிருந்தும் நச்சினார்க்கினியரால் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

         வினா விடை மூலம் விளக்கங்கள் (சொல். 9), பிற உரையாசிரியர்கள் கருத்துகளை மறுத்தல் ஏற்றல் (சொல். 24), நூற்பாக்களின் கிடைக்கை முறை சுட்டுதல் (சொல். 428),  மதம், அழகு, உத்தி இவற்றைப் பயன்படுத்தி விளக்குதல் (சொல். 11) முதலான அகலவுரையின் கூறுகளைப் பயன்படுத்தி உரை செய்துள்ளார் நச்சினார்க்கினியர். இளம்பூரணரையும் சேனாவரையரையும் சில இடங்களில் தழுவியும் சில இடங்களில் மறுத்தும் வேறு சில இடங்களில் மறுக்காமல் புத்துரை கண்டும் அமைந்துள்ளது நச்சினார்க்கினியரின் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரவுரை.

சிறப்புகள்

“நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர்வகையும் உயிர்வகையும் பற்றி நிறைய அறிந்தவர்" என ஆராய்ச்சியாளர் மு.வை. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

சங்கப் பாடல் உரைகளுள் நச்சினார்க்கினியர் உரை மட்டுமே புலமை மரபில் மிகுதியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை தெரிகிறது. தமிழ் இலக்கிய உரை மரபில் பொருள்கோடல் என்னும் உத்தியைக் கொண்டு உரைகண்ட பெருமை நச்சினார்க் கினியருக்கு மட்டுமே உண்டு. இந்த உத்தி தொல் காப்பியத்தில் சுட்டப்பட்டிருப்பினும் நச்சினார்க்கினியருக்கு முன்பிருந்த உரையாசிரியர்கள் யாரும் கைக் கொண்டதாகக் குறிப்புகள் இல்லை. ‘மாட்டு’ எனும் இலக்கியப் பொருள் கோடல் உத்தியைக் கொண்டு பத்துப்பாட்டிற்கு இவர் எழுதிய உரையைப் புலவர் உலகம் எதிர்த்தும் ஆதரித்தும் வந்தது. நஉரையை மறுத்தே பிற்காலத்தில் புதிய உரைகள் தோன்றக் காரணமாயிருந்திருக்கின்றன.

பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், அறநெறிச்சாரம் உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்தும் நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்களிலிருந்தும் நச்சினார்க்கினியரால் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

         வினா விடை மூலம் விளக்கங்கள் (சொல். 9), பிற உரையாசிரியர்கள் கருத்துகளை மறுத்தல் ஏற்றல் (சொல். 24), நூற்பாக்களின் கிடைக்கை முறை சுட்டுதல் (சொல். 428),  மதம், அழகு, உத்தி இவற்றைப் பயன்படுத்தி விளக்குதல் (சொல். 11) முதலான அகலவுரையின் கூறுகளைப் பயன்படுத்தி உரை செய்துள்ளார் நச்சினார்க்கினியர். இளம்பூரணரையும் சேனாவரையரையும் சில இடங்களில் தழுவியும் சில இடங்களில் மறுத்தும் வேறு சில இடங்களில் மறுக்காமல் புத்துரை கண்டும் அமைந்துள்ளது நச்சினார்க்கினியரின் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரவுரை.

சான்றோர் உரைத்த தண் தமிழ்த் தெரியல்
ஒருபது பாட்டும் உணர்வார்க்கு எல்லாம்
உரையற முழுதும் புரைபட உரைத்தும்

என்று நச்சினார்க்கினியர் உரைச் சிறப்பை அவரின் உரைப்பாயிரப் பகுதி சுட்டுகிறது. இவரின் உரை நூல்களில் ஏராளமான வரலாற்றுச் சிறப்புகள் பொதிந்து காணப்படுகின்றன. நச்சினார்க்கினியர் உரைநூல்களில் எண்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியரின் உரை நூல்கள் அனைத்தின் இறுதியிலும் உள்ள ‘மதுரை யாசிரியர் பாரத்துவாசி செய்த நச்சினார்க்கினியர் செய்தவுரை’ என்ற குறிப்பு மூலநூலினும் மேலாக உரை நூல் பெற்றிருந்த இடத்தைக் காட்டுகிறது.

புலமையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நச்சினார்க்கினியர் உரையில் தமிழ் நூல்களின் தொகுப்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாய் உள்ளது. சங்க நூல்களின் தொகுப்பு மரபு குறித்து இதுவரை நாம் அறிந்திருக்கும் கருத்துகளுக்குள் மாற்றுப் பார்வையைச் செலுத்த வல்லதாய் அக்குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டுள் இறுதியாக இடம்பெற்றுள்ள ‘மலைபடுகடாம்’ நூலின் உரையிலும் அவரின் தொல்காப்பிய உரையிலும் அந்தக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

எவன் ஆலவாயிடை வந்த அமுதவாய் உடையன் என இயம்பப்பெற்றோன்
         எவன் பண்டைப் பனுவல் பல இறவாது நிலவ உரை எழுதி ஈந்தோன்
         எவன் பரம உபகாரி எவன் நச்சினார்க்கினியன் எனும் பேராளன்
         அவன் பாதம் இருபோதும் எப்போதும் மலர்க எனது அகத்து மன்னோ.

    என உ.வே. சாமிநாதையர் நச்சினார்க்கினியரை சிறப்பிக்கிறார்.

விவாதங்கள்

உ.வே.சாமிநாதையரின் அச்சுப் பதிப்பு வெளிவந்தவுடன் அந்தக் காலத்தில் தமிழ் பயின்று கொண்டிருந்த மாணவர்களுக்குப் பத்துப்பாட்டு பாடமாக இடம்பெற்றது. இந்தக் காலகட்டத்தில் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மறைமலையடிகள் நச்சினார்க்கினியர் உரையை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது ‘மாட்டு’ எனும் உத்தியின் மூலம் நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதை அறிந்து, நச்சினார்க்கினியருடன் மாறுபாடுகொண்டு பத்துப்பாட்டிலுள்ள முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய இருநூல்களுக்குத் தாமொரு புதிய உரையை எழுதி வெளியிட்டார். அவ்வுரைப் பதிப்பில் நச்சினார்க்கினியர் பாடலடிகளை இடம் மாற்றிப் பொருள் கொள்ளும் முறையை ஆராய்ந்து மறுத்து எழுதினார். நச்சினார்க்கினியர் அவ்வாறு இடம்மாற்றிப் பொருள் கொண்டிருப்பதன் மூலம் மூலநூலாசிரியனின் கொள்கையைச் சிதைத்திருப்பதாகவும் அவர் கருதினார். அதனால் நச்சினார்க்கினியரின் உரையை ஏற்க மறுத்தார். நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் சுட்டிய மாட்டிலக்கணத்தைப் புரிந்து கொள்ளாமல் செய்யுளைத் திரித்து உரை எழுதியிருப்பதாக மறைமலையடிகள் மதிப்பிட்டார்.

உசாத்துணை

பல்துறையறிஞர் நச்சினார்க்கினியர் – மு.வை.அரவிந்தன்

ஆனந்த குற்றமும் சங்கப் பாடல் தொகுப்பு முறையும்-கீற்று இதழ், ஜூன் 2016

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை தமிழியல் ஆய்வுகள்

நச்சினார்க்கினியரின் உரை மறுப்பு நெறிகள் முனைவர் கு. வடிவேல் முருகன்

அடிக்குறிப்புகள்

  1. தண்டமிழ் தெரித்த வண்புகழ் மறையோன்
    வண்டிமிர் சோலை மதுரா புரிதனி
    லெண்டிசை விளங்க வந்த வாசான்
    பயின்ற கேள்விப் பாரத்து வாச (50)
    னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய
    தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
    தானே யாகிய தன்மை யாள
    னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய
    னிருவினை கடியு மருவியம் பொதியின் 55
    மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க
    வூழி யூழி காலம்.
    வாழி வாழியிம் மண்மிசை யானே.

    -கலித்தொகை உரைப்பாயிரம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.