under review

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

From Tamil Wiki
பதினெண் கீழ்க்கணக்கு நூல்

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுவது போல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம்

அடிநிமிர்வு இல்லாத வெண்பாக்களினால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களைப் பற்றிப் பாடுவதே கீழ்க்கணக்கு நூல்கள் என 'பன்னிரு பாட்டியல்’ தெரிவிக்கின்றது.

"அகவலும் கலிப்பாவும் பரிபாடலும்
பதிற்றைந் தாதி பதிற்றைம்பது ஈறாக
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்
வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்
எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே"

-என்கிறது பன்னிரு பாட்டியல்.

கீழ்க்கணக்கு நூல்கள் பட்டியல்

"நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்
பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு"

- என்ற தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக் கூறுகின்றது.

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இனியவை நாற்பது
  4. இன்னா நாற்பது
  5. களவழி நாற்பது
  6. கார் நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. ஐந்திணை எழுபது
  9. திணைமொழி ஐம்பது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. இன்னிலை (அ) கைந்நிலை
  17. முதுமொழிக்காஞ்சி
  18. ஏலாதி

-என மேற்கண்ட பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களாகக் கருதப்படுகின்றன.

மதுரைப் புலவர்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுமையும் மதுரையில் வாழ்ந்த புலவர்களால் ஆக்கப்பெற்றவை என்பதைப் பின்வரும் தனிப்பாடல் விளக்குகிறது.

"மாப்புலவர் எல்லோரும் மாக்கூடற்கண் இருந்து
பாற்படுத்த தென் தமிழின் பாநான்கின் -வாய்ப்புடைத்தாய்ப்
பண்பாய்ந்து உரைத்த பதினெட்டுக் கீழ்க்கணக்கும்
வெண்பாவின் பால் உரைத்தார் மிக்கு"

இன்னிலையும் கைந்நிலையும்

கீழ்கணக்கைப் பற்றிய தனிப்பாடல்

"இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு"
என்று குறிப்பிடுகின்றது. இன்னிலை மற்றும் கைந்நிலை இரண்டையுமே கீழ்க்கணக்கு நூல்களில் இப்பாடல் வரிசைப்படுத்துகிறது. அதே சமயம் வேறு சில நூல்களில்
"இன்னிலை காஞ்சியுட நேலாதி யென்பவே
கைநிலைய வாங்கீழ்க் கணக்கு"

-என்ற குறிப்பு காணப்படுகிறது. இன்னிலையை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் கொண்டால், கைந்நிலை என்பது மறைந்து 'ஒழுக்க நிலையனவாம் கீழ்க்கணக்கு’ என்று அடைமொழியாகின்றது. (கை = ஒழுக்கம்) கைந்நிலையை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் கொண்டால் இன்னிலை என்பது மறைந்து 'இனிய நிலைமையாகிய காஞ்சி’ என்று அடைமொழியாகின்றது. (இன்னிலை = இனிய நிலை) இதனால் கீழ்க்கணக்கு நூல் இன்னிலையா அல்லது கைந்நிலையா என்ற சந்தேகம் அக்காலத்தில் எழுந்தது. கீழ்க்கணக்கு நூல் 'இன்னிலை'தான் என்றும், 'கைந்நிலை'தான் என்றும் அறிஞர்களிடையே விவாதமும் நடந்தது.

