under review

பாரத சக்தி மகா காவியம்

From Tamil Wiki
பாரத சக்தி மகா காவியம் - சுத்தானந்த பாரதியார்

பாரத சக்தி மகா காவியம் (1948) சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியம். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தகுந்த காப்பிய நூல்களுள் ஒன்று. ‘சமயோக வேதம்’ என்றும் இந்நூல் அழைக்கப்படுகிறது. அனைத்து மதங்களுக்கும் சமமான பல கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு தமிழக அரசின் இராஜராஜன் விருது கிடைத்தது. பாரத சக்தி மகா காவியம், 50000 அடிகளைக் கொண்ட தமிழின் மிக நீண்ட காவியம்.

பாரத சக்தி மகா காவியம் - சக்தி இதழ், 1939

பிரசுரம், வெளியீடு

அரவிந்தர் ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மௌன யோகத்தில் இருந்த சுத்தானந்த பாரதியார், யோகி அரவிந்தர் எழுதிய சாவித்ரி காப்பியம் பற்றி அறிந்தார். அதன் தாக்கத்தால் தமிழில் தானும் ஒரு காப்பியம் இயற்ற வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்படி அவர் இயற்றியதுதான் 'பாரத சக்தி மகா காவியம்'. இக்காப்பியம், வை. கோவிந்தன் பதிப்பாளராக இருந்த ‘சக்தி’ இதழில், 1939 முதல் வெளிவந்தது. 1948-ல் நூலாக அச்சிடப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1969-ல் வெளிவந்தது. அதன் பின் பல மறுபதிப்புகள் வெளிவந்தன.

நூல் அமைப்பு

பாரத சக்தி மகா காவியம் ஐந்து காண்டங்களை உடையது. அவை

  • சித்தி காண்டம்
  • கௌரி காண்டம்
  • சாதன காண்டம்
  • தானவ காண்டம்
  • சுத்த சக்தி காண்டம்

- என்பனவாகும். ஒவ்வொரு காண்டமும், பல்வேறு படலங்களைக் கொண்டுள்ளது. பாரத சக்தி மகா காவியத்தில் மொத்தம் 146 படலங்கள் இடம்பெற்றுள்ளன. கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, ஆசிரியப்பா, குறள் வெண்பா எனப் பல்வேறு வகைப் பா வடிவங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. இந்நூல் 50000 அடிகளால் ஆனது.

சித்தி காண்டம்

சித்தி காண்டம் 25 படலங்களைக் கொண்டது. அவை,

  • மங்கல வாழ்த்துப் படலம்
  • சிருட்டிப் படலம்
  • அருட் குலப் படலம்
  • பாரத புண்ணிய பூமிப் படலம்
  • சித்தி நகரப் படலம்
  • சத்தியன் அரசியற் படலம்
  • தியானக் காட்சிப் படலம்
  • முனியுரைப் படலம்
  • சுத்த ஜனனப் படலம்
  • சுத்த நாமப் படலம்
  • குழந்தைப் படலம்
  • குருகுலப் படலம்
  • பொறாமைப் படலம்
  • புறப்பாட்டுப் படலம்
  • யாத்திரைப் படலம்
  • வீர சிவாஜிப் படலம்
  • பஞ்சவடிப் படலம்
  • இராமாயணப் படலம்
  • ஒற்றுக்கேள்விப் படலம்
  • இராம தாஸ் படலம்
  • கலி சினந்த படலம்
  • பஞ்சவடிப் போர் வென்ற படலம்
  • அபயமளித்த படலம்
  • அரசவைப் படலம்
  • வரவேற்புப் படலம்
கௌரி காண்டம்

கௌரி காண்டம், 37 படலங்களைக் கொண்டது.

  • ஆலோசனைப் படலம்
  • சுத்த ஜயந்திப் படலம்
  • கௌரி குலப் படலம்
  • சம்மதப் படலம்
  • கௌரி காதற் படலம்
  • இராமகிருஷ்ணப் படலம்
  • விவேகானந்தப் படலம்
  • ஊர் மகிழ் படலம்
  • இல்லறவொழுக்கப் படலம்
  • திருமணப் படலம்
  • வாழ்க்கைப் படலம்
  • சிந்தனைப் படலம்
  • மாயா மானசப் படலம்
  • பட்டாபிஷேகப் படலம்
  • சுத்த வாசகப் படலம்
  • நன்றி யுரைத்த படலம்
  • கண்ணன் படலம்
  • மகாபாரதப் படலம்
  • பகவத் கீதைப் படலம்
  • பீஷ்ம விரதப் படலம்
  • பொய்வேடப் படலம்
  • கார்த்திகைப் படலம்
  • போலித் துறவிகள் படலம்
  • புரட்சிப் படலம்
  • போர்ச்சபைப் படலம்
  • பகதூர் படலம்
  • சத்தியன் உறுதிப் படலம்
  • குருகோவிந்தப் படலம்
  • படை யெழுந்த படலம்
  • மாயன் வதைப் படலம்
  • பிரதாபசிங்கப் படலம்
  • போரணிந்த படலம்
  • கலி கலங்கிய படலம்
  • உறுதிப் படலம்
  • இறுதிப் படலம்
  • வெற்றிப் படலம்
  • கௌரி விலாசப் படலம்
சாதன காண்டம்

சாதன காண்டம், 32 படலங்களைக் கொண்டுள்ளது.

