under review

திருநாவுக்கரசர்

From Tamil Wiki
திருநாவுக்கரசர் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

திருநாவுக்கரசர், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார்.

வாழ்க்கைக் குறிப்பு

மருள்நீக்கியார், பல்லவ நாட்டில், திருமுனைப்பாடி அருகே உள்ள திருவாமூரில், சிவபக்தர் புகழனாருக்கும் மாதினியாருக்கும் பிறந்தார் . இவரது மூத்த சகோதரி திலகவதியார். மருள்நீக்கியார் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் உயிர் துறந்ததால், திலகவதியார் தன் உயிரை மாய்க்க எண்ணினார். அதுகண்ட மருள்நீக்கியார் அவருக்கு முன் தானும் உயிர் துறப்பதாகச் சொன்னார். சகோதரர் மீது கொண்டிருந்த அன்பால் திலகவதியார் தம் முடிவை மாற்றிக் கொண்டார். ‘இனி யாரையும் மணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று முடிவு செய்து, சிவனருளைச் சிந்தித்து வாழ்ந்தார்.

மருள்நீக்கியார் சமணர் ஆனது

யாக்கை நிலையாமை பற்றி அறிந்த மருள்நீக்கியார், பல்வேறு அறப்பணிகளைச் செய்தார். சமண சமயக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாடலிபுத்திரம் சென்று சமண மதம் சார்ந்தார். சமண மதத்தின் கொள்கைகளை முழுமையாகக் கற்று, புறச் சமயத்தினரை தனது வாதங்களால் வென்று தருமசேனர் என்னும் பட்டம் பெற்றார்.

தொன்மம்

திலகவதியார் சைவ சமயத்தின் மீது மிகுந்தப் பற்றுக் கொண்டிருந்தார். திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்து சிவத்தொண்டாற்றினார். சமணத்திலிருந்து விலகித் தன் தம்பி மீண்டும் சைவ சமயத்திற்கு வர வேண்டும் என்று தினமும் சிவபெருமானைப் பிரார்த்தித்து வந்தார்.

ஒருநாள் திலகவதியார் கனவில் தோன்றிய சிவபெருமான், “திலகவதியே, கலங்க வேண்டாம். மருள்நீக்கியான் முற்பிறப்பில் ஒரு முனிவனாக இருந்து எம்மை அடையத் தவம் செய்தவன். நாம் அவனை சூலை நோய் தந்து ஆட்கொள்வோம்” என்று அருளி மறைந்தார். திலகவதியாரும் மனம் மகிழ்ந்து, மருள்நீக்கியார் சைவ சமயம் சாரும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

சூலை நோய்

இந்நிலையில் தருமசேனரைக் கொடும் சூலை நோய் தாக்கியது. அந்நோயினால் பெரும் துன்பமுற்றார். அவரைச் சார்ந்த சமண முனிவர்கள் பல்வேறு மருத்துவ, மந்திர, தந்திர முயற்சிகளைச் செய்தும் அந்நோய் தீரவில்லை. மருள்நீக்கியார் தனது சகோதரியைச் சந்திக்க விரும்பினார். தான் தங்கியிருந்த சமண மடத்திலிருந்து தூதுவர் ஒருவரை தன் சகோதரி தங்கியிருந்த திருவதிகைக்கு அனுப்பினார். திலகவதியார், சமணர்கள் இருக்குமிடத்திற்கு வர மறுத்து விட்டததால், தானே திலகவதியாரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்.

மருள்நீக்கியார், திலகவதியார் இருக்கும் மடத்திற்குச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினார். தம் நோயின் கொடுமைகளைச் சொல்லி, அதனைப் போக்கும்படி வேண்டிக் கொண்டார். திலகவதியார் சிவபெருமானைத் துதித்து, ஐந்தெழுத்து ஓதி, திருநீற்றினை அவருக்கு அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட மருள்நீ்க்கியார், அதனை தமது உடலெங்கும் தரித்தார். அதனைத் தரித்த அந்தக் கணம் முதலே அவருடைய உடலின் நோய் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

நாவுக்கரசர் ஆனது

மருள்நீக்கியார், சகோதரியுடன் திருவதிகை வீரட்டானத்தலத்திற்குச் சென்றார், ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்ற பதிகத்தைப் பாடிச் சிவனைத் தொழுதார். அதனைப் பாடி முடித்ததும் அவருடைய சூலை நோய் முற்றிலுமாக நீங்கியது. இறைவன் அவரை அசரீரியாக ‘நாவுக்கரசு’ என்று அழைத்தான். அதுமுதல், சமணம் துறந்து சைவ சமயம் சார்ந்து சிவபிரான் அன்பர் ஆனார். தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடல்கள் பாடித் துதித்தார். அதனால் ‘திருநாவுக்கரசர்’ என்று போற்றப்பட்டார்.

