under review

மு. அருணாசலம்

From Tamil Wiki
மு. அருணாசலம்
மு. அருணாசலம்
மு.அ.மதிப்புறு முனைவர் பட்டம் பெறுதல்

மு. அருணாசலம் (மு.அ) (அக்டோபர் 29, 1909 - நவம்பர் 23, 1992) தமிழறிஞர், இலக்கிய வரலாற்றாசிரியர், பதிப்பாளர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு இவர் எழுதிய முக்கியமான நூல்கள்.

பிறப்பு, இளமை

மு.அருணாசலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில்(பழைய தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை, பரணி நட்சத்திரத்தில், கார்காத்த வேளாளர் குலத்தில் முத்தையா பிள்ளை-கௌரியம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இவரது தாய் வழித் தாத்தா தெம்மூர் சபாபதிப் பிள்ளையின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர். அதில் நால்வர் 1890-ல் பரவிய பிளேக் நோயில் காலமாயினர். அப்போதே நான்கு பேர் தென்னாப்பிரிக்காவிற்குக் கப்பலேறி விட்டனர். இன்று வரை அவர்கள் சார்ந்த தகவல் ஏதும் இல்லை. எஞ்சிய நால்வருக்கும் ஒரே பெண் வழி வாரிசான இவர் செல்லமாக வளர்க்கப்பட்டார்.

அருணாச்சலம் நினைவுமலர்

தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில், ஆசிரியர் ராமையா என்பவரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மு. அருணாசலம் மனைவி ராஜேஸ்வரியுடன்
மு. அருணாசலம் மனைவி ராஜேஸ்வரியுடன்

1930-ல் ராஜேஸ்வரி அம்மையாரை மணந்தார். இவருக்கு ஒரு மகன் சிதம்பரநாதன், மகள்கள் மணிமேகலை, கல்யாணி , அன்னபூரணி, கங்காதேவி மற்றும் உமாதேவி.

1931-ல் சென்னையில் அரசு கோ-ஆப்ரேட்டிவ் இன்ஸ்பெக்டர் ஆக வேலை கிடைத்து சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது போர்க்காலம் ஆகையால் திருப்பதிக்கு மாற்றல் செய்யப்பட்டார். மனதிற்கு அங்கு பிடிக்காததால் வேலையை விட்டு விட்டு சென்னை வந்தார். இந்தக் காலத்தில் இவருக்குப் பல சிறந்த தமிழறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர் வீட்டருகே குடியிருந்த டி.கே.சிதம்பரநாத முதலியாருடன் நட்பு உண்டானது. பின்னர் எஸ். வையாபுரிப் பிள்ளையிடம் பழகும் வாய்ப்பு கிடைத்து அவரது தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்கியது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த வையாபுரிப் பிள்ளையிடமே மாணவராகச் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் இறுதியாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

அருணாசலம் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். அவர் காலத்திய தமிழறிஞர்களாகிய உ.வே.சாமிநாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், மு. வரதராசனார், கா.சுப்ரமணிய பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ராமசாமி ஐயங்கார் , கருத்திருமன் போன்றவர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பொறுப்பேற்ற சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோடும் பழகியிருக்கிறார்.தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் "Doctor of Letters" (மதிப்புறு முதுமுனைவர்) பட்டம் அளித்தது.

மு.அருணாச்சலம் இளமையில்

தமிழ்ப் பணி

உ.வே.சாமிநாதையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகி தமிழாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். தமிழ் நூலகம் என்ற பதிப்பகம் தொடங்கி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, திரு.செல்லையா ஆகியோரின் கவிதைகளை பதிப்பித்தார்.

ஏடு சேகரிப்பும் பதிப்புப் பணிகளும்

வையாபுரிப்பிள்ளையிடமிருந்து பதிப்பு குறித்த நுட்பங்களை உள்வாங்கிக் கொண்ட மு.அருணாசலம்., 1940-ல் முக்கூடற்பள்ளு நூலை முதல்முதலாக அச்சேற்றினார். கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் 'மலரும் மாலையும்’என்ற நூலாக முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டார். கவிமணியின் கவிதைகளை அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. 'புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அருணாசலத்தின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு. அருணாசலத்தின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்[1].

