திருப்பொற்சுண்ணம்
திருப்பொற்சுண்ணம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தில் ஒன்பதாம் பிரபந்தம். இறைப்பணிக்காக பொற்சுண்ணம் இடித்தபடி பெண்கள் சிவனின் புகழைப் பாடும் வகையில் அமைந்தது.
ஆசிரியர்
திருப்பொற்சுண்ணம் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் ஒன்பதாம் பிரபந்தம். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாசகமும் திருக்கோவையாரும் அவர் இயற்றியவை. திருப்பொற்சுண்னம் தில்லையில் பாடப்பட்டது.
நூல் அமைப்பு
பொற்சுண்ணம் பெண்கள் உடலில் பூசிக்கொள்ளும் ஒருவகை வாசனைப் பொடி. இப்பொடியை இடிக்கும்போது பாடும் பாடல்கள் சுண்ணப்பாடல்கள். இவை உலக்கையில் இடிப்பதற்கு உரிய தாளகதியோடு அமைந்தவை. மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணம் சிவபெருமானின் திருமஞ்சனத்திற்காக(அபிஷேகம்) பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் பக்தியுடன் சிவனைப் போற்றிப் பாடும் 20 அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களால் ஆனது.
தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் திருவையாற்றிலும், திருவேகம்பத்திலும் கோவில் கொண்ட நாம, ரூபம் கடந்த சிவபெருமானின் வடிவங்களை முன்னிலைப்படுத்தி அந்த சிவனுக்காக அபிடேகத்திற்குரிய சுண்ணத்தை இடிப்பதாக மாணிக்கவாசகர் பாடிச்செல்கிறார். பொற்சுண்ணம் இறைவனுக்கு இடிக்கப்படுவதால்அது இடிக்கப்படும் இடம் மெழுகி, தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுவதாக முதல்மூன்று பாடல்கள் கூறுகின்றன. பொற்குடம் வைத்தல், கோலமிடுதல், முளைப்பாரிக் கிண்ணங்களை வரிசையாக வைத்தல், திருவிளக்கேற்றுதல், தூபமிடுதல் ஆகிய அலங்காரங்கள் செய்யப்பெறுகின்றன.
சிவனின் வடிவ அழகையும், பிரமன் தலையைப் பந்தாடியது, சூரியன் பல்லைப் பிடுங்கியது, யானையின் தோலை உரித்தது, எமனைக் காலால் உதைத்தது, முப்புரம் எரித்தது, பாம்பை இடையிலும், கையிலும் ஆபரணமாக் அணிந்தது போன்ற புராணச் செய்திகளையும், சிவபெருமானின் வீரத்தையும், அருளையும், எளிவந்த தன்மையையும், தன்னை ஆட்கொண்ட தன்மையையும் கூறி , அத்தகையவனைப் பாடிப் பாடி சுண்ணம் இடிக்கும்படி கூறுகிறார் மாணிக்கவாசகர்.
ஈழத்தில் இறந்தவரின் ஈமக் கிரியைகளின்போது திருப்பொற்சுண்ணம் பாடும் வழக்கம் உண்டு என்று எழுத்தாளர் யதார்த்தன் குறிப்பிடுகிறார்[1].
பாடல் நடை
ஆடப் பொற்சுண்ணம் இடிப்போம்
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தம் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற்கண் பனி ஆடஆடப்
பித்து எம்பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையோடு ஆடஆட
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 204
சித்தம் புகுந்து தித்திப்பவன்
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற்கு அரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனைப் பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட
கூத்தனை நாத் தழும்பேற வாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 209
உசாத்துணை
- திருப்பொற்சுண்ணம், சைவம்.ஆர்க்
- திருவாசகம்-சில சிந்தனைகள்-அ.ச. ஞானசம்பந்தன், ஆர்கைவ் வலைத்தளம்
- திருப்பொற்சுண்ணம்-யதார்த்தன்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:24:36 IST