under review

சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
கீரனூர் சகோதரர்கள் - சின்னத்தம்பி பிள்ளை, கண்ணப்பா பிள்ளை, புகைப்பட உதவி: மங்கல இசை மன்னர்கள்
கீரனூர் சகோதரர்கள் - கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை, சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை, புகைப்பட உதவி: மங்கல இசை மன்னர்கள்

சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை (ஜூன் 27, 1896 - ஜூலை 13, 1944) ஒரு நாதஸ்வரக் கலைஞர். "கீரனூர் சகோதரர்கள்" என்றறியப்பட்ட இருவரில் ஒருவர்.

இளமை, கல்வி

மாயூரத்துக்கு அருகில் உள்ள கீரனூரில் இருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் என்ற சிற்றூரில் கந்தஸ்வாமி பிள்ளை - மாரிமுத்தம்மாள் ஆகியோரின் மகனாக ஜூன் 27, 1896 அன்று கண்ணப்பா பிள்ளை பிறந்தார்.

கண்ணப்பா பிள்ளை கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையுடன் சேர்ந்து கீரனூர் முத்துப்பிள்ளை என்பவரிடம் வாய்ப்பாட்டிலும் நாதஸ்வரத்திலும் பயிற்சி பெற்றார். பின்னர் சின்னத்தம்பி பிள்ளை காஞ்சீபுரம் சென்றதும், மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

கண்ணப்பா பிள்ளைக்கு குந்தலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் பொன்னையா என்ற தம்பியும் இருந்தனர்.

திருவாரூர் புலிவலத்தை சேர்ந்த பாக்கியத்தம்மாள் என்பவரை கண்ணப்பா பிள்ளை மணந்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி பிள்ளை என்ற மகனும் பட்டம்மாள் என்ற மகளும் பிறந்தனர். தக்ஷிணாமூர்த்தி பிள்ளை புலிவலம் கிராம முனிசீப்பாக இருந்தவர். பட்டம்மாள் நாதஸ்வரக் கலைஞர் திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளையின் மனைவி.

இசைப்பணி

கண்ணப்பா பிள்ளையும் சின்னத்தம்பி பிள்ளையும் இணைந்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார். இவர்கள் 'கீரனூர் சகோதரர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமாக சில இசைத்தட்டுக்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவர்கள் கீர்த்தனைகள் வாசிப்பதில் காணப்பட்ட ஒருங்கிணைவும், ராக ஆலாபனை மற்றும் பல்லவியில் கடினமான லய வேலைப்பாடுகளும் புகழ் பெற்றவை.

1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் நடத்திய இசை மாநாட்டில் கீரனூர் சகோதரர்கள் மேளமும் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை மேளமும் நடைபெற்றன. அங்கு இவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. தருமபுரம் ஆதீனகர்த்தரும் தங்கப் பதக்கங்களும் தங்கக் கைச்சங்கிலிகளும் வழங்கியுள்ளார். வருடந்தோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்வதை கீரனூர் சகோதரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

சில சமயம் கீரனூர் சகோதரர்கள் இடையே மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்தும் கச்சேரிகள் செய்திருக்கிறார்கள். அது போன்ற காலத்தில் சின்னத்தம்பி பிள்ளை தவில் வாசிக்க, வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையை அழைத்துச் செல்வது வழக்கம். கண்ணப்பா பிள்ளை திருக்கண்ணபுரம் குமாரஸ்வாமி பிள்ளையை அழைத்துச் செல்வார். எத்தனை மனவேற்றுமை ஏற்பட்டாலும் மீண்டும் விரைவிலேயே இருவரும் ஒன்று சேர்ந்து விடுவதும் வழக்கமாக இருந்தது.

மாணவர்கள்

சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • யாழ்ப்பாணம் நல்லூர் முருகையா பிள்ளை
  • அப்புலிங்கம் பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கீரனூர் சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

சிறுபுலியூர் கண்ணப்பா பிள்ளை ஜுலை 13, 1944 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page