உ.வே.சா. உடன் பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது என்ற நூல் முழுமையடைந்தது. அவர் சேகரித்த சுவடிகளில் "திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய சிறிய அழகிய சுவடி வெளியிடப்பட்டது. .

ராஜாஜியுடன் மு.அ

இவர் சேகரித்து வைத்திருந்த சுமார் 150-க்கும் அதிகமான பழந்தமிழ் ஓலை சுவடிகள் சென்னை உ.வே.சா நூலகத்திற்கு 2002-ல் வழங்கப்பட்டன

எழுத்துப் பணி

தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று சைவ மடங்களோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அருணாசலம் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக் கட்டுரைகளை எழுதினார்.

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். தம் வாழ்க்கைக் குறிப்பில் அருணாசலம் பற்றி "அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை" என்று எழுதியுள்ளார்.

மு.அ.மனைவியுடன்

மு.அருணாசலம் ஆங்கிலத்திலும் நூல்களை எழுதியுள்ளார். இது தவிர பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற பொது நூல்களையும், புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும், இலக்கியம் தொடர்பாக காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரம் சார்ந்த தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் எழுதியிருக்கிறார். காய்கறித்தோட்டம் என்ற நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

தமிழ் இலக்கிய வரலாறு
மு.அ பேராசிரியர்

அருணாசலம் ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாறு குறித்த விரிவான ஆய்வுகள் செய்து நூற்றாண்டு வாரியாக தமிழ் இலக்கிய வரலாறு நூல்கள் வரிசையை எழுதினார். அறிஞர்கள் கா.சுப்ரமணிய.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் அவருக்கு முன்னோடி நூல்கள். மு. அருணாசலம் 9-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறைக்கு முக்கிய பங்களிப்பாற்றினார். மிக அரிதான பெயர்கூட அறியப்படாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம்.

நாட்டாரியல் பங்களிப்பு

நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு.அருணாச்சலம். 'தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுபவர். 'காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

தமிழ் இசைப் பணி

மு.அருணாசலம் இசைத்தமிழ் வரலாறு பற்றிய தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்ற இரண்டு விரிவான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இந்த இரு நூல்களை எழுதி கையெழுத்துப் பிரதியாக இருந்தது. இந்நூல்கள் வெளியிடும் முன்னரே காலமானார். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப் பிரதிகளை அச்சில் வெளிக்கொண்டு வந்தார்.

இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இசை வளர்ந்த வரலாற்றை, சான்றாதாரங்களுடன் விளக்கும் இந்நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக இருக்கின்றன. இந்நூல்களில் வரலாற்றுப் பார்வையுடன் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் குறித்த அடிப்படை வரலாறும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனை இசையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களையும், அவை எவ்வாறு தமிழிசையிலிருந்து மொழிமாற்றம் பெற்றன என்பதையும் இந்நூல்களில் காணலாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இந்நூல்களில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. பொதுவாக இந்நூல்களில் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் பதிவுசெய்திருக்கின்றார். கர்நாடக இசையின் தமிழிசை முன்னோடிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கர்நாடக இசையின் முதல்மும்மூர்த்திகள் என விரிவாக எழுதியிருக்கிறார்.

மு.அருணாச்சலம் கல்லூரி ஆசிரியராக

சமூகப் பணி

காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-ல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபா பாவே, ஜே. சி. குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்பு கிடைத்தது. அதன் விளைவாக எளிமையான கிராம வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கதராடை அணிய ஆரம்பித்தார். எப்போதும் எளிமையாக வாழ்ந்த இவர் கைகுத்தலரிசியையே உணவாகக் கொண்டிருந்தார். தம் ஊரில் 5 பையன்களோடு ஓர் அனாதை ஆசிரமம் ஆரம்பித்து அதில் 200 மாணவர்கள் வரை சேர்த்து அவர்களுக்கு சகல வசதியும் அளித்து பராமரித்து வந்தார். கைகுத்தல் அரிசியும், கதராடை உற்பத்தியும், தோட்டக்கலை பயிற்சியும் ஆசிரமத்தில் உள்ள சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தனது சொந்த ஊரில், காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார். மு. அருணாசலம் தம் ஊரில் தொடக்கப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவற்றை ஏற்படுத்தினார். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் மிகவும் உதவியாக அமைந்தது. இப்பள்ளியில் கட்டணமேதுமில்லாமலேயே அவர் மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் அளித்தார்.