சமணர்களின் சதிச் செயல்கள்

மருள்நீக்கியார் சமணத்திலிருந்து நீங்கி சைவம் சார்ந்தது அறிந்து சமணர்கள் அதிர்ச்சியுற்றனர். தங்கள் செல்வாக்குக் குறைந்து விடுமோ என்று அஞ்சினர். மன்னனைச் சந்தித்து, நாவுக்கரசர் மீது சினம் ஏற்படுமாறு புகார் உரைத்தனர். கோபம் கொண்ட மன்னன் நாவுக்கரசரை உடனே அங்கே அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

வீரர்கள் நாவுக்கரசரை அணுகி மன்னனின் கட்டளையைத் தெரிவித்தனர். அவரும் “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்ற பதிகம் பாடி சிவபெருமானைத் துதித்து அவர்களுடன் புறப்பட்டார்.

மன்னனின் தண்டனை

சமணர்கள், சமணம் துறந்து சைவம் சார்ந்த நாவுக்கரசரருக்குத் தண்டனையாக, அவரை, நீற்றறையில் இட வேண்டும் என்று மன்னனிடம் கூறினர். மன்னனும் அதனை ஆமோதித்து அவ்வாறே கட்டளையிட்டான்.

ஏவலர்கள், நாவுக்கரசரை நீற்றறையில் இட்டுக் கதவைப் பூட்டினர்.

நாவுக்கரசர் மனம் கலங்காமல் ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானைத் துதித்து அந்த அறையில் தனித்திருந்தார். ஏழு நாட்கள் கழித்து சமணர்கள் நாவுக்கரசர் இறந்திருப்பார் என எண்ணி அறையைத் திறந்து பார்த்தனர். நாவுக்கரசர் எவ்வித பாதிப்பும் இல்லாமலிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். மன்னனிடம் சென்று தந்திரமாக, “இவன் முன்பு நம்மிடம் கற்ற மந்திர வித்தைகளால் தன்னைக் காத்துக் கொண்டான். இனி இவனுக்கு நஞ்சை ஊட்டிக் கொல்வதே நல்லது” என்றனர்.

உயிர்க் கொலையை அறவே வெறுக்கும் சமணர்கள் நாவுக்கரசரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். ஆராயாத மன்னனும் அதற்கு உடன்பட்டான். நஞ்சு கலந்த உணவு நாவுக்கரசருக்கு அளிக்கப்பட்டது. அவர், ‘எம் நாதருடைய அடியாருக்கு நஞ்சும் அமுதமாம்’ என்று சொல்லி, அதனை உண்டார். அதை உண்டும் அவருக்கு ஒன்றும் ஆகாததால் அதிர்ந்த சமணர்கள், நாவுக்கரசரின் தலையை யானையின் காலால் இடற மன்னனிடம் அனுமதி பெற்றனர்.

கொலைக் களத்தில் நாவுக்கரசர் தன் முன் வந்த யானையைக் கண்டு, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை’ என்ற பதிகத்தைப் பாடினார். கொல்ல வந்த யானை அவரைச் சுற்றி வந்து வணங்கிச் சென்றது. இறுதியில், நாவுக்கரசரை கல்லில் கட்டி நடுக்கடலில் வீசினர். அவர், ‘கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற பதிகத்தைப் பாடினார், நாவுக்கரசர். கல் தெப்பமாக மிதந்தது. திருப்பாதிரிப்புலியூரில் கரை ஏறிய, நாவுக்கரசர், அவ்வூர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். தொடர்ந்து பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டார்.

மன்னனின் மன மாற்றம்

நாவுக்கரசரின் பெருமையை உணர்ந்த மன்னன் மனம் திருந்தினான். அவரைப் பணிந்து சைவ சமயம் சார்ந்தான். சமணப் பள்ளிகளை இடித்து, சிவபெருமானுக்கு பல கோயில்களைக் கட்டினான்.

அப்பர் ஆனது

பல தலங்களுக்குச் சென்ற நாவுக்கரசர், இறைவனைத் துதித்துப் பல பாடல்களை பாடி, உழவாரப் பணிகளை மேற்கொண்டார். ஞானசம்பந்தப் பெருமானைச் சந்தித்தார். ஞானசம்பந்தர், நாவுக்கரசரை ‘அப்பர்’ என்று அழைத்தார். நாவுக்கரசர், சம்பந்தருடன் இணைந்து பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்.

இறைவனின் அருளிச் செயல்கள்

திருநல்லூர் என்ற தலத்திற்குச் சென்று வழிபடும்பொழுது சிவபெருமான், தன் திருவடியை நாவுக்கரசரது தலைமேல் சூட்டி ஆசிர்வதித்தான். பின் அப்பூதியடிகளின் பாம்பு தீண்டி இறந்த மகனை இறைவனின் திருவருளால் நாவுக்கரசர் உயிர்ப்பித்தார்.

திருவிழிமிழலையில் நாவுக்கரசரும், சம்பந்தரும் தங்கியிருந்தபொழுது கொடிய பஞ்சம் வந்தது. அப்பொழுது ஆலயத்தின் படியில் இறைவன் சம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் காசு வைத்து அருள் செய்தான். அதனைக் கொண்டு இருவரும் மக்களுக்கு உணவளித்துத் தொண்டாற்றினர். பின் நாவுக்கரசர் வேதாரண்யம் சென்று, வேதங்கள் அடைத்துச் சென்றிருந்த திருக்கதவைப் பதிகம்பாடித் திறக்கும்படிச் செய்தார் . இறைவனின் ஆணைப்படி திருவாய்மூர்க்குப் புறப்பட்டார். அங்கே இறைவனின் திருக்காட்சி கிடைக்கப் பெற்றார்.

