செங்குந்தர் பிரபந்தத் திரட்டு
- பிரபந்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிரபந்தம் (பெயர் பட்டியல்)
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு (1926), செங்குந்த மரபினர் பற்றிய 15 நூல்களின் தொகுப்பு. இதன் பதிப்பாசிரியர் காஞ்சி நாகலிங்க முனிவர். தி.க.ச. சபாபதி முதலியார் இந்நூலை வெளியிட்டார்.
வெளியீடு
செங்குந்த மரபினர் பற்றிய 15 நூல்களின் தொகுப்பு செங்குந்தர் பிரபந்தத் திரட்டு. இதன் பதிப்பாசிரியர் ஸ்ரீ காஞ்சி நாகலிங்க முனிவர். 1926-ல், சிறுமணவூர் முனிசாமி முதலியார் ௮ண்டு சன்ஸின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. இதனை வெளியிட்டவர், திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச. சபாபதி முதலியார்.
இந்நூலின் மறுபதிப்பு புலவர் சரவண சதாசிவம் அவர்களின் உரையுடன் 1993-ல் வெளியானது. காஞ்சிபுரம் ஒட்டக்கூத்தர் மன்றம் இதனை வெளியிட்டது.
நூல் அமைப்பு
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு நூலில் கீழ்க்காணும் 15 நூல்கள் இடம்பெற்றன.
- ஈட்டி எழுபது
- எழுப்பெழுபது
- களிப்பொருபது
- திருக்கை வழக்கம்
- பிள்ளைத்தமிழ்
- கலித்துறை மாலை
- தசாங்கம்
- ஊசல்
- செங்குந்த விநாயகர் மாலை
- செங்குந்த சிலாக்கியர் மாலை
- செங்குந்த வேற்பதிகம்
- செங்குந்தர் மரபு விளக்கம்
- சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி
- திருக்கை வழக்கத்தந்தாதி
- செங்குந்தகுலமாட்சி
உள்ளடக்கம்
ஈட்டி எழுபது
ஈட்டி எழுபது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. செங்குந்தர்கள் தம் குலப் பெருமையைப் பாடுமாறு ஒட்டக்கூத்தரைக் கேட்டதாகவும், அவர் அதற்கு மறுத்துவிடவே, செங்குந்தர்கள் தங்களுடைய தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் செய்ததாகவும், அதன்பிறகே அவர் ஈட்டியெழுபது இயற்றியதாகவும் தொன்மக் கதை கூறுகிறது. ஈட்டியெழுபதில் எழுபது பாடல்கள் இடம்பெற்றன.
எழுப்பெழுபது
செங்குந்தர்கள் தங்களுடைய தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் செய்தபின், ஈட்டியெழுபது நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு அரிந்த தலைகள் மீண்டும் தங்கள் உடலோடு ஒட்டிக் கொள்ளும்படி ஒட்டக்கூத்தரால் கலைவாணியை வேண்டிப் பாடப்பட்ட நூலாக எழுப்பெழுபது நூல் அறியப்படுகிறது. இந்நூலில் எழுபது பாடல்கள் இடம்பெற்றன. ஆனால் 13 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
களிப்பொருபது
இந்நூல் சிரச்சிங்காதனமிட்ட செங்குந்த விரர்களின் பெருமையையும், அவற்றை ஒட்டப் பாடிய ஒட்டக்கூத்தாது தெய்வீகச் சக்தியையும் சிறப்பித்து அசரீரி, ஔவையார், கம்பர், புகழேந்தி, அம்பிகாபதி முதலியோர் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பு.
திருக்கை வழக்கம்
செங்குந்த மரபின் மேம்பட்டவர்களது கைவண்மைகளைச் சிறப்பித்துக் கலிவெண்பாவில் இயற்றப்பட்ட நூல். வேளாளரைப் பற்றித் 'திருக்கை வழக்கம்' என்கிற நூல் பாடப்பட்டுள்ளதை அடியொற்றி, இந்நூலும் செங்குந்தரைப் பற்றியதாய், ஒவ்வொரு கண்ணியும் 'கை' என்ற சொல்லால் முடிவடையும்படி இயற்றப்பட்டது. இந்நூலை இயற்றியவர் புகழேந்திப்புலவர்.
பிள்ளைத்தமிழ்
செங்குந்த வீரர்களது பிள்ளைப் பருவங்களைச் சிறப்பித்து ஸ்ரீ ஞானப்பிரகாச முனிவர் என்பவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். ௮வ்வீரரது வீரம், நியாயம், தியாகம் முதலிய சிறப்புக்களைக் கூறும் நூல்.
கலித்துறைமாலை
செங்குந்தர்களது பெருமைகளைக் கூறும் நூல். நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. நாகை முத்துக் குமார தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது.
