under review

பழமொழி நானூறு

From Tamil Wiki

பழமொழி நானூறு நூல் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார்.

பதிப்பு, வெளீயீடு

பழமொழி நானூறு நூலை 1874- ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சேற்றி வெளியிட்டவர் சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியார். இதனையடுத்து நி.சு. ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு 1954- ஆம் ஆண்டு வெளிவந்தது. 1914- ஆம் ஆண்டு பத்து பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப் பகுப்புகளையும் பால் இயல் என்னும் பகுப்புகளையும் செய்து, சிறந்த உரையுடன் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது. இதன் பிறகு ஏட்டுப் பிரதிகளில் கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பும்(1918) திருநாராயண அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) பதிப்பும்(1922 ) வெளிவந்தன.

ஆசிரியர் குறிப்பு

பழமொழி நானூறு நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார். இவர் முன்றுறையர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சமணத் துறவி என்பதை பழமொழி நானூறு நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

நூல் அமைப்பு

பழமொழி நானூறு சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கம் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூல். ஒவ்வொரு பாடலிலும் கல்வி, ஒழுக்கம், அரசநீதி போன்றவை சார்ந்த ஓர் நீதியும், கடைசி அடியில் அந்த நீதியை எடுத்துக்காட்டும் பழமொழியும் இடம்பெறுகின்றன. இதன் காலம் பொ.யு. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

உள்ளடக்கம்

பழமொழி நானூறு நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புகளும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும்;

  • கல்வி (10)
  • கல்லாதார் (6)
  • அவையறிதல் (9)
  • அறிவுடைமை (8)
  • ஒழுக்கம் (9)
  • இன்னா செய்யாமை (8)
  • வெகுளாமை (9)
  • பெரியாரைப் பிழையாமை (5)
  • புகழ்தலின் கூறுபாடு (4)
  • சான்றோர் இயல்பு (12)
  • சான்றோர் செய்கை (9)
  • கீழ்மக்கள் இயல்பு (7)
  • கீழ்மக்கள் செய்கை (17)
  • நட்பின் இயல்பு (10)
  • நட்பில் விலக்கு (8)
  • பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் (7)
  • முயற்சி (13)
  • கருமம் முடித்தல் (15)
  • மறை பிறர் அறியாமை (6)
  • தெரிந்து செய்தல் (13)
  • பொருள் (9)
  • பொருளைப் போற்றுதல் (8)
  • நன்றியில் செல்வம் (14)
  • ஊழ் (14)
  • அரசியல்பு (17)
  • அமைச்சர் (8)
  • மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
  • பகைத்திறம் (26)
  • படைவீரர் (16)
  • இல்வாழ்க்கை (21)
  • உறவினர் (9)
  • அறம் செய்தல் (15)
  • ஈகை (15)
  • வீட்டு நெறி (13)

பழமொழி நானூறிலிருந்து தற்காலத்திலும் பயின்றுவரும் பழமொழிகள்

ஆயிரங்காக்கைக் கோர்கல் (249) காக்கைக்கூட்டத்தில் கல் எறிந்தால்போல்
இருதலைக்கொள்ளி எறும்பு (141)
இறைத்தோறும் ஊறும் கிணறு (378) இறைக்கும் கிணறுதான் ஊறும்
உமிக்குற்றிக் கைவருந்துவார் (348)
ஓடுக ஊரோடு மாறு (195) ஊரோடு ஒத்துவாழ்
குன்றின்மேல் இட்ட விளக்கு (80)
தனிமரம் காடாதல் இல் (286) தனிமரம் தோப்பாகாது
திங்களை நாய் குரைத்தற்று (107) சூரியனைப் பார்த்து நாய் குரைத்ததுபோல
தொளை எண்ணார் அப்பம் தின்பார் (165) வடையத் தின்னு தொளையை எண்ணாதே
நாய்காணின் கற்காணாவாறு (361) நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
நாய் வால் திருந்துதல் இல் (316) நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
நிறைகுடம் நீர் தளும்பல் இல் (9) நிறைகுடம் தளும்பாது
நுணலுந் தன் வாயற் கெடும் (114)
பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி (70) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாம்பறியும் பாம்பின் கால் (7)
பூவோடு நார் இயைக்குமாறு (88) பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்

வரலாற்றுச் செய்திகள்

  • நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (7)-கரிகால் சோழன் முதியவரைபோல் வேடம் தரித்து நீதி உரைத்தது
  • குறுநில மன்னர்களும் வள்ளல்களுமான பாரி மற்றும் பேகன் இருவரையும் குறித்தது(75)
  • தவற்றை நினைதுத் தன் கைக்குறைத்தான் தென்னவனும் (77) (பொற்கைப் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனைக் குறித்தது)
  • தூங்கும் எயிலும் தொலைத்தலால் (156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் எனும் சோழ மன்னனைக் குறித்தது)
  • சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழனைக் குறித்தது)
  • கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (243) (மனு நீதி கண்ட சோழனைக் குறித்தது)
  • அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவனைக் குறித்தது).
  • பாரி மடமகள் பாண்மகற்கு..... நல்கினாள்(382) (பாரியின் மகள்களைக் குறித்தது)

புராணக் குறிப்புகள்

பழமொழி நானூறு நூலில் பல புராணக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

  • வாமன அவதாரம்-உலகந்தாவிய அண்ணலே (178)
  • மாவலி-ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் (184)
  • பஞ்ச பாண்டவர் அரக்கு மாளிகைக்குள் சென்றது-அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (235)
  • ராமாயணம்-பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (258) - பஞ்ச பாண்டவர் அரக்கு மாளிகைக்குள் சென்றது
  • பஞ்ச பாண்டவர் அரக்கு மாளிகைக்குள் சென்றது-பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (357)

உதாரணப் பாடல்கள்

அறிஞரைச் சேர்தல்

ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-
மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று.(29)

மான் விரும்பும் கண்ணை உடையாய்! மனத்திட்பம் உடைய அறிஞர்கள் தம்மைக் கல்வி யறிவால் ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுதல் வீரம் பொருந்திய பேரரசர்கள் யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோடு ஒக்கும்.

ஒழுக்கமே மருந்து

பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின்
தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!
பிணி ஈடு அழித்து விடும்.(40)

குளிர்ந்த கடல் நாடனே! (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால் அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்) பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்கு அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாகும்.

சான்றோர் பெருமை

நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர்.(69)

பொருள்;

சிறப்புப்படத் தோன்றும் ஒளியை கொண்டதாய், நீரிலே படிந்தாலும் ஒட்டாத ஒப்பற்ற இரத்தினத்தைப்போல் தாற்றப்பட்டதாயினும் தலைமகனுடைய பெருமை நூறுஆயிரவர் ஒளிக்கு ஒப்பாகும்.

உசாத்துணை


✅Finalised Page