ஒருசமயம் திருப்பைஞ்ஞீலிக்கு நாவுக்கரசர் சென்றிருந்தபொழுது பசியால் மிகவும் களைப்புற்றிருந்தார். அப்பொழுது இறைவன் அந்தண உருவத்தில் தோன்றி அவருக்கு உணவளித்து மறைந்தான்.

திருக்கயிலை பயணம்

நாவுக்கரசருக்கு கயிலையைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வயதாகி உடல் தளர்ந்த நிலையையும் பொருட்படுத்தாது திருக்கயிலைக்குப் புறப்பட்டார். கைகளும், கால்களும் சோர்ந்ததால் கீழே விழுந்து, நிலத்தில் உடம்பை இழுத்தவாறே சென்றார். அது கண்டு சிவபெருமான் முனிவர் வடிவில் தோன்றி நாவுக்கரசரைத் தடுத்தாட் கொண்டார். ஒரு பொய்கையைக் காட்டி, “இதில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்தால் அங்கே திருக்கயிலைக் காட்சியைக் காணலாம்” என்றருளிச் செய்தார்.

அவ்வாறே அப்பர் பெருமான் அப்பொய்கையில் மூழ்கி, எழும்பொழுது திருவையாற்றில் இருந்தார். அங்கே திருக்கயிலைக் காட்சியைக் கண்டு களித்தார். அங்கு சில காலம் தங்கி உழவாரப் பணி செய்தார். பல இடங்களுக்கும் பயணப்பட்டு ஆலயப் பணி, உழவாரப் பணி செய்தார்.

இறைவனின் சோதனைகள்

நாவுக்கரசர் திருப்புகலூர் தலத்தில் இருந்தபோது அவரது பெருமையை உலகறியச் செயதற்காகச் சிவபெருமான் அவரைச் சோதித்தான். அவர் உழவாரப்பணி செய்யுமிடத்தில் பொன்னையும் மணியையும் குவித்தான். அப்பர் அவற்றையும் அடியார் காலில் உறுத்துவன என்று கருதி, கல்லோடும் மண்ணோடும் ஒன்றாக எண்ணி அதனை விலக்கினர். பின் தேவமாதர்கள் வந்து தம் அழகால் அவரை மயக்க முற்பட்டபோதும், மனதால் மாறுபடாமல் தன் சிவத் தொண்டைத் தொடர்ந்தார். திருத்தாண்டகம் பாடி அவர்களை வென்றார்.

சிவபதம்

இவ்வாறு பற்பல சோதனைகளை எதிர்கொண்டு அவற்றில் வென்ற திருநாவுக்கரச நாயனார், சிவபெருமானின் திருவருளால், திருப்புகலூரில், சித்திரை மாதத்தில், சதய நட்சத்திர நன்னாளில், எம்பெருமான் திருவடியை அடைந்து, அதில் என்றும் நிலைத்திருந்தார்.

திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

நாவுக்கரசர் சமண சமயம் சார்ந்தது

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை

அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்

நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்

கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்

பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி

மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு

வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்

கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்

மருள்நீக்கியார், தரும சேனர் பட்டம் பெற்றது

அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்

பொங்கும் உணர்வு உறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்

துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்

தங்களின் மேல் ஆம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்

திலகவதியாருக்கு சிவனின் அருளிச் செயல்

மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்

உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்

முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்

அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வாம் என அருளி

நாவுக்கரசர் பதிகம் பாடி சிவனைச் சரணடைந்தது

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதுஇல் திருப்பதிகம்

போற்றால் உலகு ஏழின் வரும் துயரும் போமாறு எதிர் நின்று புகன்றனர் ஆல்

சமணர்களின் அச்சம்

தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை

ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உயப் போய்ப்

பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்

மருவும் நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்

நாவுக்கரசர் நஞ்சுணவு உண்டது

நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று

வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனை ஆம் படி அறிந்தே

செஞ் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்

வெஞ் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்

கல் மிதந்தது

சொற்றுணை வேதியன் என்னும் தூய் மொழி

நல் தமிழ் மாலையாரு நமச்சிவாய என்று

அற்றம் முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு

பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்

பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்

அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு

அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்

கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே

நாவுக்கரசரின் கயிலை பயணம்

அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்

மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்

பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை பெயர்ந்து போய்

மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார்

சிவபெருமான், திருவையாற்றில் கயிலைக் காட்சி காணப் பணித்தது

தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்

எழு பெருந்திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை

முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை

பழுது இல் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்

திருநாவுக்கரசர் சிவபதம் பெற்றது

மண் முதல் ஆம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்

புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று

நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி

அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்

குரு பூஜை

திருநாவுக்கரச நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், சித்திரை மாதம், சதய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page