under review

திருவாசகம்

From Tamil Wiki

பன்னிரு சைவசமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள நூல் திருவாசகம். திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகம் உருக்கமும், பக்திச்சுவையும் நிறைந்த நூல். 21 வகையான சிற்றிலக்கியங்கள் திருவாசகத்தில் அமைந்துள்ளன. ஜி.யு. போப் இதனை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். திருவாசகப் பதிகங்கள் சைவ ஆலயங்களிலும், வீடுகளிலும் பாடவும், ஓதவும் படுகின்றன.

ஆசிரியர் குறிப்பு

மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். இயற்பெயர் வாதவூரர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். 'தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர் என்ற பெயர்களிலும் குறிக்கப்படுபவர்.

நூலின் தோற்றம்

திருப்பெருந்துறையில் சிவபெருமானே குருவாக இருந்து மாணிக்கவாசகருக்கு உபதேசித்ததாகத் தொன்மம் கூறுகிறது. திருப்பெருந்துறை, திருஉத்தரகோசமங்கை, திருவாரூர், திருவண்ணாமலை போன்ற சிவத்தலங்களில் அவர் பாடிய பதிகங்களின் தொகுப்பே திருவாசகம். சிதம்பரத்தில் திருவாசகம் முழுமையும் மாணிக்கவாசகர் பாட, சிவபெருமானே ஓலைச்சுவடியில் எடுத்தெழுதியதாகத் தொன்மக்கதை கூறுகிறது. தில்லையில் இருந்த அச்சுவடிகள் கர்நாடக நவாபின் படையெடுப்பின்போது நாகலிங்க அடிகளால் பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழையில் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய மற்றொரு நூல் திருக்கோவையார்.

பார்க்க: மாணிக்கவாசகர்

நூல் அமைப்பு

திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. 51 பதிகங்களில் 658 பாடல்கள் உள்ளன. பதிகங்கள் பின்வருமாறு:

