குமரி மலர்: Difference between revisions
(Inserted READ ENGLISH template link to English page) |
(changed template text) |
||
Line 39: | Line 39: | ||
* விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947); யாவரும் பதிப்பக வெளியீடு.<br /> | * விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947); யாவரும் பதிப்பக வெளியீடு.<br /> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{ | {{Finalised}} |
Revision as of 13:38, 15 November 2022
To read the article in English: Kumari Malar.
குமரி மலர்: (1943-1983) ஏ.கே.செட்டியாரின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த இதழ். புனைவுகளை இவ்விதழ் வெளியிடவில்லை. முழுக்கமுழுக்க பொது அறிவு மற்றும் ஆய்வுகளுக்காகவே குமரி மலர் வெளியிடப்பட்டது.
ஆசிரியர்
ஏ. கே. செட்டியார் பல முறை உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். அத்தகைய பயணங்களைப் பற்றியும் தனது அனுபவங்களையும் நூலாக எழுதிப் புகழ் பெற்றவர். காந்தி பற்றி முதன் முதலாக ஓர் ஆவணப் படத்தை எடுத்து வெளியிட்டவர்.
பதிப்பு, வெளியீடு
ஏ.கே.செட்டியார் காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மக்களிடையே காந்தியத் தத்துவங்களைப் பரப்புவதையும், பொது அறிவைப் பரவலாகச் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏப்ரல் 1943-ல், குமரி மலர் மாத இதழைத் தொடங்கினார்.
அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் இதழ்களை வெளியிடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசு விதித்திருந்தது. அதனால் 'மாத இதழ்’ போலவும், அதே சமயம் புத்தகம் போலவும் 'குமரி மலர்’ இதழைக் கொண்டு வர ஏ.கே. செட்டியார் திட்டமிட்டார். அதன்படி, தனி இதழாகவும், அதே சமயம் தனிப் புத்தகம் போன்றும் இவ்விதழ் மாதந்தோறும் வெளியானது. அதனைக் குறிப்பிடும் வகையில், 'மாதம் ஒரு புத்தகம்’ என்ற வாசகமும் இதழின் முதல் பக்கத்தில் இடம் பெற்றது.
ஒரே மாதிரியான முகப்புப் படத்தில் வண்ணங்கள் மட்டும் இதழுக்கு இதழ் மாற்றப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. குமரி மலர், புத்தகக் கடைகளில் விற்கப்படவில்லை. விரும்பிச் சேர்ந்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும் 500 என்ற எண்ணிக்கையிலேயே இருந்தது. இதழின் விலை எட்டணா. திரு.வி.க.வின் சகோதரருக்குச் சொந்தமான சாது அச்சுக் கூடத்தில் 'குமரி மலர்’ இதழ்கள் அச்சடிக்கப்பட்டன.
உள்ளடக்கம்
தமிழ் இலக்கியம், உளவியல், கைத்தொழில், ஆன்மீகம், அரசியல் போன்றவை குமரி மலர் இதழில் இடம் பெற்றன. மாதந்தோறும் பல கட்டுரைகளையும், பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட அறிவுரைகளையும், பல இதழ்களில் வெளியான முக்கியத் தகவல்களையும் தொகுத்து குமரி மலர் இதழ் வெளியிட்டு வந்தது.
ஆண்டுதோறும் வெளியான ஆண்டுமலர் பல்வேறு தகவல்களையும், அரிய செய்திப் படங்களையும், உலக அளவிலான செய்திகளையும் தாங்கி வந்தது. ஏ.கே. செட்டியாரின் உலகப் பயண அனுபவங்களும் இவ்விதழில் வெளியாகின. மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய விளம்பரங்கள் இதழ்கள் தோறும் வெளியாகியுள்ளன.
பங்களிப்பாளர்கள்
ராஜாஜி, பாரதிதாசன், ராய.சொக்கலிங்கன், ம.பெரியசாமித் தூரன், எஸ்.வி.வி., பி.ஸ்ரீ. ஆச்சார்யா, வெ.சாமிநாத சர்மா, தேசிக விநாயகம் பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, ல.சண்முகசுந்தரம், தே.ப.பெருமாள், பூ. அமிர்தலிங்கன், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.சு. அவினாசிலிங்கம், டி.கே.சி., நாராயண ஐயங்கார், ந. சுப்பு ரெட்டியார், தி.ஜ. ரங்கநாதன், சு. ராஜகோபாலன், ஏ.என். சிவராமன், தி.நா.சுப்பிரமணியன், த.நா. குமாரசாமி, ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மு.அருணாசலம், கி.சந்திரசேகரன், கு. அழகிரிசாமி, கௌரி அம்மாள், வேங்கடலட்சுமி எனப் பலர் இவ்விதழுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
பிற செய்திகள்
- 'குமரி மலர் வெளியீடுகள்’ என்ற தலைப்பில், ஏ. கே. செட்டியாரின் பிரயாண அனுபவங்கள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகியுள்ளன.
- ஏ.கே. செட்டியார் தமது பயண நூல்கள் அனைத்தையும் ’குமரி மலர்’ பதிப்பு மூலமே வெளியிட்டார்.
- பழைய இதழ்கள், சுவடிகள் மீது ஆர்வம் கொண்டவர் ஏ.கே. செட்டியார். அதற்காகப் பல ஊர்களுக்கும் பயணம் செய்து, பல வீடுகளின் பரண்களின் மீது கிடந்த நூல்களைச் சேகரித்து, அவற்றில் மக்களுக்குத் தேவையானவற்றை 'குமரி மலர்’ இதழில் வெளியிட்டார்.
- இந்தியா, சக்ரவர்த்தினி, கர்மயோகி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் வெளியான பாரதியாரின் பல அரிய பாடல்கள், கட்டுரைகள் இவ்விதழில் மீண்டும் வெளியாகின.
- தாகூரின் சிறுகதைகளும் இவ்விதழில் வெளியாகியுள்ளன.
- வெ. சாமிநாத சர்மா ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கதைகள் அதிகம் வெளிவந்தன.
இதழ் நிறுத்தம்
1983-ல், ஏ.கே. செட்டியாரின் மறைவோடு 'குமரி மலர்’ இதழ் நின்று போனது.
ஆவணம்
குமரி மலர் இதழ்களின் பிரதிகள் சில தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
உசாத்துணை
- குமரி மலர் இதழ்கள்: தமிழ் இணைய நூலகம்
- ஏ. கே. செட்டியார் வாழ்க்கைக் குறிப்பு
- குமரி மலர் கட்டுரைகள்-1
- குமரி மலர் கட்டுரைகள்-2
- விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947); யாவரும் பதிப்பக வெளியீடு.
✅Finalised Page