சரஸ்வதி ராம்நாத்
- ராம்நாத் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராம்நாத் (பெயர் பட்டியல்)
- சரஸ்வதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரஸ்வதி (பெயர் பட்டியல்)
சரஸ்வதி ராம்நாத் (செப்டம்பர் 7, 1925 - ஆகஸ்ட் 2, 1999) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கங்களைச் செய்த எழுத்தாளர். பிரேம்சந்த், அமிர்தா ப்ரீதம் போன்றவர்களின் படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
பிறப்பு, கல்வி
சரஸ்வதி ராம்நாத் கோவை மாவட்டம் தாராபுரத்தில் செப்டம்பர் 7, 1925-ல் பிறந்தார். இளமையில் மறைந்த காந்தியவாதியான அவருடைய தந்தையின் சேகரத்தில் இருந்து பல நூல்களைச் சிறு வயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இந்தி வித்வான் பட்டம் பெற்றார். தட்சிணபாரத் இந்தி பிரசார சபையின் 'பிரவீண்' பரிட்சையில் தேறினார். ஹிந்தி பிரச்சாரத்தில் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டார்.
இலக்கிய வாழ்க்கை
காவேரி இதழில் வெளிவந்த 'வீரசுதந்திரம்' நாவல்தான் சரஸ்வதியின் முதல் மொழியாக்கம். இவருடைய மொழிபெயர்ப்புப் பணியைத் தினமணி கதிரின் அன்றைய ஆசிரியர் துமிலன் ஊக்குவித்தார். ராஜ்நாத் தாகூர் குஜராத்தியில் எழுதிய 'ராஜநர்த்தகி' என்ற நாவலின் மொழிபெயர்ப்பு தினமணியில் வெளிவந்தது. தொடர்ந்து சுதேசமித்திரன், தீபம், தாமரை, கலைமகள் எனப் பல இதழ்களிலும் அவருடைய மொழிபெயர்ப்புகள் வெளியாகத் தொடங்கின.
அம்ரிதா ப்ரீதம் பஞ்சாபியில் எழுதிய 'ராதையுமில்லை ருக்மிணியுமில்லை', ஸ்ரீலால் சுக்லா இந்தியில் எழுதிய 'தர்பாரி ராகம்', தாராசங்கர் பானர்ஜி வங்க மொழியில் எழுதிய 'சப்தபதி', கே.எம். முன்ஷி இந்தியில் எழுதிய 'ஜெயதேவன் அல்லது கூர்ஜரத்தின் செல்வன்',பிரேம்சந்தின் 'கோதான்' உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் சரஸ்வதி ராம்நாத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். ஆஜ்கல், தர்மயுக், கஹானி,சாரிகா போன்ற இந்தி இதழ்களில் எழுதினார்.
புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், பாவண்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான படைப்புகளை இந்திக்குக் கொண்டு சென்றார். ஜெயகாந்தன் கதைகள்', பாரதி படைப்புகள், 'பவ்பதகி' என்ற பெயரில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் போன்றவை இந்திக்கு அவர் கொண்டு சேர்த்த முக்கியத் தமிழ்ப் படைப்புகள்.சர்வதேசப் பெண்கள் ஆண்டையொட்டி 'இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' என்ற மொழிபெயர்ப்பு நூலைத் தொகுத்து அளித்தார். 'இளைஞர் மகாபாரதம்', 'மலைநாட்டு நாடோடிக் கதைகள்' உள்ளிட்ட கதைகள், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற நதிகளைப் பற்றி தனித்தனி நூல்களைக் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்
மறைவு
சரஸ்வதி ராம்நாத் பெங்களூரில் ஆகஸ்ட் 2, 1999-ல் காலமானார்
விருதுகள்
- மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதை 1993-ம் ஆண்டில் பெற்றார். (பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த சிறந்த நாடகங்கள் அடங்கிய 'இந்திய மொழி நாடகங்கள்' என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக)
- கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது (1994)
- பாரதீய அனுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார்
நூல்கள் பட்டியல்
மொழிபெயர்ப்பு
தமிழிலிருந்து ஹிந்திக்கு
- கோபுர் கா தீப் (கோபுர தீபம், அகிலனின் சிறுகதைகள்)
- பெளபடோகி (சிறந்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு, விடியுமா?)
