under review

பதிற்றுப்பத்து

From Tamil Wiki

பதிற்றுப்பது சங்க இலக்கியத் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பான புறத்திணை நூல். முதல் மற்றும் இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை.

பெயர்க்காரணம்

பத்து மன்னர்களைப் பற்றி பத்து புலவர்களால் பத்து பத்தாகப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகையால் பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது.

காலம்

கடைச்சங்க காலப் புலவர்களான கபிலர், பரணர் போன்றோரின் பாடல்கள் இடம்பெறுவதால் பதிற்றுப்பத்து கடைச்சங்க காலத்தில் (பொ.மு. 4 - பொ.யு. 2-ம் நூற்றாண்டு) இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சிலர் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கருதுகின்றனர்.

பதிப்பு,வரலாறு

சுவடிகளில் அழியும் நிலையிலிருந்த பதிற்றுப்பத்து நூலை பல சுவடிப்பதிப்புகளை ஒப்புநோக்கி 1904-ல் உ.வே. சாமிநாதையர் உரைக்குறிப்புடன் பதிப்பித்தார். ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் விளக்கவுரைப் பதிப்பு ஒன்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக ஜனவரி 1950-ல் வெளிவந்தது. அதன்பின் பல பதிப்புகள் வெளிவந்தன.

பாடியவர்கள், பாடப்பட்டோர்

பத்து பாடியவர் பாட்டுடைத் தலைவன்
முதல்பத்து கிடைக்கப்பெறவில்லை உதியன் சேரலாதன் எனக் கருதப்படுகிறது
இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவன்
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
ஐந்தாம் பத்து பரணர் செங்குட்டுவன்
ஆறாம் பத்து காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

(வானவரம்பன்)

ஏழாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன்
எட்டாம் பத்து அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர்க் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை
பத்தாம் பத்து கிடைக்கப்பெறவில்லை

நூல் அமைப்பு/உள்ளடக்கம்

பதிற்றுப்பத்து நூறு ஆசிரியப்பக்களால் (பத்து பத்துகள்) ஆனது(கிடைத்த பாடல்கள் 80-இரு பத்துகள் கிடைக்கவில்லை). பாடல்கள் 8-57 அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலிலுள்ள பாடல்களில் காணப்படும் அழகான சொற்றொடர்களே பாடல்களின் தலைப்பாகின்றன. சங்க நூல்களில் அனைத்துப் பாடல்களும் பாடலில் உள்ள தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.

பதிற்றுப்பத்தில் ஒன்றாம் பத்து அல்லது பத்தாம் பத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய சில பகுதிகளை தொல்காப்பிய உரையாலும் புறத்திரட்டாலும் அறிய வந்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்[1].

வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப்பெற்றுள்ளதால் இந்நூல் 'இரும்புக்கடலை' எனவும் அழைக்கப்படுகிறது.

அனைத்துப் பாடல்களும் பாடாண் திணையைச் சார்ந்தவை. சேர மன்னர்களின் ஆட்சித் திறம், குடிகளைக் காக்கும் தன்மை, படை வன்மை, வீரம், போர்த்திறம், பகைவருக்கருளும் பண்பு, கல்வியறிவு, கொடை, புகழ், கலைஞர்கள் மற்றும் புலவர்களைச் சிறப்பிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. பதிற்றுப்பத்திலிருந்து முதல் நூற்றாண்டுக் காலத்துச் சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு, நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

முதல் பத்து

முதற் பத்து கிடைக்கப்பெறவில்லை. பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுகின்றனர்

இரண்டாம் பத்து

உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

  • புண்ணுமிழ் குருதி,
  • மறம் வீங்கு
  • பல்புகழ்,
  • பூத்த நெய்தல்,
  • சான்றோர் மெய்ம்மறை,
  • நிரைய வெள்ளம்,
  • துயிலின் பாயல்,
  • வளம்படு வியன்பணை,
  • கூந்தல் விறலியர்,
  • வளன் அறு பைதிரம்,
  • அட்டு மலர் மார்பன்

என்ற தலைப்புக்களில் குமட்டூர்க் கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார். நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் வில்லைப் பொறித்தவன். ஆரியர்கள், கடம்பர்களை வென்றவன். பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன். போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்தான். உறவினருக்குப் பசியைப் போக்க சோறளித்தான். இவன் புலவர்களுக்கு தெளிந்த கள்ளையும், ஆடை அணிகலன்களையும் பரிசாக வழங்கினான்.

14-ம் பாடலில் கோள்கள், விண்மீன்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மூன்றாம் பத்து

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை

  • அடுநெய் ஆவுதி
  • கயிறு குறுமுகவை
  • ததைந்த காஞ்சி
  • சீர்சால் வெள்ளி
  • கான் உணங்கு கடுநெறி
  • காடுறு கடுநெறி,
  • தொடர்ந்த குவளை
  • உருத்துவம் மவிர் நிறை,
  • வெண்கை மகளிர்
  • புகன்ற ஆயம்

என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கெளதமனார். குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர்.

