சிவாலய ஓட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருபன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
பயண நடைமுறைகள்
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியில் முஞ்சிறை மகாதேவர் ஆலயத்தில் தொடங்கி நட்டாலம் ஆலயம்வரை பன்னிரு சிவாலயங்களை குறிப்பிட்ட வரிசையில் தரிசிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் மாலை தொடங்கி அதிகாலையில் முடியும். சிவாலய ஓட்டம் என்பது பொதுவான வழக்காறு. பக்தர்கள் பொதுவாக வேகமாக நடந்து செல்கிறார்கள். வாகனங்களில் சென்று பயணிக்கும் பக்தர்களும் அதிகம் உள்ளனர்.
சிவாலய ஓட்டகாரர்கள் ”கோவிந்தா கோபாலா” மற்றும் “அப்பனே சிவனே வல்லபா” என்று சொல்லிக்கொண்டு ஓடுவது வழக்கம். சில புதிய கோஷங்களும் வழக்கத்தில் உள்ளன.
சிவாலய ஓட்டகாரர்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். இடுப்பு கச்சையில் துணிப்பையில் காணிக்கை பணம் வைத்திருப்பார்கள். காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டி மேலாடை இல்லாமல் துண்டுடன் பயணிப்பார்கள்.
சிவாலய ஓட்டகாரர்களுக்கு அருமனை, களியல், திற்பரப்பு, குலசேகரம், பொன் மனை உள்ளிட்ட பகுதிகளில் கிழங்கு, கஞ்சி, கடலை, சுக்குநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.
சிவாலயங்கள் முன்பகுதியில் சந்தைகள் உருவாவது வழக்கம். நட்டாலம் பகுதியில் சந்தைக்காக செங்கீரையும் காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. நட்டாலம் கடைசி ஆலயம் என்பதால் இங்கு சந்தை பெரியதாக உள்ளது. சாலையின் இருபுறமும் செங்கீரை விற்பனை அதிகமாக இருக்கும்.
பன்னிரு சிவாலயங்கள்
வ.எண் | ஆலயம் | மூலவர் |
---|---|---|
1 | முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம் | சூலபாணி |
2 | திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் | மகாதேவர் |
3 | திற்பரப்பு மகாதேவர் ஆலயம் | வீரபத்திரர் |
4 | திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் | நந்திகேஸ்வரர் |
5 | பொன்மனை மகாதேவர் ஆலயம் | தீம்பிலான்குடி மகாதேவர் |
6 | திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம் | கிராதமூர்த்தி |
7 | கல்குளம் மகாதேவர் ஆலயம் | நீலகண்டசுவாமி |
8 | மேலாங்கோடு மகாதேவர் ஆலயம் | பெரிய காலகாலர் |
9 | திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் | சடையப்பர் |
10 | திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் | பிரதிபாணி |
11 | திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் | பக்தவத்சலர் |
12 | நட்டாலம் மகாதேவர் ஆலயம் | அர்த்தநாரீஸ்வரர் |
சாஸ்தா கோவில்கள்
வ.எ. | சிவாலயம் | சாஸ்தா கோவில்(கள்) |
---|---|---|
1 | முஞ்சிறை திருமலை ஆலயம் | நாட்டார் தோட்டம் சாஸ்தா |
2 | திக்குறிச்சி ஆலயம் | சாஸ்தா இல்லை |
3 | திற்பரப்பு ஆலயம் | செம்மருந்தங்காடி சாஸ்தா |
4 | திருநந்திக்கரை ஆலயம் | தும்போடு சாஸ்தா
கூடைதூக்கி சாஸ்தா |
5 | பொன்மனை ஆலயம் | மேக்கோடு சாஸ்தா
கோட்டாவிளை சாஸ்தா அணைக்கரை சாஸ்தா மரம் விலக்கி சாஸ்தா புலிமுகத்து சாஸ்தா அண்டூர் சாஸ்தா புலை திலத்து சாஸ்தா |