மறைவு

திருச்சிற்றம்பலம் கிராமத்தில் தனது வீட்டில் சில காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த மு. அருணாசலம் நவம்பர் 23, 1992 அன்று மறைந்தார்.

விவாதங்கள்

1940-ல் மு.அருணாசலம் தமிழ் நவீன இலக்கியம் போதிய அளவு வளர்ச்சிபெறவில்லை என்று கூறிய கருத்துக்கு எதிராக புதுமைப்பித்தன் உள்ளிட்ட நவீன இலக்கியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ’மூனா அருணாசலமே முச்சந்தி கும்மிருட்டில் பேனாக் குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய்’ என்ற புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற வசைக்கவிதை மு.அருணாச்சலம் பற்றியது. ஆனால் மு.அருணாச்சலம் அவற்றை பொருட்படுத்தவில்லை. இன்றைய பார்வையில் மு.அருணாசலம் பார்வையே பெரும்பாலும் சரியாக உள்ளது.

பன்முக ஆளுமை மு அருணாசலம்

நினைவுநூல்கள்

  • திருச்சிற்றம்பல அருணாசலம் நூற்றாண்டு மலர் - 2009
  • பன்முக ஆளுமை மு அருணாசலம் - ஜெ.சுடர்விழி
மு.அ சி.சுப்ரமணியத்துடன்

இலக்கிய முக்கியத்துவம்

தமிழ் இலக்கிய வரலாற்று நூல் வரிசை இவருடைய மிக முக்கியமான பங்களிப்பு. ஒரு பல்கலைக் கழக அமைப்பு செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் செய்தவர் மு.அருணாசலம். வரிசையாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெளிவந்த எந்த நூல்களும் விடுபட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. இலக்கணம், சமய இலக்கியம், ஓவியம், சோதிடம், நிகண்டு, கல்வெட்டு, கணிதம் என்ற பல்துறைச் சார்ந்த நூல்களை இலக்கிய வரலாற்றில் இடம்பெற வைத்து, முறையான ஆய்வு முறை, தெளிவான நடையோடு எட்டு நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி பதினொரு தொகுதிகளாக வெளியிட்டது தமிழ் இலக்கியத்துக்கு அருணாசலம் ஆற்றிய மிக முக்கியமான பணி.

மு.அ.குடும்பம்

படைப்புகள்

இலக்கிய வரலாறு
  1. தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 1
  2. தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 2
  3. தமிழ் இலக்கிய வரலாறு பத்தாம் நூற்றாண்டு
  4. தமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு
  5. தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 1
  6. தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 2
  7. தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு
  8. தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு
  9. தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு
  10. தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 1
  11. தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 2
  12. தமிழ் இலக்கிய வரலாறு பதினேழாம் நூற்றாண்டு
மு.அ.சிறப்புப் பட்டம்
ஆய்வு நூல்கள்
  1. திருவாசக ஆராய்ச்சிக் குறிப்புகள்
  2. சொற்சுவை
  3. காசியும் குமரியும்
  4. இன்றைய தமிழ் வசன நடை
  5. தமிழ் இசை இலக்கிய வரலாறு
  6. தமிழ் இசை இலக்க்கண வரலாறு
மு.அ. எண்பது நிறைவு
நாட்டுப்புறவியல்
  1. காற்றிலே மிதந்த கவிதை,
  2. தாலாட்டு இலக்கியம் போன்ற
  3. நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு
தோட்டக்கலை
  1. பழத்தோட்டம்
  2. பூந்தோட்டம்
  3. வாழைத்தோட்டம்
  4. வீட்டுத்தோட்டம்
  5. காய்கறித்தோட்டம் (தமிழக அரசின் பரிசு பெற்றது)
சமயம்
  1. தத்துவப்பிரகாசம் உரை,
  2. திருக்களிற்றுப்படியார் உரை
  3. திவாகரர்
  4. குரு ஞானசம்பந்தர் வரலாறு
பிற
  1. வால்டேரும் பெரியாரும்
  2. புத்தகமும் வித்தகமும்
ஆங்கிலம்
  1. An introduction to the History of Tamil Literature
  2. The Saiva Agamas
  3. Festivals of Tamilnadu

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page