being created

சரஸ்வதி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 12:02, 11 February 2022 by Siva Angammal (talk | contribs)

இப்பக்கத்தை கா.சிவா உருவாக்குகிறார்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


சரஸ்வதி (இதழ்).jpg


சரஸ்வதி என்பது தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளுக்கு அடித்தளமாக விளங்கிய தமிழ் இலக்கிய சிற்றதழாகும். இவ்விதழ்  பொதுவுடமையாளரான  வ.விஜயபாஸ்கரனால் நடத்தப்பட்டதாகும்.

தோற்றம்

சரஸ்வதி இதழ்  1955 மே மாதம் வ.விஜயபாஸ்கரனால் துவக்கபட்டது. முதலில் மாத இதழாக தொடங்கப்பட்டு, 20.01.1958 முதல்  மாதமிருமுறை இதழாக வெளிவந்தது.

பெயர்க் காரணம்

பொதுவுடமையாளரான விஜயபாஸ்கரன் நடத்தும் பத்திரிக்கை என்பதால் சரசுவதிக்கு கம்யூனிச பத்திரிகை என்ற முத்திரை விழக்கூடாது, அரசியல் நிறம் தெரியாத கலை இலக்கியப் பத்திரிகையாகத் தெரியும்படியான 'கலைமகள்' போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். எனவே, முன்னோடி  இந்திய  முற்போக்கு எழுத்தாளர்  பிரேம்சந்த் நடத்திய இதழ்  'சரஸ்வதி' யின் பெயரையே அவர் தனது பத்திரிகைக்கும் தேர்ந்தெடுத்தார்.  இப்பெயர் விஜயபாஸ்கரனின் மனைவியின் பெயராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கம்

மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தருவது, மறைந்து வரும் பாரம்பரிய கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு ஆவன செய்வது- இவை 'சரஸ்வதி' ஆசிரியரின் நோக்கங்களாக இருந்தன. இவற்றை சரஸ்வதி இதழ் மூலம் நிறைவேற்றவும் செய்தார்.

ஆசிரியர்

மாத இதழாக தொடங்கியபோது விஜயபாஸ்கரன் ஆசிரியாக இருந்தார். 20.01.1958 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்த போது எஸ். ராமகிருஷ்ணன், ரகுநாதன, சுந்தர ராமசாமி மற்றும் ஆர்.கே. கண்ணன் ஆகியோர் விஜயபாஸ்கரனோடு ஆசிரியர் குழுவாக இணைந்து செயல்பட்டார்கள்.

படைப்பாளிகள் மற்றும் படைப்புகள்

  • அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக புதினங்கள் பலவற்றின் சுருக்கம், சுயமாக எழுதப்பெற்ற சிறுகதைகள், கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள், மெய்யியல், பண்பாடு, அறிவியல், பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு கட்டுரைகள், நல்ல கவிதைகள் போன்றவை "சரஸ்வதி" இதழில் வெளியாகின.
  • தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களில் ஒருவரான நிமாய் கோஷ் திரைப்படத் தொழில் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். சதுரங்கம் குறித்தும், ஒளிப்படக் கலை பற்றியும் விளக்கக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
  • ஜெயகாந்தனின் முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்ற கதைகளில் பெரும்பாலானவை சரஸ்வதி இதழில் வெளிவந்தவை.
  • சுந்தர ராமசாமிவல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை ஆகியோரின் சிறந்த கதைகள் பலவற்றை 'சரஸ்வதி' பிரசுரித்தது.
  • சுந்தர ராமசாமி,   தகழி சிவசங்கரப் பிள்ளையின் 'தோட்டியுட மகன்' நாவலை தமிழாக்கமாக "தோட்டி மகன்" என்ற பெயரிலும், தன் முதல் நாவலான 'புளியமரத்தின் கதை"யின் முதல் பாதியையும் சரஸ்வதி இதழில் எழுதினார்.
  • வல்லிக்கண்ணன் எழுதிய ‘அடிவானம்' நாவலின் ஒரு பகுதி இவ்விதழில் வெளியிடபட்டது.
  • க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், ந. பிச்சமூர்த்தி, நகுலன், மௌனிதொ.மு.சி. ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், சாமி சிதம்பரனார், கி. ராஜநாராயணன், ஆர். சூடாமணி, ஆகியோரின் படைப்புகள் "சரஸ்வதி" இதழில் வெளிவந்தன.
  • ஆர்வமூட்டிய விவாதங்களை சரஸ்வதி அவ்வப்போது வளர்த்தது. புதுமைப்பித்தன் இலக்கியம் பற்றி ஒரு விவாதம்,  சாகித்திய அகாடமி பரிசு அளிக்கிற போக்கு பற்றிய  கருத்துக்கள், மொழி வெறியர்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பண்டிதர்களின் போக்கை எதிர்த்து கட்டுரைகள், ' இலக்கியத்தில் ஆபாசம் என்பது குறித்துக் கண்டனங்களும் மறுமொழிகளும்  இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் சரஸ்வதி இதழில் விவாதிக்கப்பட்டது.
  • "சென்னைக்கு வந்தேன்" என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களது அனுபவங்களையும், "நானும் என் எழுத்தும்" என்று பலரது எண்ணங்களையும் வெளியிட்டது.
  • சிறந்த 'ஆண்டு மலர்' களை வெளியிட்டது.
  • 'புத்தக மதிப்புரை'ப் பகுதி மூலம் வாசகர்களுக்கு பலப்பல புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
  • "நமது எழுத்தாளர் வரிசை" என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.

முக்கியத்துவம்

எந்த ஒரு இதழும் அது உருவாக்கிய எழுத்தாளர்கள், முன் வைத்த படைப்புகள் வழியாக மட்டுமே காலத்தால் நினைவுகூறப்படுகிது. அவ்வகையில் சரஸ்வதி மிகுந்த முக்கியத்துவம் உள்ள சிற்றிதழ். நடு இதழ் என்றே சொல்ல வேண்டும், ஐம்பதுகளில் அது ஏழாயிரம் பிரதிகள் அச்சாகியது. இதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன்  போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள். முக்கியமான பிறமொழி எழுத்தாளர்களிடம் கட்டுரைகள்  பெற்று தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட்டது இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று.

நிறுத்தம்

"சரஸ்வதி" இதழ் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியது என்றாலும், பொருளாதார ரீதியில் தோல்வி  கண்டது. எவ்வளவு முயன்றும் தாங்கமுடியாத அளவு இழப்பு ஏற்பட்டது. மேலும், 1962-ல் சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை எல்லாம் கைது செய்தார்கள். அப்போது, பி. ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ப. விஜயபாஸ்கரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், 1962- ஆம் ஆண்டு நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.

தொடர்பான நூல்கள்

உசாத்துணை

  • வல்லிக்கண்ணன் எழுதிய . "தமிழில் சிறு பத்திரிகைகள்"(2004) நூல், மணிவாசகர் பதிப்பகம். (பக்கம் 55-58)
  • ப. விஜயபாஸ்கரன் நேர்காணல், புதிய புத்தகம் பேசுது இதழ், ஆகஸ்டு, 2004.