under review

நிஷா மன்சூர்

From Tamil Wiki
நிஷா மன்சூர்

நிஷா மன்சூர் (M.I.மன்சூர் அலி) (பிறப்பு: அக்டோபர் 23, 1973) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர். கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

நிஷா மன்சூர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் A. முஹம்மது இஸ்மாயீல், ஃபாத்திமா பீவி (நிஷாமா) இணையருக்கு அக்டோபர் 23, 1973-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். மேட்டுப்பாளையம் மஹாஜன மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகள் பலவற்றில் பள்ளிக்கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

நிஷா மன்சூர் டிசம்பர் 15, 2002-ல் சாஜிதா அன்ஜும் என்பவரை மணந்தார். மகன் ஹாமீம் ஜல்வத்தி. மகள்கள் ஃபாஹிமா ருகையா ஜல்வா, M.அஸ்ஃபியா ஃபாத்திமா கல்வா.

ஆன்மிகம்

மன்சூர் குரு நித்ய சைதன்ய யதியிடமும். இஸ்லாமிய சூஃபி ஞானிகளிடமும் குரு-சீட மரபில் மெய்யியல் பயின்றவர். சூஃபி கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்கியானம் செய்தவர். கவிஞர் அபியின் மாணவர். இஸ்லாமிய மெய்யியல் ஆய்வாளராக அறியப்படுகிறார்

இலக்கிய வாழ்க்கை

நிஷா மன்சூரின் முதல் கவிதை 1993-ல் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'முகங்கள் கவனம்' 1995-ல் வெளியானது. சுபமங்களா, கணையாழி, காலச்சுவடு, நிகழ், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. குணங்குடி மஸ்தான் சாஹிபு அப்பா, பீர் முகம்மது அப்பா, மெளலானா ரூமி, ப.சிங்காரம், வைக்கம் முஹம்மது பஷீர், தோப்பில் முஹம்மது மீரான், கவிஞர் அபி, கோபி கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தனது ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2000 கவிஞர் தேவமகள் விருது
  • 2016 கவிஞர் தமிழன்பன் விருது
  • 2017 களம்புதிது விருது

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • முகங்கள் கவனம் (1995, குதிரைவீரன் பயணம் வெளியீடு)
  • நிழலில் படரும் இருள் (2015, மலைகள் வெளியீடு)
  • பின் தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் (2022, தேநீர் பதிப்பக வெளியீடு)
கட்டுரை

முதல் கட்டுரை நூல் “விடுதல்களும் தேடல்களும் (2022, தேநீர் பதிப்பக வெளியீடு)

இணைப்புகள்


✅Finalised Page