இன்னிலை - கைந்நிலை விவாதம்

இன்னிலை - வ.உ.சிதம்பரம் பிள்ளை உரை

இன்னிலையை வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பித்தார். வ.உ.சியால் உரை எழுதப் பெற்ற அறநூலான இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் பத்து வெண்பாக்களையும் பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பத்துப்பால் பனிரெண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் பதினான்கு வெண்பாக்களையும் கொண்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே இன்னிலை என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கருத்து. கைந்நிலையை அனந்தராமையர் என்பவர் பதிப்பித்தார். இந்நூல் 60 பாடல்களைக் கொண்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழர்களின் ஐவகை நிலங்களைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. அதனால் கைந்நிலைக்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. கைந்நிலையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத்தக்கது என்பது அனந்தராமையரின் கருத்து. இரண்டு நூல்களையும் மிக விரிவாக ஆராய்ந்து உரை எழுதிய சங்குப் புலவர் எது பதினெண் கீழ்க்கணக்கு நூலில் இடம் பெறத்தக்கது என்பதைச் சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளார். அவர் தனது இன்னிலை ஆய்வுரையில் "உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் ஒன்றுமின்று. வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர். உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23-ம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5-ம் சூத்திரவுரை 12-ம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம்பூரணத்தை நோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113-ம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5-ம் செய்யுள் மேற்கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2-ம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற்கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க." [1] என்று குறித்துள்ளார்.

கைந்நிலை - அனந்தராமையர் உரை

கைந்நிலையைப் பற்றி சங்குப்புலவர், "இந்நூலில் ஆறாம் எண்ணுள்ள 'மரையாவுகளும்’ என்ற கவியும், ஏழாம் எண்ணுள்ள 'தாழை குருகினும்’ என்ற கவியும் தொல்காப்பியம் இளம்பூரணத்தில் இன்ன இன்ன துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டன என்று பழையவுரை காட்டுகிறது. அதன்படியே ஆராய்ந்தால் ஆங்காங்கு அவைகளே மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியத்திலும் ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் நம்பியகப்பொருளில் இரண்டடி மட்டுமே மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் பழையவுரை கூறுகிறது. அதன்படியே அமைந்திருக்கிறது" [2] என்கிறார். கைந்நிலை தொல்காப்பியம், நம்பி அகப்பொருள் போன்றவற்றில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளமையால் அதுவே கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத் தக்கது என்பது சங்குப் புலவரின் முடிவு.

கீழ்க்கணக்கு நூல்களின் பா வகை

கீழ்க்கணக்கு நூல்கள் பஃறொடை, நேரிசை, இன்னிசை, சிந்தியல், குறள் வெண்பாக்களால் ஆன நூல். பஃறொடை வெண்பா வருதலினால் சில பாடல்கள் நான்கடிக்கு அதிகமாக ஐந்து, ஆறு அடிகளிலும் வருகிறது. பொதுவாக நான்கும், நான்கிற்குக் கீழ்ப்பட்ட அடிகளுமே பதினெண் கீழ்க்கணக்கில் பெரும்பாலும் அமைந்துள்ளன. இரண்டாம் அடியில் நான்கு சீராய் வராது ஈற்றடி போல் முச்சீராய் வரும் சவலை வெண்பாவும் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு பதிப்பு வரலாறு

பகுப்பும் - அமைப்பும்

கீழ்க்கணக்கு நூல்களில் அறம் பற்றிய நூல்கள் பதினொன்று.

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. திரிகடுகம்
  6. ஆசாரக்கோவை
  7. பழமொழி நானூறு
  8. சிறுபஞ்சமூலம்
  9. முதுமொழிக்காஞ்சி
  10. ஏலாதி
  11. திருக்குறள்

அக நூல்கள் ஆறு

  1. கார் நாற்பது
  2. ஐந்திணை ஐம்பது
  3. கைந்நிலை (ஐந்திணை அறுபது)
  4. ஐந்திணை எழுபது
  5. திணைமொழி ஐம்பது
  6. திணைமாலை நூற்றைம்பது

ஒரே ஒரு நூல் மட்டும் புற நூல்

  1. களவழி நாற்பது

சங்கம் மருவிய காலம் இருண்ட காலமா?

சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அக்காலத்தில் தான் தமிழின் மிக முக்கியமான நீதி நூல்கள் தோன்றியிருக்கின்றன. ஆகவே, அதற்கான தேவை அக்காலகட்டத்தில் இருந்திருக்கிறது என்பதும், அத்தகைய சூழல்கள் அப்போது நிலவியிருக்கின்றன என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page