உம்பற் காட்டுப் பகுதியில் இருந்த மிகுந்த காவலை உடைய அகப்பா என்னும் பகைவரின் கோட்டையை குட்டுவன் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான்.

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான். நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது என இப்பாடல்கள் கூறுகின்றன.

நான்காம் பத்து

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன. நான்காம் பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார். இப்பத்தில் பாடப்பட்ட மன்னன் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பதுமன் தேவி இருவரின் மகன். களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலை காப்பியாற்றுக் காப்பியனார்

  • கமழ்குரல் துழாய்
  • கழையமல் கழனி
  • வரம்பில் வெள்ளம்
  • ஒண்பொறிக் கழற்கால்
  • மெய்யாடு பறந்தலை
  • வாள்மயங்கு கடுந்தார்
  • வலம்படுவென்ற,
  • பரிசிலர் வெறுக்கை
  • ஏவல் வியன் பணை
  • நாடுகாண் அவிர் சுடர்

எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.

இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச் செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில் என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை முழுமையும் அழித்தான். மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன். தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக் குடிக்க வைத்துத் தானும் உண்டு, இரவலர்களை வேற்றிடம் செல்லாமல் காப்பான்.

ஐந்தாம் பத்து

ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். பாட்டுடைத் தலைவன் சேரன் செங்குட்டுவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன். இவனது சிறப்பை

  • சுடர்வீ வேங்கை
  • தசும்பு துளங்கு இருக்கை
  • ஏறா ஏணி
  • நோய்தல்
  • நோன்தொடை,
  • ஊன்துவை அடிசில்
  • கரைவாய்ப் பகுதி
  • நன்னுதல் விறலியர்
  • பேரெழில் வாழ்க்கை
  • செங்கை மறவர்
  • வெருவரு புனல்தார்

என்ற தலைப்புகளில் பாடினார் பரணர். பகைவர் வலிமை கெட வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன். இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும் இருந்தன. செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன் மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான். தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு, தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான். பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை, உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார். நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் செங்குட்டுவன்

ஆறாம் பத்து

காக்கைபாடினியார் நச்செள்ளையார் இப்பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் சிறப்புகளைப் பாடுகிறார். குட நாட்டுமன்னன் சேரலாதன், வேளாவிக் கோமானின் மகள் தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்னும் இயற்பெயர் கொண்ட இவனது புகழை

  • வடு அடு நுண்ணுயிர்
  • சிறுசெங்குவளை
  • குண்டு கண் அகழி
  • நில்லாத் தானை
  • துஞ்சும் பந்தர்,
  • வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி
  • சில்வளை விறலி,
  • ஏவிளங்குதடக்கை
  • மாகூர் திங்கள்
  • மரம்படு தீங்கனி

ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில் வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன் மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பினான். இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் சான்றோர்களும் கூடியிருப்பர். கொடிய நஞ்சினை உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின் இடி முழக்கத்தை ஒத்தவன். அவனுடைய வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள். கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன். வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் புகழை உடையவன். சேரலாதன் பகைவர்க்கு அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு இளகுபவன் என்று காக்கைபாடினியார் குறிப்பிடுகிறார்.

ஏழாம் பத்து

சேரலாதன் அந்துவஞ்சேரல், பொறையன் தேவி இருவருக்கும் பிறந்தவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். செல்வக் கடுங்கோ வாழியாதனின் புகழை கபிலர் பின்வரும் தலைப்புகளில் பாடியிருக்கிறார்.

  • புலாஅம் பாசறை
  • வரைபோல் இஞ்சி
  • அருவி ஆம்பல்
  • உரைசால் வேள்வி
  • நாள்மகிழ் இருக்கை
  • புதல்சூழ் பறவை
  • வெண் போழ்க்கண்ணி
  • ஏம் வாழ்க்கை
  • மண்கெழு ஞாலம்
  • பறைக் குரல் அருவி

செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன். பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன். இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்று கபிலர் பாடுகிறார்.

எட்டாம் பத்து

செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை. பெருஞ்சேரல் இரும்பொறையின் வரலாற்றை பின்வரும் தலைப்புகளில் அரிசில்கிழார் பாடியிருக்கிறார். குறுந்தாள் ஞாயில்

  • உருத்து எழு வெள்ளம்
  • நிறம் திகழ் பாசிழை
  • நலம் பெறு திருமணி
  • தீம் சேற்று யாணர்
  • மா சிதறு இருக்கை
  • வென்றாடு துணங்கை
  • பிறழ நோக்கு இயவர்
  • நிறம்படு குருதி
  • புண்ணுடை எறுழ்த் தோள்

சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள், அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன். இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. போரில் சுடுவதற்காக உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு வரியாகக் கொடுக்காத பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என வணங்கி நிற்பர். இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ உணர்வும், பிறவும் முன் செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான்.பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் எண்ண முடியாது என இவனது சிறப்பை அரிசில்கிழார் பாடியிருக்கிறார்.