  • சிவபுராணம் - நூலுக்கு முகவுரையாக அமைந்துள்ளது. சிவனது அநாதி முறைமையான பழமையையும், அருவநிலையையும் கூறுவது. இறைவன் ஆன்மாக்களைப் பல பிறவியில் பிறக்கச்செய்து, படிப்படியாகத் திருவருளுக்கு இலக்கு ஆக்கி, ஆட்கொள்ளுகின்றான் எனக் கூறி இறைவனை வாழ்த்துதல்.
  • கீர்த்தித் திருவகவல் - சிவபெருமானது பல அருட் செயல்களைப் புகழ்ந்து பாடுதல்.
  • திருவண்டப்பகுதி - யோகநூல். சிவபெருமான்‌ எங்கும்‌ கலந்துள்ள திருவருட்‌செயலைப்‌ புகழ்தல்‌.
  • போற்றித் திருவகவல் - ஆன்மாக்களுக்கு உண்டாகும் பல வகையான அல்லல்களை விளக்கிக் கூறி, அவற்றை மாற்றி வீடு அளிப்பவன் இறைவன் எனக்கண்டு இடையறாது வணங்குதல்.
  • திருச்சதகம்- இத் திருச்சதகம் பத்து பிரிவுகளை கொண்டுள்ளது.
    • மெய்யுணர்தல்
    • அறிவிறுத்தல்
    • சுட்டறுத்தல்
    • ஆன்ம சுத்தி
    • கைம்மாறு கொடுத்தல்
    • அநுபோக சுத்தி
    • காருணியத்து இரங்கல்
    • ஆனந்தத்து அழுத்தல்
    • ஆனந்த பரவசம்
    • ஆனந்த தீதம்
  • நீத்தல் விண்ணப்பம் - அடிகளார் தம்மை இறைவன் கைவிடக்கூடாது என்று முறையிடுதல்.
  • திருவெம்பாவை - மார்கழித் திங்களில் நீராடச் செல்லும் கன்னியர்கள் ஒருவரை யொருவர் அழைத்துச்சென்று நீராடும் வகையாக இறைவன் புகழைப் பாடுதல்.
  • திருவம்மானை - இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து அம்மானை விளையாடும் போது பாடும் பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது
  • திருப்பொற்சுண்ணம் - இறைவனுக்காக கலவைப் பொடி இடிக்கும் மகளிர் அவன் புகழைப் பாடுதல்.
  • திருக்கோத்தும்பி - இறைவன் திருவருளில் மக்கள் ஈடுபடவேண்டும் என்பதைத் தும்பியிடம் கூறுவதுபோல் அமைத்துக் கூறுதல்.
  • திருத்தெள்ளேணம் - விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும் போது பாடும் பாடல் வடிவம்
  • திருச்சாழல் - தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினாவி விடை கூறும் விளையாட்டுப் பாடல்
  • திருப்பூவல்லி - பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் எழுதப்பட்டது.
  • திருவுந்தியார் - மகளிர் உந்திக் குதித்து விளையாடும் ஆட்டத்தில் பாடுவதாக அமைத்து இறைவன் புகழைப் பாடுதல்.
  • திருத்தோள் நோக்கம் - ஒருவர் தோளை ஒருவர் தொட்டுக்கொண்டோ, பார்த்துக்கொண்டோ, விளையாடுவதான மகளிர் விளையாட்டில் பாடுவதாக அமைத்து இறைவனைப் போற்றுதல்.
  • திருப்பொன்னூசல் - பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அமைத்த பாக்கள்,
  • அன்னைப்பத்து - இறைவன் திருவுருவில் உளம்வைத்த ஒரு பெண் தன்னை மறந்து கூறுவதாக அமைத்துப் பாடுதல்.
  • குயில்பத்து - இறைவனிடம் குயிலைத் தூது அனுப்புதல்.
  • திருத்தசாங்கம் -அரசனது பெயர், ஊர், நாடு, ஆறு, மலை, குதிரை, படை, பறை, மலை, கொடி என்ற பத்து உறுப்புக்களையும் பாடுகிற முறையில் இறைவன் புகழைப் பாடுதல்.
  • திருப்பள்ளியெழுச்சி - இறைவனைத் துயில் எழுப்புகின்ற முறையில் அவன் புகழைப் பாடுதல்.
  • கோயில் மூத்த திருப்பதிகம்- இறைவன் திருவருளைப் பெறுவதற்குத் துணை செய்யக் கூடிய அடியார் கூட்டத்தில் தன்னை இருத்த வேண்டும் என்று வேண்டுதல்
  • கோயில் திருப்பதிகம் - இறைவன் திருவருளோடு கலக்குங்கால் உளதாகும் பேரின்பத்தை ஒருவாறு உரைத்தல்.
  • செத்திலாப்பத்து - திருவருளோடு உறையத் தடையாயுள்ள உடற்பற்றையும், உயிர்ப்பற்றையும் நீக்க வேண்டுதல்.
  • அடைக்கலப்பத்து - இறைவன் திருவடியே உண்மையான பற்றுக்கோடு என்பதை உணர்ந்து, அடைக்களம் புகுதல்.
  • ஆசைப்பத்து - அடியார்களையும் இறைவனையும் காண ஆசைப்படுதல்.
  • அதிசயப்பத்து - இறைவன் தனக்கு அருள் செய்ததை எண்ணி வியப்புறுதல்.
  • திருப்பாண்டிப் பதிகம் - இறைவன் பாண்டிப் பிரானாக் குதிரையின்மேல் வந்து அருளிய கோலத்தைப் பரவுதல்.
  • பிடித்தபத்து - இறைவன் திருவருளை ஒரே நெறியாகத் தான் பற்றிக் கொள்ளுதல்.
  • திருஏசறவு - இறைவன் தம்மை ஆட்கொண்டமையை எண்ணி உளைதல்.
  • திருப்புலம்பல் - இறைவன் திருவடியையே தனக்குப் பற்றுக்கோடாகப் பற்றி அரற்றுதல்.
  • குலாப்பத்து - தில்லையில் கூத்தப்பெருமானைக் கண்ட காட்சியின் பேரின்ப விளைவைப் பேசுதல்.
  • அற்புதப்பத்து - திருவருட் பேற்றுக்குத் தகுதி இல்லாத தனக்குத் திருவருள் கூடியதை வியந்து பாடுதல்.
  • சென்னிப்பத்து - இறைவன் திருவடி தனது தலையில் மிளிர்கின்ற பேரின்பத்தைக் கூறுதல்.
  • திருவார்த்தை - இறைவனுடைய அருட் செய்தியைக் கூறுதல்.
  • எண்ணப்பதிகம் - அடியார் நடுவுள் இருக்கும் பேரின்பத்தை அருள வேண்டுதல்.
  • யாத்திரைப்பத்து - அடியார்களைத் திருவருள் இன்பத்தில் திளைக்க அழைத்தல்.
  • திருப்படையெழுச்சி - பேரின்ப உலகைக் கைப்பற்றுவதற்குத் தொண்டர்களைப் போர்க்கோலம் கொள்ளக் கூறுதல்.
  • திருவெண்பா - திருவருள் பெற்ற நிலையை ஒருவாறு உணர்த்துதல்.
  • பண்டாயநான்மறை - இறைவன் தன்னை ஆட்கொண்டதை உலகு அறியக்கூறுதல்.
  • திருப்படையாட்சி - இறைவன் திருவருட்கு இலக்கு ஆகின், எவ்விதப் பிறவித்துயரும் நம்மை நலியா என்பதும், நாம் பெறுதற்கு அரியன ஒன்றும் இல்லை என்பதும் கூறுதல்.
  • ஆனந்தமாலை - பேரின்பப் பேற்றுக்குப் பிற்பட்டுத் திகைக்கும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுதல்.
  • அச்சோப் பதிகம் - தன்னை ஏற்றுக் கொண்ட திருவருளின் உயர்வைப் போற்றி வியத்தல்.