  • கருணைப் படலம்
  • சாசனப் படலம்
  • துறவுப் படலம்
  • காமபுரிப் படலம்
  • மழைபொழிந்த படலம்
  • புத்த ஜோதிப் படலம்
  • புத்த தருமப் படலம்
  • மகாவீரப் படலம்
  • ஜைன தருமப் படலம்
  • கிறிஸ்து ஜோதிப் படலம்
  • பைபிள் படலம்
  • நபிநாயகப் படலம்
  • அல்குரான் படலம்
  • குரு நானகப் படலம்
  • கிரந்த ஸாகெபுப் படலம்
  • ஜரதுஷ்டிரப் படலம்
  • புயலிடிப் படலம்
  • வேதபுரிப் படலம்
  • வேத சாரப் படலம்
  • சங்கரகீதப் படலம்
  • சிவகிரிப் படலம்
  • ஞானோபதேசப் படலம்
  • ஆத்மநாதப் படலம்
  • சாந்தன் வந்த படலம்
  • அருண ஜோதிப் படலம்
  • ஞானமாலைப் படலம்
  • அருட் சோதிப் படலம்
  • புது யோகிப் படலம்
  • இமாலயப் படலம்
  • சமயோக சமாஜப் படலம்
  • சாதனப் படலம்
  • பரமாத்ம குருப் படலம்
தானவ காண்டம்

தானவ காண்டம், 31 படலங்களைக் கொண்டுள்ளது.

  • போகர் வரவுப் படலம்
  • சாமளப் படலம்
  • கடற் படலம்
  • சீகரப் படலம்
  • தானவர் தோன்றிய படலம்
  • மாவலி எழுந்த படலம்
  • நிசாசரப் படலம்
  • மாவலி இசைந்த படலம்
  • அந்தரங்கப் படலம்
  • அசுராலோசனைப் படலம்
  • போகசாலைப் படலம்
  • சக்தி விருப்பப் படலம்
  • வெள்ளி நீதிப் படலம்
  • கலை வழிப் படலம்
  • யாழிசைப் படலம்
  • கலைக்கோயிற் படலம்
  • குரல்கேட்ட படலம்
  • சங்கப் படலம்
  • ஆத்திரப் படலம்
  • தெய்வ வாதப் படலம்
  • கவலை தீர்த்த படலம்
  • மகாமுனிப் படலம்
  • குண்டலகேசிப் படலம்
  • பத்தினிப் படலம்
  • தண்டனைப் படலம்
  • கிளர்ச்சிப் படலம்
  • சக்தி யெழுந்த படலம்
  • உண்ணாவிரதப் படலம்
  • இடி முழக்கப் படலம்
  • சங்கத்திற்கு நலமுரைத்த படலம்
  • சீகரன் மகிழ்ந்த படலம்
சுத்த சக்தி காண்டம்

சுத்த சக்தி காண்டம், 21 படலங்களைக் கொண்டது.

  • புதுநாட் படலம்
  • போற்றிப் படலம்
  • கலி மீண்ட படலம்
  • தூமகேதுப் படலம்
  • போராடிய படலம்
  • சக்தி விஜயப் படலம்
  • யோக சித்தி எழுந்த படலம்
  • யோக சித்திப் படலம்
  • அகண்ட சாதனப் படலம்
  • மஹாத்ம விஜயப் படலம்
  • திருத்தொண்டர் படலம்
  • விழித்தெழுந்த படலம்
  • தூமகேது திகைத்த படலம்
  • மோகி யிறுதிப் படலம்
  • கலி பணிந்த படலம்
  • புது மலர்ச்சிப் படலம்
  • அணுப்போர் படலம்
  • சத்தியன் வென்ற படலம்
  • சுத்த மங்களப் படலம்
  • சுத்த விஜயப் படலம்
  • சுத்த வாணிப் படலம்

கதைக் குறிப்பு

நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் இறுதியில் தீமை தன் இயல்பு மாறுகிறது. நன்மை வெற்றி பெறுகிறது. மாயையில் மூழ்கி பல்வேறு சிக்கல்களில் சிக்குண்ட மனிதன், பாரத சக்தியின் உதவியால் எழுச்சி கொண்டு மகா மனிதன் ஆக உயர்வதை பாரத சக்தி மகா காவியம்கூறுகிறது. உலகம் போரும் பூசலும் அற்று, மக்கள் அனைவரும் ஒரே இறைவன்; ஒரே இனம் என்னும் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து சமயோகம் புரிந்து மேன்மையுற வேண்டும் என்பதே பாரதசக்தி மகாகாவியத்தின் கருப்பொருள்.