ஒன்பதாம் பத்து

குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும், அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை. இளஞ்சேரல் இரும்பொறையின் வரலாற்றை பின்வரும் தலைப்புகளில் பெருங்குன்றூர் கிழார் ஒன்பதாம் பத்தில் பாடியிருக்கிறார்.

  • நிழல்விடு கட்டி
  • வினைநவில்யானை
  • பல்தோல் தொழுதி
  • தொழில் நவில் யானை
  • நாடுகாண் நெடுவரை
  • வெந்திறல் தடக்கை
  • வெண்தலைச் செம்புனல்
  • கல்கால் கவணை
  • துவராக் கூந்தல்
  • வலிகெழு தடக்கை

இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன். பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து. சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பூழிநாட்டைக் கைப்பற்றியவன் அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும் உடையவன். பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன். கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர். கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும் வாளைச் சுமந்தவர்களாக, போர் செய்வதை விருப்பமாகக் கொண்டனர். தம் குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர். இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம் கொள்ளாது, தம்மைப் பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர் புரியப் பகைவர்கள் இல்லாததால் வீரர்கள் போர் வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும். குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை அணிந்து நிற்கும். செங்கோன்மை, சால்பு, வீரம் வற்றாத புகழ், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.

உரைகள்

  • பதிற்றுப்பத்துக்கு பழைய உரை நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் ஒருவர் எழுதியது. குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் இடைப்பட்டதான் இவ்வுரையில் பாடல்களின் தலைப்புப் பொருத்தமும், இலக்கணக் குறிப்புகளும் காணப்படுகின்றன்.
  • ஔவை சு. துரைசாமிப்பிள்ளை உரை
  • யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை
  • புலியூர் கேசிகன் உரை

பதிற்றுப்பத்தின் பதிகங்கள்

பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் ஓர் பதிகம் காணப்படுகிறது. இப்பதிகங்கள் சேர மன்னர்களின் மெய்க்கீர்த்தியாகவும், பாட்டுடைத் தலைவன், அவனது ஆட்சிக்காலம், பாடியவர், அவர் பெற்ற பரிசில்கள் போன்றவற்றின் குறிப்பாகவும் விளங்குகின்றன. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன் முதலாக பொ.யு. 989-ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவை கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

உரையில்லாத மூலத்தொகுதிகளில் பதிகங்கள் இடம்பெறாமையால் நூலைத் தொகுத்தவர்களால் துறை, வண்ணம், தூக்கு, தொகை ஆகியவை வகுக்கப்பட்டு எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பதிகங்கள் அதன்பின் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். "ஒவ்வாரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் போன்றவை உரையில்லாத மூலப் பிரதிகளிெலல்லாம் இருத்தலின் அவை உரையாசிாியரால் எழுதப்பட்டனவல்லவென்றும் பதிகங்கள் உரைப்பிரதிகளில் மட்டும் காணப்படுகின்றைமயால் அவற்ைற இயற்றிேனார் நூலாசிரியரல்லரென்றும் தெரிகின்றன. ஆசிாியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியைவையன்று தோன்றுகின்றன" என்று உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

புராணக் குறிப்புகள், தொன்மங்கள்

பதிற்றுப்பத்தில் கொற்றவை, திருமகள், அருந்ததி , கொல்லிப்பாவ, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன[2].

சூரபத்மனை செவ்வேள் வெற்றி கொண்டது(11), கௌரவர்களுடன் சேர்ந்து கர்ணன் போரிட்டது(14),

நகரங்கள்

நறவு சேர நாட்டின் சிறப்புடைய நகரங்களுள் ஒன்று (60). தொண்டி சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம். யவன யாத்திரிகர் அதனைத் துண்டிஸ் என்று குறித்துள்ளனர். கொடுமணம் வேலைப்பாடு மிகுந்த நகைகட்குப் பெயர் பெற்றது (74). பக்தர் பாண்டிய நாட்டுக் கொற்கையைப் போல முத்துகளுக்குப் பெயர் பெற்றது (67, 74). மரந்தை மற்றொரு நகரம்.

பாடல் நடை

இரண்டாம் பத்து-

பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்(17)

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு

பெயர்:வலம்படு வியன்பணை பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின்,
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

ஆறாம் பத்து

56.வென்றிச் சிறப்பு

துறை:ஒள் வாள் அமலை வண்ணமும் தூக்கும்: அது

பெயர்:வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page