- நாரி (பெண், அகிலனின் நாவல்)
- குறிஞ்சித்தேன் (ராஜம் கிருஷ்ணன் நாவல்)
- கம்பராமாயணம்
- ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு
- நதிகளின் கதைகள்
நாவல்
- ராஜநர்த்தகி (ராஜ்நாத் தாகூர் குஜராத்தி)
- ஜெயதேவன் அல்லது கூர்ஜரத்தின் செல்வன் (கே.எம்.முன்ஷி குஜராத்தி)
- ஜெயசோமநாத் (கே.எம்.முன்ஷி, குஜராத்தி)
- தேவதாசி (பாலகிருஷ்ண பலவந்த் போர்க்கர், மராட்டி)
- புயலும் ஒளியும் (சுமதிதேவி தன்வாடே, மராட்டி)
- கங்கை தாய் (பைரவ் பிரசாத் குப்தா,இந்தி)
- சப்தபதி (தாராசங்கர் பானர்ஜி, வங்கம்)
- தர்பாரி ராகம் (ஸ்ரீலால் சுக்ல, இந்தி)
- கோதான் (முன்ஷி பிரேம்சந்த், இந்தி)
- ராதையுமில்லை ருக்மிணியுமில்லை (அம்ரிதா பிரீதம், பஞ்சாபி)
- நமக்கு நாமே அந்நியர்கள் (அக்ஞேயா, இந்தி)
- அமிர்தமும் விஷமும் (அமிர்த்லால் நாகர், இந்தி)
- மகாநந்தா (ஜெயவந்த் தல்வி, மராட்டி)
- வீர சுதந்திரம் (தர்ஷக், குஜராத்தி)
- லேடி டாக்டர் (உதயசங்கர் பட்)
- இதுவா நாகரிகம் (ரங்கைய ராகவ்)
- உத்தராயன் (ஆரத்தி) (தாராசங்கர் பானர்ஜி, வங்கம்)
- சேதன் (உபேத்திரநாத் அஷ்க், ஹிந்தி)
- ராக் தர்பாரி (லால்சுக்லா)
- ரூகோகி நஹி ராதிகா - உஷா பிரியம்வதா
சிறுகதைகள்
- அழியாக்காதல்
- 23 ஹிந்திச் சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்: ஜைனேந்திர குமார்)
- இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
நாடகம்
- குஜராத்தி ஓரங்க நாடகங்கள் (ஏ.எம். ராவல்)
- இந்தியமொழி நாடகங்கள்
- மகாபாரதத்தில் பெண்ணியம் இருநாடகங்கள்
- இந்திச் சிறுகதைத் தொகுப்பு (பீஷ்ம சகானி)
- ஆதே ஆதூரே - மோகன் ராகேஷ்
பொது
- இந்திய இலக்கிய சிற்பிகள்: பிரேம்சந்த்/ பிரகாஷ் சந்திர குப்தா
சரஸ்வதி ராம்நாத் எழுதியவை
- கடற் பறவைகள்
- குடும்பம்
- கங்கையின் கதை
- யமுனையின் கதை
- மகாபாரதக் கதைகள் - 5 நூல்கள் (சிறுவர்களுக்காக)
- நாடோடிக் கதைகள் - 5 நூல்கள் (சிறுவர்களுக்காக)
- புரட்சி வீரர் வரலாறு - 6 நூல்கள் (சிறுவர்களுக்காக)
- பீர்பல் கதைகள் (சிறுவர்களுக்காக)
- பெண்களுக்கு
உசாத்துணை
- ஒரு மொழிபெயர்ப்பாளர்: இலக்கியப் பரிமாற்றமே உயிர்மூச்சு | ஒரு மொழிபெயர்ப்பாளர்: இலக்கியப் பரிமாற்றமே உயிர்மூச்சு - hindutamil.in
- தினமணி கட்டுரை
- எழுத்தாளர் - சரஸ்வதி ராம்நாத் | Thendral Tamil Magazine (tamilonline.com)
- கோதானம் | எழுத்தாளர் ஜெயமோகன்
- மொழிபெயர்ப்புச்சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும் பாவண்ணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:23 IST

