under review

திருவள்ளுவமாலை

From Tamil Wiki
திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை புகழ்ந்து பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல். திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் பொ.யு. 11- ஆம் நூற்றாண்டு.

பெயர்க் காரணம்

திருவள்ளுவரை வாழ்த்தும் ஐம்பத்து ஐந்து பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை என்பதால் இந்நூலுக்கு திருவள்ளுவமாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலம்

திருவள்ளுவமாலை நூலில் உள்ள பாடல்களின் சொல் அமைப்பினை நோக்கும்போது இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

நூல் அமைப்பு

திருவள்ளுவமாலை திருவள்ளுவரையும், திருக்குறளையும் போற்றிப் பாடும் 55 பாடல்களால் ஆனது.

பாடியவர்கள்

திருவள்ளுவமாலையில் உள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி ஆகியோரின் பாடல்களுடன் கடைச்சங்கப்புலவர் நாற்பத்தொன்பது பேரும் பாடிய பாடல்களுமாக மொத்தம் ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாகக் கருதப்பட்ட வள்ளுவமாலை ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து ஐம்பத்தைந்து பாடல்களின் தொகுப்பாக உள்ளது. இடைக்காடர், ஔவையார் என்ற பெயர்களில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூன்று பாடல்களும் வெண்பாக்களாலும் அமைந்துள்ளன.

நூல் கூறும் திருக்குறளின் சிறப்பு

திருவள்ளுவமாலையின் முதல் பாடல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றியபோது வானத்திலிருந்து எழுந்த அசரீரிச்சொல்லாக "உருத்திரசன்மர் மட்டுமே திருவள்ளுவருடன் சங்கப் பலகையில் ஏறி அமர்க" என்று கூறுகிறது. இரண்டாம் பாடல் கலைமகளால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

  • இறையனார் திருக்குறளை கற்பகமரத்தின் தெய்வமலருடன் ஒப்பிடுகிறார்(3).
  • குறள் அளவில் மிகச்சிறிதாயினும் அதன் பொருள் மிக விரிந்தது(5 13; கடுகைத் (அணுவை) துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி குறுகத்தறித்தது போன்றது திருக்குறள் (54,55)- கபிலர்,அரிசில்கிழார், இடைக்காடர், ஔவையார்
  • குரலின் நெறிகள் எல்லா சமயத்தாரும் ஏற்கக் கூடியவை-கல்லாடர்(9)
  • வள்ளுவரை படைப்புக் கடவுள் பிரம்மாவாகவும்(4), திருமாலாகவும்( 5), இறைவனாகவும்(8) குறளை வாமனன் உலகளந்தது போன்று விரிந்ததாகவும்(14,28) உக்கிரப்பெருவழுதியும், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும், பரணரும், மாமூலனாரும், பொன்முடியாரும் போற்றுகின்றனர்.
  • மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா ஆகிய சிறப்புகளைக் கொண்ட மூவேந்தர் தங்கள் முடிமேல் அணியும் மாலை முப்பால்(10) - சீத்தலைச் சாத்தனார்
  • முப்பாலில் மூழ்கியவர் அதன்பின் வேறு பாவை விரும்புவாரோ(12)?-நாகன் தேவனார்
  • வேதங்களை ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை குறையுமென்று அந்தணர் கருதலாம். குறளை எழுதினாலும் அதன் வலிமை குன்றாது(15) ;ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. வேதம் அந்தணர்க்குரியதென்பர்; திருக்குறள் அனைவர்க்கும் பொதுவானது(23)-வெள்ளிவீதியார்;வேதங்களின் பொருளை யெல்லாம் குறள் கூறிவிட்டமையால், இவற்றுள் எது உயர்ந்தது ?(32)-பெருஞ்சித்திரனார்
  • வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்(21)-நல்கூர் வேள்வியார்
  • எல்லாப் பொருளும் இதில் உள்ளன.ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்(29)(44)-மதுரைத் தமிழ்நாகனார், களத்தூர்க்கிழார்
  • பூக்களில் தாமரையும், பொன்னில் நாவற் சாறமும், பசுக்களில் காமதேனுவும், யானைகளில் ஐராவதமும், தெய்வங்களில் திருமாலும், நூல்களில் திருக்குறளும் சிறந்தன(36)-கவிசாகரப் பெருந்தேவனார்.
  • திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அக இருளை நீக்கும் விளக்கேற்றினார்(47)-நப்பாலத்தனார்

சிறப்புகள்

ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ பல புலவர்கள் பெயரில் புகழாரம் திருவள்ளுவமாலையில் சூட்டப்பட்டது , திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த சிறப்பு.

"திருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவ மாலையென்ற ஒரு நூல் இருக்கின்றது. அதிலுள்ள செய்யுட்களைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அந்நூலைப் பாடியவர்கள் யாராயினும் அது பல நூற்றாண்டுகட்கு முன்பே உண்டாயிற்றென்பதற்கு நேமிநாதயுரை முதலிய நூல்களில் போதிய ஆதாரம் இருக்கின்றது. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூலொன்று வேறு எந்த நூலுக்கும் முற்காலத்து அமையவில்லை" என்று உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டார்.

விவாதங்கள்

திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்கு சங்க நூல்களே ஆதாரங்கள். திருவள்ளுவமாலையில் காணப்படும் சில புலவர்களின் பெயர்கள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின்மர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகியோரின் பாடல்கள் வள்ளுவமாலையில் காணப்படவில்லை.

வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களை சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை.

சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசையில் அல்லாமல் பிற்கால இலக்கணம் அமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே திருக்குறளைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே திருவள்ளுவமாலை என்பது பொருந்தாது என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

அனைத்துப் பாடல்களும் ஒரே புலவரால் இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் அறிஞர்கள் மறுத்துள்ளனர். வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. திருவள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் கொள்ளத்தக்கது.

சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே திருவள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. திருவள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பது ஏற்கத்தக்கதாக உள்ளது.

திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்கள்;

(தலைப்பாக அமைந்தவை பாடிய புலவர்களின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளவை)

அசரீரி (உடலிலி)

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்
 

நாமகள்

 நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு

இறையனார்

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
 நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

உக்கிரப் பெருவழுதியார்

 நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி

கபிலர்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

பரணர்


மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

நக்கீரர்

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று (07)

மாமூலனார்

அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார். (08)

கல்லாடர்

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி. (09)

சீத்தலைச் சாத்தனார்

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (10)

மருத்துவன் தாமோதரனார்

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு. (11)

நாகன் தேவனார்

தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
முப்பால் மொழிமூழ்கு வார். (12)

அரிசில்கிழார்

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால். (13)

பொன்முடியார்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள். (14)

கோதமனார்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று. (15)

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். (16)

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல். (17)

ஆசிரியர் நல்லந்துவனார்

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல். (18)

கீரந்தையார்

தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர். (19)

சிறுமேதாவியார்

வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை. (20)

நல்கூர் வேள்வியார்

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு. (21)

தொடித்தலை விழுத்தண்டினார்

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள். (22)

|வெள்ளிவீதியார்

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல். (23)

மாங்குடி மருதனார்

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு. (24)

எறிச்சலூர் மலாடனார்

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. (25)

போத்தியார்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை. 26

மோசிகீரனார்

ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு. 27

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன். 28

மதுரைத் தமிழ்நாகனார்

எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை. 29

|பாரதம் பாடிய பெருந்தேவனார்

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர். 30

உருத்திர சன்மகண்ணர்

மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு. 31

பெருஞ்சித்திரனார்

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன. 32

நரிவெரூஉத் தலையார்

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள். 33

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர். 34

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து. 35

கவிசாகரப் பெருந்தேவனார்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா. 36

மதுரைப்பெருமருதனார்

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு. 37

கோவூர்க்கிழார்

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்

திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்

பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே

முன்னை முதுவோர் மொழி. 38

உறையூர் முதுகூற்றனார்

தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு. 39

இழிகண் பெருங்கண்ணனார்

இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா. 40

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்

ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார். 41

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு. 42

வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத்து. 43

களத்தூர்க் கிழார்

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள். 44

களத்தூர்க் கிழார்

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள். 44

அக்காரக்கனி நச்சுமனார்

கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன். 46

நப்பாலத்தனார்

அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு. 47

குலபதி நயனார்

உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு. 48

தேனிக்குடிக் கீரனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து. 49

கொடிஞாழல் மாணிபூதனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு. 50

கொடிஞாழல் மாணிபூதனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு. 50

கவுணியனார்

சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா. 51

மதுரைப் பாலாசிரியனார்

வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி. 52

ஆலங்குடி வங்கனார்

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து. 53

இடைக்காடர்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். 54

ஔவையார்

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். 55

உசாத்துணை


✅Finalised Page