இவற்றுள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கும் பெரும் பகுதிகளாக உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களையும் நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவெம்பாவையும் திருவம்மானையும் 20 பாடல்கள் கொண்டுள்ளன. திருப்பொற்சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் 20 பாடல்களால் ஆக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

பாடுபொருள்

திருவாசகம், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள் (காமம், குரோதம் முதலியவை), அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டது.

'நமச்சிவாயன் வாழ்க' என இறைவனை வணங்கித்‌ தொடங்கி, "முதலாய முதல்வன்‌, அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர்‌ பெறுவார்‌ அச்சோவே " என மாணிக்கவாசகர் இறையனுபவம் பெற்றதைக் கூறி முடிகிறது. இதன் 53 பதிகங்களும்‌, 656 செய்யுட்களும்‌, நூல்‌ இலக்‌கணத்திற்கேற்ப ஒன்றுடன் ஒன்று இயைபும்‌ தொடர்பும்‌ உடையவையாகவும், வகுத்துக்‌ கூறியும்‌, தொகுத்துச்‌ சுட்டியும்‌, விரித்து விளக்கியும்‌, மாணிக்கவாசகருடைய இறை அனுபவங்களையும்‌ கூறுகின்றன.

சிறப்புகள்

திருவாசகம் உருக்கமான பக்திச்சுவையில் அமைந்த பாடல்களால் ஆனது.

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!

என்றும்

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்றும் இராமலிங்க அடிகளார் திருவாசகத்தின் பெருமையைக் கூறுகிறார்.

"மாணிக்கவாசகர் முப்பது வயதிற்குள் கவித்துவ எழுச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறார். பொன்னை உருக்கியது போலத் தமிழ் மொழியை உருக்கி வார்த்திருக்கிறார். திருவாசகத்தை வாசிக்க வாசிக்க மனதில் இசை இன்பமும் இனம் புரியாத ஆனந்தமும் நிரம்புவதை உணர்ந்திருக்கிறேன். மாணிக்கவாசகரின் கவிமொழியானது பாதரசம் போன்றது. அது உருண்டோடிக் கொண்டேயிருக்கும் வசீகர அழகுடையது. மாணிக்கவாசகர் எளிய சொற்களைக் கொண்டு மகத்தான அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். வெல்லப்பாகு போன்று மொழியை அவரால் பதமாக மாற்றிவிட முடிந்திருக்கிறது" என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

மாணிக்கவாசகர் பல்வேறு பாவகைகள் மற்றும் சிற்றிலக்கிய வகைகளில் பதிகங்களை இயற்றியிருக்கிறார். பெண்கள் சார்ந்த பத்து வகை சிற்றிலக்கியங்கள் (விளையாட்டு, நோன்பு, செயல்) திருவாசகத்தில் உள்ளன. கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, புலம்பல், பூவல்லி, சுண்ணம், உந்தியார், விண்ணப்பம் போன்ற புது இலக்கிய வகைகளை திருவாசகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். கலித்தொகைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் அடுத்து கலிவெண்பாவில் பாடல் (சிவபுராணம்) இயற்றியவர் மாணிக்கவாசகரே. மாலை இலக்கிய வகையில் ‘ஆனந்த மாலை’ முதல் நூலாகக் கருதப்படுகிறது. திருப்பொற்சுண்ணம் பாட்டியல் நூல்கள் கூறும் மங்கலவள்ளை, கொற்ற வள்ளை போன்ற இலக்கிய வகைமைகளோடு ஒப்பு நோக்கத்தக்கது.

இசை வடிவம்

தேர்த்தெடுத்த சில திருவாசகப் பாடல்களுக்கு இசையமைத்து வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

மொழிபெயர்ப்பு

திருவாசகத்தை ஜி.யு . போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கௌசல்யா ஹார்ட் போன்றோரும் மொழியாக்கம் செய்துள்ளனர்.

பாடல் நடை

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 (சிவபுராணம்)

திருவம்மானை

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

எல்லாமாகி நின்றவன்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. 15

அச்சோப்பதிகம்

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

உசாத்துணை


✅Finalised Page