தசாங்கம்
செங்குக்தர்களது மலை, ஆறு, காடு, நகர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகியனவற்றைப் புகழ்ந்து பத்து வெண்பாப் பாடல்களால் இயற்றப்பட்ட நூல். ஸ்ரீ சத்தியசந்தர் என்பவரால் இயற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
ஊசல்
செங்குந்த வீரர்களைப் புகழந்து பாடப்பட்ட நூல். ஊசல், வாழ்த்து, லாலி, எச்சரிக்கை, பெரியகட்டியம், சின்னகட்டியம், மங்களம் போன்ற செய்திகளைக் கொண்டது. மயிலைநாதர் என்பவரால் இயற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
செங்குந்த விநாயகர் மாலை
திருவொற்றியூர் ஆலயத்தில் உறையும் செங்குந்த விநாயகர் மீது பாடப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர் ஸ்ரீபடம்பக்கநாதன். இந்நூலில் 31 பாடல்கள் இடம்பெற்றன. விநாயகப் பெருமானின் பெருமைகள் பலவாறாக இந்நூலில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன.
செங்குந்த சிலாக்கியர் மாலை
சிலாக்கியர் என்பதற்கு உயர்ந்தோர் என்பது பொருள். செங்குந்தப் படையைக் கொண்டதால் செங்குந்தர் என்று புகழப்படும் மரபினருள் உயர்ந்தவர்கள் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல் இது. இதனை இயற்றியவர் காஞ்சி வீரபத்திர தேசிகர். கட்டளைக் கலித்துறையால் இயற்றப்பட்ட இந்நூலில் 37 பாடல்கள் உள்ளன. செங்குந்த மரபில் பிறந்த சான்றோர்கள், வீரர்கள் பலரது வாழ்க்கைக் குறிப்புகள் இந்நூலில் உள்ளன.
செங்குந்த வேற்பதிகம்
வீரபாகுத் தேவர் கையில் உள்ள 'செங்குந்தம்' என்னும் வேல் செய்த செயல்களையும் பெருமைகளையும் கூறும் நூல். பத்துப் பாடல்களை உடையது. ஆசிரிய விருத்தத்தால் அமைந்த இந்நூலை இயற்றியவர் குமாரசாமி முதலியார்.
செங்குந்தர் மரபு விளக்கம்
மாகறல் கார்த்திகேய முதலியார் இயற்றிய நூல். 30 பாடல்களைக் கொண்டது. கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டது. நூலின் காப்புப் பகுதியில் ஐந்து நேரிசை வெண்பாக்கள் இடம்பெற்றன. செங்குந்தர்களது பெருமை, புகழ், வீரம், வாழ்வும் போன்றவற்றைக் கூறுகிறது இந்நூல்.
சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி
வீரபாகுத் தேவருடன் தோன்றிய செங்குந்தர்கள், முருகப் பெருமானது படைக்குத் தலைமை பூண்ட காரணத்தினாலும், செங்குந்தர்களில் பலர் சோழ மன்னர்களுடைய சேனைக்குத் தலைமை தாங்கிய காரணத்தாலும் இவர்கள் 'சேனைத்தலைவர்' என்றும், இவர்களுடைய மரபு 'சேனைத் தலைவர் மரபு' என்றும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய 'சேனைக் தலைவர் மரபு விளக்கம்' என்னும் நூலில் உள்ள பிழைகளுக்கு மறுப்பாகத் தோன்றியதே 'சேனைத்தலைவர் மரபு விளக்கச் சூறாவளி' எனும் இந்நூல். இந்நூலை இயற்றியவர் நரசிங்கபுரம் வீராசாமி முதலியார். கலிவெண்பாவில் அமைந்துள்ள இந்நூலில் 111 கண்ணிகள் இடம்பெற்றன.
திருக்கை வழக்கத்தந்தாதி
'செங்குந்த வேலவர் திருக்கை வழக்கத்தந்தாதி' என்று அழைக்கப்படும் இந்நூல், கட்டளைக் கலித்துறையால் இயற்றப்பட்டது. நூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் செங்குந்த வீரர்களுடைய கை, என்னென்ன வீரச் செயல்களைச் செய்தது என்று விளக்கப்பட்டுள்ளது. செங்குந்த வீரர்கள், வீரபாகு மற்றும் நவ வீரர்கள் செய்த செயல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றியவர் ஆறுமுகப் பாவலர்.
செங்குந்தகுலமாட்சி
செங்குந்தர் குலத்தின் பெருமை, சிறப்பு, புகழைக் கூறும் நூல். இந்நூலைத் தொகுத்தவர் திருவாரூர் சபாபதி முதலியார். செங்குந்த மக்கள் பிரிவு, பழக்க வழக்கம், ஒழுக்கம், அறிவு, ஆற்றல், கொடை ஆகியன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. பலர், பல காலங்களில் இயற்றிய நூல்களில் செங்குந்தர் பற்றி வரும் குறிப்புக்கள் கொண்ட பாடல்களின் தொகுப்பே இந்நூல். இந்நூலில் 17 பாடல்கள் இடம் பெற்றன.
மதிப்பீடு
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பல்வேறு நபர்களால், பல்வேறு காலங்களில் இயற்றப்பட்ட நூல்களின் தொகுப்பு. செங்குந்த மக்கள் குறித்த பல்வேறு பாடல் நூல்களின் ஒரே தொகுப்பு நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:20:35 IST