6 | திருபன்னிப்பாகம் ஆலயம் | ஆனையடி சாஸ்தா
கண்டன் சாஸ்தா பூதம்காத்தான் சாஸ்தா பாறையடி சாஸ்தா ஆரியப்பன் சாஸ்தா ஈத்தவிளை சாஸ்தா பூமாலை சாஸ்தா கைதபுரம் சாஸ்தா இடத்தேரி சாஸ்தா |
7 | கல்குளம் ஆலயம் | சொரிமுத்தையன் தம்புரான் |
8 | மேலாங்கோட்டு ஆலயம் | நாறக்குழி சாஸ்தா
குண்டல சாஸ்தா |
9 | திருவிடைக்கோடு ஆலயம் | கோடியூர் சாஸ்தா
குழிகோடு சாஸ்தா |
10 | திருவிதாங்கோடு ஆலயம் | கோடியூர் சாஸ்தா
குழிகோடு சாஸ்தா |
11 | திருப்பன்றிக்கோடு ஆலயம் | ஆலம்பாற சாஸ்தா
அனுமாவிளை சாஸ்தா கல்லேற்றிவிளை சாஸ்தா |
12 | நட்டாலம் ஆலயம் | குன்னக்குழி சாஸ்தா
காவு மூலை சாஸ்தா முளகுமூடு சாஸ்தா |
தொன்மம்
மகாபாரத யுத்தம் முடிந்து பாவத்தை போக்க தர்மர் யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறார். யாகத்தை நடத்தும் யாகத்தில் சேர்க்க முனிவர் மனிதனும் சிங்கமும் கலந்த புருஷா மிருகத்தின் பால் வேண்டும் என்கிறார். அதிக பலம் கொண்ட கொடூர குணம் கொண்ட அந்த மிருகத்திடம் பால் கறக்க பலம் பொருந்திய பீமனை கண்ணன் தெரிவு செய்கிறான்.
புருஷா மிருகம் சிவனை மட்டுமே வணங்கும். விஷ்ணுவின் நாமம் கேட்டால் கோபித்து கொள்ளும் குணமுடையது. கண்ணன் பீமனிடம் தரையில் வைத்தால் சிவலிங்கமாக மாறும் 12 ருத்ராட்சங்களை கொடுத்தான். கோபாலா கோவிந்தா என்று சொல்லி கொண்டு ஓடும்படியும் புருசாமிருகம் துரத்தும் போது ருத்ராட்சத்தை தரையில் வைக்கவும் சொன்னான். லிங்கம் உருவானதும் புருஷாமிருகம் லிங்க பூஜை செய்ய ஆரம்பிக்கும். அந்நிலையில் அதனிடம் பால் கறந்து விடலாம் என்று சொல்லி அனுப்பினான் கண்ணன்.
பீமன் கண்ணன் சொன்னபடி ருத்திராட்ச்ங்களுடன் புறப்பட்டான். புருஷா மிருகத்தை பார்த்து ”கோவிந்தா கோபாலா” என்று சொன்னான். மிருகம் கோபம் கொண்டு பீமனை துரத்தியது பீமன் ஓடி களைகையில் ருத்ராட்சையை தரையில் வைத்து சிவலிங்கமாக்கினான். மிருகம் நின்று சிவலிங்க பூஜையில் மயங்கிய சமயம் ”கோவிந்தா கோபாலா” என்று சொல்லி பால் கறக்க ஆரம்பித்தான். மிருகம் மீண்டும் விழித்து கொண்டு துரத்தியது. மீண்டும் அவ்வாறே செய்தான்.
அனைத்து ருத்ராட்சமும் தீர்ந்த பிறகு ஓடி மிருகத்தின் காட்டில் சென்று விட்டான். பீமன் ஒரு காலை காட்டில் பதித்ததும் காலை பற்றிக்கொண்டு பீமன் கால் தனது காட்டில் பட்டதால் அவன் தனக்கே சொந்தம் என்றது. பீமன் முயன்றும் காலை விடுவிக்க முடியவில்லை. தர்மன் அங்கு வந்து பீமனின் ஒரு காலை மிருகம் எடுத்து கொள்ளட்டும் என்று தீர்ப்பளித்தான்.
தனது அககண்ணில் 12 ருத்ராட்சைகளும் 12 விஷ்ணு உருவங்களாக மாறியதை கண்டு ஞானம் பெற்றது புருஷாமிருகம். பீமனும் தனது வலிமையின் அகங்காரத்தை இளந்தான்.
பீமனால் உருவாக்கப்பட்ட 12 சிவலிங்கங்ளும் 12 சிவாலயங்கள் ஆனது.
பாதை
உசாத்துணை
- சிவாலய ஓட்டம் படங்கள் நன்றி - விகடன்
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/
- https://shaivam.org/temples-special/shivalaya-ottam-of-kanniyakumari-distirict
- https://www.agalvilakku.com/spiritual/articles/sivalayaottam.html
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.