உலகின் தோற்றம் தொடங்கி பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், இயேசு, நபிகள் நாயகம், கபீர்தாசர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், மெய்கண்டார், வள்ளலார், ராமதாசர், குருநானக், ஜராதுஷ்டிரன், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர் போன்ற ஆன்மிக ஞானிகளின் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது. அசோகர், சேரன் செங்குட்டுவன், இளஞ்செழியன் போன்ற மன்னர்களின் வாழ்க்கையையும் இந்நூல் பேசுகிறது. குரு தேஜ்பகதூர், குரு கோவிந்த் சிங், பிரதாப் சிங், மாஜினி, கரிபால்டி, லெனின், காந்தி போன்ற மாமனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

சத்தியன், சுத்தன், சித்திமான், சாந்தன், போகன், பாரதமுனி, சக்தி, கௌரி, சுந்தரி ஆகிய காப்பிய மாந்தர்கள் நன்மையின் உருவகங்களாகவும், தூமகேது, துன்மதி, மாவலி, கலியன், மோகி ஆகியோர் தீமையின் உருவகங்களாகவும் இக்காப்பிய நூலில் அமைக்கப்பட்டுள்ளனர்.

பாடல் சிறப்பு

பாரத சக்தி மகா காவியத் தோற்றம்

காலைப் பரிதி காவிரி யாற்றைக்
கொஞ்சித் தழுவும் குளிர்ந்த வேளையில்
ஓமிசைத் தாடும் பூமணக் காற்றுடன்
புதுயுகக் குழலிசை பொங்குங் காலையில்
விசும்பின் குடைக்கீழ் பசும்பொன் இயற்கை
அமுதப் புன்னகை அருளுங் காலையில்
தியானப் பறவை சிறகடித் தோங்கி
வானக் கனவில் வாழுங் காலையில்
கண்டனன் பாரத சக்திக் காட்சியே.
கனவெலாங் கதையாய்க் கதையெலாங் கவியாய்
காவியம் வாழ்வின் ஓவிய மாகி
ஓவியம் முக்குண வுலக விளக்கமாய்
எழுந்தது பாரத சக்தியிவ் வாறே!

சமயோகத்தின் சிறப்பு

மனத்தைத் திருத்தி இனத்தைத் திருத்தி
காமம் வெகுளி கலக்கம் இல்லாது
உள்ளம் களிக்க உலகம் செழிக்க
எல்லா உயிர்க்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே
எனும்சம யோகமே இதயத் துடிப்பாய்
அகப்புறத் தூய்மையும் அஞ்சா உரிமையும்
அமரத் தன்மையும் அடைந்து மாந்தர்
வாழும் வகையை வழங்கும் சக்தியே-
சமயோ கந்தரும் பாரத சக்தியாம்

காவியத்தின் சிறப்பு

இம்மை யம்மை இருமைப் பயன்களும்
செம்மை யாகச் செழித்திட வாழ்விலே
அம்மை யப்பன் அருள்வழி காட்டிட
இம்ம காகவி என்னுள் உதித்ததே
இந்தக் காவியம் ஏத்திடும் சுத்தனென்
சிந்தை யிற்குடி கொண்டொளிர் சித்தனே
அந்த ராத்ம குருவென லாம்; அவன்
தந்த வேதமிப் பாரத சக்தியே.
என்னு ளே என தாவி நலம்பெறத்
தன்னை வைத்துத் தழைத்தனன் செய்யுளாய்
பன்னு காவியம் பாரத சக்தியை
என்ன வர்க்கும் எழுத்தி னுதவினேன்
எத்தி றத்தினர் ஏற்றமும் பேணியே
தத்து வப்பெயர் தந்த பெருங்கதை
ஒத்து லகம் உயர்நிலை வாய்ந்திட
வைத்த மாநிதி யென்ன வழங்குமே!

மதிப்பீடு

மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேற்றுமை இன்றிச் சன்மார்க்க நெறியில் சமயோக வாழ்வு பெறுவதை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியம், பாரத சக்தி மகா காவியம். அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ‘சம யோகம்’ என்பதை இக்காவிய நூல் வலியுறுத்துகிறது. இந்நூல் பற்றி சுப்ரமணிய பாரதியார், “பாரத சக்தியைப் பார்த்தோம்; அற்புதமாயிருக்கிறது; கம்பீர மாயிருக்கிறது; ஐயர் மெச்சினார்; நாமும் மெச்சுகிறோம். மஹா காவியம் என்றார் ஐயர். அது தமிழுக்கு அரிய கலைச்செல்வமாகும்; அத்யாத்ம நிதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். வ.வே.சு. ஐயர், “அவர் நூல்களிலெல்லாம் மிகவும் சிரேஷ்டமானதும், அமரத்தன்மை பெற்றதும் இந்தப் பாரத சக்தியே. இது, மகாகாவிய நடையில் எழுதப்பெற்ற அற்புதமான இலக்கிய ரசனை; தமிழுக்குப் பொன்றாப் புகழைத்தருவது. ‘தமிழில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுந்த முதல் நூல்: உத்தம காவியம்’ என்றே, இந்தப் பாரத சக்தி மகா காவியத்தைச் சொல்லவேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page