எட்டுத்தொகை
To read the article in English: Ettuthokai.
எட்டுத்தொகை எட்டு நூல்களின் தொகுப்பு. கடைச்சங்க காலத்து தொகை நூல்களில் ஒன்று. எட்டுத்தொகையாகவும், பத்துப்பாட்டாகவும் பிரிக்கப்பட்ட பதினெண்மேற்கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்டது.
நூல் பற்றி
பதினெண் மேற்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. பல புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டது. பல பாடல்களில் எழுதியவர் பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், இரண்டாயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை, எழுநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் இருபத்தி ஐந்து அரசர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்களும் உள்ளனர். ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் நூற்றியிரண்டு.
எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்தவை. சில வஞ்சிப்பா பாடல்களும் உள்ளன. மூன்று அடிகள் சிற்றெல்லையாகவும் நானூற்றிப்பத்து அடிகள் பேரெல்லையாகவும் உள்ளன.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத்தொகை.
அகம் சார்ந்தவை
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
புறம் சார்ந்தவை
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
அகமும் புறமும் கலந்தமைந்தது
- பரிபாடல்
உசாத்துணை
✅Finalised Page